இரண்டாம் திருமுறை


திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

இரண்டாம் திருமுறை - முதல் பகுதி

 

2.01 திருப்பூந்தராய்

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

 

செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்

புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்த்

துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்

பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே.

 

எற்று தெண்டிரை யேறிய சங்கினொ டிப்பிகள்

பொற்றி கழ்கம லப்பழ னம்புகு பூந்தராய்ச்

சுற்றி நல்லிமை யோர்தொழு பொன்கழ லீர்சொலீர்

பெற்ற மேறுதல் பெற்றிமை யோபெரு மானிரே.

 

சங்கு செம்பவ ளத்திரள் முத்தவை தாங்கொடு

பொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த்

துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர்

மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே.

 

சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர்

பூம ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச்

சோம னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர்

காமன் வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே.

 

பள்ள மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயன

புள்ளும் நாடொறுஞ் சேர்பொழில் சூழ்தரு பூந்தராய்த்

துள்ளும் மான்மறி யேந்திய செங்கையி னீர்சொலீர்

வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே.

 

மாதி லங்கிய மங்கைய ராடம ருங்கெலாம்

போதி லங்கம லமது வார்புனற் பூந்தராய்ச்

சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர்

காதி லங்குழை சங்கவெண் தோடுடன் வைத்ததே.

               

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று.

 

வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்

தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த்

துரக்கும் மால்விடைமேல்வரு வீரடி கேள்சொலீர்

அரக்க னாற்றல் அழித்தரு ளாக்கிய ஆக்கமே.

 

வரிகொள் செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம்

புரிசை நீடுயர் மாடம் நிலாவிய பூந்தராய்ச்

சுருதி பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர்

கரிய மாலயன் நேடியு மைக்கண் டிலாமையே.

 

வண்ட லங்கழ னிம்மடை வாளைகள் பாய்புனற்

புண்ட ரீகம லர்ந்து மதுத்தரு பூந்தராய்த்

தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர்

குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே.

 

மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்

புகலி ஞானசம் பந்தன் எழில்மிகு பூந்தராய்ப்

பகவ னாரைப் பரவுசொல் மாலைபத் தும்வல்லார்

அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே.

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.2 திருவலஞ்சுழி

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

 

விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி

வண்டெ லாம்நசை யாலிசை பாடும் வலஞ்சுழித்

தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போலொளி யீர்சொலீர்

பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல் பயின்றதே.

 

பாரல் வெண்குரு கும்பகு வாயன நாரையும்

வாரல் வெண்டிரை வாயிரை தேரும் வலஞ்சுழி

மூரல் வெண்முறு வல்நகு மொய்யொளி யீர்சொலீர்

ஊரல் வெண்டலை கொண்டுல கொக்கவு ழன்றதே.

 

கிண்ண வண்ணமல ருங்கிளர் தாமரைத் தாதளாய்

வண்ண நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழிச்

சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் பூசவ லீர்சொலீர்

விண்ண வர்தொழ வெண்டலை யிற்பலி கொண்டதே.

 

கோடெ லாம்நிறை யக்குவ ளைம்மல ருங்குழி

மாடெ லாம்மலி நீர்மண நாறும் வலஞ்சுழிச்

சேடெ லாமுடை யீர்சிறு மான்மறி யீர்சொலீர்

நாடெ லாமறி யத்தலை யின்னற வேற்றதே.

 

கொல்லை வென்றபுனத் திற்குரு மாமணி கொண்டுபோய்

வல்லை நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழி

முல்லை வெண்முறு வல்நகை யாளொளி யீர்சொலீர்

சில்லை வெண்டலை யிற்பலி கொண்டுழல் செல்வமே.

 

பூச நீர்பொழி யும்புனற் பொன்னியிற் பன்மலர்

வாச நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழித்

தேச நீர்திரு நீர்சிறு மான்மறி யீர்சொலீர்

ஏச வெண்டலை யிற்பலி கொள்வ திலாமையே.

 

கந்த மாமலர்ச் சந்தொடு காரகி லுந்தழீஇ

வந்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி

அந்த நீர்முதல் நீர்நடு வாமடி கேள்சொலீர்

பந்த நீர்கரு தாதுல கிற்பலி கொள்வதே.

 

தேனுற் றநறு மாமலர்ச் சோலையில் வண்டினம்

வானுற் றநசை யாலிசை பாடும் வலஞ்சுழிக்

கானுற் றகளிற் றின்னுரி போர்க்கவல் லீர்சொலீர்

ஊனுற் றதலை கொண்டுல கொக்க வுழன்றதே.

 

தீர்த்த நீர்வந் திழிபுனற் பொன்னியிற் பன்மலர்

வார்த்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி

ஆர்த்து வந்த அரக்கனை யன்றடர்த் தீர்சொலீர்

சீர்த்த வெண்டலை யிற்பலி கொள்வதுஞ் சீர்மையே.

 

உரம னுஞ்சடை யீர்விடை யீரும தின்னருள்

வரம னும்பெற லாவதும் எந்தை வலஞ்சுழிப்

பிரம னுந்திரு மாலும் அளப்பரி யீர்சொலீர்

சிரமெ னுங்கல னிற்பலி வேண்டிய செல்வமே.

 

வீடு ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்

வாடி ஞானமென் னாவதும் எந்தை வலஞ்சுழி

நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டிசை

பாடு ஞானம்வல் லாரடி சேர்வது ஞானமே.

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - காப்பகத்தீசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.3 திருத்தெளிச்சேரி

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

பூவ லர்ந்தன கொண்டுமுப் போதுமும் பொற்கழல்

தேவர் வந்து வணங்கு மிகுதெளிச் சேரியீர்

மேவ ருந்தொழி லாளொடு கேழற்பின் வேடனாம்

பாவ கங்கொடு நின்றது போலுநும் பான்மையே.

 

விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவ ரேத்தவே

திளைக்குந் தீர்த்த மறாத திகழ்தெளிச் சேரியீர்

வளைக்குந் திண்சிலை மேலைந்து பாணமுந் தானெய்து

களிக்குங் காமனை யெங்ஙனம் நீர்கண்ணிற் காய்ந்ததே.

 

வம்ப டுத்த மலர்ப்பொழில் சூழ மதிதவழ்

செம்ப டுத்த செழும்புரி சைத்தெளிச் சேரியீர்

கொம்ப டுத்ததொர் கோல விடைமிசை கூர்மையோ

டம்ப டுத்தகண் ணாளொடு மேவல் அழகிதே.

 

காரு லாங்கட லிப்பிகள் முத்தங் கரைப்பெயுந்

தேரு லாநெடு வீதிய தார்தெளிச் சேரியீர்

ஏரு லாம்பலிக் கேகிட வைப்பிட மின்றியே

வாரு லாமுலை யாளையொர் பாகத்து வைத்ததே.

 

பக்க நுந்தமைப் பார்ப்பதி யேத்திமுன் பாவிக்குஞ்

செக்கர் மாமதி சேர்மதில் சூழ்தெளிச் சேரியீர்

மைக்கொள் கண்ணியர் கைவளை மால்செய்து வௌவவே

நக்க ராயுல கெங்கும் பலிக்கு நடப்பதே.

 

 

தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநற்

றிவள மாமணி மாடந் திகழ்தெளிச் சேரியீர்

குவளை போற்கண்ணி துண்ணென வந்து குறுகிய

கவள மால்கரி யெங்ஙனம் நீர்கையிற் காய்ந்ததே.

 

கோட டுத்த பொழிலின் மிசைக்குயில் கூவிடுஞ்

சேட டுத்த தொழிலின் மிகுதெளிச் சேரியீர்

மாட டுத்த மலர்க்கண்ணி னாள்கங்கை நங்கையைத்

தோட டுத்த மலர்ச்சடை யென்கொல்நீர் சூடிற்றே.

 

கொத்தி ரைத்த மலர்க்குழ லாள்குயில் கோலஞ்சேர்

சித்தி ரக்கொடி மாளிகை சூழ்தெளிச் சேரியீர்

வித்த கப்படை வல்ல அரக்கன் விறற்றலை

பத்தி ரட்டிக் கரம்நெரித் திட்டதும் பாதமே.

 

காலெ டுத்த திரைக்கை கரைக்கெறி கானல்சூழ்

சேல டுத்த வயற்பழ னத்தெளிச் சேரியீர்

மால டித்தல மாமல ரான்முடி தேடியே

ஓல மிட்டிட எங்ஙன மோருருக் கொண்டதே.

 

மந்தி ரந்தரு மாமறை யோர்கள் தவத்தவர்

செந்தி லங்கு மொழியவர் சேர்தெளிச் சேரியீர்

வெந்த லாகிய சாக்கிய ரோடு சமணர்கள்

தந்தி றத்தன நீக்குவித் தீரோர் சதிரரே.

 

திக்கு லாம்பொழில் சூழ்தெளிச் சேரியெஞ் செல்வனை

மிக்க காழியுள் ஞானசம் பந்தன் விளம்பிய

தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தடமுடித்

தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே.

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பார்வதீசுவரர், தேவியார் - சத்தியம்மாளம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.4 திருவான்மியூர்

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்

திரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர்

உரையெ லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர்

வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே.

 

சந்து யர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டுதஞ்

சிந்தை செய்தடி யார்பர வுந்திரு வான்மியூர்ச்

சுந்த ரக்கழல் மேற்சிலம் பார்க்கவல் லீர்சொலீர்

அந்தி யின்னொளி யின்னிற மாக்கிய வண்ணமே.

 

கான யங்கிய தண்கழி சூழ்கட லின்புறந்

தேன யங்கிய பைம்பொழில் சூழ்திரு வான்மியூர்த்

தோன யங்கம ராடையி னீரடி கேள்சொலீர்

ஆனையங் கவ்வுரி போர்த்தன லாட வுகந்ததே.

 

 

மஞ்சு லாவிய மாட மதிற்பொலி மாளிகைச்

செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர்

துஞ்சு வஞ்சிரு ளாடலு கக்கவல் லீர்சொலீர்

வஞ்ச நஞ்சுண்டு வானவர்க் கின்னருள் வைத்ததே.

 

மண்ணி னிற்புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில்

திண்ணெ னப்புரி சைத்தொழி லார்திரு வான்மியூர்த்

துண்ணெ னத்திரி யுஞ்சரி தைத்தொழி லீர்சொலீர்

விண்ணி னிற்பிறை செஞ்சடை வைத்த வியப்பதே.

 

போது லாவிய தண்பொழில் சூழ்புரி சைப்புறந்

தீதி லந்தணர் ஓத்தொழி யாத்திரு வான்மியூர்ச்

சூது லாவிய கொங்கையொர் பங்குடை யீர்சொலீர்

மூதெ யில்லொரு மூன்றெரி யூட்டிய மொய்ம்பதே.

 

வண்டி ரைத்த தடம்பொழி லின்னிழற் கானல்வாய்த்

தெண்டி ரைக்கட லோதமல் குந்திரு வான்மியூர்த்

தொண்டி ரைத்தெழுந் தேத்திய தொல்கழ லீர்சொலீர்

பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே.

 

தக்கில் வந்த தசக்கிரி வன்றலை பத்திறத்

திக்கில் வந்தல றவ்வடர்த் தீர்திரு வான்மியூர்த்

தொக்க மாதொடும் வீற்றிருந் தீரரு ளென்சொலீர்

பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே.

 

 

பொருது வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால்

திரித ரும்புகழ் செல்வமல் குந்திரு வான்மியூர்

சுருதி யாரிரு வர்க்கும் அறிவரி யீர்சொலீர்

எருது மேல்கொ டுழன் றுகந் தில்பலி யேற்றதே.

 

மைத ழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினஞ்

செய்த வத்தொழி லாரிசை சேர்திரு வான்மியூர்

மெய்த வப்பொடி பூசிய மேனியி னீர்சொலீர்

கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே.

 

மாதொர் கூறுடை நற்றவ னைத்திரு வான்மியூர்

ஆதி யெம்பெரு மானருள் செய்ய வினாவுரை

ஓதி யன்றெழு காழியுள் ஞானசம் பந்தன்சொல்

நீதி யால்நினை வார்நெடு வானுல காள்வரே.

 

 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - மருந்தீசுவரர், தேவியார் - சுந்தரமாது அல்லது சொக்கநாயகி.

திருச்சிற்றம்பலம்

 

 

2.5 திருவனேகதங்காபதம்

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

 

நீடல் மேவுநிமிர் புன்சடை மேலொர் நிலாமுளை

சூடல் மேவுமறை யின்முறை யாலொர் சுலாவழல்

ஆடல் மேவுமவர் மேய அனேகதங் காவதம்

பாடல் மேவுமனத் தார்வினை பற்றறுப் பார்களே.

 

சூல முண்டுமழு வுண்டவர் தொல்படை சூழ்கடல்

ஆல முண்டபெரு மான்றன் அனேகதங் காவதம்

நீல முண்டதடங் கண்ணுமை பாகம் நிலாயதோர்

கோல முண்டள வில்லை குலாவிய கொள்கையே.

 

செம்பி னாருமதில் மூன்றெரி யச்சின வாயதோர்

அம்பி னாலெய்தருள் வில்லி யனேகதங் காவதங்

கொம்பின் நேரிடை யாளொடுங் கூடிக்கொல் லேறுடை

நம்பன் நாமநவி லாதன நாவென லாகுமே.

 

தந்தத் திந்தத்தட மென்றரு வித்திரள் பாய்ந்துபோய்ச்

சிந்த வெந்தகதி ரோனொடு மாசறு திங்களார்

அந்த மில்லவள வில்ல அனேகதங் காவதம்

எந்தை வெந்தபொடி நீறணி வார்க்கிட மாவதே.

 

பிறையு மாசில்கதி ரோனறி யாமைப் பெயர்ந்துபோய்

உறையுங் கோயில்பசும் பொன்னணி யாரசும் பார்புனல்

அறையும் ஓசைபறை போலும் அனேகதங் காவதம்

இறையெம் மீசனெம் மானிட மாகவு கந்ததே.

 

தேனை யேறுநறு மாமலர் கொண்டடி சேர்த்துவீர்

ஆனை யேறுமணி சாரல் அனேகதங் காவதம்

வானை யேறுநெறி சென்றுண ருந்தனை வல்லிரேல்

ஆனை யேறுமுடி யானருள் செய்வதும் வானையே.

 

வெருவி வேழம்இரி யக்கதிர் முத்தொடு வெண்பளிங்

குருவி வீழவயி ரங்கொழி யாவகி லுந்திவெள்

ளருவி பாயுமணி சாரல் அனேகதங் காவதம்

மருவி வாழும்பெரு மான்கழல் சேர்வது வாய்மையே.

 

ஈர மேதுமில னாகி யெழுந்த இராவணன்

வீர மேதுமில னாக விளைத்த விலங்கலான்

ஆரம் பாம்பதணி வான்றன் அனேகதங் காவதம்

வார மாகிநினை வார்வினை யாயின மாயுமே.

 

கண்ணன் வண்ணமல ரானொடுங் கூடியோர்க் கையமாய்

எண்ணும் வண்ணமறி யாமையெ ழுந்ததோ ராரழல்

அண்ணல் நண்ணுமணி சாரல் அனேகதங் காவதம்

நண்ணும் வண்ணமுடை யார்வினை யாயின நாசமே.

 

மாப தம்மறி யாதவர் சாவகர் சாக்கியர்

ஏப தம்பட நின்றிறு மாந்துழல் வார்கள்தாம்

ஆப தம்மறி வீருளி ராகில் அனேகதங்

காப தம்மமர்ந் தான்கழல் சேர்தல் கருமமே.

 

தொல்லை யூழிப்பெயர் தோன்றிய தோணி புரத்திறை

நல்ல கேள்வித்தமிழ் ஞானசம் பந்தன்நல் லார்கள்முன்

அல்லல் தீரவுரை செய்த அனேகதங் காவதஞ்

சொல்ல நல்லஅடை யும்மடை யாசுடு துன்பமே.

 

 

இத்தலம் வடதேசத்திலுள்ளது.

சுவாமிபெயர் - அருள்மன்னர், தேவியார் - மனோன்மணியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.6 திருவையாறு

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

 

கோடல் கோங்கங் குளிர்கூ விளமாலை குலாயசீர்

ஓடு கங்கை ஒளிவெண் பிறைசூடு மொருவனார்

பாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண் ணாகவே

ஆடு மாறுவல் லானும் ஐயாறுடை ஐயனே.

 

தன்மை யாரும் அறிவாரில்லை தாம்பிறர் எள்கவே

பின்னு முன்னுஞ் சிலபேய்க் கணஞ்சூழத் திரிதர்வர்

துன்ன ஆடை யுடுப்பர் சுடலைப்பொடிப் பூசுவர்

அன்னம் ஆலுந் துறையானும் ஐயாறுடை ஐயனே.

 

கூறு பெண்ணுடை கோவணம் உண்பதும் வெண்டலை

மாறி லாருங்கொள் வாரிலை மார்பி லணிகலம்

ஏறும் ஏறித் திரிவரிமை யோர்தொழு தேத்தவே

ஆறும் நான்குஞ் சொன்னானும் ஐயாறுடை ஐயனே.

 

பண்ணின் நல்லமொழி யார்பவ ளத்துவர் வாயினார்

எண்ணின் நல்லகுணத் தாரிணை வேல்வென்ற கண்ணினார்

வண்ணம் பாடிவலி பாடித்தம் வாய்மொழி பாடவே

அண்ணல் கேட்டுகந் தானும் ஐயாறுடை ஐயனே.

 

வேன லானை வெருவவுரி போர்த்துமை யஞ்சவே

வானை யூடறுக் கும்மதி சூடிய மைந்தனார்

தேன்நெய் பால்தயிர் தெங்கிள நீர்கரும் பின்தெளி

ஆனஞ் சாடும் முடியானும் ஐயாறுடை ஐயனே.

 

எங்கு மாகி நின்றானும் இயல்பறி யப்படா

மங்கை பாகங் கொண்டானும் மதிசூடு மைந்தனும்

பங்க மில்பதி னெட்டொடு நான்குக் குணர்வுமாய்

அங்க மாறுஞ் சொன்னானும் ஐயாறுடை ஐயனே.

 

ஓதி யாருமறி வாரிலை யோதி யுலகெலாஞ்

சோதி யாய்நிறைந் தான்சுடர்ச் சோதியுட் சோதியான்

வேதி யாகிவிண் ணாகிமண் ணோடெரி காற்றுமாய்

ஆதி யாகி நின்றானும் ஐயாறுடை ஐயனே.

 

குரவ நாண்மலர் கொண்டடி யார்வழி பாடுசெய்

விரவு நீறணி வார்சில தொண்டர் வியப்பவே.

பரவி நாடொறும் பாடநம் பாவம் பறைதலால்

அரவ மார்த்துகந் தானும் ஐயாறுடை ஐயனே.

 

உரைசெய் தொல்வழி செய்தறி யாஇலங் கைக்குமன்

வரைசெய் தோளடர்த் தும்மதி சூடிய மைந்தனார்

கரைசெய் காவிரி யின்வட பாலது காதலான்

அரைசெய் மேகலை யானும் ஐயாறுடை ஐயனே.

 

மாலுஞ் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான்

காலங் காம்பு வயிரங் கடிகையன் பொற்கழல்

கோல மாய்க்கொழுந் தீன்று பவளந் திரண்டதோர்

ஆல நீழ லுளானும் ஐயாறுடை ஐயனே.

 

கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையால்

மெய்யைப் போர்த்துழல் வாரும் உரைப்பன மெய்யல

மைகொள் கண்டத் தெண்டோ ள்முக் கணான்கழல் வாழ்த்தவே

ஐயந் தேர்ந்தளிப் பானும்ஐ யாறுடை ஐயனே.

 

பலிதி ரிந்துழல் பண்டங்கன் மேயஐ யாற்றினைக்

கலிக டிந்தகை யான்கடல் காழியர் காவலன்

ஒலிகொள் சம்பந்தன் ஒண்டமிழ் பத்தும்வல் லார்கள்போய்

மலிகொள் விண்ணிடை மன்னிய சீர்பெறு வார்களே.

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.7 திருவாஞ்சியம்

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்

பொன்னி யன்ற சடையிற் பொலிவித்த புராணனார்

தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்

என்னை யாளுடை யானிட மாகவு கந்ததே.

 

01

 

68

 

கால காலர்கரி கானிடை மாநட மாடுவர்

மேலர் வேலைவிட முண்டிருள் கின்ற மிடற்றினர்

மாலை கோலமதி மாடமன் னுந்திரு வாஞ்சியம்

ஞாலம் வந்துபணி யப்பொலி கோயில் நயந்ததே.

 

02

 

69

 

மேவி லொன்றர்விரி வுற்ற இரண்டினர் மூன்றுமாய்

நாவின் நாலர்உட லஞ்சினர் ஆறர்ஏ ழோசையர்

தேவில் எட்டர்திரு வாஞ்சிய மேவிய செல்வனார்

பாவந் தீர்ப்பர்பழி போக்குவர் தம்மடி யார்கட்கே.

 

03

 

70

 

சூல மேந்திவளர் கையினர் மெய்சுவண் டாகவே

சால நல்லபொடிப் பூசுவர் பேசுவர் மாமறை

சீல மேவுபுக ழாற்பெரு குந்திரு வாஞ்சியம்

ஆல முண்டவடி கள்ளிட மாக அமர்ந்ததே.

 

04

 

71

 

கையி லங்குமறி யேந்துவர் காந்தளம் மெல்விரல்

தையல் பாகமுடை யாரடை யார்புரஞ் செற்றவர்

செய்ய மேனிக்கரி யம்மிடற் றார்திரு வாஞ்சியத்

தையர் பாதமடை வார்க்கடை யாவரு நோய்களே.

 

05

 

72

 

அரவம் பூண்பரணி யுஞ்சிலம் பார்க்க அகந்தொறும்

இரவில் நல்லபலி பேணுவர் நாணிலர் நாமமே

பரவு வார்வினை தீர்க்கநின் றார்திரு வாஞ்சியம்

மருவி யேத்தமட மாதொடு நின்றவெம் மைந்தரே.

 

06

 

73

 

விண்ணி லானபிறை சூடுவர் தாழ்ந்து விளங்கவே

கண்ணி னாலனங் கன்னுட லம்பொடி யாக்கினார்

பண்ணி லானஇசை பாடல்மல் குந்திரு வாஞ்சியத்

தண்ண லார்தம்அடி போற்றவல் லார்க்கில்லை அல்லலே.

 

07

 

74

 

மாட நீடுகொடி மன்னிய தென்னிலங் கைக்குமன்

வாடி யூடவரை யாலடர்த் தன்றருள் செய்தவர்

வேட வேடர்திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப்

பாட நீடுமனத் தார்வினை பற்றறுப் பார்களே.

 

08

 

75

 

செடிகொள் நோயின்அடை யார்திறம் பார்செறு தீவினை

கடிய கூற்றமுங் கண்டக லும்புகல் தான்வரும்

நெடிய மாலொடயன் ஏத்தநின் றார்திரு வாஞ்சியத்

தடிகள் பாதமடைந் தாரடி யாரடி யார்கட்கே.

 

09

 

76

 

பிண்ட முண்டுதிரி வார்பிரி யுந்துவ ராடையார்

மிண்டர் மிண்டுமொழி மெய்யல பொய்யிலை யெம்மிறை

வண்டு கெண்டிமரு வும்பொழில் சூழ்திரு வாஞ்சியத்

தண்ட வாணனடி கைதொழு வார்க்கில்லை அல்லலே.

 

10

 

77

 

தென்றல் துன்றுபொழில் சென்றணை யுந்திரு வாஞ்சியத்

தென்று நின்றஇறை யானையு ணர்ந்தடி யேத்தலால்

நன்று காழிமறை ஞானசம் பந்தன செந்தமிழ்

ஒன்று முள்ளமுடை யாரடை வாருயர் வானமே.

 

11

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வாஞ்சியநாதர், தேவியார் - வாழவந்தநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.8 திருச்சிக்கல்

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

78

 

வானுலா வுமதி வந்துல வும்மதின் மாளிகை

தேனுலா வுமலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள்

வேனல்வே ளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடி

ஞானமா கநினை வார்வினை யாயின நையுமே.

 

01

 

79

 

மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ்

திடங்கொள் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள்

விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெரு மானடி மேவியே

அடைந்து வாழுமடி யாரவர் அல்லல் அறுப்பரே.

 

02

 

80

 

நீல நெய்தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய

சேலு மாலுங்கழ னிவ்வள மல்கிய சிக்கலுள்

வேலொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான்

பால வண்ணன்கழ லேத்தநம் பாவம்ப றையுமே.

 

03

 

81

 

கந்தமுந் தக்கைதை பூத்துக்க மழ்ந்துசே ரும்பொழிற்

செந்துவண் டின்னிசை பாடல்மல் குந்திகழ் சிக்கலுள்

வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்பி ரான்விரை யார்கழல்

சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே.

 

04

 

82

 

மங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்தய லேமிகு

தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள்

வெங்கண்வெள் ளேறுடை வெண்ணெய்ப்பி ரானடி மேவவே

தங்கு மேற்சர தந்திரு நாளுந்த கையுமே.

 

05

 

83

 

வண்டிரைத் தும்மது விம்மிய மாமலர்ப் பொய்கைசூழ்

தெண்டிரைக் கொள்புனல் வந்தொழுகும் வயற் சிக்கலுள்

விண்டிரைத் தம்மல ராற்றிகழ் வெண்ணெய்ப்பி ரானடி

கண்டிரைத் தும்மன மேமதி யாய்கதி யாகவே.

 

06

 

84

 

முன்னுமா டம்மதில் மூன்றுட னேயெரி யாய்விழத்

துன்னுவார் வெங்கணை யொன்று செலுத்திய சோதியான்

செந்நெலா ரும்வயற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி

உன்னிநீ டம்மன மேநினை யாய்வினை ஓயவே.

 

07

 

85

 

தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை

பற்றி னான்முடி பத்தொடு தோள்கள் நெரியவே

செற்ற தேவன்நஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி

உற்று நீநினை வாய்வினை யாயின ஓயவே.

 

08

 

86

 

மாலி னோடரு மாமறை வல்ல முனிவனுங்

கோலி னார்குறு கச்சிவன் சேவடி கோலியுஞ்

சீலந் தாமறி யார்திகழ் சிக்கல்வெண் ணெய்ப்பிரான்

பாலும் பன்மலர் தூவப் பறையும்நம் பாவமே.

 

09

 

87

 

பட்டை நற்றுவ ராடையி னாரொடும் பாங்கிலாக்

கட்ட மண்கழுக் கள்சொல்லி னைக்கரு தாதுநீர்

சிட்டன் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மான்செழு மாமறைப்

பட்டன் சேவடி யேபணி மின்பிணி போகவே.

 

10

 

88

 

கந்த மார்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்நல்

செந்தண் பூம்பொழிற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடிச்

சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை

வெந்த நீறணி யும்பெரு மானடி மேவரே.

 

11

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - நவநீதநாதர், தேவியார் - வேனெடுங்கண்ணியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.9 திருமழபாடி

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

89

 

களையும் வல்வினை யஞ்சல்நெஞ் சேகரு தார்புரம்

உளையும் பூசல்செய் தானுயர் மால்வரை நல்விலா

வளைய வெஞ்சரம் வாங்கியெய் தான்மதுத் தும்பிவண்

டளையுங் கொன்றையந் தார்மழ பாடியுள் அண்ணலே.

 

01

 

90

 

காச்சி லாதபொன் நோக்குங் கனவயி ரத்திரள்

ஆச்சி லாதப ளிங்கினன் அஞ்சுமுன் ஆடினான்

பேச்சி னாலுமக் காவதென் பேதைகாள் பேணுமின்

வாச்ச மாளிகை சூழ்மழ பாடியை வாழ்த்துமே.

 

02

 

91

 

உரங்கெ டுப்பவன் உம்பர்க ளாயவர் தங்களைப்

பரங்கெ டுப்பவன் நஞ்சையுண் டுபக லோன்றனை

முரண்கெ டுப்பவன் முப்புரந் தீயெழச் செற்றுமுன்

வரங்கொ டுப்பவன் மாமழ பாடியுள் வள்ளலே.

 

03

 

92

 

பள்ள மார்சடை யிற்புடை யேயடை யப்புனல்

வெள்ளம் ஆதரித் தான்விடை யேறிய வேதியன்

வள்ளல் மாமழ பாடியுள் மேய மருந்தினை

உள்ளம் ஆதரி மின்வினை யாயின ஓயவே.

 

04

 

93

 

தேனு லாமலர் கொண்டுமெய்த் தேவர்கள் சித்தர்கள்

பால்நெய் அஞ்சுடன் ஆட்டமுன் ஆடிய பால்வணன்

வான நாடர்கள் கைதொழு மாமழ பாடியெங்

கோனை நாடொறுங் கும்பிட வேகுறி கூடுமே.

 

05

 

94

 

தெரிந்த வன்புரம் மூன்றுடன் மாட்டிய சேவகன்

பரிந்து கைதொழு வாரவர் தம்மனம் பாவினான்

வரிந்த வெஞ்சிலை யொன்றுடை யான்மழ பாடியைப்

புரிந்து கைதொழு மின்வினை யாயின போகுமே.

 

06

 

95

 

சந்த வார்குழ லாளுமை தன்னொரு கூறுடை

எந்தை யான்இமை யாதமுக் கண்ணினன் எம்பிரான்

மைந்தன் வார்பொழில் சூழ்மழ பாடிம ருந்தினைச்

சிந்தி யாவெழு வார்வினை யாயின தேயுமே.

 

07

 

96

 

இரக்க மொன்றுமி லான்இறை யான்திரு மாமலை

உரக்கை யாலெடுத் தான்றன தொண்முடி பத்திற

விரற்ற லைந்நிறு வியுமை யாளொடு மேயவன்

வரத்தை யேகொடுக் கும்மழ பாடியுள் வள்ளலே.

 

08

 

97

 

ஆலம் உண்டமு தம்மம ரர்க்கருள் அண்ணலார்

காலன் ஆருயிர் வீட்டிய மாமணி கண்டனார்

சால நல்லடி யார்தவத் தார்களுஞ் சார்விடம்

மால யன்வணங் கும்மழ பாடியெம் மைந்தனே.

 

09

 

98

 

கலியின் வல்லம ணுங்கருஞ் சாக்கியப் பேய்களும்

நலியும் நாள்கெடுத் தாண்டஎன் நாதனார் வாழ்பதி

பலியும் பாட்டொடு பண்முழ வும்பல வோசையும்

மலியும் மாமழ பாடியை வாழ்த்தி வணங்குமே.

 

10

 

99

 

மலியு மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலைக்

கலிசெய் மாமதில் சூழ்கடற் காழிக் கவுணியன்

ஒலிசெய் பாடல்கள் பத்திவை வல்லார்.......உலகத்திலே.

 

11

 

இப்பதிகத்தின் 11-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் சிதைவுற்றன.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வச்சிரத்தம்பேசுவரர், தேவியார் - அழகாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.10 திருமங்கலக்குடி

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

100

 

சீரி னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரை

வாரி நீர்வரு பொன்னி வடமங்க லக்குடி

நீரின் மாமுனி வன்நெடுங் கைகொடு நீர்தனைப்

பூரித் தாட்டியர்ச் சிக்கஇ ருந்த புராணனே.

 

01

 

101

 

பணங்கொ ளாடர வல்குல்நல் லார்பயின் றேத்தவே

மணங்கொள் மாமயி லாலும்பொ ழில்மங்க லக்குடி

இணங்கி லாமறை யோரிமை யோர்தொழு தேத்திட

அணங்கி னோடிருந் தானடி யேசர ணாகுமே.

 

02

 

102

 

கருங்கை யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார்

மருங்கெ லாம்மண மார்பொழில் சூழ்மங்க லக்குடி

அரும்பு சேர்மலர்க் கொன்றையி னானடி யன்பொடு

விரும்பி யேத்தவல் லார்வினை யாயின வீடுமே.

 

03

 

103

 

பறையி னோடொலி பாடலும் ஆடலும் பாரிடம்

மறையி னோடியல் மல்கிடு வார்மங்க லக்குடிக்

குறைவி லாநிறை வேகுண மில்குண மேயென்று

முறையி னால்வணங் கும்மவர் முன்னெறி காண்பரே.

 

04

 

104

 

ஆனி லங்கிளர் ஐந்தும் அவிர்முடி யாடியோர்

மானி லங்கையி னான்மண மார்மங்க லக்குடி

ஊனில் வெண்டலைக் கையுடை யானுயர் பாதமே

ஞான மாகநின் றேத்தவல் லார்வினை நாசமே.

 

05

 

105

 

தேனு மாயமு தாகிநின் றான்றெளி சிந்தையுள்

வானு மாய்மதி சூடவல் லான்மங்க லக்குடிக்

கோனை நாடொறும் ஏத்திக் குணங்கொடு கூறுவார்

ஊன மானவை போயறும் உய்யும் வகையதே.

 

06

 

106

 

வேள் படுத்திடு கண்ணினன் மேருவில் லாகவே

வாள ரக்கர் புரமெரித் தான்மங்க லக்குடி

ஆளு மாதிப் பிரானடி கள்ளடைந் தேத்தவே

கோளு நாளவை போயறுங் குற்றமில் லார்களே.

 

07

 

107

 

பொலியும் மால்வரை புக்கெடுத் தான்புகழ்ந் தேத்திட

வலியும் வாளொடு நாள்கொடுத் தான்மங்க லக்குடிப்

புலியின் ஆடையி னானடி யேத்திடும் புண்ணியர்

மலியும் வானுல கம்புக வல்லவர் காண்மினே.

 

08

 

108

 

ஞாலம் முன்படைத் தான்நளிர் மாமலர் மேலயன்

மாலுங் காணவொ ணாஎரி யான்மங்க லக்குடி

ஏல வார்குழ லாளொரு பாகமி டங்கொடு

கோல மாகிநின் றான்குணங் கூறுங் குணமதே.

 

09

 

109

 

மெய்யின் மாசினர் மேனி விரிதுவ ராடையர்

பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர்மங்க லக்குடிச்

செய்ய மேனிச் செழும்புனற் கங்கைசெ றிசடை

ஐயன் சேவடி யேத்தவல் லார்க்கழ காகுமே.

 

10

 

110

 

மந்த மாம்பொழில் சூழ்மங்க லக்குடி மன்னிய

எந்தை யையெழி லார்பொழிற் காழியர் காவலன்

சிந்தை செய்தடி சேர்த்திடு ஞானசம் பந்தன்சொல்

முந்தி யேத்தவல் லாரிமை யோர்முத லாவரே.

 

11

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - புராணவரதேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.11 சீகாழி

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

111

 

நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்

வல்லானை வல்லவர் பான்மலிந் தோங்கிய

சொல்லானைத் தொன்மதிற் காழியே கோயிலாம்

இல்லானை யேத்தநின் றார்க்குள தின்பமே.

 

01

 

112

 

நம்மான மாற்றி நமக்கரு ளாய்நின்ற

பெம்மானைப் பேயுடன் ஆடல் புரிந்தானை

அம்மானை அந்தணர் சேரு மணிகாழி

எம்மானை ஏத்தவல் லார்க்கிட ரில்லையே.

 

02

 

113

 

அருந்தானை யன்புசெய் தேத்தகில் லார்பால்

பொருந்தானைப் பொய்யடி மைத்தொழில் செய்வாருள்

விருந்தானை வேதிய ரோதி மிடைகாழி

இருந்தானை யேத்துமின் நும்வினை யேகவே.

 

03

 

114

 

புற்றானைப் புற்றர வம்மரை யின்மிசைச்

சுற்றானைத் தொண்டுசெய் வாரவர் தம்மொடும்

அற்றானை அந்தணர் காழி யமர்கோயில்

பற்றானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.

 

04

 

115

 

நெதியானை நெஞ்சிடங் கொள்ள நினைவார்தம்

விதியானை விண்ணவர் தாம்வியந் தேத்திய

கதியானைக் காருல வும்பொழிற் காழியாம்

பதியானைப் பாடுமின் நும்வினை பாறவே.

 

05

 

116

 

செப்பான மென்முலை யாளைத் திகழ்மேனி

வைப்பானை வார்கழ லேத்தி நினைவார்தம்

ஒப்பானை ஓதம் உலாவு கடற்காழி

மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே.

 

06

 

117

 

துன்பானைத் துன்பம் அழித்தரு ளாக்கிய

இன்பானை யேழிசை யின்னிலை பேணுவார்

அன்பானை அணிபொழிற் காழி நகர்மேய

நம்பானை நண்ணவல் லார்வினை நாசமே.

 

07

 

118

 

குன்றானைக் குன்றெடுத் தான்புயம் நாலைந்தும்

வென்றானை மென்மல ரானொடு மால்தேட

நின்றானை நேரிழை யாளொடுங் காழியுள்

நன்றானை நம்பெரு மானை நணுகுமே.

 

08

 

               

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் மறைந்து போயிற்று.

 

09

 

119

 

சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்

மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்மின்

பூவாய கொன்றையி னானைப் புனற்காழிக்

கோவாய கொள்கையி னாணடி கூறுமே.

 

10

 

120

 

கழியார்சீ ரோதமல் குங்கடற் காழியுள்

ஒழியாது கோயில்கொண் டானை யுகந்துள்கித்

தழியார்சொல் ஞானசம் பந்தன் தமிழார

மொழிவார்கள் மூவுல கும்பெறு வார்களே.

 

11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.12 திருவேகம்பம்

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

121

 

மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்

பிறையானைப் பெண்ணொடா ணாகிய பெம்மானை

இறையானை யேர்கொள்கச் சித்திரு வேகம்பத்

துறைவானை யல்லதுள் காதென துள்ளமே.

 

01

 

122

 

நொச்சியே வன்னிகொன் றைமதி கூவிளம்

உச்சியே புனைதல்வே டம்விடை யூர்தியான்

கச்சியே கம்பம்மே யகறைக் கண்டனை

நச்சியே தொழுமின்நும் மேல்வினை நையுமே.

 

02

 

123

 

பாராரு முழவமொந் தைகுழல் யாழொலி

சீராலே பாடலா டல்சிதை வில்லதோர்

ஏரார்பூங் கச்சியே கம்பனை யெம்மானைச்

சேராதார் இன்பமா யந்நெறி சேராரே.

 

03

 

124

 

குன்றேய்க்கு நெடுவெண்மா டக்கொடி கூடிப்போய்

மின்றேய்க்கு முகில்கள்தோ யும்வியன் கச்சியுள்

மன்றேய்க்கு மல்குசீ ரான்மலி யேகம்பஞ்

சென்றேய்க்குஞ் சிந்தையார் மேல்வினை சேராவே.

 

04

 

125

 

சடையானைத் தலைகையேந் திப்பலி தருவார்தங்

கடையேபோய் மூன்றுங்கொண் டான்கலிக் கச்சியுள்

புடையேபொன் மலருங்கம் பைக்கரை யேகம்பம்

உடையானை யல்லதுள் காதென துள்ளமே.

 

05

 

126

 

மழுவாளோ டெழில்கொள்சூ லப்படை வல்லார்தங்

கெழுவாளோ ரிமையாருச் சியுமை யாள்கங்கை

வழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்பந்

தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே.

 

06

 

127

 

விண்ணுளார் மறைகள்வே தம்விரித் தோதுவார்

கண்ணுளார் கழலின்வெல் வார்கரி காலனை

நண்ணுவா ரெழில்கொள்கச் சிநக ரேகம்பத்

தண்ணலா ராடுகின் றவலங் காரமே.

 

07

 

128

 

தூயானைத் தூயவா யம்மறை யோதிய

வாயானை வாளரக் கன்வலி வாட்டிய

தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம்

மேயானை மேவுவா ரென்றலை மேலாரே.

 

08

 

129

 

நாகம்பூண் ஏறதே றல்நறுங் கொன்றைதார்

பாகம்பெண் பலியுமேற் பர்மறை பாடுவர்

ஏகம்பம் மேவியா டுமிறை யிருவர்க்கும்

மாகம்பம் அறியும்வண் ணத்தவ னல்லனே.

 

09

 

130

 

போதியார் பிண்டியா ரென்றிவர் பொய்ந்நூலை

வாதியா வம்மினம் மாவெனுங் கச்சியுள்

ஆதியார் மேவியா டுந்திரு வேகம்பம்

நீதியாற் றொழுமினும் மேல்வினை நில்லாவே.

 

10

 

131

 

அந்தண்பூங் கச்சியே கம்பனை யம்மானைக்

கந்தண்பூங் காழியூ ரன்கலிக் கோவையால்

சந்தமே பாடவல் லதமிழ் ஞானசம்

பந்தன்சொற் பாடியா டக்கெடும் பாவமே.

 

11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.13 திருக்கோழம்பம்

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

132

 

நீற்றானை நீள்சடை மேல்நிறை வுள்ளதோர்

ஆற்றானை அழகமர் மென்முலை யாளையோர்

கூற்றானைக் குளிர்பொழிற் கோழம்பம் மேவிய

ஏற்றானை யேத்துமின் நும்மிடர் ஏகவே.

 

01

 

133

 

மையான கண்டனை மான்மறி யேந்திய

கையானைக் கடிபொழிற் கோழம்பம் மேவிய

செய்யானைத் தேன்நெய்பா லுந்திகழ்ந் தாடிய

மெய்யானை மேவுவார் மேல்வினை மேவாவே.

 

02

 

134

 

ஏதனை யேதமி லாஇமை யோர்தொழும்

வேதனை வெண்குழை தோடுவி ளங்கிய

காதனைக் கடிபொழிற் கோழம்பம் மேவிய

நாதனை யேத்துமின் நும்வினை நையவே.

 

03

 

135

 

சடையானைத் தண்மல ரான்சிர மேந்திய

விடையானை வேதமும் வேள்வியு மாயநன்

குடையானைக் குளிர்பொழில் சூழ்திருக் கோழம்பம்

உடையானை உள்குமின் உள்ளங்கு ளிரவே.

 

04

 

136

 

காரானைக் கடிகமழ் கொன்றையம் போதணி

தாரானைத் தையலோர்பால்மகிழ்ந் தோங்கிய

சீரானைச் செறிபொழிற் கோழம்பம் மேவிய

ஊரானை யேத்துமின் நும்மிடர் ஒல்கவே.

 

05

 

137

 

பண்டாலின் நீழலா னைப்பரஞ் சோதியை

விண்டார்கள் தம்புரம் மூன்றுட னேவேவக்

கண்டானைக் கடிகமழ் கோழம்பங் கோயிலாக்

கொண்டானைக் கூறுமின் உள்ளங் குளிரவே.

 

06

 

138

 

சொல்லானைச் சுடுகணை யாற்புரம் மூன்றெய்த

வில்லானை வேதமும் வேள்வியு மானானைக்

கொல்லானை உரியானைக் கோழம்பம் மேவிய

நல்லானை யேத்துமின் நும்மிடர் நையவே.

 

07

 

139

 

விற்றானை வல்லரக் கர்விறல் வேந்தனைக்

குற்றானைத் திருவிர லாற்கொடுங் காலனைச்

செற்றானைச் சீர்திக ழுந்திருக் கோழம்பம்

பற்றானைப் பற்றுவார் மேல்வினை பற்றாவே.

 

08

 

140

 

நெடியானோ டயனறி யாவகை நின்றதோர்

படியானைப் பண்டரங்க வேடம்ப யின்றானைக்

கடியாருங் கோழம்பம் மேவிய வெள்ளேற்றின்

கொடியானைக் கூறுமின் உள்ளங் குளிரவே.

 

09

 

141

 

புத்தருந் தோகையம் பீலிகொள் பொய்ம்மொழிப்

பித்தரும் பேசுவ பேச்சல்ல பீடுடைக்

கொத்தலர் தண்பொழிற் கோழம்பம் மேவிய

அத்தனை யேத்துமின் அல்லல் அறுக்கவே.

 

10

 

142

 

தண்புன லோங்குதண் ணந்தராய் மாநகர்

நண்புடை ஞானசம் பந்தன்நம் பானுறை

விண்பொழிற் கோழம்பம் மேவிய பத்திவை

பண்கொளப் பாடவல் லார்க்கில்லை பாவமே.

 

11

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - கோகுலேசுவரர், தேவியார் - சவுந்தரியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.14 திருவெண்ணியூர்

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

143

 

சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா

உடையானை உடைதலை யிற்பலி கொண்டூரும்

விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை

உடையானை யல்லதுள் காதென துள்ளமே.

 

01

 

144

 

சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டவெம்

ஆதியை ஆதியும் அந்தமு மில்லாத

வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில்

நீதியை நினையவல் லார்வினை நில்லாவே.

 

02

 

145

 

கனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும்

முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை

நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில்

இனிதனை யேத்துவ ரேதமி லாதாரே.

 

03

 

146

 

மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியாய்க்

காத்தானைக் கனிந்தவ ரைக்கலந் தாளாக

ஆர்த்தானை அழகமர் வெண்ணியம் மான்றன்னை

ஏத்தாதா ரென்செய்வார் ஏழையப் பேய்களே.

 

04

 

147

 

நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத்

தாரானைத் தையலோர் பாகமு டையானைச்

சீரானைத் திகழ்தரு வெண்ணிய மர்ந்துறை

ஊரானை உள்கவல் லார்வினை யோயுமே.

 

05

 

148

 

முத்தினை முழுவயி ரத்திரள் மாணிக்கத்

தொத்தினைத் துளக்கமில் லாதவி ளக்காய

வித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்

அத்தனை யடையவல் லார்க்கில்லை அல்லலே.

 

06

 

149

 

காய்ந்தானைக் காமனை யுஞ்செறு காலனைப்

பாய்ந்தானைப் பரியகைம் மாவுரித் தோன்மெய்யின்

மேய்ந்தானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்

நீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே.

 

07

 

150

 

மறுத்தானை மாமலை யைமதி யாதோடிச்

செறுத்தானைத் தேசழி யத்திகழ் தோள்முடி

இறுத்தானை யெழிலமர் வெண்ணியெம் மானெனப்

பொறுத்தானைப் போற்றுவா ராற்ற லுடையாரே.

 

08

 

151

 

மண்ணினை வானவ ரோடுமனி தர்க்குங்

கண்ணினைக் கண்ணனும் நான்முகனுங் காணா

விண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்

அண்ணலை அடையவல் லார்க்கில்லை அல்லலே.

 

09

 

152

 

குண்டருங் குணமிலா தசமண் சாக்கிய

மிண்டர்கள் மிண்டவை கேட்டு வெகுளன்மின்

விண்டவர் தம்புரம் எய்தவன் வெண்ணியில்

தொண்டரா யேத்தவல் லார்துயர் தோன்றாவே.

 

10

 

153

 

மருவாரு மல்குகா ழித்திகழ் சம்பந்தன்

திருவாருந் திகழ்தரு வெண்ணி யமர்ந்தானை

உருவாரும் ஒண்டமிழ் மாலை யிவைவல்லார்

பொருவாகப் புக்கிருப் பார்புவ லோகத்தே.

 

11

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வெண்ணிநாயகர், தேவியார் - அழகியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.15 திருக்காறாயில்

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

154

 

நீரானே நீள்சடை மேலொர் நிரைகொன்றைத்

தாரானே தாமரை மேலயன் தான்றொழுஞ்

சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில் ஊரானே யென்பவர் ஊனமி லாதாரே.

 

01

 

155

 

மதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர்

விதியானே விதியுடை வேதியர் தாந்தொழும்

நெதியானே நீர்வயல் சூழ்திருக் காறாயிற்

பதியானே யென்பவர் பாவமி லாதாரே.

 

02

 

156

 

விண்ணானே விண்ணவ ரேத்திவி ரும்புஞ்சீர்

மண்ணானே மண்ணிடை வாழுமு யிர்க்கெல்லாங்

கண்ணானே கடிபொழில் சூழ்திருக் காறாயில்

எண்ணானே யென்பவர் ஏதமி லாதாரே.

 

03

 

157

 

தாயானே தந்தையு மாகிய தன்மைகள்

ஆயானே ஆயநல் லன்பர்க்க ணியானே

சேயானே சீர்திக ழுந்திருக் காறாயில்

மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே.

 

04

 

158

 

கலையானே கலைமலி செம்பொற் கயிலாய

மலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்த

சிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில்

நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே.

 

05

 

159

 

ஆற்றானே ஆறணி செஞ்சடை யாடர

வேற்றானே ஏழுல கும்மிமை யோர்களும்

போற்றானே பொழில்திக ழுந்திருக் காறாயில்

நீற்றானே யென்பவர் மேல்வினை நில்லாவே.

 

06

 

160

 

சேர்த்தானே தீவினை தேய்ந்தறத் தேவர்கள்

ஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர்

காத்தானே கார்வயல் சூழ்திருக் காறாயில்

ஆர்த்தானே யென்பவர் மேல்வினை யாடாவே.

 

07

 

161

 

கடுத்தானே காலனைக் காலாற் கயிலாயம்

எடுத்தானை யேதமா கம்முனி வர்க்கிடர்

கெடுத்தானே கேழ்கிள ருந்திருக் காறாயில்

அடுத்தானே யென்பவர் மேல்வினை யாடாவே.

 

08

 

162

 

பிறையானே பேணிய பாடலோ டின்னிசை

மறையானே மாலொடு நான்முகன் காணாத

இறையானே யெழில்திக ழுந்திருக் காறாயில்

உறைவானே யென்பவர் மேல்வினை ஓடுமே.

 

09

 

163

 

செடியாரும் புன்சமண் சீவரத் தார்களும்

படியாரும் பாவிகள் பேச்சுப் பயனில்லை

கடியாரும் பூம்பொழில் சூழ்திருக் காறாயில்

குடியாருங் கொள்கையி னார்க்கில்லை குற்றமே.

 

10

 

164

 

ஏய்ந்தசீ ரெழில்திக ழுந்திருக் காறாயில்

ஆய்ந்தசீ ரானடி யேத்தி யருள்பெற்ற

பாய்ந்தநீர்க் காழியுள் ஞானசம் பந்தன்சொல்

வாய்ந்தவா றேத்துவார் வானுல காள்வாரே.

 

11

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - கண்ணாயிரநாதர், தேவியார் - கயிலாயநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.16 திருமணஞ்சேரி

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

165

 

அயிலாரும் அம்பத னாற்புர மூன்றெய்து

குயிலாரும் மென்மொழி யாளொரு கூறாகி

மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்

பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.

 

01

 

166

 

விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்திய

நெதியானை நீள்சடை மேல்நிகழ் வித்தவான்

மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்

பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே.

 

02

 

167

 

எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறிய

இப்பாலா யெனையும் ஆள வுரியானை

வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி

மெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே.

 

03

 

168

 

விடையானை மேலுல கேழுமிப் பாரெலாம்

உடையானை ஊழிதோ றூழி உளதாய

படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி

அடைவானை யடையவல் லார்க்கில்லை யல்லலே.

 

04

 

169

 

எறியார்பூங் கொன்றையி னோடும் இளமத்தம்

வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானை

மறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச்

செறிவானைச் செப்பவல் லார்க்கிடர் சேராவே.

 

05

 

170

 

மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம்

பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை

வழியானை வானவ ரேத்து மணஞ்சேரி

இழியாமை யேத்தவல் லார்க்கெய்தும் இன்பமே.

 

06

 

171

 

எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக்

கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானை

மண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்

பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே.

 

07

 

172

 

எடுத்தானை யெழில்முடி யெட்டும் இரண்டுந்தோள்

கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானை

மடுத்தார வண்டிசை பாடும் மணஞ்சேரி

பிடித்தாரப் பேணவல் லார்பெரியோர்களே.

 

08

 

173

 

சொல்லானைத் தோற்றங்கண் டானும் நெடுமாலுங்

கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்க

வல்லார்நன் மாதவ ரேத்து மணஞ்சேரி

எல்லாமாம் எம்பெரு மான்கழல் ஏத்துமே.

 

09

 

174

 

சற்றேயுந் தாமறி வில்சமண் சாக்கியர்

சொற்றேயும் வண்ணமொர் செம்மை உடையானை

வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி

பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே.

 

10

 

175

 

கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்த

தண்ணார்சீர் ஞானசம் பந்தன் தமிழ்மாலை

மண்ணாரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி

பண்ணாரப் பாடவல் லார்க்கில்லை பாவமே.

 

11

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - மணவாளநாயகர், தேவியார் - யாழ்மொழியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.17 திருவேணுபுரம்

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

176

 

நிலவும் புனலும் நிறைவா ளரவும்

இலகுஞ் சடையார்க் கிடமாம் எழிலார்

உலவும் வயலுக் கொளியார் முத்தம்

விலகுங் கடலார் வேணு புரமே.

 

01

 

177

 

அரவார் கரவன் அமையார் திரள்தோள்

குரவார் குழலா ளொருகூ றனிடங்

கரவா தகொடைக் கலந்தா ரவர்க்கு

விரவா கவல்லார் வேணு புரமே.

 

02

 

178

 

ஆகம் மழகா யவள்தான் வெருவ

நாகம் உரிபோர்த் தவனண் ணுமிடம்

போகந் தருசீர் வயல்சூழ் பொழில்கள்

மேகந் தவழும் வேணு புரமே.

 

03

 

179

 

காசக் கடலில் விடமுண் டகண்டத்

தீசர்க் கிடமா வதுஇன் னறவ

வாசக் கமலத் தனம்வன் றிரைகள்

வீசத் துயிலும் வேணு புரமே.

 

04

 

180

 

அரையார் கலைசேர் அனமென் னடையை

உரையா வுகந்தா னுறையும் இடமாம்

நிரையார் கமுகின் நிகழ்பா ளையுடை

விரையார் பொழில்சூழ் வேணு புரமே.

 

05

 

181

 

ஒளிரும் பிறையும் முறுகூ விளவின்

தளிருஞ் சடைமே லுடையா னிடமாம்

நளிரும் புனலின் னலசெங் கயல்கள்

மிளிரும் வயல்சூழ் வேணு புரமே.

 

06

 

               

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

07

 

182

 

ஏவும் படைவேந் தன்இரா வணனை

ஆவென் றலற அடர்த்தா னிடமாந்

தாவும் மறிமா னொடுதண் மதியம்

மேவும் பொழில்சூழ் வேணு புரமே.

 

08

 

183

 

கண்ணன் கடிமா மலரிற் றிகழும்

அண்ணல் இருவர் அறியா இறையூர்

வண்ணச் சுதைமா ளிகைமேற் கொடிகள்

விண்ணிற் றிகழும் வேணு புரமே.

 

09

 

184

 

போகம் மறியார் துவர்போர்த் துழல்வார்

ஆகம் மறியா அடியார் இறையூர்

மூகம் மறிவார் கலைமுத் தமிழ்நூல்

மீகம் மறிவார் வேணு புரமே.

 

10

 

185

 

கலமார் கடல்போல் வளமார் தருநற்

புலமார் தருவே ணுபுரத் திறையை

நலமார் தருஞா னசம்பந் தன்சொன்ன

குலமார் தமிழ்கூ றுவர்கூர் மையரே.

 

11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.18 திருமருகல் - விடந்தீர்த்ததிருப்பதிகம் (186-196)

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

186

 

சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்

விடையா யெனுமால் வெருவா விழுமால்

மடையார் குவளை மலரும் மருகல்

உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே.

 

01

 

187

 

சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்

முந்தா யெனுமால் முதல்வா எனுமால்

கொந்தார் குவளை குலவும் மருகல்

எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே.

 

02

 

188

 

அறையார் கழலும் மழல்வா யரவும்

பிறையார் சடையும் முடையாய் பெரிய

மறையார் மருகல் மகிழ்வா யிவளை

இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே.

 

03

 

189

 

ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்

பலிநீ திரிவாய் பழியில் புகழாய்

மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை

மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே.

 

04

 

190

 

துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன

மணிநீ லகண்ட முடையாய் மருகல்

கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்

அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே.

 

05

 

191

 

பலரும் பரவப் படுவாய் சடைமேல்

மலரும் பிறையொன் றுடையாய் மருகல்

புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்

தலரும் படுமோ அடியா ளிவளே.

 

06

 

192

 

வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா

எழுவாள் நினைவாள் இரவும் பகலும்

மழுவா ளுடையாய் மருகல் பெருமான்

தொழுவா ளிவளைத் துயராக் கினையே.

 

07

 

193

 

இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத்

துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்

வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்

அலங்கல் லிவளை அலராக் கினையே.

 

08

 

194

 

எரியார் சடையும் மடியும் மிருவர்

தெரியா ததோர்தீத் திரளா யவனே

மரியார் பிரியா மருகற் பெருமான்

அரியாள் இவளை அயர்வாக் கினையே.

 

09

 

195

 

அறிவில் சமணும் மலர்சாக் கியரும்

நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்

மறியேந் துகையாய் மருகற் பெருமான்

நெறியார் குழலி நிறைநீக் கினையே.

 

10

 

196

 

வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்

உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்

இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்

வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே.

 

11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.19 திருநெல்லிக்கா (197-207)

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

197

 

அறத்தா லுயிர்கா வலமர்ந் தருளி

மறத்தால் மதில்மூன் றுடன்மாண் பழித்த

திறத்தால் தெரிவெய் தியதீ வெண்டிங்கள்

நிறத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

 

01

 

198

 

பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல்

மதிதா னதுசூ டியமைந் தனுந்தான்

விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும்

நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

 

02

 

199

 

நலந்தா னவன்நான் முகன்றன் தலையைக்

கலந்தா னதுகொண் டகபா லியுந்தான்

புலந்தான் புகழா லெரிவிண் புகழும்

நிலந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

 

03

 

200

 

தலைதா னதுஏந் தியதம் மடிகள்

கலைதான் திரிகா டிடம்நா டிடமா

மலைதா னெடுத்தான் மதில்மூன் றுடைய

நிலைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

 

04

 

201

 

தவந்தான் கதிதான் மதிவார் சடைமேல்

உவந்தான் சுறவேந் தனுரு வழியச்

சிவந்தான் செயச்செய் துசெறுத் துலகில்

நிவந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

 

05

 

202

 

வெறியார் மலர்க்கொன் றையந்தார் விரும்பி

மறியார் மலைமங் கைமகிழ்ந் தவன்றான்

குறியாற் குறிகொண் டவர்போய்க் குறுகும்

நெறியான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

 

06

 

203

 

பிறைதான் சடைச்சேர்த் தியஎந் தைபெம்மான்

இறைதான் இறவாக் கயிலை மலையான்

மறைதான் புனலொண் மதிமல் குசென்னி

நிறைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

 

07

 

204

 

மறைத்தான் பிணிமா தொருபா கந்தன்னை

மிறைத்தான் வரையா லரக்கன் மிகையைக்

குறைத்தான் சடைமேற் குளிர்கோல் வளையை

நிறைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

 

08

 

205

 

தழல்தா மரையான் வையந்தா யவனுங்

கழல்தான் முடிகா ணியநா ணொளிரும்

அழல்தான் அடியார்க் கருளாய்ப் பயக்கும்

நிழல்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

 

09

 

206

 

கனத்தார் திரைமாண் டழற்கான் றநஞ்சை

எனத்தா வெனவாங் கியதுண் டகண்டன்

மனத்தாற் சமண்சாக் கியர்மாண் பழிய

நினைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.

 

10

 

207

 

புகரே துமிலா தபுத்தே ளுலகின்

நிகரா நெல்லிக்கா வுள்நிலா யவனை

நகரா நலஞா னசம்பந் தன்சொன்ன

பகர்வா ரவர்பா வமிலா தவரே.

 

11

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - நெல்லிவனேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.20 திருஅழுந்தூர் (208-218)

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

208

 

தொழுமா றுவல்லார் துயர்தீ ரநினைந்

தெழுமா றுவல்லார் இசைபா டவிம்மி

அழுமா றுவல்லார் அழுந்தை மறையோர்

வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.

 

01

 

209

 

கடலே றியநஞ் சமுதுண் டவனே

உடலே உயிரே உணர்வே யெழிலே

அடலே றுடையாய் அழுந்தை மறையோர்

விடலே தொழமா மடம்மே வினையே.

 

02

 

210

 

கழிகா டலனே கனலா டலினாய்

பழிபா டிலனே யவையே பயிலும்

அழிபா டிலராய் அழுந்தை மறையோர்

வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.

 

03

 

211

 

வானே மலையே யெனமன் னுயிரே

தானே தொழுவார் தொழுதாள் மணியே

ஆனே சிவனே அழுந்தை யவரெம்

மானே யெனமா மடம்மன் னினையே.

 

04

 

212

 

அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான்

நிலையார் மறியும் நிறைவெண் மழுவும்

இலையார் படையும் மிவையேந் துசெல்வ

நிலையா வதுகொள் கெனநீ நினையே.

 

05

 

213

 

நறவார் தலையின் நயவா வுலகிற்

பிறவா தவனே பிணியில் லவனே

அறையார் கழலாய் அழுந்தை மறையோர்

மறவா தெழமா மடம்மன் னினையே.

 

06

 

214

 

தடுமா றுவல்லாய் தலைவா மதியம்

சுடுமா றுவல்லாய் சுடரார் சடையில்

அடுமா றுவல்லாய் அழுந்தை மறையோர்

நெடுமா நகர்கை தொழநின் றனையே.

 

07

 

215

 

பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறுங்

கரியாய் கரிகா டுயர்வீ டுடையாய்

அரியாய் எளியாய் அழுந்தை மறையோர்

வெரியார் தொழமா மடம்மே வினையே.

 

08

 

216

 

மணீநீள் முடியான் மலையை அரக்கன்

தணியா தெடுத்தான் உடலந் நெரித்த

அணியார் விரலாய் அழுந்தை மறையோர்

மணிமா மடம்மன் னியிருந் தனையே.

 

09

 

217

 

முடியார் சடையாய் முனநா ளிருவர்

நெடியான் மலரான் நிகழ்வா லிவர்கள்

அடிமே லறியார் அழுந்தை மறையோர்

படியாற் றொழமா மடம்பற் றினையே.

 

10

 

218

 

அருஞா னம்வல்லார் அழுந்தை மறையோர்

பெருஞா னமுடைப் பெருமா னவனைத்

திருஞா னசம்பந் தனசெந் தமிழ்கள்

உருஞா னமுண்டாம் உணர்ந்தார் தமக்கே.

 

11

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வேதபுரீசுவரர், தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.21 திருக்கழிப்பாலை

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

219

 

புனலா டியபுன் சடையாய் அரணம்

அனலா கவிழித் தவனே அழகார்

கனலா டலினாய் கழிப்பா லையுளாய்

உனவார் கழல்கை தொழுதுள் குதுமே.

 

01

 

220

 

துணையா கவொர்தூ வளமா தினையும்

இணையா கவுகந் தவனே இறைவா

கணையால் எயிலெய் கழிப்பா லையுளாய்

இணையார் கழலேத் தவிடர் கெடுமே.

 

02

 

221

 

நெடியாய் குறியாய் நிமிர்புன் சடையின்

முடியாய் சுடுவெண் பொடிமுற் றணிவாய்

கடியார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்

அடியார்க் கடையா அவலம் மவையே.

 

03

 

222

 

எளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீ

வளிகா யமென வெளிமன் னியதூ

ஒளியாய் உனையே தொழுதுன் னுமவர்க்

களியாய் கழிப்பா லையமர்ந் தவனே.

 

04

 

223

 

நடநண் ணியொர்நா கமசைத் தவனே

விடநண் ணியதூ மிடறா விகிர்தா

கடல்நண் ணுகழிப் பதிகா வலனே

உடன்நண் ணிவணங் குவனுன் னடியே.

 

05

 

224

 

பிறையார் சடையாய் பெரியாய் பெரியம்

மறையார் தருவாய் மையினா யுலகிற்

கறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்

இறையார் கழலேத் தவிடர் கெடுமே.

 

06

 

225

 

முதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங்

கதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய்

எதிர்கொள் மொழியால் இரந்தேத் துமவர்க்

கதிரும் வினையா யினஆ சறுமே.

 

07

 

226

 

எரியார் கணையால் எயிலெய் தவனே

விரியார் தருவீழ் சடையாய் இரவிற்

கரிகா டலினாய் கழிப்பா லையுளாய்

உரிதா கிவணங் குவனுன் னடியே.

 

08

 

227

 

நலநா ரணன்நான் முகன்நண் ணலுறக்

கனலா னவனே கழிப்பா லையுளாய்

உனவார் கழலே தொழுதுன் னுமவர்க்

கிலதாம் வினைதான் எயிலெய் தவனே.

 

09

 

228

 

தவர்கொண் டதொழிற் சமண்வே டரொடுந்

துவர்கொண் டனநுண் துகிலா டையரும்

அவர்கொண் டனவிட் டடிகள் ளுறையும்

உவர்கொண் டகழிப் பதியுள் குதுமே.

 

10

 

229

 

கழியார் பதிகா வலனைப் புகலிப்

பழியா மறைஞா னசம்பந் தனசொல்

வழிபா டிவைகொண் டடிவாழ்த் தவல்லார்

கெழியார் இமையோ ரொடுகே டிலரே.

 

11

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பால்வண்ணநாதர், தேவியார் - வேதநாயகியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.22 திருக்குடவாயில்

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

230

 

திகழுந் திருமா லொடுநான் முகனும்

புகழும் பெருமான் அடியார் புகல

மகிழும் பெருமான் குடவா யில்மன்னி

நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே.

 

01

 

231

 

ஓடுந் நதியும் மதியோ டுரகம்

சூடுஞ் சடையன் விடைதொல் கொடிமேல்

கூடுங் குழகன் குடவா யில்தனில்

நீடும் பெருங்கோ யில்நிலா யவனே.

 

02

 

232

 

கலையான் மறையான் கனலேந் துகையான்

மலையா ளவள்பா கம்மகிழ்ந் தபிரான்

கொலையார் சிலையான் குடவா யில்தனில்

நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே.

 

03

 

233

 

சுலவுஞ் சடையான் சுடுகா டிடமா

நலமென் முலையாள் நகைசெய் யநடங்

குலவுங் குழகன் குடவா யில்தனில்

நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே.

 

04

 

234

 

என்றன் உளமே வியிருந் தபிரான்

கன்றன் மணிபோல் மிடறன் கயிலைக்

குன்றன் குழகன் குடவா யில்தனில்

நின்ற பெருங்கோ யில்நிலா யவனே.

 

05

 

235

 

அலைசேர் புனலன் னனலன் னமலன்

தலைசேர் பலியன் சதுரன் விதிருங்

கொலைசேர் படையன் குடவா யில்தனில்

நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே.

 

06

 

236

 

அறையார் கழலன் னமலன் னியலிற்

பறையாழ் முழவும் மறைபா டநடங்

குறையா அழகன் குடவா யில்தனில்

நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே.

 

07

 

237

 

வரையார் திரள்தோள் அரக்கன் மடியவ்

வரையா ரவொர்கால் விரல்வைத் தபிரான்

வரையார் மதில்சூழ் குடவா யில்மன்னும்

வரையார் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.

 

08

 

238

 

பொன்னொப் பவனும் புயலொப் பவனுந்

தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான்

கொன்னற் படையான் குடவா யில்தனில்

மன்னும் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.

 

09

 

239

 

வெயிலின் நிலையார் விரிபோர் வையினார்

பயிலும் முரையே பகர்பா விகள்பாற்

குயிலன் குழகன் குடவா யில்தனில்

உயரும் பெருங்கோ யிலுயர்ந் தவனே.

 

10

 

240

 

கடுவாய் மலிநீர் குடவா யில்தனில்

நெடுமா பெருங்கோ யில்நிலா யவனை

தடமார் புகலித் தமிழார் விரகன்

வடமார் தமிழ்வல் லவர்நல் லவரே.

 

11

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - கோணேசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.23 திருவானைக்கா

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

241

 

மழையார் மிடறா மழுவா ளுடையாய்

உழையார் கரவா உமையாள் கணவா

விழவா ரும்வெணா வலின்மே வியவெம்

அழகா எனும்ஆ யிழையாள் அவளே.

 

01

 

242

 

கொலையார் கரியின் னுரிமூ டியனே

மலையார் சிலையா வளைவித் தவனே

விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்

நிலையா அருளாய் எனும்நே ரிழையே.

 

02

 

243

 

காலா லுயிர்கா லனைவீ டுசய்தாய்

பாலோ டுநெய்யா டியபால் வணனே

வேலா டுகையா யெம்வெண்நா வலுளாய்

ஆலார் நிழலாய் எனும்ஆ யிழையே.

 

03

 

244

 

சுறவக் கொடிகொண் டவன்நீ றதுவாய்

உறநெற் றிவிழித் தவெம்உத் தமனே

விறல்மிக் ககரிக் கருள்செய் தவனே

அறமிக் கதுவென் னுமெனா யிழையே.

 

04

 

245

 

செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன்

அங்கட் கருணை பெரிதா யவனே

வெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய்

அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே.

 

05

 

246

 

குன்றே யமர்வாய் கொலையார் புலியின்

தன்றோ லுடையாய் சடையாய் பிறையாய்

வென்றாய் புரமூன் றைவெண்நா வலுளே

நின்றா யருளாய் எனும்நே ரிழையே.

 

06

 

               

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

07

 

247

 

மலையன் றெடுத்த வரக்கன் முடிதோள்

தொலையவ் விரலூன் றியதூ மழுவா

விலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்

அலசா மல்நல்காய் எனும்ஆ யிழையே.

 

08

 

248

 

திருவார் தருநா ரணன்நான் முகனும்

மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய்

விரையா ரும்வெண்நா வலுள்மே வியஎம்

அரவா எனும்ஆ யிழையா ளவளே.

 

09

 

249

 

புத்தர் பலரோ டமண்பொய்த் தவர்கள்

ஒத்தவ் வுரைசொல் லிவையோ ரகிலார்

மெய்த்தே வர்வணங் கும்வெண்நா வலுளாய்

அத்தா அருளாய் எனும்ஆ யிழையே.

 

10

 

250

 

வெண்நா வலமர்ந் துறைவே தியனை

கண்ணார் கமழ்கா ழியர்தந் தலைவன்

பண்ணோ டிவைபா டியபத் தும்வல்லார்

விண்ணோ ரவரேத் தவிரும் புவரே.

 

11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.24 திருநாகேச்சரம்

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

251

 

பொன்னேர் தருமே னியனே புரியும்

மின்னேர் சடையாய் விரைகா விரியின்

நன்னீர் வயல்நா கேச்சர நகரின்

மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே.

 

01

 

252

 

சிறவார் புரமூன் றெரியச் சிலையில்

உறவார் கணையுய்த் தவனே உயரும்

நறவார் பொழில்நா கேச்சர நகருள்

அறவா எனவல் வினையா சறுமே.

 

02

 

253

 

கல்லால் நிழல்மே யவனே கரும்பின்

வில்லான் எழில்வே வவிழித் தவனே

நல்லார் தொழுநா கேச்சர நகரில்

செல்வா எனவல் வினைதேய்ந் தறுமே.

 

03

 

254

 

நகுவான் மதியோ டரவும் புனலும்

தகுவார் சடையின் முடியாய் தளவம்

நகுவார் பொழில்நா கேச்சர நகருள்

பகவா எனவல் வினைபற் றறுமே.

 

04

 

255

 

கலைமான் மறியுங் கனலும் மழுவும்

நிலையா கியகை யினனே நிகழும்

நலமா கியநா கேச்சர நகருள்

தலைவா எனவல் வினைதான் அறுமே.

 

05

 

256

 

குரையார் கழலா டநடங் குலவி

வரையான் மகள்கா ணமகிழ்ந் தவனே

நரையார் விடையே றுநாகேச் சரத்தெம்

அரைசே எனநீங் கும்அருந் துயரே.

 

06

 

257

 

முடையார் தருவெண் டலைகொண் டுலகில்

கடையார் பலிகொண் டுழல்கா ரணனே

நடையார் தருநா கேச்சர நகருள்

சடையா எனவல் வினைதான் அறுமே.

 

07

 

258

 

ஓயா தஅரக் கன்ஒடிந் தலற

நீயா ரருள்செய் துநிகழ்ந் தவனே

வாயா ரவழுத் தவர்நா கேச்சரத்

தாயே எனவல் வினைதான் அறுமே.

 

08

 

259

 

நெடியா னொடுநான் முகன்நே டலுறச்

சுடுமா லெரியாய் நிமிர்சோ தியனே

நடுமா வயல்நா கேச்சர நகரே

இடமா வுறைவா யெனஇன் புறுமே.

 

09

 

260

 

மலம்பா வியகை யொடுமண் டையதுண்

கலம்பா வியர்கட் டுரைவிட் டுலகில்

நலம்பாவியநா கேச்சர நகருள்

சிலம்பா எனத்தீ வினைதேய்ந் தறுமே.

 

10

 

261

 

கலமார் கடல்சூழ் தருகா ழியர்கோன்

தலமார் தருசெந் தமிழின் விரகன்

நலமார் தருநா கேச்சரத் தரனைச்

சொலன்மா லைகள்சொல் லநிலா வினையே.

 

11

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - செண்பகாரணியேசுவரர், தேவியார் - குன்றமுலைநாயகியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.25 திருப்புகலி

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

262

 

உகலி யாழ்கட லோங்கு பாருளீர்

அகலி யாவினை யல்லல் போயறும்

இகலி யார்புர மெய்த வன்னுறை

புகலி யாம்நகர் போற்றி வாழ்மினே.

 

01

 

263

 

பண்ணி யாள்வதோ ரேற்றர் பால்மதிக்

கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடிப்

புண்ணி யன்னுறை யும்பு கலியை

நண்ணு மின்னல மான வேண்டிலே.

 

02

 

264

 

வீசு மின்புரை காதன் மேதகு

பாச வல்வினை தீர்த்த பண்பினன்

பூசு நீற்றினன் பூம்பு கலியைப்

பேசு மின்பெரி தின்ப மாகவே.

 

03

 

265

 

கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன்

படிகொள் பாரிடம் பேசும் பான்மையன்

பொடிகொள் மேனியன் பூம்பு கலியுள்

அடிகளை யடைந் தன்பு செய்யுமே.

 

04

 

266

 

பாதத் தாரொலி பல்சி லம்பினன்

ஓதத் தார்விட முண்ட வன்படைப்

பூதத் தான்புக லிந்ந கர்தொழ

ஏதத் தார்க்கிட மில்லை யென்பரே.

 

05

 

267

 

மறையி னான்ஒலி மல்கு வீணையன்

நிறையி னார்நிமிர் புன்ச டையனெம்

பொறையி னானுறை யும்பு கலியை

நிறையி னாற்றொழ நேச மாகுமே.

 

06

 

268

 

கரவி டைமனத் தாரைக் காண்கிலான்

இரவி டைப்பலி கொள்ளும் எம்மிறை

பொருவி டைஉயர்த் தான்பு கலியைப்

பரவி டப்பயில் பாவம் பாறுமே.

 

07

 

269

 

அருப்பி னார்முலை மங்கை பங்கினன்

விருப்பி னான்அரக் கன்னு ரஞ்செகும்

பொருப்பி னான்பொழி லார்பு கலியூர்

இருப்பி னானடி யேத்தி வாழ்த்துமே.

 

08

 

270

 

மாலும் நான்முகன் றானும் வார்கழற்

சீல மும்முடி தேட நீண்டெரி

போலு மேனியன் பூம்பு கலியுள்

பால தாடிய பண்ப னல்லனே.

 

09

 

271

 

நின்று துய்ப்பவர் நீசர் தேரர்சொல்

ஒன்ற தாகவை யாவு ணர்வினுள்

நின்ற வன்னிக ழும்பு கலியைச்

சென்று கைதொழச் செல்வ மாகுமே.

 

10

 

272

 

புல்ல மேறிதன் பூம்பு கலியை

நல்ல ஞானசம் பந்தன் நாவினாற்

சொல்லும் மாலையீ ரைந்தும் வல்லவர்க்

கில்லை யாம்வினை இருநி லத்துளே.

 

11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.26 திருநெல்வாயில்

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

273

 

புடையி னார்புள்ளி கால்பொ ருந்திய

மடையி னார்மணி நீர்நெல் வாயிலார்

நடையி னால்விரற் கோவ ணந்நயந்

துடையி னாரெம துச்சி யாரே.

 

01

 

274

 

வாங்கி னார்மதில் மேற்க ணைவெள்ளந்

தாங்கி னார்தலை யாய தன்மையர்

நீங்கு நீரநெல் வாயி லார்தொழ

ஓங்கி னாரெம துச்சி யாரே.

 

2

 

275

 

நிச்ச லேத்தும்நெல் வாயி லார்தொழ

இச்சை யாலுறை வாரெம் மீசனார்

கச்சை யாவதோர் பாம்பி னார்கவின்

இச்சை யாரெம துச்சி யாரே.

 

03

 

276

 

மறையி னார்மழு வாளி னார்மல்கு

பிறையி னார்பிறை யோடி லங்கிய

நிறையி னாரநெல் வாயிலார் தொழும்

இறைவ னாரெம துச்சி யாரே.

 

04

 

277

 

விருத்த னாகிவெண் ணீறு பூசிய

கருத்த னார்கன லாட்டு கந்தவர்

நிருத்த னாரநெல் வாயில் மேவிய

ஒருத்த னாரெம துச்சி யாரே.

 

05

 

278

 

காரி னார்கொன்றைக் கண்ணி யார்மல்கு

பேரி னார்பிறை யோடி லங்கிய

நீரி னாரநெல் வாயிலார் தொழும்

ஏரி னாரெம துச்சி யாரே.

 

06

 

279

 

ஆதி யாரந்த மாயி னார்வினை

கோதி யார்மதில் கூட்ட ழித்தவர்

நீதி யாரநெல் வாயி லார்மறை

ஓதி யாரெம துச்சி யாரே.

 

07

 

280

 

பற்றி னான்அரக் கன்க யிலையை

ஒற்றி னாரொரு கால்வி ரலுற

நெற்றி யாரநெல் வாயி லார்தொழும்

பெற்றி யாரெம துச்சி யாரே.

 

08

 

281

 

நாடி னார்மணி வண்ணன் நான்முகன்

கூடி னார்குறு காத கொள்கையர்

நீடி னாரநெல் வாயி லார்தலை

ஓடி னாரெம துச்சி யாரே.

 

09

 

282

 

குண்ட மண்துவர்க் கூறை மூடர்சொல்

பண்ட மாகவை யாத பண்பினர்

விண்ட யங்குநெல் வாயி லார்நஞ்சை

உண்ட கண்டரெம் உச்சி யாரே.

 

10

 

283

 

நெண்ப யங்குநெல் வாயி லீசனைச்

சண்பை ஞானசம் பந்தன் சொல்லிவை

பண்ப யன்கொளப் பாட வல்லவர்

விண்ப யன்கொளும் வேட்கை யாளரே.

 

11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.27 திரு இந்திரநீலப்பருப்பதம்

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

284

 

குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்

திலகு மான்மழு வேந்தும் அங்கையன்

நிலவும் இந்திர நீலப் பர்ப்பதத்

துலவி னான்அடி யுள்க நல்குமே.

 

01

 

285

 

குறைவி லார்மதி சூடி யாடவண்

டறையு மாமலர்க் கொன்றை சென்னிசேர்

இறைவன் இந்திர நீலப் பர்ப்பதத்

துறைவி னான்றனை யோதி உய்ம்மினே.

 

02

 

286

 

என்பொன் என்மணி யென்ன ஏத்துவார்

நம்பன் நான்மறை பாடு நாவினான்

இன்பன் இந்திர நீலப் பர்ப்பதத்

தன்பன் பாதமே யடைந்து வாழ்மினே.

 

03

 

287

 

நாச மாம்வினை நன்மை தான்வருந்

தேச மார்புக ழாய செம்மையெம்

ஈசன் இந்திர நீலப் பர்ப்பதங்

கூசி வாழ்த்துதுங் குணம தாகவே.

 

04

 

288

 

மருவு மான்மட மாதொர் பாகமாய்ப்

பரவு வார்வினை தீர்த்த பண்பினான்

இரவன் இந்திர நீலப் பர்ப்பதத்

தருவி சூடிடும் அடிகள் வண்ணமே.

 

05

 

289

 

வெண்ணி லாமதி சூடும் வேணியன்

எண்ணி லார்மதி லெய்த வில்லினன்

அண்ணல் இந்திர நீலப் பர்ப்பதத்

துண்ணி லாவுறும் ஒருவன் நல்லனே.

 

06

 

290

 

கொடிகொள் ஏற்றினர் கூற்று தைத்தவர்

பொடிகொள் மேனியிற் பூண்ட பாம்பினர்

அடிகள் இந்திர நீலப் பர்ப்பதம்

உடைய வாண ருகந்த கொள்கையே.

 

07

 

291

 

எடுத்த வல்லரக் கன்க ரம்புயம்

அடர்த்த தோர்விர லான வனையாட்

படுத்தன் இந்திர நீலப் பர்ப்பதம்

முடித்த லம்முற முயலும் இன்பமே.

 

08

 

292

 

பூவி னானொடு மாலும் போற்றுறுந்

தேவன் இந்திர நீலப் பர்ப்பதம்

பாவி யாதெழு வாரைத் தம்வினை

கோவி யாவருங் கொல்லுங் கூற்றமே.

 

09

 

293

 

கட்டர் குண்டமண் தேரர் சீரிலர்

விட்டர் இந்திர நீலப் பர்ப்பதம்

எட்ட னைநினை யாத தென்கொலோ

சிட்ட தாயுறை யாதி சீர்களே.

 

10

 

294

 

கந்த மார்பொழில் சூழ்ந்த காழியான்

இந்தி ரன்தொழு நீலப் பர்பதத்

தந்த மில்லியை யேத்து ஞானசம்

பந்தன் பாடல்கொண் டோ தி வாழ்மினே.

 

11

 

இத்தலம் வடதேசத்திலுள்ளது.

சுவாமிபெயர் - நீலாசலநாதர், தேவியார் - நீலாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.28 திருக்கருவூரானிலை

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

295

 

தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்

சுண்ட லாருயி ராய தன்மையர்

கண்ட னார்கரு வூரு ளானிலை

அண்ட னாரரு ளீயும் அன்பரே.

 

01

 

296

 

நீதி யார்நினைந் தாய நான்மறை

ஓதி யாரொடுங் கூட லார்குழைக்

காதி னார்கரு வூரு ளானிலை

ஆதி யாரடி யார்தம் அன்பரே.

 

02

 

297

 

விண்ணு லாமதி சூடி வேதமே

பண்ணு ளார்பர மாய பண்பினர்

கண்ணு ளார்கரு வூரு ளானிலை

அண்ண லாரடி யார்க்கு நல்லரே.

 

03

 

298

 

முடியர் மும்மத யானை யீருரி

பொடியர் பூங்கணை வேளைச் செற்றவர்

கடியு ளார்கரு வூரு ளானிலை

அடிகள் யாவையு மாய ஈசரே.

 

04

 

299

 

பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர்

மங்கை யர்மணி நீல கண்டர்வான்

கங்கை யர்கரு வூரு ளானிலை

அங்கை யாடர வத்தெம் மண்ணலே.

 

05

 

300

 

தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில்

மேவர் மும்மதி லெய்த வில்லியர்

காவ லர்கரு வூரு ளானிலை

மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே.

 

06

 

301

 

பண்ணி னார்படி யேற்றர் நீற்றர்மெய்ப்

பெண்ணி னார்பிறை தாங்கு நெற்றியர்

கண்ணி னார்கரு வூரு ளானிலை

நண்ணி னார்நமை யாளும் நாதரே.

 

07

 

302

 

கடுத்த வாளரக் கன்க யிலையை

எடுத்த வன்றலை தோளுந் தாளினால்

அடர்த்த வன்கரு வூரு ளானிலை

கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே.

 

08

 

303

 

உழுது மாநிலத் தேன மாகிமால்

தொழுது மாமல ரோனுங் காண்கிலார்

கழுதி னான்கரு வூரு ளானிலை

முழுது மாகிய மூர்த்தி பாதமே.

 

09

 

304

 

புத்தர் புன்சம ணாதர் பொய்யுரைப்

பித்தர் பேசிய பேச்சை விட்டுமெய்ப்

பத்தர் சேர்கரு வூரு ளானிலை

அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே.

 

10

 

305

 

கந்த மார்பொழிற் காழி ஞானசம்

பந்தன் சேர்கரு வூரு ளானிலை

எந்தை யைச்சொன்ன பத்தும் வல்லவர்

சிந்தை யிற்றுய ராய தீர்வரே.

 

11

 

இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பசுபதீசுவரர், தேவியார் - கிருபாநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.29 திருப்புகலி - திருவிராகம்

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

306

 

முன்னிய கலைப்பொருளும் மூவுலகில் வாழ்வும்

பன்னிய வொருத்தர்பழ வூர்வினவின் ஞாலந்

துன்னிஇமை யோர்கள்துதி செய்துமுன் வணங்குஞ்

சென்னியர் விருப்புறு திருப்புகலி யாமே.

 

01

 

307

 

வண்டிரை மதிச்சடை மிலைத்த புனல்சூடிப்

பண்டெரிகை யாடுபர மன்பதிய தென்பர்

புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத்

தெண்டிரை கடற்பொலி திருப்புகலி யாமே.

 

02

 

308

 

பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி

நாவணவு மந்தணன் விருப்பிடம தென்பர்

பூவணவு சோலையிருள் மாலையெதிர் கூரத்

தேவண விழாவளர் திருப்புகலி யாமே.

 

03

 

309

 

மைதவழும் மாமிடறன் மாநடம தாடிக்

கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர்

செய்பணி பெருத்தெழும் உருத்திரங்கள் கூடித்

தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே.

 

04

 

310

 

முன்னமிரு மூன்றுசம யங்களவை யாகிப்

பின்னையருள் செய்தபிறை யாளனுறை கோயில்

புன்னைய மலர்ப்பொழில் களக்கினொளி காட்டச்

செந்நெல்வய லார்தரு திருப்புகலி யாமே.

 

05

 

311

 

வங்கமலி யுங்கடல்வி டத்தினை நுகர்ந்த

அங்கணன் அருத்திசெய் திருக்குமிட மென்பர்

கொங்கண வியன்பொழிலின் மாசுபணி மூசத்

தெங்கணவு தேன்மலி திருப்புகலி யாமே.

 

06

 

312

 

நல்குரவும் இன்பமும் நலங்களவை யாகி

வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தனிட மென்பர்

பல்குமடி யார்கள்படி யாரஇசை பாடிச்

செல்வமறை யோருறை திருப்புகலி யாமே.

 

07

 

313

 

பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால்

அரக்கனை யடர்த்தருளும் அண்ணலிட மென்பர்

நெருக்குறு கடற்றிரைகண் முத்தமணி சிந்தச்

செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே.

 

08

 

314

 

கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல்

ஆடரவம் வைத்தருளும் அப்பன்இரு வர்க்கும்

நேடஎரி யாகிஇரு பாலுமடி பேணித்

தேடவுறை யுந்நகர் திருப்புகலி யாமே.

 

09

 

315

 

கற்றமண ருற்றுலவு தேரருரை செய்த

குற்றமொழி கொள்கைய திலாதபெரு மானூர்

பொற்றொடி மடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ்

செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே.

 

10

 

316

 

செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல்

அந்தமுத லாகிநடு வாயபெரு மானைப்

பந்தனுரை செந்தமிழ்கள் பத்துமிசை கூர

வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே.

 

11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.30 திருப்புறம்பயம் - திருவிராகம்

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

317

 

மறம்பய மலிந்தவர் மதிற்பரி சறுத்தனை

நிரம்பசுமை செம்மையொ டிசைந்துனது நீர்மை

திறம்பய னுறும்பொருள் தெரிந்துணரு நால்வர்க்

கறம்பய னுரைத்தனை புரம்பய மமர்ந்தோய்.

 

01

 

318

 

விரித்தனை திருச்சடை யரித்தொழுகு வெள்ளந்

தரித்தனை யதன்றியும் மிகப்பெரிய காலன்

எருத்திற வுதைத்தனை இலங்கிழையொர் பாகம்

பொருத்துதல் கருத்தினை புறம்பய மமர்ந்தோய்.

 

02

 

319

 

விரிந்தனை குவிந்தனை விழுங்குயி ருமிழ்ந்தனை

திரிந்தனை குருந்தொசி பெருந்தகையு நீயும்

பிரிந்தனை புணர்ந்தனை பிணம்புகும யானம்

புரிந்தனை மகிழ்ந்தனை புரம்பய மமர்ந்தோய்.

 

03

 

320

 

வளங்கெழு கதும்புன லொடுஞ்சடை யொடுங்கத்

துளங்கம ரிளம்பிறை சுமந்தது விளங்க

உளங்கொள வளைந்தவர் சுடுஞ்சுடலை நீறு

புளங்கொள விளங்கினை புரம்பய மமர்ந்தோய்.

 

04

 

321

 

பெரும்பிணி பிறப்பினொ டிறப்பிலையொர் பாகங்

கரும்பொடு படுஞ்சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்

சுரும்புண அரும்பவிழ் திருந்தியெழு கொன்றை

விரும்பினை புறம்பய மமர்ந்தஇறை யோனே.

 

05

 

322

 

அனற்படு தடக்கையவ ரெத்தொழில ரேனும்

நினைப்புடை மனத்தவர் வினைப்பகையு நீயே

தனற்படு சுடர்ச்சடை தனிப்பிறையொ டொன்றப்

புனற்படு கிடைக்கையை புறம்பய மமர்ந்தோய்.

 

06

 

323

 

மறத்துறை மறுத்தவர் தவத்தடிய ருள்ளம்

அறத்துறை யொறுத்துன தருட்கிழமை பெற்றோர்

திறத்துள திறத்தினை மதித்தகல நின்றும்

புறத்துள திறத்தினை புறம்பய மமர்ந்தோய்.

 

07

 

324

 

இலங்கைய ரிறைஞ்சிறை விலங்கலின் முழங்க

உலங்கெழு தடக்கைக ளடர்த்திடலு மஞ்சி

வலங்கொள எழுந்தவ னலங்கவின வஞ்சு

புலங்களை விலங்கினை புறம்பய மமர்ந்தோய்.

 

08

 

325

 

வடங்கெட நுடங்குண இடந்தவிடை யல்லிக்

கிடந்தவன் இருந்தவன் அளந்துணர லாகார்

தொடர்ந்தவ ருடம்பொடு நிமிர்ந்துடன் வணங்கப்

புடங்கருள்செய் தொன்றினை புறம்பய மமர்ந்தோய்.

 

09

 

326

 

விடக்கொருவர் நன்றென விடக்கொருவர் தீதென

உடற்குடை களைந்தவ ருடம்பினை மறைக்கும்

படக்கர்கள் பிடக்குரை படுத்துமையொர் பாகம்

அடக்கினை புறம்பய மமர்ந்த வுரவோனே.

 

10

 

327

 

கருங்கழி பொருந்திரை கரைக்குலவு முத்தந்

தருங்கழு மலத்திறை தமிழ்க்கிழமை ஞானன்

சுரும்பவிழ் புறம்பய மமர்ந்த தமிழ்வல்லார்

பெரும்பிணி மருங்கற ஒருங்குவர் பிறப்பே.

 

11

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சாட்சிவரதநாதர், தேவியார் - கரும்பன்னசொல்லம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.31 திருக்கருப்பறியலூர் - திருவிராகம்

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

328

 

சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக் குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்

மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்

கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே.

 

01

 

329

 

வண்டணைசெய் கொன்றையது வார்சடைகள் மேலே

கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும்

விண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவோ ரம்பால்

கண்டவ னிருப்பது கருப்பறிய லூரே.

 

02

 

330

 

வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப்

போதினொடு போதுமலர் கொண்டுபுனை கின்ற

நாதனென நள்ளிருண்முன் ஆடுகுழை தாழுங்

காதவ னிருப்பது கருப்பறிய லூரே.

 

03

 

331

 

மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன்

உடம்பினை விடக்கருதி நின்றமறை யோனைத்

தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால்

கடந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.

 

04

 

332

 

ஒருத்தியுமை யோடுமொரு பாகமது வாய

நிருத்தனவன் நீதியவன் நித்தன்நெறி யாய

விருத்தனவன் வேதமென அங்கமவை யோதுங்

கருத்தவ னிருப்பது கருப்பறிய லூரே.

 

05

 

333

 

விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகள் மெய்த்தேன்

பண்ணமரும் மென்மொழியி னாளையணை விப்பான்

எண்ணிவரு காமனுடல் வேவஎரி காலுங்

கண்ணவ னிருப்பது கருப்பறிய லூரே.

 

06

 

334

 

ஆதியடி யைப்பணிய அப்பொடு மலர்ச்சேர்

சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்

தீதுசெய வந்தணையும் அந்தகன் அரங்கக்

காதின னிருப்பது கருப்பறிய லூரே.

 

07

 

335

 

வாய்ந்தபுகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்

பாய்ந்தமர்செ யுந்தொழிலி லங்கைநகர் வேந்தற்

கேய்ந்தபுய மத்தனையும் இற்றுவிழ மேனாள்

காய்ந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.

 

08

 

336

 

பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கை

கரந்தொர்சடை மேன்மிசை யுகந்தவளை வைத்து

நிரந்தரம் நிரந்திருவர் நேடியறி யாமல்

கரந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.

 

09

 

337

 

அற்றமறை யாவமண ராதமிலி புத்தர்

சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக்

குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில்

கற்றென இருப்பது கருப்பறிய லூரே.

 

10

 

338

 

நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன்

கலந்தவர் கருப்பறியல் மேயகட வுள்ளைப்

பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று

வலந்தரு மவர்க்குவினை வாடலெளி தாமே.

 

11

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - குற்றம்பொறுத்தநாதர், தேவியார் - கோல்வளையம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.32 திருவையாறு - திருவிராகம்

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

339

 

திருத்திகழ் மலைச்சிறுமி யோடுமிகு தேசர்

உருத்திகழ் எழிற்கயிலை வெற்பிலுறை தற்கே

விருப்புடைய அற்புத ரிருக்குமிட மேரார்

மருத்திகழ் பொழிற்குலவு வண்டிருவை யாறே.

 

01

 

340

 

கந்தமர வுந்துபுகை யுந்தலில் விளக்கேர்

இந்திர னுணர்ந்துபணி யெந்தையிட மெங்குஞ்

சந்தமலி யுந்தரு மிடைந்தபொழில் சார

வந்தவளி நந்தணவு வண்டிருவை யாறே.

 

02

 

341

 

கட்டுவட மெட்டுமுறு வட்டமுழ வத்தில்

கொட்டுகர மிட்டவொலி தட்டும்வகை நந்திக்

கிட்டமிக நட்டமவை யிட்டவ ரிடஞ்சீர்

வட்டமதி லுட்டிகழும் வண்டிருவை யாறே.

 

03

 

342

 

நண்ணியொர் வடத்தினிழல் நால்வர்முனி வர்க்கன்

றெண்ணிலி மறைப்பொருள் விரித்தவ ரிடஞ்சீர்த்

தண்ணின்மலி சந்தகிலொ டுந்திவரு பொன்னி

மண்ணின்மிசை வந்தணவு வண்டிருவை யாறே.

 

04

 

343

 

வென்றிமிகு தாருகன தாருயிர் மடங்கக்

கன்றிவரு கோபமிகு காளிகத மோவ

நின்றுநட மாடியிட நீடுமலர் மேலால்

மன்றல்மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே.

 

05

 

344

 

பூதமொடு பேய்கள்பல பாடநட மாடிப்

பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்திக்

கோதைய ரிடும்பலி கொளும்பர னிடம்பூ

மாதவி மணங்கமழும் வண்டிருவை யாறே.

 

06

 

345

 

துன்னுகுழல் மங்கையுமை நங்கைசுளி வெய்தப்

பின்னொரு தவஞ்செய்துழல் பிஞ்ஞகனு மங்கே

என்னசதி என்றுரைசெ யங்கண னிடஞ்சீர்

மன்னுகொடை யாளர்பயில் வண்டிருவை யாறே.

 

07

 

346

 

இரக்கமில் குணத்தொடுல கெங்கும்நலி வெம்போர்

அரக்கன்முடி யத்தலை புயத்தொடு மடங்கத்

துரக்கவிர லிற்சிறிது வைத்தவ ரிடஞ்சீர்

வரக்கருணை யாளர்பயில் வண்டிருவை யாறே.

 

08

 

347

 

பருத்துருவ தாகிவிண் ணடைந்தவனொர் பன்றிப்

பெருத்துருவ தாயுல கிடந்தவனு மென்றுங்

கருத்துரு வொணாவகை நிமிர்ந்தவ னிடங்கார்

வருத்துவகை தீர்கொள்பொழில் வண்டிருவை யாறே.

 

09

 

348

 

பாக்கியம தொன்றுமில் சமண்பதகர் புத்தர்

சாக்கியர்க ளென்றுடல் பொதிந்துதிரி வார்தம்

நோக்கரிய தத்துவ னிடம்படியின் மேலால்

மாக்கமுற நீடுபொழில் வண்டிருவை யாறே.

 

10

 

349

 

வாசமலி யும்பொழில்கொள் வண்டிருவை யாற்றுள்

ஈசனை யெழிற்புகலி மன்னவன்மெய்ஞ் ஞானப்

பூசுர னுரைத்ததமிழ் பத்துமிவை வல்லார்

நேசமலி பத்தரவர் நின்மல னடிக்கே.

 

11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.33 திருநள்ளாறு - திருவிராகம்

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

350

 

ஏடுமலி கொன்றையர விந்துஇள வன்னி

மாடவல செஞ்சடையெம் மைந்தனிட மென்பர்

கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை

நாடுமலி வாசமது வீசியநள் ளாறே.

 

01

 

351

 

விண்ணியல் பிறைப்பிள வறைப்புனல் முடித்த

புண்ணியன் இருக்குமிட மென்பர்புவி தன்மேல்

பண்ணிய நடத்தொடிசை பாடுமடி யார்கள்

நண்ணிய மனத்தின்வழி பாடுசெய்நள் ளாறே.

 

02

 

352

 

விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாகத்

துளங்கொள இருத்திய ஒருத்தனிட மென்பர்

வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி

நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள் ளாறே.

 

03

 

353

 

கொக்கரவர் கூன்மதியர் கோபர்திரு மேனிச்

செக்கரவர் சேருமிட மென்பர்தடம் மூழ்கிப்

புக்கரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி

நக்கரவர் நாமநினை வெய்தியநள் ளாறே.

 

04

 

354

 

நெஞ்சமிது கண்டுகொ ளுனக்கென நினைந்தார்

வஞ்சம தறுத்தருளும் மற்றவனை வானோர்

அஞ்சமுது காகியவர் கைதொழ வெழுந்த

நஞ்சமுது செய்தவன் இருப்பிடம்நள் ளாறே.

 

05

 

355

 

பாலனடி பேணவவ னாருயிர் குறைக்குங்

காலனுடன் மாளமு னுதைத்தஅர னூராங்

கோலமலர் நீர்க்குட மெடுத்துமறை யாளர்

நாலின்வழி நின்றுதொழில் பேணியநள் ளாறே.

 

06

 

356

 

நீதியர் நெடுந்தகையர் நீள்மலையர் பாவை

பாதியர் பராபரர் பரம்பர ரிருக்கை

வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும்

ஓதியரன் நாமமும் உணர்த்திடும்நள் ளாறே.

 

07

 

357

 

கடுத்துவல் லரக்கன்முன் நெருக்கிவரை தன்னை

எடுத்தவன் முடித்தலைகள் பத்தும்மிகு தோளும்

அடர்த்தவர் தமக்கிடம தென்பரளி பாட

நடத்தகல வைத்திரள்கள் வைகியநள் ளாறே.

 

08

 

358

 

உயர்ந்தவ னுருக்கொடு திரிந்துலக மெல்லாம்

பயந்தவன் நினைப்பரிய பண்பனிட மென்பர்

வியந்தமரர் மெச்சமலர் மல்குபொழி லெங்கும்

நயந்தரும வேதவொலி யார்திருநள் ளாறே.

 

09

 

359

 

சிந்தைதிரு கற்சமணர் தேரர்தவ மென்னும்

பந்தனை யறுத்தருளு கின்றபர மன்னூர்

மந்தமுழ வந்தரு விழாவொலியும் வேதச்

சந்தம்விர விப்பொழில் முழங்கியநள் ளாறே.

 

10

 

360

 

ஆடலர வார்சடையன் ஆயிழைத னோடும்

நாடுமலி வெய்திட இருந்தவன்நள் ளாற்றை

மாடமலி காழிவளர் பந்தனது செஞ்சொல்

பாடலுடை யாரையடை யாபழிகள் நோயே.

 

11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.34 திருப்பழுவூர் - திருவிராகம்

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

361

 

முத்தன்மிகு மூவிலைநல் வேலன்விரி நூலன்

அத்தன்எமை யாளுடைய அண்ணலிட மென்பர்

மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீசப்

பத்தரொடு சித்தர்பயில் கின்றபழு வூரே.

 

01

 

362

 

கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல்

ஆடரவம் வைத்தபெரு மானதிட மென்பர்

மாடமலி சூளிகையி லேறிமட வார்கள்

பாடலொலி செய்யமலி கின்றபழு வூரே.

 

02

 

363

 

வாலிய புரத்திலவர் வேவவிழி செய்த

போலிய வொருத்தர்புரி நூலரிட மென்பர்

வேலியின் விரைக்கமல மன்னமுக மாதர்

பாலென மிழற்றிநட மாடுபழு வூரே.

 

03

 

364

 

எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார்

கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர்

மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப்

பண்ணினொலி கொண்டுபயில் கின்றபழு வூரே.

 

04

 

365

 

சாதல்புரி வார்சுடலை தன்னில்நட மாடும்

நாதன்நமை யாளுடைய நம்பனிட மென்பர்

வேதமொழி சொல்லிமறை யாளரிறை வன்றன்

பாதமவை யேத்தநிகழ் கின்றபழு வூரே.

 

05

 

366

 

மேவயரு மும்மதிலும் வெந்தழல் விளைத்து

மாவயர வன்றுரிசெய் மைந்தனிட மென்பர்

பூவையை மடந்தையர்கள் கொண்டுபுகழ் சொல்லிப்

பாவையர்கள் கற்பொடு பொலிந்தபழு வூரே.

 

06

 

367

 

மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி

சிந்தவிளை யாடுசிவ லோகனிட மென்பர்

அந்தணர்கள் ஆகுதியி லிட்டஅகில் மட்டார்

பைந்தொடிநன் மாதர்சுவ டொற்றுபழு வூரே.

 

07

 

368

 

உரக்கடல் விடத்தினை மிடற்றிலுற வைத்தன்

றரக்கனை யடர்த்தருளும் அப்பனிட மென்பர்

குரக்கினம் விரைப்பொழிலின் மீதுகனி யுண்டு

பரக்குறு புனல்செய்விளை யாடுபழு வூரே.

 

08

 

369

 

நின்றநெடு மாலுமொரு நான்முகனும் நேட

அன்றுதழ லாய்நிமிரும் ஆதியிட மென்பர்

ஒன்றுமிரு மூன்றுமொரு நாலுமுணர் வார்கள்

மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வூரே.

 

09

 

370

 

மொட்டையமண் ஆதர்துகில் மூடுவிரி தேரர்

முட்டைகள் மொழிந்தமுனி வான்றனிட மென்பர்

மட்டைமலி தாழைஇள நீரதிசை பூகம்

பட்டையொடு தாறுவிரி கின்றபழு வூரே.

 

10

 

371

 

அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும்

பந்தமலி கின்றபழு வூரரனை யாரச்

சந்தமிகு ஞானசம் பந்தனுரை பேணி

வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே. 11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வடவனநாதர், தேவியார் - அருந்தவநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.35 திருத்தென்குரங்காடுதுறை

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

372

 

பரவக் கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ

இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி

அரவச் சடையந் தணன்மேய அழகார்

குரவப் பொழில்சூழ் குரங்காடு துறையே.

 

01

 

373

 

விண்டார் புரமூன்று மெரித்த விமலன்

இண்டார் புறங்காட் டிடைநின் றெரியாடி

வண்டார் கருமென் குழல்மங்கை யொர்பாகங்

கொண்டான் நகர்போல் குரங்காடு துறையே.

 

02

 

374

 

நிறைவில் புறங்காட் டிடைநே ரிழையோடும்

இறைவில் லெரியான் மழுவேந்தி நின்றாடி

மறையின் னொலிவா னவர்தா னவரேத்துங்

குறைவில் லவனூர் குரங்காடு துறையே.

 

03

 

375

 

விழிக்குந் நுதல்மே லொருவெண் பிறைசூடித்

தெழிக்கும் புறங்காட் டிடைச்சேர்ந் தெரியாடிப்

பழிக்கும் பரிசே பலிதேர்ந் தவனூர்பொன்

கொழிக்கும் புனல்சூழ் குரங்காடு துறையே.

 

04

 

376

 

நீறார்தரு மேனியன் நெற்றியொர் கண்ணன்

ஏறார்கொடி யெம்மிறை யீண்டெரி யாடி

ஆறார்சடை யந்தணன் ஆயிழை யாளோர்

கூறான்நகர் போல்குரங் காடு துறையே.

 

05

 

377

 

நளிரும் மலர்க்கொன் றையுநாறு கரந்தைத்

துளிருஞ் சுலவிச் சுடுகாட் டெரியாடி

மிளிரும் மரவார்த் தவன்மே வியகோயில்

குளிரும் புனல்சூழ் குரங்காடு துறையே.

 

06

 

378

 

பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும்

முழவங் குழல்மொந்தை முழங் கெரியாடும்

அழகன் னயில்மூ விலைவேல் வலனேந்துங்

குழகன் னகர்போல் குரங்காடு துறையே.

 

07

 

379

 

வரையார்த் தெடுத்தவ் வரக்கன் வலியொல்க

நிரையார் விரலால் நெரித்திட் டவனூராங்

கரையார்ந் திழிகா விரிக்கோலக் கரைமேல்

குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே.

 

08

 

380

 

நெடியா னொடுநான் முகனுந் நினைவொண்ணாப்

படியா கியபண் டங்கனின் றெரியாடி

செடியார் தலையேந் தியசெங்கண் வெள்ளேற்றின்

கொடியான் நகர்போல் குரங்காடு துறையே.

 

09

 

381

 

துவரா டையர்வே டமலாச் சமண்கையர்

கவர்வாய் மொழிகா தல்செய்யா தவனூராம்

நவையார் மணிபொன் னகில்சந் தனமுந்திக்

குவையார் கரைசேர் குரங்காடு துறையே.

 

10

 

382

 

நல்லார் பயில்கா ழியுள்ஞான சம்பந்தன்

கொல்லே றுடையான் குரங்காடு துறைமேல்

சொல்லார் தமிழ்மாலை பத்துந் தொழுதேத்த

வல்லா ரவர்வா னவரோ டுறைவாரே. 11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - குலைவணங்குநாதர், தேவியார் - அழகுசடைமுடியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.36 திருஇரும்பூளை - வினாவுரை

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

383

 

சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர்

வாரார் முலைமங்கை யொடும் முடனாகி

ஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்

காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே.

 

01

 

384

 

தொழலார் கழலேதொழு தொண்டர்கள் சொல்லீர்

குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகி

எழிலா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்

கழல்தான் கரிகா னிடையாடு கருத்தே.

 

02

 

385

 

அன்பா லடிகை தொழுவீ ரறியீரே

மின்போல் மருங்குல் மடவா ளொடுமேவி

இன்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்

பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே.

 

03

 

386

 

நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர்

கச்சிப் பொலிகாமக் கொடியுடன் கூடி

இச்சித் திரும்பூளை யிடங்கொண்ட ஈசன்

உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே.

 

04

 

387

 

சுற்றார்ந் தடியே தொழுவீ ரிதுசொல்லீர்

நற்றாழ் குழல்நங்கை யொடும் முடனாகி

எற்றே யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்

புற்றா டரவோடென்பு பூண்ட பொருளே.

 

05

 

388

 

தோடார் மலர்தூய்த் தொழுதொண்டர் கள்சொல்லீர்

சேடார் குழற்சே யிழையோ டுடனாகி

ஈடா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்

காடார் கடுவே டுவனான கருத்தே.

 

06

 

               

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

07

 

389

 

ஒருக்கும் மனத்தன்ப ருள்ளீ ரிதுசொல்லீர்

பருக்கை மதவேழ முரித்துமை யோடும்

இருக்கை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்

அரக்கன் உரந்தீர்த் தருளாக் கியவாறே.

 

08

 

390

 

துயரா யினநீங்கித் தொழுந்தொண்டர் சொல்லீர்

கயலார் கருங்கண்ணி யொடும் முடனாகி

இயல்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்

முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே.

 

09

 

391

 

துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண்டர் கள்சொல்லீர்

பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகி

இணையில் லிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்

அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே.

 

10

 

392

 

எந்தை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்

சந்தம் பயில்சண்பை யுண்ஞான சம்பந்தன்

செந்தண் தமிழ்செப் பியபத் திவைவல்லார்

பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே.

 

11

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - காசியாரண்ணியேசுவரர், தேவியார் - ஏலவார்குழலம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.37 திருமறைக்காடு - கதவடைக்கப்பாடியபதிகம்

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

393

 

சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்

மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா

இதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன்

கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே.

 

01

 

394

 

சங்கந் தரளம் மவைதான் கரைக்கெற்றும்

வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தா

மங்கை உமைபா கமுமா கவிதென்கொல்

கங்கை சடைமே லடைவித்த கருத்தே.

 

02

 

395

 

குரவங் குருக்கத்தி கள்புன்னை கள்ஞாழல்

மருவும் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா

சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல்

அரவம் மதியோ டடைவித்த லழகே.

 

03

 

396

 

படர்செம் பவளத்தொடு பன்மலர் முத்தம்

மடலம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா

உடலம் முமைபங்க மதாகியு மென்கொல்

கடல்நஞ் சமுதா அதுவுண்ட கருத்தே.

 

04

 

397

 

வானோர் மறைமா தவத்தோர் வழிபட்ட

தேனார் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வா

ஏனோர் தொழுதேத்த இருந்தநீ யென்கொல்

கானார் கடுவே டுவனான கருத்தே.

 

05

 

398

 

பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி

மலரால் வழிபாடு செய்மா மறைக்காடா

உலகே ழுடையாய் கடைதோறு முன்னென்கொல்

தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே.

 

06

 

399

 

வேலா வலயத் தயலே மிளிர்வெய்துஞ்

சேலார் திருமா மறைக்காட் டுறைசெல்வா

மாலோ டயன்இந் திரனஞ்ச முன்னென்கொல்

காலார் சிலைக்கா மனைக்காய்ந்த கருத்தே.

 

07

 

400

 

கலங்கொள் கடலோதம் உலாவுங் கரைமேல்

வலங்கொள் பவர்வாழ்த் திசைக்கும் மறைக்காடா

இலங்கை யுடையான் அடர்ப்பட் டிடரெய்த

அலங்கல் விரலூன்றி யருள்செய்த வாறே.

 

08

 

401

 

கோனென்று பல்கோடி உருத்திரர் போற்றுந்

தேனம் பொழில்சூழ் மறைக்கா டுறைசெல்வா

ஏனங் கழுகா னவருன்னை முன்னென்கொல்

வானந் தலமண்டி யுங்கண்டி லாவாறே.

 

09

 

402

 

வேதம் பலவோமம் வியந்தடி போற்ற

ஓதம் உலவும் மறைக்காட்டி லுறைவாய்

ஏதில் சமண்சாக் கியர்வாக் கிவையென்கொல்

ஆத ரொடுதா மலர்தூற் றியவாறே.

 

10

 

403

 

காழிந் நகரான் கலைஞான சம்பந்தன்

வாழிம் மறைக்கா டனைவாய்ந் தறிவித்த

ஏழின் னிசைமாலை யீரைந் திவைவல்லார்

வாழி யுலகோர் தொழவான் அடைவாரே.

 

11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.38 திருச்சாய்க்காடு

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

404

 

நித்த லுந்நிய மஞ்செய்து நீர்மலர் தூவிச்

சித்த மொன்றவல் லார்க்கரு ளுஞ்சிவன் கோயில்

மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரி

தத்து நீர்ப்பொன்னி சாகர மேவுசாய்க் காடே.

 

01

 

405

 

பண்ட லைக்கொண்டு பூதங்கள் பாடநின் றாடும்

வெண்ட லைக்கருங் காடுறை வேதியன் கோயில்

கொண்ட லைத்திகழ் பேரிமு ழங்கக் குலாவித்

தண்ட லைத்தட மாமயி லாடுசாய்க் காடே.

 

02

 

406

 

நாறு கூவிள நாகிள வெண்மதி யத்தோ

டாறு சூடும் அமரர் பிரானுறை கோயில்

ஊறு தேங்கனி மாங்கனி யோங்கிய சோலை

தாறு தண்கத லிப்புதல் மேவுசாய்க் காடே.

 

03

 

407

 

வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை மருவார்

புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில்

இரங்க லோசையு மீட்டிய சரக்கொடு மீண்டித்

தரங்கம் நீள்கழித் தண்கரை வைகுசாய்க் காடே.

 

04

 

408

 

ஏழை மார்கடை தோறு மிடுபலிக் கென்று

கூழை வாளர வாட்டும் பிரானுறை கோயில்

மாழை யொண்கண் வளைக்கை நுளைச்சியர் வண்பூந்

தாழை வெண்மடல் கொய்துகொண் டாடுசாய்க் காடே.

 

05

 

409

 

துங்க வானவர் சூழ்கடல் தாங்கடை போதில்

அங்கொர் நீழ லளித்தஎம் மானுறை கோயில்

வங்கம் அங்கொளிர் இப்பியும் முத்தும் மணியுஞ்

சங்கும் வாரித் தடங்கட லுந்து சாய்க்காடே.

 

06

 

410

 

வேத நாவினர் வெண்பளிங் கின்குழைக் காதர்

ஓத நஞ்சணி கண்டர் உகந்துறை கோயில்

மாதர் வண்டுதன் காதல்வண் டாடிய புன்னைத்

தாது கண்டு பொழில்மறைந் தூடுசாய்க் காடே.

 

07

 

411

 

இருக்கு நீள்வரை பற்றி யடர்த்தன் றெடுத்த

அரக்கன் ஆகம் நெரித்தருள் செய்தவன் கோயில்

மருக் குலாவிய மல்லிகை சண்பகம் வண்பூந்

தருக் குலாவிய தண்பொழில் நீடுசாய்க் காடே.

 

08

 

412

 

மாலி னோடயன் காண்டற் கரியவர் வாய்ந்த

வேலை யார்விட முண்டவர் மேவிய கோயில்

சேலின் நேர்விழி யார்மயி லாலச் செருந்தி

காலை யேகன கம்மலர் கின்றசாய்க் காடே.

 

09

 

413

 

ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க் கென்றும்

ஆத்த மாக அறிவரி தாயவன் கோயில்

வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே

பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்தசாய்க் காடே.

 

10

 

414

 

ஏனை யோர்புகழ்ந் தேத்திய எந்தைசாய்க் காட்டை

ஞான சம்பந்தன் காழியர் கோன்நவில் பத்தும்

ஊன மின்றி உரைசெய வல்லவர் தாம்போய்

வான நாடினி தாள்வரிம் மாநிலத் தோரே.

 

11

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சாயாவனேசுவரர், தேவியார் - குயிலுநன்மொழியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.39 திருக்ஷேத்திரக்கோவை

 

பண் - இந்தளம்

திருச்சிற்றம்பலம்

 

415

 

ஆரூர் தில்லையம் பலம்வல் லந்நல்லம்

 

வடகச் சியுமச் சிறுபாக்கம் நல்ல

கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி

 

கடல்சூழ் கழிப்பாலை தென்கோடி பீடார்

நீரூர் வயல்நின்றி யூர்குன்றி யூருங்

 

குருகா வையூர் நாரையூர் நீடுகானப்

பேரூர் நன்னீள் வயல்நெய்த் தானமும்

 

பிதற்றாய் பிறைசூ டிதன்பே ரிடமே.

 

01

 

416

 

அண்ணா மலையீங் கோயுமத்தி முத்தா

 

றகலா முதுகுன் றங்கொடுங் குன்றமுங்

கண்ணார் கழுக்குன் றங்கயிலை கோணம்

 

பயில்கற் குடிகா ளத்திவாட் போக்கியும்

பண்ணார் மொழிமங்கை யோர்பங் குடையான்

 

பரங்குன் றம்பருப் பதம்பேணி நின்றே

எண்ணாய் இரவும் பகலும் இடும்பைக்

 

கடல் நீந் தலாங் காரணமே.

 

02

 

417

 

அட்டா னமென் றோதியநா லிரண்டும்

 

அழகன் னுறைகா வனைத்துந் துறைகள்

எட்டாந் திருமூர்த் தியின்கா டொன்பதுங்

 

குளமூன் றுங்கள மஞ்சும்பாடி நான்கும்

மட்டார் குழலாள் மலைமங்கை பங்கன்

 

மதிக்கும் மிடமா கியபாழி மூன்றுஞ்

சிட்டா னவன்பா சூரென்றே விரும்பாய்

 

அரும்பா வங்களா யினதேய்ந் தறவே.

 

03

 

418

 

அறப்பள்ளி அகத்தியான் பள்ளிவெள் ளைப்பொடி

 

பூசியா றணிவான் அமர்காட்டுப் பள்ளி

சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன் பள்ளி

 

திருநனி பள்ளி சீர்மகேந் திரத்துப்

பிறப்பில் லவன்பள்ளி வெள்ளச் சடையான்

 

விரும்பும் மிடைப்பள்ளி வண்சக்க ரம்மால்

உறைப்பா லடிபோற்றக் கொடுத்த பள்ளி

 

உணராய் மடநெஞ்ச மேயுன்னி நின்றே

 

04

 

419

 

ஆறை வடமா கறலம்பர் ஐயா

 

றணியார் பெருவேளூர் விளமர் தெங்கூர்

சேறை துலைபுக லூரக லாதிவை

 

காதலித் தானவன் சேர்பதியே.

 

05

 

               

இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின.

 

 

420

 

மனவஞ்சர் மற்றோட முன்மாத ராரும்

 

மதிகூர் திருக்கூட லில்ஆல வாயும்

இனவஞ் சொலிலா இடைமா மருதும்

 

இரும்பைப் பதிமா காளம்வெற் றியூருங்

கனமஞ் சினமால் விடையான் விரும்புங்

 

கருகா வூர்நல் லூர்பெரும் புலியூர்

தனமென் சொலிற்றஞ் சமென்றே நினைமின்

 

தவமாம் மலமா யினதா னருமே.

 

06

 

421

 

மாட்டூர் மடப்பாச் சிலாச்சி ராமம்

 

முண்டீச் சரம்வாத வூர்வார ணாசி

காட்டூர் கடம்பூர் படம்பக்கங் கொட்டுங்

 

கடலொற்றி யூர்மற் றுறையூ ரவையுங்

கோட்டூர் திருவாமாத் தூர்கோ ழம்பமுங்

 

கொடுங்கோ வலூர்திருக் குணவாயில் ** **

 

07

 

               

இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின.

 

 

422

 

**** **** குலாவு திங்கட்

 

சடையான் குளிரும் பரிதி நியமம்

போற்றூ ரடியார் வழிபா டொழியாத்

 

தென்புறம் பயம்பூ வணம்பூ ழியூருங்

காற்றூர் வரையன் றெடுத்தான் முடிதோள்

 

நெரித்தா னுறைகோயில் **** **** ** லென் றென்றுநீ கருதே.

 

08

 

               

இச்செய்யுளின் சிலஅடிகளும் சீர்களும் சிதைந்துபோயின.

 

 

423

 

நெற்குன்றம் ஓத்தூர் நிறைநீர் மருகல்

 

நெடுவா யிற்குறும் பலாநீ டுதிரு

நற்குன்றம் வலம்புரம் நாகேச் சுரம்நளிர்

 

சோலை உஞ்சேனை மாகாளம் வாய்மூர்

கற்குன்ற மொன்றேந் திமழை தடுத்த

 

கடல்வண் ணனுமா மலரோனுங் காணாச்

சொற்கென் றுந்தொலை விலாதா னுறையுங்

 

குடமூக் கென்றுசொல் லிக்குலா வுமினே.

 

09

 

424

 

குத்தங் குடிவே திகுடி புனல்சூழ்

 

குருந்தங் குடிதே வன்குடி மருவும்

அத்தங் குடிதண் டிருவண் குடியும்

 

அலம்புஞ் சலந்தன் சடைவைத் துகந்த

நித்தன் நிமலன் உமையோ டுங்கூட

 

நெடுங்கா லமுறை விடமென்று சொல்லாப்

புத்தர் புறங்கூ றியபுன் சமணர்

 

நெடும்பொய் களைவிட் டுநினைந் துய்ம்மினே.

 

10

 

425

 

அம்மா னையருந் தவமாகி நின்ற

 

அமரர் பெருமான் பதியான வுன்னிக்

கொய்ம்மா மலர்ச்சோலை குலாவு கொச்சைக்

 

கிறைவன் சிவஞான சம்பந்தன் சொன்ன

இம்மா லையீரைந் தும்இரு நிலத்தில்

 

இரவும் பகலும் நினைந்தேத்தி நின்று

விம்மா வெருவா விரும்பும் மடியார்

 

விதியார் பிரியார் சிவன்சே வடிக்கே.

 

11

 

இப்பதிகத்தில் வரும் குன்றியூர், இடைப்பள்ளி, மாட்டூர், வாதவூர்,

வாரணாசி, கோட்டூர், குணவாயில், நெற்குன்றம், நற்குன்றம்,

நெடுவாயில், உஞ்சேனைமாகாளம், குத்தங்குடி, குருந்தேவன்குடி,

மத்தங்குடி, திருவண்குடி இவைகட்குத் தனித்தனித்

தேவார மில்லாமையால் வைப்புத்தலமென்று சொல்லப்படும்.

திருச்சிற்றம்பலம்

 

 

2.40 திருப்பிரமபுரம்

 

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

 

426

 

எம்பிரான் எனக்கமுத மாவானுந் தன்னடைந்தார்

தம்பிரான் ஆவானுந் தழலேந்து கையானுங்

கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்

வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே.

 

01

 

427

 

தாமென்றும் மனந்தளராத் தகுதியராய் உலகத்துக்

காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்

ஓமென்று மறைபயில்வார் பிரமபுரத் துறைகின்ற

காமன்றன் னுடலெரியக் கனல்சேர்ந்த கண்ணானே.

 

02

 

428

 

நன்னெஞ்சே யுனையிரந்தேன் நம்பெருமான் திருவடியே

உன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல்

அன்னஞ்சேர் பிரமபுரத் தாரமுதை எப்போதும்

பன்னுஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே.

 

03

 

429

 

சாநாளின் றிம்மனமே சங்கைதனைத் தவிர்ப்பிக்குங்

கோனாளுந் திருவடிக்கே கொழுமலர்தூ வெத்தனையுந்

தேனாளும் பொழிற்பிரம புரத்துறையுந் தீவணனை

நாநாளும் நன்னியமஞ் செய்தவன்சீர் நவின்றேத்தே.

 

04

 

430

 

கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி

பெண்ணிதமாம் உருவத்தான் பிஞ்ஞகன்பேர் பலவுடையான்

விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரந் தொழவிரும்பி

எண்ணுதலாஞ் செல்வத்தை இயல்பாக அறிந்தோமே.

 

05

 

431

 

எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்

கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்

கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ்

சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்றன் தன்மைகளே.

 

06

 

432

 

சிலையதுவெஞ் சிலையாகத் திரிபுரமூன் றெரிசெய்த

இலைநுனைவேற் றடக்கையன் ஏந்திழையா ளொருகூறன்

அலைபுனல்சூழ் பிரமபுரத் தருமணியை அடிபணிந்தால்

நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே.

 

07

 

433

 

எரித்தமயிர் வாளரக்கன் வெற்பெடுக்கத் தோளொடுதாள்

நெரித்தருளுஞ் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினான்

உரித்தவரித் தோலுடையான் உறைபிரம புரந்தன்னைத்

தரித்தமனம் எப்போதும் பெறுவார்தாம் தக்காரே.

 

08

 

434

 

கரியானும் நான்முகனுங் காணாமைக் கனலுருவாய்

அரியானாம் பரமேட்டி அரவஞ்சே ரகலத்தான்

தெரியாதான் இருந்துறையுந் திகழ்பிரம புரஞ்சேர

உரியார்தாம் ஏழுலகும் உடனாள உரியாரே.

 

09

 

435

 

உடையிலார் சீவரத்தார் தன்பெருமை உணர்வரியான்

முடையிலார் வெண்டலைக்கை மூர்த்தியாந் திருவுருவன்

பெடையிலார் வண்டாடும் பொழிற்பிரம புரத்துறையுஞ்

சடையிலார் வெண்பிறையான் தாள்பணிவார் தக்காரே.

 

10

 

436

 

தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானைத் தத்துவனைக்

கன்னடைந்த மதிற்பிரம புரத்துறையுங் காவலனை

முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்து மிவைவல்லார்

பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார் புண்ணியரே.

 

11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.41 திருச்சாய்க்காடு

 

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

 

437

 

மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங்

கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும்

விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித்

தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே.

 

01

 

438

 

போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும் பூம்புகார்ச்

சாய்க்காடே பதியாக உடையானும் விடையானும்

வாய்க்காடு முதுமரமே இடமாக வந்தடைந்த

பேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே.

 

02

 

439

 

நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்

சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே

பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமம் செவிகேட்ப

நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.

 

03

 

440

 

கட்டலர்த்த மலர்தூவிக் கைதொழுமின் பொன்னியன்ற

தட்டலர்த்த பூஞ்செருந்தி கோங்கமருந் தாழ்பொழில்வாய்

மொட்டலர்த்த தடந்தாழை முருகுயிர்க்குங் காவிரிப்பூம்

பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே.

 

04

 

441

 

கோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோட் கொடியிடையைப்

பாங்கென்ன வைத்துகந்தான் படர்சடைமேற் பால்மதியந்

தாங்கினான் பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ்

ஓங்கினார் ஓங்கினா ரெனவுரைக்கும் உலகமே.

 

05

 

442

 

சாந்தாக நீறணிந்தான் சாய்க்காட்டான் காமனைமுன்

தீந்தாகம் எரிகொளுவச் செற்றுகந்தான் திருமுடிமேல்

ஓய்ந்தார மதிசூடி ஒளிதிகழும் மலைமகள்தோள்

தோய்ந்தாகம் பாகமா வுடையானும் விடையானே.

 

06

 

443

 

மங்குல்தோய் மணிமாடம் மதிதவழும் நெடுவீதி

சங்கெலாங் கரைபொருது திரைபுலம்புஞ் சாய்க்காட்டான்

கொங்குலா வரிவண்டி னிசைபாடு மலர்க்கொன்றைத்

தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே.

 

07

 

444

 

தொடலரிய தொருகணையாற் புரமூன்றும் எரியுண்ணப்

படவரவத் தெழிலாரம் பூண்டான்பண் டரக்கனையுந்

தடவரையால் தடவரைத்தோ ளூன்றினான் சாய்க்காட்டை

இடவகையா லடைவோமென் றெண்ணுவார்க் கிடரிலையே.

 

08

 

445

 

வையநீ ரேற்றானும் மலருறையும் நான்முகனும்

ஐயன்மார் இருவர்க்கும் அளப்பரிதால் அவன்பெருமை

தையலார் பாட்டோ வாச் சாய்க்காட்டெம் பெருமானைத்

தெய்வமாப் பேணாதார் தெளிவுடைமை தேறோமே.

 

09

 

446

 

குறங்காட்டு நால்விரற் கோவணத்துக் கோலோவிப்போய்

அறங்காட்டுஞ் சமணரும் சாக்கியரும் அலர்தூற்றுந்

திறங்காட்டல் கேளாதே தெளிவுடையீர் சென்றடைமின்

புறங்காட்டில் ஆடலான் பூம்புகார்ச் சாய்க்காடே.

 

10

 

447

 

நொம்பைந்து புடைத்தொல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார்

அம்பந்தும் வரிக்கழலும் அரவஞ்செய் பூங்காழிச்

சம்பந்தன் தமிழ்பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்

எம்பந்த மெனக்கருதி ஏத்துவார்க் கிடர்கெடுமே.

 

11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.42 திருஆக்கூர்

 

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

 

448

 

அக்கிருந்த ஆரமும் ஆடரவும் ஆமையுந்

தொக்கிருந்த மார்பினான் தோலுடையான் வெண்ணீற்றான்

புக்கிருந்த தொல்கோயில் பொய்யிலா மெய்ந்நெறிக்கே

தக்கிருந்தார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

 

01

 

449

 

நீரார வார்சடையான் நீறுடையான் ஏறுடையான்

காரார்பூங் கொன்றையினான் காதலித்த தொல்கோயில்

கூராரல் வாய்நிறையக் கொண்டயலே கோட்டகத்திற்

தாராமல் காக்கூரில் தான்தோன்றி மாடமே.

 

02

 

450

 

வாளார்கண் செந்துவர்வாய் மாமலையான் றன்மடந்தைத்

தோளாகம் பாகமாப் புல்கினான் தொல்கோயில்

வேளாள ரென்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்குந்

தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

 

03

 

451

 

கொங்குசேர் தண்கொன்றை மாலையினான் கூற்றடரப்

பொங்கினான் பொங்கொளிசேர் வெண்ணீற்றான் பூங்கோயில்

அங்கம் ஆறோடும் அருமறைகள் ஐவேள்வி

தங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

 

04

 

452

 

வீக்கினான் ஆடரவம் வீழ்ந்தழிந்தார் வெண்டலையென்

பாக்கினான் பலகலன்க ளாதரித்துப் பாகம்பெண்

ஆக்கினான் தொல்கோயில் ஆம்பலம்பூம் பொய்கைபுடைத்

தாக்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

 

05

 

453

 

பண்ணொளிசேர் நான்மறையான் பாடலினோ டாடலினான்

கண்ணொளிசேர் நெற்றியினான் காதலித்த தொல்கோயில்

விண்ணொளிசேர் மாமதியந் தீண்டியக்கால் வெண்மாடந்

தண்ணொளிசேர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

 

06

 

454

 

வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்தவிய

வாங்கினார் வானவர்கள் வந்திறைஞ்சுந் தொல்கோயில்

பாங்கினார் நான்மறையோ டாறங்கம் பலகலைகள்

தாங்கினார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

 

07

 

455

 

கன்னெடிய குன்றெடுத்தான் தோளடரக் காலூன்றி

இன்னருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல்கோயில்

பொன்னடிக்கே நாடோ றும் பூவோடு நீர்சுமக்குந்

தன்னடியார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

 

08

 

456

 

நன்மையான் நாரணனும் நான்முகனுங் காண்பரிய

தொன்மையான் தோற்றங்கே டில்லாதான் தொல்கோயில்

இன்மையாற் சென்றிரந்தார்க் கில்லையென்னா தீந்துவக்குந்

தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

 

09

 

457

 

நாமருவு புன்மை நவிற்றச் சமண்தேரர்

பூமருவு கொன்றையினான் புக்கமருந் தொல்கோயில்

சேன்மருவு பங்கயத்துச் செங்கழுநீர் பைங்குவளை

தாமருவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே.

 

10

 

458

 

ஆடல் அமர்ந்தானை ஆக்கூரில் தான்தோன்றி

மாடம் அமர்ந்தானை மாடஞ்சேர் தண்காழி

நாடற் கரியசீர் ஞானசம் பந்தன்சொல்

பாடலிவை வல்லார்க் கில்லையாம் பாவமே.

 

11

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சுயம்புநாதேசுவரர், தேவியார் - கட்கநேத்திரவம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.43 திருப்புள்ளிருக்குவேளூர்

 

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

 

459

 

கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்

உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையுமிடந்

தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்

புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.

 

01

 

460

 

தையலாள் ஒருபாகஞ் சடைமேலாள் அவளோடும்

ஐயந்தேர்ந் துழல்வாரோர் அந்தணனார் உறையுமிடம்

மெய்சொல்லா இராவணனை மேலோடி யீடழித்துப்

பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே.

 

02

 

461

 

வாசநலஞ் செய்திமையோர் நாடோ றும் மலர்தூவ

ஈசனெம் பெருமானார் இனிதாக உறையுமிடம்

யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளும் ஒழியாமே

பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே.

 

03

 

462

 

மாகாயம் பெரியதொரு மானுரிதோ லுடையாடை

ஏகாய மிட்டுகந்த எரியாடி உறையுமிடம்

ஆகாயந் தேரோடும் இராவணனை அமரின்கண்

போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

 

04

 

463

 

கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்

பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்

வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்

போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.

 

05

 

464

 

திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே

அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்

மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானைப்

புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.

 

06

 

465

 

அத்தியின்ஈ ருரிமூடி அழகாக அனலேந்திப்

பித்தரைப்போற் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம்

பத்தியினால் வழிபட்டுப் பலகாலந் தவஞ்செய்து

புத்தியொன்ற வைத்துகந்தான் புள்ளிருக்கு வேளூரே.

 

07

 

466

 

பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக

மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்

எண்ணின்றி முக்கோடி வாணாள துடையானைப்

புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

 

08

 

467

 

வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச்

சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம்

ஆதித்தன் மகனென்ன அகன்ஞாலத் தவரோடும்

போதித்த சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.

 

09

 

468

 

கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் றாடாமே

தடுத்தவரெம் பெருமானார் தாமினிதா யுறையுமிடம்

விடைத்துவரும் இலங்கைக்கோன் மலங்கச்சென் றிராமற்காப்

புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.

 

10

 

469

 

செடியாய வுடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்

பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரைக்

கடியார்ந்த பொழில்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல்

மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே.

 

11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.44 திருஆமாத்தூர்

 

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

 

470

 

துன்னம்பெய் கோவணமுந் தோலு முடையாடை

பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி

அன்னஞ்சேர் தண்கானல் ஆமாத்தூர் அம்மான்றன்

பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே.

 

01

 

471

 

கைம்மாவின் தோல்போர்த்த காபாலி வானுலகில்

மும்மா மதிலெய்தான் முக்கணான் பேர்பாடி

அம்மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மானெம்

பெம்மானென் றேத்தாதார் பேயரிற் பேயரே.

 

02

 

472

 

பாம்பரைச் சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர்

தேம்பல் இளமதியஞ் சூடிய சென்னியான்

ஆம்பலம் பூம்பொய்கை ஆமாத்தூர் அம்மான்றன்

சாம்பல் அகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே.

 

03

 

473

 

கோணாகப் பேரல்குற் கோல்வளைக்கை மாதராள்

பூணாகம் பாகமாப் புல்கி யவளோடும்

ஆணாகங் காதல்செய் ஆமாத்தூர் அம்மானைக்

காணாத கண்ணெல்லாங் காணாத கண்களே.

 

04

 

474

 

பாடல் நெறிநின்றான் பைங்கொன்றைத் தண்டாரே

சூடல் நெறிநின்றான் சூலஞ்சேர் கையினான்

ஆடல் நெறிநின்றான் ஆமாத்தூர் அம்மான்றன்

வேட நெறிநில்லா வேடமும் வேடமே.

 

05

 

475

 

சாமவரை வில்லாகச் சந்தித்த வெங்கணையாற்

காவல் மதிலெய்தான் கண்ணுடை நெற்றியான்

யாவருஞ் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானத்

தேவர் தலைவணங்குந் தேவர்க்குந் தேவனே.

 

06

 

476

 

மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளை

வேறாக நில்லாத வேடமே காட்டினான்

ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்

கூறாத நாவெல்லாங் கூறாத நாக்களே.

 

07

 

477

 

தாளால் அரக்கன்றோள் சாய்த்த தலைமகன்றன்

நாளாதிரை யென்றே நம்பன்றன் நாமத்தால்

ஆளானார் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானைக்

கேளாச் செவியெல்லாங் கேளாச் செவிகளே.

 

08

 

478

 

புள்ளுங் கமலமுங் கைக்கொண்டார் தாமிருவர்

உள்ளு மவன்பெருமை ஒப்பளக்குந் தன்மையதே

அள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மானெம்

வள்ளல் கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே.

 

09

 

479

 

பிச்சை பிறர்பெய்யப் பின்சாரக் கோசாரக்

கொச்சை புலால்நாற ஈருரிவை போர்த்துகந்தான்

அச்சந்தன் மாதேவிக் கீந்தான்றன் ஆமாத்தூர்

நிச்ச னினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே.

 

10

 

480

 

ஆட லரவசைத்த ஆமாத்தூர் அம்மானைக்

கோட லிரும்புறவின் கொச்சை வயத்தலைவன்

நாட லரியசீர் ஞானசம் பந்தன்றன்

பாட லிவைவல்லார்க் கில்லையாம் பாவமே.

 

11

 

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - அழகியநாதேசுவரர், தேவியார் - அழகியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.45 திருக்கைச்சினம்

 

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

 

481

 

தையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான்

மையுலா மணிமிடற்றன் மறைவிளங்கு பாடலான்

நெய்யுலா மூவிலைவே லேந்தி நிவந்தொளிசேர்

கையுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.

 

01

 

482

 

விடமல்கு கண்டத்தான் வெள்வளையோர் கூறுடையான்

படமல்கு பாம்பரையான் பற்றாதார் புரமெரித்தான்

நடமல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான்

கடமல்கு மாவுரியான் உறைகோயில் கைச்சினமே.

 

02

 

483

 

பாடலார் நான்மறையான் பைங்கொன்றை பாம்பினொடுஞ்

சூடலான் வெண்மதியந் துன்று கரந்தையொடும்

ஆடலான் அங்கை அனலேந்தி யாடரவக்

காடலான் மேவியுறை கோயில் கைச்சினமே.

 

03

 

484

 

பண்டமரர் கூடிக் கடைந்த படுகடல்நஞ்

சுண்டபிரான் என்றிறைஞ்சி உம்பர் தொழுதேத்த

விண்டவர்கள் தொன்னகரம் மூன்றுடனே வெந்தவியக்

கண்ட பிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.

 

04

 

485

 

தேய்ந்துமலி வெண்பிறையான் செய்யதிரு மேனியினன்

வாய்ந்திலங்கு வெண்ணீற்றான் மாதினையோர் கூறுடையான்

சாய்ந்தமரர் வேண்டத் தடங்கடல்*நஞ் சுண்டனங்கைக்

காய்ந்தபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.

 

05

 

               

* நஞ்சுண்டு--அனங்கை எனப்பிரித்து, அனங்கை என்பதினுக்கு அனங்கனையெனப்பொருள் கொள்க.

 

 

486

 

மங்கையோர் கூறுடையான் மன்னு மறைபயின்றான்

அங்கையோர் வெண்டலையான் ஆடரவம் பூண்டுகந்தான்

திங்களொடு பாம்பணிந்த சீரார் திருமுடிமேற்

கங்கையினான் மேவியுறை கோயில் கைச்சினமே.

 

06

 

487

 

வரியரவே நாணாக மால்வரையே வில்லாக

எரிகணையால் முப்புரங்கள் எய்துகந்த எம்பெருமான்

பொரிசுடலை யீமப் புறங்காட்டான் போர்த்ததோர்

கரியுரியான் மேவியுறை கோயில் கைச்சினமே.

 

07

 

488

 

போதுலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல்

மாதுமையா ளஞ்ச மலையெடுத்த வாளரக்கன்

நீதியினா லேத்த நிகழ்வித்து நின்றாடுங்

காதலினான் மேவியுறை கோயில் கைச்சினமே.

 

08

 

489

 

மண்ணினைமுன் சென்றிரந்த மாலும் மலரவனும்

எண்ணறியா வண்ணம் எரியுருவ மாயபிரான்

பண்ணிசையா லேத்தப் படுவான்றன் நெற்றியின்மேற்

கண்ணுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.

 

09

 

               

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

10

 

490

 

தண்வயல்சூழ் காழித் தமிழ்ஞான சம்பந்தன்

கண்ணுதலான் மேவியுறை கோயில் கைச்சினத்தைப்

பண்ணிசையா லேத்திப் பயின்ற இவைவல்லார்

விண்ணவரா யோங்கி வியனுலக மாள்வாரே.

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - கைச்சினநாதர், தேவியார் - வேள்வளையம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.46 திருநாலூர்த்திருமயானம்

 

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

 

491

 

பாலூரும் மலைப்பாம்பும் பனிமதியும் மத்தமும்

மேலூருஞ் செஞ்சடையான் வெண்ணூல்சேர் மார்பினான்

நாலூர் மயானத்து நம்பான்றன் அடிநினைந்து

மாலூருஞ் சிந்தையர்பால் வந்தூரா மறுபிறப்பே.

 

01

 

492

 

சூடும் பிறைச்சென்னி சூழ்கா டிடமாக

ஆடும் பறைசங் கொலியோ டழகாக

நாடுஞ் சிறப்போவா நாலூர் மயனத்தைப்

பாடுஞ் சிறப்போர்பாற் பற்றாவாம் பாவமே.

 

02

 

493

 

கல்லால் நிழல்மேவிக் காமுறுசீர் நால்வர்க்கன்

றெல்லா அறனுரையும் இன்னருளாற் சொல்லினான்

நல்லார் தொழுதேத்தும் நாலூர் மயானத்தைச்

சொல்லா தவரெல்லாஞ் செல்லாதார் தொன்னெறிக்கே.

 

03

 

494

 

கோலத்தார் கொன்றையான் கொல்புலித்தோ லாடையான்

நீலத்தார் கண்டத்தான் நெற்றியோர் கண்ணினான்

ஞாலத்தார் சென்றேத்து நாலூர் மயானத்திற்

சூலத்தா னென்பார்பாற் சூழாவாந் தொல்வினையே.

 

04

 

495

 

கறையார் மணிமிடற்றான் காபாலி கட்டங்கன்

பிறையார் வளர்சடையான் பெண்பாகன் நண்பாய

நறையார் பொழில்புடைசூழ் நாலூர் மயானத்தெம்

இறையானென் றேத்துவார்க் கெய்துமாம் இன்பமே.

 

05

 

496

 

கண்ணார் நுதலான் கனலா டிடமாகப்

பண்ணார் மறைபாடி யாடும் பரஞ்சோதி

நண்ணார் புரமெய்தான் நாலூர் மயானத்தை

நண்ணா தவரெல்லாம் நண்ணாதார் நன்னெறியே.

 

06

 

497

 

கண்பாவு வேகத்தாற் காமனைமுன் காய்ந்துகந்தான்

பெண்பாவு பாகத்தான் நாகத்தோ லாகத்தான்

நண்பார் குணத்தோர்கள் நாலூர் மயானத்தை

எண்பாவு சிந்தையார்க் கேலா இடர்தானே.

 

07

 

498

 

பத்துத் தலையோனைப் பாதத் தொருவிரலால்

வைத்து மலையடர்த்து வாளோடு நாள்கொடுத்தான்

நத்தின் ஒலியோவா நாலூர் மயானத்தென்

அத்தன் அடிநினைவார்க் கல்லல் அடையாவே.

 

08

 

499

 

மாலோடு நான்முகனும் நேட வளரெரியாய்

மேலோடு கீழ்காணா மேன்மையான் வேதங்கள்

நாலோடும் ஆறங்கம் நாலூர் மயானத்தெம்

பாலோடு நெய்யாடி பாதம் பணிவோமே.

 

09

 

500

 

துன்பாய மாசார் துவராய போர்வையார்

புன்பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்

நண்பாற் சிவாயவெனா நாலூர் மயானத்தே

இன்பா யிருந்தானை யேத்துவார்க் கின்பமே.

 

10

 

501

 

ஞாலம் புகழ்காழி ஞானசம் பந்தன்றான்

நாலு மறையோது நாலூர் மயானத்தைச்

சீலம் புகழாற் சிறந்தேத்த வல்லாருக்

கேலும் புகழ்வானத் தின்பா யிருப்பாரே.

 

11

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பலாசவனேசுவரர், தேவியார் - பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.47 திருமயிலாப்பூர் - பூம்பாவைத்திருப்பதிகம்

 

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

 

502

 

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்

கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்

ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்

கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

 

01

 

503

 

மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்

கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்

ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்

துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்.

 

02

 

504

 

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்

துளக்கில் கபாலீச் சரத்தான்தொல் கார்த்திகைநாள்

தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்

விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

 

03

 

505

 

ஊர்திரை வேலை யுலாவும் உயர்மயிலைக்

கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்

கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்

ஆதிரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.

 

04

 

506

 

மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்

கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்

நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடுந்

தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.

 

05

 

507

 

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்

கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்

அடலானே றூரும் அடிக ளடிபரவி

நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.

 

06

 

508

 

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்

கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்

பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்திரநாள்

ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.

 

07

 

509

 

தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்

கண்ணார் மயிலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்

பண்ணார் பதினெண் கணங்கள்தம் அட்டமிநாள்

கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.

 

08

 

510

 

நற்றாமரை மலர்மேல் நான்முகனும் நாரணனும்

உற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்

கற்றார்க ளேத்துங் கபாலீச்சரம் அமர்ந்தான்

பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.

 

09

 

511

 

உரிஞ்சாய வாழ்க்கை அமணுடையைப் போர்க்கும்

இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்

கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம் அமர்ந்தான்

பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.

 

10

 

512

 

கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்

தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்

ஞானசம் பந்தன் நலம்புகழ்ந்த பத்தும்வலார்

வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.

 

11

 

இது எலும்பு பெண்ணாக ஓதியருளிய பதிகம்.

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - கபாலீசுவரர், தேவியார் - கற்பகவல்லியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.48 திருவெண்காடு

 

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

 

513

 

கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்

பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்

பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்

வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.

 

01

 

514

 

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை

வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்

வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்

தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.

 

02

 

515

 

மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதியிரவி

எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்

பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்

விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.

 

03

 

516

 

விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்

மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று

தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்

கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே.

 

04

 

517

 

வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்

மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்

மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்

ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே.

 

05

 

518

 

தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்

ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்

பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை

வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.

 

06

 

519

 

சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்

அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய

மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்

முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே.

 

07

 

520

 

பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த

உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்

கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க

விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.

 

08

 

521

 

கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்

ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்

வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்

றுள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.

 

09

 

522

 

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்

பேதையர்கள் அவர்பிரிமின் அறிவுடையீர் இதுகேண்மின்

வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்

றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.

 

10

 

523

 

தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்

விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்

பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்

மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே.

 

11

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர், தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.49 சீகாழி

 

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

 

524

 

பண்ணின் நேர்மொழி மங்கை மார்பலர்

 

பாடி யாடிய வோசை நாடொறும்

கண்ணின் நேரயலே பொலியுங் கடற்காழிப்

பெண்ணின் நேரொரு பங்கு டைப்பெரு

 

மானை யெம்பெரு மானென் றென்றுன்னும்

அண்ண லாரடியார் அருளாலுங் குறைவிலரே.

 

01

 

525

 

மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல்

 

மோதி மீதெறி சங்கம் வங்கமுங்

கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி

வண்ட லம்பிய கொன்றை யானடி

 

வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை

விண்டல் அங்கெளிதாம் அதுநல் விதியாமே.

 

02

 

526

 

நாடெ லாமொளி யெய்த நல்லவர்

 

நன்று மேத்தி வணங்கு வார்பொழிற்

காடெ லாமலர் தேன்துளிக்குங் கடற்காழி

தோடு லாவிய காது ளாய்சுரி

 

சங்க வெண்குழை யாயென் றென்றுன்னும்

வேடங் கொண்டவர் கள்வினைநீங்க லுற்றாரே.

 

03

 

527

 

மையி னார்பொழில் சூழ நீழலில்

 

வாச மார்மது மல்க நாடொறுங்

கையி னார்மலர் கொண்டெழுவார் கலிக்காழி

ஐய னேயர னேயென் றாதரித்

 

தோதி நீதியு ளேநி னைப்பவர்

உய்யு மாறுலகில் உயர்ந்தாரி னுள்ளாரே.

 

04

 

528

 

மலிக டுந்திரை மேல்நி மிர்ந்தெதிர்

 

வந்து வந்தொளிர் நித்தி லம்விழக்

கலிக டிந்தகை யார்மருவுங் கலிக்காழி

வலிய காலனை வீட்டி மாணிதன்

 

இன்னு யிரளித் தானை வாழ்த்திட

மெலியுந் தீவினை நோயவைமே வுவர்வீடே.

 

05

 

529

 

மற்று மிவ்வுல கத்து ளோர்களும்

 

வானு ளோர்களும் வந்து வைகலுங்

கற்ற சிந்தைய ராய்க்கருதுங் கலிக்காழி

நெற்றி மேலமர் கண்ணி னானைநி

 

னைந்தி ருந்திசை பாடுவார் வினை

செற்ற மாந்தரெ னத்தெளிமின்கள் சிந்தையுளே.

 

06

 

530

 

தான லம்புரை வேதி யரொடு

 

தக்க மாதவர் தாந்தொ ழப்பயில்

கான லின்விரை சேரவிம்முங் கலிக்காழி

ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற

 

வாகி நின்றவொ ருவனே யென்றென்

றானலங் கொடுப்பா ரருள்வேந்த ராவாரே.

 

07

 

531

 

மைத்த வண்டெழு சோலை யாலைகள்

 

சாலி சேர்வய லார வைகலுங்

கத்து வார்கடல் சென்றுலவுங் கலிக்காழி

அத்த னேயர னேய ரக்கனை

 

யன்ற டர்த்துகந் தாயு னகழல்

பத்த ராய்ப்பர வும்பயனீங்கு நல்காயே.

 

08

 

532

 

பரும ராமொடு தெங்கு பைங்கத

 

லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள்

கருவரா லுகளும் வயல்சூழ் கலிக்காழி

திருவின் நாயக னாய மாலொடு

 

செய்ய மாமலர்ச் செல்வ னாகிய

இருவர் காண்பரியா னெனவேத்துத லின்பமே.

 

09

 

533

 

பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி

 

யாது வண்டுகி லாடை போர்த்தவர்

கண்டு சேரகிலா ரழகார் கலிக்காழித்

தொண்டை வாயுமை யோடுங் கூடிய

 

வேடனே சுட லைப்பொ டியணி

அண்ட வாணனென் பார்க்கடையா அல்லல்தானே.

 

10

 

534

 

பெயரெ னும்மிவை பன்னி ரண்டினும்

 

உண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ்

கயலு லாம்வயல் சூழ்ந்தழகார் கலிக்காழி

நயன டன்கழ லேத்தி வாழ்த்திய

 

ஞான சம்பந்தன் செந்தமிழ் உரை

உயரு மாமொழி வாருலகத் துயர்ந்தாரே.

 

11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.50 திருஆமாத்தூர்

 

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

 

535

 

குன்ற வார்சிலை நாண ராவரி

 

வாளி கூரெரி காற்றின் மும்மதில்

வென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனே

தென்ற லார்மணி மாட மாளிகை

 

சூளிகைக் கெதிர் நீண்ட பெண்ணைமேல்

அன்றில் வந்தணையும் ஆமாத்தூர் அம்மானே.

 

01

 

536

 

பரவி வானவர் தான வர்பல

 

ருங்க லங்கிட வந்த கார்விடம்

வெருவ உண்டுகந்த அருளென்கொல் விண்ணவனே

கரவின் மாமணி பொன்கொ ழித்திழி

 

சந்து காரகில் தந்து *பம்பைநீர்

அருவி வந்தலைக்கும் ஆமாத்தூர் அம்மானே.

 

02

 

               

* பம்பை என்பது ஒரு நதி.

 

 

537

 

நீண்ட வார்சடை தாழ நேரிழை

 

பாட நீறுமெய் பூசி மாலயன்

மாண்ட வார்சுடலை நடமாடும் மாண்பதுவென்

பூண்ட கேழல்ம ருப்பரா விரி

 

கொன்றை வாளரி யாமை பூணென

ஆண்ட நாயகனே ஆமாத்தூர் அம்மானே.

 

03

 

538

 

சேலின் நேரன கண்ணி வெண்ணகை

 

மான்வி ழித்தி ருமாதைப் பாகம்வைத்

தேல மாதவம் நீமுயல்கின்ற வேடமிதென்

பாலின் நேர்மொழி மங்கை மார்நட

 

மாடி யின்னிசை பாட நீள்பதி

ஆலை சூழ்கழனி ஆமாத்தூர் அம்மானே.

 

04

 

539

 

தொண்டர் வந்துவ ணங்கி மாமலர்

 

தூவி நின்கழ லேத்து வாரவர்

உண்டியால் வருந்த இரங்காத தென்னைகொலாம்

வண்ட லார்கழ னிக்க லந்தும

 

லர்ந்த தாமரை மாதர் வாண்முகம்

அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே.

 

05

 

540

 

ஓதி யாரண மாய நுண்பொருள்

 

அன்று நால்வர்முன் கேட்க நன்னெறி

நீதி யாலநீ ழல்உரைக்கின்ற நீர்மையதென்

சோதியே சுடரே சுரும் பமர்

 

கொன்றை யாய்திரு நின்றி யூருறை

ஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே.

 

06

 

541

 

மங்கை வாணுதன் மான்ம னத்திடை

 

வாடி யூடம ணங்க மழ்சடைக்

கங்கையா ளிருந்த கருத்தாவ தென்னைகொலாம்

பங்க யமது வுண்டு வண்டிசை

 

பாட மாமயி லாட விண்முழ

வங்கையா லதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே.

 

07

 

542

 

நின்ற டர்த்திடும் ஐம்பு லன்னிலை

 

யாத வண்ணம்நி னைந்து ளத்திடை

வென்றடர்த் தொருபால் மடமாதை விரும்புதலென்

குன்றெ டுத்தநி சாசரன் திரள்

 

தோளி ருபது தான் நெரிதர

அன்றடர்த் துகந்தாய் ஆமாத்தூர் அம்மானே.

 

08

 

543

 

செய்ய தாமரை மேலி ருந்தவ

 

னோடு மாலடி தேட நீண்முடி

வெய்ய ஆரழலாய் நிமிர்கின்ற வெற்றிமையென்

தைய லாளொடு பிச்சைக் கிச்சைத

 

யங்கு தோலரை யார்த்த வேடங்கொண்

டைய மேற்றுகந்தாய் ஆமாத்தூர் அம்மானே.

 

09

 

544

 

புத்தர் புன்சம ணாதர் பொய்ம்மொழி

 

நூல்பி டித்தலர் தூற்ற நின்னடி

பத்தர் பேணநின்ற பரமாய பான்மையதென்

முத்தை வென்ற முறுவ லாளுமை

 

பங்க னென்றிமை யோர் பரவிடும்

அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே.

 

10

 

545

 

வாடல் வெண்டலை மாலை யார்த்தும

 

யங்கி ருள்ளெரி யேந்தி மாநடம்

ஆடல் மேயதென்னென் றாமாத்தூர் அம்மானைக்

கோடல் நாகம் அரும்பு பைம்பொழிற்

 

கொச்சை யாரிறை ஞான சம்பந்தன்

பாடல் பத்தும்வல்லார் பரலோகஞ் சேர்வாரே.

 

11

 

ஆமாத்தூர் என்பது பசுக்களுக்குத் தாயகமானவூர் என்றும்,

ஆமாதாவூர் எனற்பாலது ஆமாத்தூர் என மருவி நின்ற தென்றும் பெரியோர்களாற் சொல்லக் கேள்வி. ஆ - பசு.

திருச்சிற்றம்பலம்

 

 

2.51 திருக்களர்

 

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

 

546

 

நீருளார் கயல் வாவி சூழ்பொழில்

 

நீண்ட மாவய லீண்டு மாமதில்

தேரினார் மறுகில் விழாமல்கு திருக்களருள்

ஊரு ளாரிடு பிச்சை பேணும்

 

ஒருவனே யொளிர் செஞ்ச டைம்மதி

ஆரநின் றவனே அடைந்தார்க் கருளாயே.

 

01

 

547

 

தோளின் மேலொளி நீறு தாங்கிய

 

தொண்டர் வந்தடி போற்ற மிண்டிய

தாளினார் வளருந் தவமல்கு திருக்களருள்

வேளின் நேர்விச யற்க ருள்புரி

 

வித்த காவிரும் பும்ம டியாரை

ஆளுகந் தவனே அடைந்தார்க் கருளாயே.

 

02

 

548

 

பாட வல்லநல் மைந்த ரோடு

 

பனிம லர்பல கொண்டு போற்றிசெய்

சேடர் வாழ்பொழில் சூழ்செழுமாடத் திருக்களருள்

நீட வல்ல நிமல னேயடி

 

நிரை கழல்சிலம் பார்க்க மாநடம்

ஆடவல் லவனே அடைந்தார்க் கருளாயே.

 

03

 

549

 

அம்பின் நேர்தடங் கண்ணி னாருடன்

 

ஆடவர் பயில் மாட மாளிகை

செம்பொனார் பொழில்சூழ்ந் தழகாய திருக்களருள்

என்பு பூண்டதோர் மேனி யெம்மிறை

 

வாஇ ணையடி போற்றி நின்றவர்க்

கன்புசெய் தவனே அடைந்தார்க் கருளாயே.

 

04

 

550

 

கொங்கு லாமலர்ச் சோலை வண்டினங்

 

கிண்டி மாமது வுண்டி சைசெயத்

தெங்குபைங் கமுகம் புடைசூழ்ந்த திருக்களருள்

மங்கை தன்னொடுங் கூடிய மண

 

வாளனே பிணை கொண்டொர் கைத்தலத்

தங்கையிற் படையாய் அடைந்தார்க் கருளாயே.

 

05

 

551

 

கோல மாமயில் ஆலக் கொண்டல்கள்

 

சேர்பொ ழிற்குல வும்வ யலிடைச்

சேலிளங் கயலார் புனல்சூழ்ந்த திருக்களருள்

நீல மேவிய கண்டனே நிமிர்

 

புன்ச டைப்பெரு மானெ னப்பொலி

ஆலநீழ லுளாய் அடைந்தார்க் கருளாயே.

 

06

 

552

 

தம்ப லம்மறி யாதவர் மதில்

 

தாங்கு மால்வரை யால ழலெழத்

திண்பலங் கெடுத்தாய் திகழ்கின்ற திருக்களருள்

வம்ப லர்மலர் தூவி நின்னடி

 

வானவர் தொழக் கூத்து கந்துபே

ரம்பலத் துறைவாய் அடைந்தார்க் கருளாயே.

 

07

 

553

 

குன்ற டுத்தநன் மாளிகைக் கொடி

 

மாட நீடுயர் கோபு ரங்கள்மேல்

சென்றடுத் துயர்வான் மதிதோயுந் திருக்களருள்

நின்ற டுத்துயர் மால்வ ரைத்திரள்

 

தோளி னாலெடுத் தான்றன் நீள்முடி

அன்றடர்த் துகந்தாய் அடைந்தார்க் கருளாயே.

 

08

 

554

 

பண்ணி யாழ்பயில் கின்ற மங்கையர்

 

பாட லாடலொ டார வாழ்பதி

தெண்ணிலா மதியம் பொழில்சேருந் திருக்களருள்

உண்ணி லாவிய வொருவ னேயிரு

 

வர்க்கு நின்கழல் காட்சி யாரழல்

அண்ணலாய எம்மான் அடைந்தார்க் கருளாயே.

 

09

 

555

 

பாக்கி யம்பல செய்த பத்தர்கள்

 

பாட்டொ டும்பல பணிகள் பேணிய

தீக்கியல் குணத்தார் சிறந்தாருந் திருக்களருள்

வாக்கின் நான்மறை யோதி னாயமண்

 

தேரர் சொல்லிய சொற்க ளானபொய்

ஆக்கி நின்றவனே அடைந்தார்க் கருளாயே.

 

10

 

556

 

இந்து வந்தெழு மாட வீதியெ

 

ழில்கொள் காழிந் நகர்க் கவுணியன்

செந்துநேர் மொழியார் அவர்சேருந் திருக்களருள்

அந்தி யன்னதொர் மேனி யானை

 

அமரர் தம்பெரு மானை ஞானசம்

பந்தன்சொல் லிவைபத் தும்பாடத் தவமாமே.

 

11

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - களர்முளையீசுவரர், தேவியார் -அழகேசுவரியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.52 திருக்கோட்டாறு

 

பண் - சீகாமரம்

திருச்சிற்றம்பலம்

 

557

 

கருந்த டங்கண்ணின் மாத ராரிசை

 

செய்யக் காரதிர் கின்ற பூம்பொழில்

குருந்த மாதவியின் விரைமல்கு கோட்டாற்றில்

இருந்த எம்பெரு மானை யுள்கி

 

இணையடி தொழு தேத்தும் மாந்தர்கள்

வருந்துமா றறியார் நெறிசேர்வர் வானூடே.

 

01

 

558

 

நின்று மேய்ந்து நினைந்து மாகரி

 

நீரொ டும்மலர் வேண்டி வான்மழை

குன்றின் நேர்ந்துகுத்திப் பணிசெய்யுங் கோட்டாற்றுள்

என்றும் மன்னிய எம்பிரான் கழ

 

லேத்தி வானர சாள வல்லவர்

பொன்று மாறறியார் புகழார்ந்த புண்ணியரே.

 

02

 

559

 

விரவி நாளும் விழாவி டைப்பொலி

 

தொண்டர் வந்து வியந்து பண்செயக்

குரவ மாரும்நீழற் பொழில்மல்கு கோட்டாற்றில்

அரவ நீள்சடை யானை யுள்கிநின்

 

றாத ரித்துமுன் அன்பு செய்தடி

பரவுமாறு வல்லார் பழிபற் றறுப்பாரே.

 

03

 

560

 

அம்பின் நேர்விழி மங்கை மார்பலர்

 

ஆட கம்பெறு மாட மாளிகைக்

கொம்பி னேர்துகி லின்கொடியாடு கோட்டாற்றில்

நம்பனே நடனே நலந் திகழ்

 

நாதனே யென்று காதல் செய்தவர்

தம்பின் நேர்ந்தறியார் தடுமாற்ற வல்வினையே.

 

04

 

561

 

பழைய தம்மடி யார்துதி செயப்

 

பாரு ளோர்களும் விண்ணு ளோர்தொழக்

குழலும் மொந்தை விழாவொலிசெய்யுங் கோட்டாற்றில்

கழலும் வண்சிலம் பும்மொ லிசெயக்

 

கானி டைக்கண மேத்த ஆடிய

அழக னென்றெழுவா ரணியாவர் வானவர்க்கே.

 

05

 

562

 

பஞ்சின் மெல்லடி மாத ராடவர்

 

பத்தர் சித்தர்கள் பண்பு வைகலுங்

கொஞ்சி இன்மொழியாற் றொழின்மல்கு கோட்டாற்றில்

மஞ்ச னேமணி யேமணி மிடற்

 

றண்ண லேயென வுண்ணெ கிழ்ந்தவர்

துஞ்சு மாறறியார் பிறவாரித் தொன்னிலத்தே.

 

06

 

563

 

கலவ மாமயி லாளொர் பங்கனைக்

 

கண்டு கண்மிசை நீர்நெ கிழ்த்திசை

குலவு மாறுவல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்

நிலவ மாமதி சேர்ச டையுடை

 

நின்ம லாவென வுன்னு வாரவர்

உலவு வானவரின் உயர்வாகுவ துண்மையதே.

 

07

 

564

 

வண்ட லார்வயற் சாலி யாலைவ

 

ளம்பொ லிந்திட வார்பு னற்றிரை

கொண்ட லார்கொணர்ந் தங்குலவுந்திகழ் கோட்டாற்றில்

தொண்டெ லாந்துதி செய்ய நின்ற

 

தொழில னேகழ லால ரக்கனை

மிண்டெ லாந்தவிர்த் தென்னுகந்திட்ட வெற்றிமையே.

 

08

 

565

 

கருதி வந்தடி யார்தொ ழுதெழக்

 

கண்ண னோடயன் தேட ஆனையின்

குருதி மெய்கலப்ப உரிகொண்டு கோட்டாற்றில்

விருதி னான்மட மாதும் நீயும்வி

 

யப்பொ டும்முயர் கோயில் மேவிவெள்

ளெருதுகந் தவனே இரங்காயுன தின்னருளே.

 

09

 

566

 

உடையி லாதுலழ் கின்ற குண்டரும்

 

ஊணருந் தவத் தாய சாக்கியர்

கொடையிலார் மனத்தார் குறையாருங் கோட்டாற்றில்

படையி லார்மழு வேந்தி யாடிய

 

பண்ப னேயிவ ரென்கொ லோநுனை

அடைகிலாத வண்ணம் அருளாயுன் அடியவர்க்கே.

 

10

 

567

 

கால னைக்கழ லாலு தைத்தொரு

 

காம னைக்கன லாகச் சீறிமெய்

கோல வார்குழலாள் குடிகொண்ட கோட்டாற்றில்

மூல னைமுடி வொன் றிலாதவெம்

 

முத்த னைப்பயில் பந்தன் சொல்லிய

மாலைபத்தும் வல்லார்க் கெளிதாகும் வானகமே.

 

11

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - ஐராபதேசுவரர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.53 திருப்புறவார்பனங்காட்டூர்

 

பண் - சீகாமரம்

 

திருச்சிற்றம்பலம்

 

568

 

விண்ண மர்ந்தன மும்ம தில்களை

 

வீழ வெங்கணை யாலெய் தாய்வரி

பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்

பெண்ண மர்ந்தொரு பாக மாகிய

 

பிஞ்ஞ காபிறை சேர்நு தலிடைக்

கண்ண மர்ந்தவ னேகலந்தார்க் கருளாயே.

 

01

 

569

 

நீடல் கோடல் அலரவெண் முல்லை

 

நீர்ம லர்நிரைத் தாத ளஞ்செயப்

பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்த்

 

துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்

ஆடுஞ் சங்கரனே அடைந்தார்க் கருளாயே.

 

02

 

570

 

வாளை யுங்கய லும்மி ளிர்பொய்கை

 

வார்பு னற்கரை யருகெ லாம்வயற்

பாளை யொண்கமுகம் புறவார் பனங்காட்டூர்ப்

பூளை யுந்நறுங் கொன்றை யும்மத

 

மத்த மும்புனை வாய்க ழலிணைத்

தாளையே பரவுந் தவத்தார்க் கருளாயே.

 

03

 

571

 

மேய்ந்தி ளஞ்செந்நெல் மென்கதிர் கவ்வி

 

மேற்ப டுகலின் மேதி வைகறை

பாய்ந்த தண்பழனப் புறவார் பனங்காட்டூர்

ஆய்ந்த நான்மறை பாடி யாடும்

 

அடிக ளென்றென் றரற்றி நன்மலர்

சாய்ந்தடி பரவுந் தவத்த்தார்க் கருளாயே.

 

04

 

572

 

செங்க யல்லொடு சேல்செ ருச்செயச்

 

சீறி யாழ்முரல் தேனி னத்தொடு

பங்கயம் மலரும் புறவார் பனங்காட்டூர்க்

கங்கை யும்மதி யுங்க மழ்சடைக்

 

கேண்மை யாளொடுங் கூடி மான்மறி

அங்கை யாடலனே அடியார்க் கருளாயே.

 

05

 

573

 

நீரி னார்வரை கோலி மால்கடல்

 

நீடி யபொழில் சூழ்ந்து வைகலும்

பாரினார் பிரியாப் புறவார் பனங்காட்டூர்க்

காரி னார்மலர்க் கொன்றை தாங்கு

 

கடவு ளென்றுகை கூப்பி நாடொறுஞ்

சீரினால் வணங்குந் திறத்தார்க் கருளாயே.

 

06

 

574

 

கைய ரிவையர் மெல்வி ரல்லவை

 

காட்டி யம்மலர்க் காந்த ளங்குறி

பையரா விரியும் புறவார் பனங்காட்டூர்

மெய்ய ரிவையோர் பாக மாகவும்

 

மேவி னாய்கழ லேத்தி நாடொறும்

பொய்யிலா அடிமை புரிந்தார்க் கருளாயே.

 

07

 

575

 

தூவி யஞ்சிறை மென்ன டையன

 

மல்கி யொல்கிய தூமலர்ப் பொய்கைப்

பாவில் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்

மேவி யந்நிலை யாய ரக்கன

 

தோள டர்த்தவன் பாடல் கேட்டருள்

ஏவிய பெருமான் என்பவர்க் கருளாயே.

 

08

 

576

 

அந்தண் மாதவி புன்னை நல்ல

 

அசோக மும்மர விந்த மல்லிகை

பைந்தண் ஞாழல்கள் சூழ்புறவார் பனங்காட்டூர்

எந்தி ளம்முகில் வண்ணன் நான்முகன்

 

என்றி வர்க்கரி தாய்நி மிர்ந்ததொர்

சந்தம் ஆயவனே தவத்தார்க் கருளாயே.

 

09

 

577

 

நீண மார்முரு குண்டு வண்டினம்

 

நீல மாமலர் கவ்வி நேரிசை

பாணில் யாழ்முரலும் புறவார் பனங்காட்டூர்

நாண ழிந்துழல் வார்ச மணரும்

 

நண்பில் சாக்கிய ருந்ந கத்தலை

ஊணுரி யவனே உகப்பார்க் கருளாயே.

 

10

 

578

 

மையி னார்மணி போல்மி டற்றனை

 

மாசில் வெண்பொடிப் பூசும் மார்பனைப்

பைய தேன்பொழில் சூழ்புறவார் பனங்காட்டூர்

ஐய னைப்புக ழான காழியுள்

 

ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன்

செய்யுள் பாடவல்லார் சிவலோகஞ் சேர்வாரே.

 

11

 

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பனங்காட்டீசுவரர், தேவியார் - திருப்புருவமின்னாளம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.54 திருப்புகலி

 

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

 

579

 

உருவார்ந்த மெல்லியலோர் பாகமுடையீ ரடைவோர்க்குக்

கருவார்ந்த வானுலகங் காட்டிக்கொடுத்தல் கருத்தானீர்

பொருவார்ந்த தெண்கடலொண் சங்கந்திளைக்கும் பூம்புகலித்

திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.

 

01

 

580

 

நீரார்ந்த செஞ்சடையீர் நிரையார்கழல்சேர் பாதத்தீர்

ஊரார்ந்த சில்பலியீர் உழைமானுரிதோ லாடையீர்

போரார்ந்த தெண்டிரைசென் றணையுங்கானல் பூம்புகலிச்

சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

 

02

 

581

 

அழிமல்கு பூம்புனலும் அரவுஞ்சடைமே லடைவெய்த

மொழிமல்கு மாமறையீர் கறையார்கண்டத் தெண்தோளீர்

பொழின்மல்கு வண்டினங்கள் அறையுங்கானற் பூம்புகலி

எழில்மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே.

 

03

 

582

 

கையிலார்ந்த வெண்மழுவொன் றுடையீர்கடிய கரியின்தோல்

மயிலார்ந்த சாயல்மட மங்கைவெருவ மெய்போர்த்தீர்

பயிலார்ந்த வேதியர்கள் பதியாய்விளங்கும் பைம்புகலி

எயிலார்ந்த கோயிலே கோயிலாக இசைந்தீரே.

 

04

 

583

 

நாவார்ந்த பாடலீர் ஆடலரவம் அரைக்கார்த்தீர்

பாவார்ந்த பல்பொருளின் பயன்களானீர் அயன்பேணும்

பூவார்ந்த பொய்கைகளும் வயலுஞ்சூழ்ந்த பொழிற்புகலி

தேவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.

 

05

 

584

 

மண்ணார்ந்த மணமுழவந் ததும்பமலையான் மகளென்னும்

பெண்ணார்ந்த மெய்மகிழப் பேணியெரிகொண் டாடினீர்

விண்ணார்ந்த மதியமிடை மாடத்தாரும் வியன்புகலிக்

கண்ணார்ந்த கோயிலே கோயிலாகக் கலந்தீரே.

 

06

 

585

 

களிபுல்கு வல்லவுணர் ஊர்மூன்றெரியக் கணைதொட்டீர்

அளிபுல்கு பூமுடியீர் அமரரேத்த அருள்செய்தீர்

தெளிபுல்கு தேனினமும் மலருள்விரைசேர் திண்புகலி

ஒளிபுல்கு கோயிலே கோயிலாக உகந்தீரே.

 

07

 

586

 

பரந்தோங்கு பல்புகழ்சேர் அரக்கர்கோனை வரைக்கீழிட்

டுரந்தோன்றும் பாடல்கேட் டுகவையளித்தீர் உகவாதார்

புரந்தோன்று மும்மதிலு மெரியச்செற்றீர் பூம்புகலி

வரந்தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

 

08

 

587

 

சலந்தாங்கு தாமரைமேல் அயனுந்தரணி யளந்தானுங்

கலந்தோங்கி வந்திழிந்துங் காணாவண்ணங் கனலானீர்

புலந்தாங்கி ஐம்புலனுஞ் செற்றார்வாழும் பூம்புகலி

நலந்தாங்கு கோயிலே கோயிலாக நயந்தீரே.

 

09

 

588

 

நெடிதாய வன்சமணும் நிறைவொன்றில்லாச் சாக்கியருங்

கடிதாய கட்டுரையாற் கழறமேலோர் பொருளானீர்

பொடியாரும் மேனியினீர் புகலிமறையோர் புரிந்தேத்த

வடிவாருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

 

10

 

589

 

ஒப்பரிய பூம்புகலி ஓங்குகோயில் மேயானை

அப்பரிசில் பதியான அணிகொள்ஞான சம்பந்தன்

செப்பரிய தண்டமிழால் தெரிந்தபாட லிவைவல்லார்

எப்பரிசில் இடர்நீங்கி இமையோருலகத் திருப்பாரே.

 

11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.55 திருத்தலைச்சங்காடு

 

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

 

590

 

நலச்சங்க வெண்குழையுந் தோடும்பெய்தோர் நால்வேதஞ்

சொலச்சங்கை யில்லாதீர் சுடுகாடல்லால் கருதாதீர்

குலைச்செங்காய்ப் பைங்கமுகின் குளிர்கொள்சோலைக் குயிலாலுந்

தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத் தாழ்ந்தீரே.

 

01

 

591

 

துணிமல்கு கோவணமுந் தோலுங்காட்டித் தொண்டாண்டீர்

மணிமல்கு கண்டத்தீர் அண்டர்க்கெல்லாம் மாண்பானீர்

*பிணிமல்கு நூல்மார்பர் பெரியோர்வாழுந் தலைச்சங்கை

அணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.

 

02

 

               

* பிணி - பிணித்தல்

 

 

592

 

சீர்கொண்ட பாடலீர் செங்கண்வெள்ளேற் றூர்தியீர்

நீர்கொண்டும் பூக்கொண்டு நீங்காத்தொண்டர் நின்றேத்தத்

தார்கொண்ட நூல்மார்பர் தக்கோர்வாழுந் தலைச்சங்கை

ஏர்கொண்ட கோயிலே கோயிலாக இருந்தீரே.

 

03

 

593

 

வேடஞ்சூழ் கொள்கையீர் வேண்டிநீண்ட வெண்டிங்கள்

ஓடஞ்சூழ் கங்கையும் உச்சிவைத்தீர் தலைச்சங்கைக்

கூடஞ்சூழ் மண்டபமுங் குலாயவாசல் கொடித்தோன்றும்

மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

 

04

 

594

 

சூலஞ்சேர் கையினீர் சுண்ணவெண்ணீ றாடலீர்

நீலஞ்சேர் கண்டத்தீர் நீண்டசடைமேல் நீரேற்றீர்

ஆலஞ்சேர் தண்கானல் அன்னமன்னுந் தலைச்சங்கைக்

கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே.

 

05

 

595

 

நிலநீரொ டாகாசம் அனல்காலாகி நின்றைந்து

புலநீர்மை புறங்கண்டார் பொக்கஞ்செய்யார் போற்றோவார்

சலநீத ரல்லாதார் தக்கோர்வாழுந் தலைச்சங்கை

நலநீர கோயிலே கோயிலாக நயந்தீரே.

 

06

 

596

 

அடிபுல்கு பைங்கழல்கள் ஆர்ப்பப்பேர்ந்தோர் அனலேந்திக்

கொடிபுல்கு மென்சாயல் உமையோர்பாகங் கூடினீர்

பொடிபுல்கு நூல்மார்பர் புரிநூலாளர் தலைச்சங்கைக்

கடிபுல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே.

 

07

 

597

 

திரையார்ந்த மாகடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை

வரையார்ந்த தோளடர விரலாலூன்றும் மாண்பினீர்

அரையார்ந்த மேகலையீர் அந்தணாளர் தலைச்சங்கை

நிரையார்ந்த கோயிலே கோயிலாக நினைந்தீரே.

 

08

 

598

 

பாயோங்கு பாம்பணைமே லானும்பைந்தா மரையானும்

போயோங்கிக் காண்கிலார் புறம்நின்றோரார் போற்றோவார்

தீயோங்கு மறையாளர் திகழுஞ்செல்வத் தலைச்சங்கைச்

சேயோங்கு கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

 

09

 

599

 

அலையாரும் புனல்துறந்த அமணர்குண்டர் சாக்கியர்

தொலையாதங் கலர்தூற்றத் தோற்றங்காட்டி யாட்கொண்டீர்

தலையான நால்வேதந் தரித்தார்வாழுந் தலைச்சங்கை

நிலையார்ந்த கோயிலே கோயிலாக நின்றீரே.

 

10

 

600

 

நளிரும் புனற்காழி நல்லஞான சம்பந்தன்

குளிருந் தலைச்சங்கை ஓங்குகோயில் மேயானை

ஒளிரும் பிறையானை யுரைத்தபாட லிவைவல்லார்

மிளிருந் திரைசூழ்ந்த வையத்தார்க்கு மேலாரே.

 

11

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - செங்கணாயகேசுவரர், தேவியார் - சௌந்தரியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

2.56 திருவிடைமருதூர்

 

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

 

601

 

பொங்குநூன் மார்பினீர் பூதப்படையீர் பூங்கங்கை

தங்குசெஞ் சடையினீர் சாமவேதம் ஓதினீர்

எங்குமெழிலார் மறையோர்கள் முறையாலேத்த இடைமருதில்

மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

 

01

 

602

 

நீரார்ந்த செஞ்சடையீர் நெற்றித்திருக்கண் நிகழ்வித்தீர்

போரார்ந்த வெண்மழுவொன் றுடையீர் பூதம்பாடலீர்

ஏரார்ந்த மேகலையாள் பாகங்கொண்டீர் இடைமருதில்

சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

 

02

 

603

 

அழல்மல்கும் அங்கையி லேந்திப்பூதம் அவைபாடச்

சுழல்மல்கும் ஆடலீர் சுடுகாடல்லாற் கருதாதீர்

எழில்மல்கும் நான்மறையோர் முறையாலேத்த இடைமருதில்

பொழில்மல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே.

 

03

 

604

 

பொல்லாப் படுதலையொன் றேந்திப்புறங்காட் டாடலீர்

வில்லாற் புரமூன்றும் எரித்தீர்விடையார் கொடியினீர்

எல்லாக் கணங்களும் முறையாலேத்த இடைமருதில்

செல்வாய கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

 

04

 

605

 

வருந்திய மாதவத்தோர் வானோரேனோர் வந்தீண்டிப்

பொருந்திய தைப்பூச மாடியுலகம் பொலிவெய்தத்

திருந்திய நான்மறையோர் சீராலேத்த இடைமருதில்

பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே.

 

05

 

606

 

சலமல்கு செஞ்சடையீர் சாந்தநீறு பூசினீர்

வலமல்கு வெண்மழுவொன் றேந்திமயானத் தாடலீர்

இலமல்கு நான்மறையோ ரினிதாயேத்த இடைமருதில்

புலமல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே.

 

06

 

607

 

புனமல்கு கொன்றையீர் புலியின்அதளீர் பொலிவார்ந்த

சினமல்கு மால்விடையீர் செய்யீர்கரிய கண்டத்தீர்

இனமல்கு நான்மறையோ ரேத்துஞ்சீர்கொள் இடைமருதில்

கனமல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே.

 

07

 

608

 

சிலையுய்த்த வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திறலரக்கன்

தலைபத்துந் திண்டோ ளும் நெரித்தீர் தையல்பாகத்தீர்

இலைமொய்த்த தண்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த இடைமருதில்

நலமொய்த்த கோயிலே கோயிலாக நயந்தீரே.

 

08

 

609

 

மறைமல்கு நான்முகனும் மாலும்அறியா வண்ணத்தீர்

கறைமல்கு கண்டத்தீர் கபாலமேந்து கையினீர்

அறைமல்கு வண்டினங்கள் ஆலுஞ்சோலை இடைமருதில்

நிறைமல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.

 

09

 

610

 

சின்போர்வைச் சாக்கியரும் மாசுசேருஞ் சமணருந்

துன்பாய கட்டுரைகள் சொல்லியல்லல் தூற்றவே

இன்பாய அந்தணர்கள் ஏத்தும்ஏர்கொள் இடைமருதில்

அன்பாய கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.

 

10

 

611

 

கல்லின் மணிமாடக் கழுமலத்தார் காவலவன்

நல்ல அருமறையான் நற்றமிழ்ஞான சம்பந்தன்

எல்லி இடைமருதில் ஏத்துபாட லிவைபத்துஞ்

சொல்லு வார்க்குங் கேட்பார்க்குந் துயரமில்லையே.

 

11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.57 திருநல்லூர்

 

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

 

612

 

பெண்ணமருந் திருமேனி யுடையீர்பிறங்கு சடைதாழப்

பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர்

திண்ணமரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்

மண்ணமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

 

01

 

613

 

அலைமல்கு தண்புனலும் பிறையுஞ்சூடி அங்கையில்

கொலைமல்கு வெண்மழுவும் அனலுமேந்துங் கொள்கையீர்

சிலைமல்கு வெங்கணையாற் புரமூன்றெரித்தீர் திருநல்லூர்

மலைமல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

 

02

 

614

 

குறைநிரம்பா வெண்மதியஞ் சூடிக்குளிர்புன் சடைதாழப்

பறைநவின்ற பாடலோ டாடல்பேணிப் பயில்கின்றீர்

சிறைநவின்ற தண்புனலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்

மறைநவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

 

03

 

615

 

கூனமரும் வெண்பிறையும் புனலுஞ்சூடுங் கொள்கையீர்

மானமரும் மென்விழியாள் பாகமாகும் மாண்பினீர்

தேனமரும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர்

வானமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

 

04

 

616

 

நிணங்கவரும் மூவிலையும் அனலுமேந்தி நெறிகுழலாள்

அணங்கமரும் பாடலோ டாடல்மேவும் அழகினீர்

திணங்கவரும் ஆடரவும் பிறையுஞ்சூடித் திருநல்லூர்

மணங்கமழுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

 

05

 

617

 

கார்மருவு பூங்கொன்றை சூடிக்கமழ்புன் சடைதாழ

வார்மருவு மென்முலையாள் பாகமாகும் மாண்பினீர்

தேர்மருவு நெடுவீதிக் கொடிகளாடுந் திருநல்லூர்

ஏர்மருவு கோயிலே கோயிலாக இருந்தீரே.

 

06

 

618

 

ஊன்தோயும் வெண்மழுவும் அனலுமேந்தி உமைகாண

மீன்தோயுந் திசைநிறைய ஓங்கியாடும் வேடத்தீர்

தேன்தோயும் பைம்பொழிலின் வண்டுபாடுந் திருநல்லூர்

வான்தோயுங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

 

07

 

619

 

காதமரும் வெண்குழையீர் கறுத்தவரக்கன் மலையெடுப்ப

மாதமரும் மென்மொழியாள் மறுகும்வண்ணங் கண்டுகந்தீர்

தீதமரா அந்தணர்கள் பரவியேத்துந் திருநல்லூர்

மாதமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

 

08

 

620

 

போதின்மேல் அயன்திருமால் போற்றியும்மைக் காணாது

நாதனே இவனென்று நயந்தேத்த மகிழ்ந்தளித்தீர்

தீதிலா அந்தணர்கள் தீமூன்றோம்புந் திருநல்லூர்

மாதராள் அவளோடு மன்னுகோயில் மகிழ்ந்தீரே.

 

09

 

621

 

பொல்லாத சமணரொடு புறங்கூறுஞ் சாக்கியரொன்

றல்லாதார் அறவுரைவிட் டடியார்கள் போற்றோவா

நல்லார்கள் அந்தணர்கள் நாளுமேத்துந் திருநல்லூர்

மல்லார்ந்த கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

 

10

 

622

 

கொந்தணவும் பொழில்புடைசூழ் கொச்சைமேவு குலவேந்தன்

செந்தமிழின் சம்பந்தன் சிறைவண்புனல்சூழ் திருநல்லூர்ப்

பந்தணவு மெல்விரலாள் பங்கன்றன்னைப் பயில்பாடல்

சிந்தனையால் உரைசெய்வார் சிவலோகஞ்சேர்ந் திருப்பாரே.

 

11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.58 திருக்குடவாயில்

 

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

 

623

 

கலைவாழும் அங்கையீர் கொங்கையாருங் கருங்கூந்தல்

அலைவாழுஞ் செஞ்சடையில் அரவும்பிறையும் அமர்வித்தீர்

குலைவாழை கமுகம்பொன் பவளம்பழுக்குங் குடவாயில்

நிலைவாழுங் கோயிலே கோயிலாக நின்றீரே.

 

01

 

624

 

அடியார்ந்த பைங்கழலுஞ் சிலம்புமார்ப்ப அங்கையில்

செடியார்ந்த வெண்டலையொன் றேந்தியுலகம் பலிதேர்வீர்

குடியார்ந்த மாமறையோர் குலாவியேத்துங் குடவாயிற்

படியார்ந்த கோயிலே கோயிலாகப் பயின்றீரே.

 

02

 

625

 

கழலார்பூம் பாதத்தீர் ஓதக்கடலில் விடமுண்டன்

றழலாருங் கண்டத்தீர் அண்டர்போற்றும் அளவினீர்

குழலார வண்டினங்கள் கீதத்தொலிசெய் குடவாயில்

நிழலார்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.

 

03

 

626

 

மறியாருங் கைத்தலத்தீர் மங்கைபாக மாகச்சேர்ந்

தெறியாரும் மாமழுவும் எரியுமேந்துங் கொள்கையீர்

குறியார வண்டினங்கள் தேன்மிழற்றுங் குடவாயில்

நெறியாருங் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.

 

04

 

627

 

இழையார்ந்த கோவணமுங் கீளும்எழிலார் உடையாகப்

பிழையாத சூலம்பெய் தாடல்பாடல் பேணினீர்

குழையாரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த குடவாயில்

விழவார்ந்த கோயிலே கோயிலாக மிக்கீரே.

 

05

 

628

 

அரவார்ந்த திருமேனி யானவெண்ணீ றாடினீர்

இரவார்ந்த பெய்பலிகொண் டிமையோரேத்த நஞ்சுண்டீர்

குரவார்ந்த பூஞ்சோலை வாசம்வீசுங் குடவாயிற்

திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.

 

06

 

629

 

பாடலார் வாய்மொழியீர் பைங்கண்வெள்ளே றூர்தியீர்

ஆடலார் மாநடத்தீர் அரிவைபோற்றும் ஆற்றலீர்

கோடலார் தும்பிமுரன் றிசைமிழற்றுங் குடவாயில்

நீடலார் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.

 

07

 

630

 

கொங்கார்ந்த பைங்கமலத் தயனுங்குறளாய் நிமிர்ந்தானும்

அங்காந்து தள்ளாட அழலாய்நிமிர்ந்தீர் இலங்கைக்கோன்

தங்காதல் மாமுடியுந் தாளுமடர்த்தீர் குடவாயில்

பங்கார்ந்த கோயிலே கோயிலாகப் பரிந்தீரே.

 

08

 

               

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

09

 

631

 

தூசார்ந்த சாக்கியருந் தூய்மையில்லாச் சமணரும்

ஏசார்ந்த புன்மொழிநீத் தெழில்கொள்மாடக் குடவாயில்

ஆசாரஞ் செய்மறையோர் அளவிற்குன்றா தடிபோற்றத்

தேசார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

 

10

 

632

 

நளிர்பூந் திரைமல்கு காழிஞான சம்பந்தன்

குளிர்பூங் குடவாயிற் கோயில்மேய கோமானை

ஒளிர்பூந் தமிழ்மாலை உரைத்தபாட லிவைவல்லார்

தளர்வான தானொழியத் தகுசீர்வானத் திருப்பாரே.

 

11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.59 சீகாழி

 

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

 

633

 

நலங்கொள் முத்தும் மணியும் அணியுந் திரளோதங்

கலங்கள் தன்னில் கொண்டு கரைசேர் கலிக்காழி

வலங்கொள் மழுவொன் றுடையாய் விடையா யெனவேத்தி

அலங்கல் சூட்ட வல்லார்க் கடையா அருநோயே.

 

01

 

634

 

ஊரார் உவரிச் சங்கம் வங்கங் கொடுவந்து

காரார் ஓதங் கரைமேல் உயர்த்துங் கலிக்காழி

நீரார் சடையாய் நெற்றிக் கண்ணா என்றென்று

பேரா யிரமும் பிதற்றத் தீரும் பிணிதானே.

 

02

 

635

 

வடிகொள் பொழிலில் மிழலை வரிவண் டிசைசெய்யக்

கடிகொள் போதிற் றென்றல் அணையுங் கலிக்காழி

முடிகொள் சடையாய் முதல்வா வென்று முயன்றேத்தி

அடிகை தொழுவார்க் கில்லை அல்லல் அவலமே.

 

03

 

636

 

மனைக்கே யேற வளஞ்செய் பவளம் வளர்முத்தங்

கனைக்குங் கடலுள் ஓதம் ஏறுங் கலிக்காழிப்

பனைக்காப் பகட்டீ ருரியாய் பெரியாய் யெனப்பேணி

நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே.

 

04

 

637

 

பருதி யியங்கும் பாரிற் சீரார் பணியாலே

கருதி விண்ணோர் மண்ணோர் விரும்புங் கலிக்காழிச்

சுருதி மறைநான் கான செம்மை தருவானைக்

கருதி யெழுமின் வழுவா வண்ணந் துயர்போமே.

 

05

 

638

 

மந்த மருவும் பொழிலில் எழிலார் மதுவுண்டு

கந்த மருவ வரிவண் டிசைசெய் கலிக்காழிப்

பந்தம் நீங்க அருளும் பரனே எனவேத்திச்

சிந்தை செய்வார் செம்மை நீங்கா திருப்பாரே.

 

06

 

639

 

புயலார் பூமி நாமம் ஓதிப் புகழ்மல்கக்

கயலார் கண்ணார் பண்ணார் ஒலிசெய் கலிக்காழிப்

பயில்வான் றன்னைப் பத்தி யாரத் தொழுதேத்த

முயல்வார் தம்மேல் வெம்மைக் கூற்ற முடுகாதே.

 

07

 

640

 

அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான் அடியார்க்குக்

கரக்ககில்லா தருள்செய் பெருமான் கலிக்காழிப்

பரக்கும் புகழான் தன்னை யேத்திப் பணிவார்மேல்

பெருக்கும் இன்பந் துன்ப மான பிணிபோமே.

 

08

 

641

 

மாணா யுலகங் கொண்ட மாலும் மலரோனுங்

காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலிக்காழிப்

பூணார் முலையாள் பங்கத் தானைப் புகழ்ந்தேத்திக்

கோணா நெஞ்சம் உடையார்க் கில்லை குற்றமே.

 

09

 

642

 

அஞ்சி யல்லல் மொழிந்து திரிவார் அமண்ஆதர்

கஞ்சி காலை யுண்பார்க் கரியான் கலிக்காழித்

தஞ்ச மாய தலைவன் தன்னை நினைவார்கள்

துஞ்ச லில்லா நல்ல வுலகம் பெறுவாரே.

 

10

 

643

 

ஊழி யாய பாரில் ஓங்கும் உயர்செல்வக்

காழி யீசன் கழலே பேணுஞ் சம்பந்தன்

தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவைவல்லார்

வாழி நீங்கா வானோ ருலகில் மகிழ்வாரே.

 

11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

2.60 திருப்பாசூர்

 

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

 

644

 

சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்

வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்

மைந்தர் மணாளர் என்ன மகிழ்வா ரூர்போலும்

பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.

 

01

 

645

 

பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மானென்

றாருந் தனையும் அடியா ரேத்த அருள்செய்வார்

ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர்போலும்

பாரின் மிசையார் பாட லோவாப் பாசூரே.

 

02

 

646

 

கையாற் றொழுது தலைசாய்த் துள்ளங் கசிவார்கள்

மெய்யார் குறையுந் துயருந் தீர்க்கும் விமலனார்

நெய்யா டுதலஞ் சுடையார் நிலாவும் ஊர்போலும்

பைவாய் நாகங் கோட லீனும் பாசூரே.

 

03

 

647

 

பொங்கா டரவும் புனலுஞ் சடைமேல் பொலிவெய்தக்

கொங்கார் கொன்றை சூடியென் னுள்ளங் குளிர்வித்தார்

தங்கா தலியுந் தாமும் வாழும் ஊர்போலும்

பைங்கான் முல்லை பல்லரும் பீனும் பாசூரே.

 

04

 

648

 

ஆடற் புரியும் ஐவா யரவொன் றரைச்சாத்தும்

சேடச் செல்வர் சிந்தையு ளென்றும் பிரியாதார்

வாடற் றலையிற் பலிதேர் கையார் ஊர்போலும்

பாடற் குயில்கள் பயில்பூஞ் சோலைப் பாசூரே.

 

05

 

649

 

கானின் றதிரக் கனல்வாய் நாகம் கச்சாகத்

தோலொன் றுடையார் விடையார் தம்மைத் தொழுவார்கள்

மால்கொண் டோ ட மையல் தீர்ப்பார் ஊர்போலும்

பால்வெண் மதிதோய் மாடஞ்சூழ்ந்த பாசூரே.

 

06

 

650

 

கண்ணின் அயலே கண்ணொன் றுடையார் கழலுன்னி

எண்ணுந் தனையும் அடியா ரேத்த அருள்செய்வார்

உண்ணின் றுருக உவகை தருவார் ஊர்போலும்

பண்ணின் மொழியார் பாட லோவாப் பாசூரே.

 

07

 

651

 

தேசு குன்றாத் தெண்ணீ ரிலங்கைக் கோமானைக்

கூச அடர்த்துக் கூர்வாள் கொடுப்பார் தம்மையே

பேசிப் பிதற்றப் பெருமை தருவார் ஊர்போலும்

பாசித் தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே.

 

08

 

652

 

நகுவாய் மலர்மேல் அயனும் நாகத் தணையானும்

புகுவா யறியார் புறம்நின் றோரார் போற்றோவார்

செகுவாய் உகுபற் றலைசேர் கையார் ஊர்போலும்

பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே.

 

09

 

653

 

தூய வெயில்நின் றுழல்வார் துவர்தோய் ஆடையர்

நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயமில்லார்

காவல் வேவக் கணையொன் றெய்தார் ஊர்போலும்

பாவைக் குரவம் பயில்பூஞ் சோலைப் பாசூரே.

 

10

 

654

 

ஞானம் உணர்வான் காழி ஞான சம்பந்தன்

தேனும் வண்டும் இன்னிசை பாடுந் திருப்பாசூர்க்

கானம் முறைவார் கழல்சேர் பாடல் இவைவல்லார்

ஊனம் இலராய் உம்பர் வானத் துறைவாரே.

 

11

 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பாசூர்நாதர், தேவியார் - பசுபதிநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

திருஞானசம்பந்தசுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்

இரண்டாம் திருமுறை முதல் பகுதி முற்றும்.

To Top