முதல் திருமுறை

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த

தேவாரப் பதிகங்கள்

முதல் திருமுறை - 

 

1.1 திருப்பிரமபுரம்

 

பண் - நட்டபாடை

 

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்

காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்

ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த

பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

 

முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம் பவைபூண்டு

வற்றலோடுகலனாப் பலிதேர்ந்தென துள்ளங் கவர்கள்வன்

கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்

பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

 

நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடி

ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் னுள்ளங்கவர் கள்வன்

ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிது வென்னப்

பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

 

விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்

உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்

மண்மகிழ்ந்தஅரவம் மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்

பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

 

ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன

அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்

கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்னப்

பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

 

மறைகலந்தவொலி பாடலொடாடல ராகிமழு வேந்தி

இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர் கள்வன்

கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்

பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

 

சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த

உடைமுயங்கும் அரவோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்

கடல்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிற கன்னம்

பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

 

வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த

உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்

துயரிலங்குமுல கில்பலவூழிகள் தோன்றும்பொழு தெல்லாம்

பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

 

தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்

நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்

வாணுதல்செய்மக ளிர்முதலாகிய வையத்தவ ரேத்தப்

பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

 

புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா

ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்

மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயமிது வென்னப்

பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

 

அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய

பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன் றன்னை

ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரை செய்த

திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்த லெளிதாமே.

 

திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பிரமபுரீசர்; தேவியார் - திருநிலைநாயகி.

திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.

 

திருச்சிற்றம்பலம்

 

 

 

1.2 திருப்புகலூர்

 

பண் - நட்டபாடை

 

குறிகலந்தஇசை பாடலினான்நசை யாலிவ்வுல கெல்லாம்

நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறும்பலி பேணி

முறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடம்மொய்ம் மலரின்

பொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய லாரும்புக லூரே.

 

காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மார்பன்னொரு பாகம்

மாதிலங்குதிரு மேனியினான்கரு மானின்னுரி யாடை

மீதிலங்கவணிந் தானிமையோர்தொழ மேவும்மிடஞ் சோலைப்

போதிலங்குநசை யால்வரிவண்டிசை பாடும்புக லூரே.

 

பண்ணிலாவுமறை பாடலினானிறை சேரும்வளை யங்கைப்

பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழ லென்றுந்தொழு தேத்த

உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா வொருவற்கிட மென்பர்

மண்ணிலாவும்அடி யார்குடிமைத்தொழில் மல்கும்புக லூரே.

 

நீரின்மல்குசடை யன்விடையன்னடை யார்தம்அரண் மூன்றுஞ்

சீரின்மல்குமலை யேசிலையாக முனிந்தன்றுல குய்யக்(*)

காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட கடவுள்ளிட மென்பர்

ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர் வெய்தும்புக லூரே.

(*) முனிந்தானுலகுய்ய என்றும் பாடம்.

 

செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்மடி யார்மேல்

பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத் தென்றும்பணி வாரை

மெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்பரருள் பேணிப்

பொய்யிலாதமனத் தார்பிரியாதுபொ ருந்தும்புக லூரே.

 

கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற்

குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிட மென்பர்

விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந் தெங்கும்

முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புக லூரே.

 

வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல் விளங்கும்மதி சூடி

உள்ளமார்ந்தஅடி யார்தொழுதேத்த உகக்கும்அருள் தந்தெங்

கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த கடவுட்கிட மென்பர்

புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம் மல்கும்புக லூரே.

 

தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான்முடி திண்டோ ள்

தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை கேட்டன்றருள் செய்த

மின்னிலங்குசடை யான்மடமாதொடு மேவும்மிட மென்பர்

பொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி தோயும்புக லூரே.

 

நாகம்வைத்தமுடி யானடிகைதொழு தேத்தும்மடி யார்கள்

ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு மாலுந்தொழு தேத்த

ஏகம்வைத்தஎரி யாய்மிகவோங்கிய எம்மானிடம் போலும்

போகம்வைத்தபொழி லின்நிழலான்மது வாரும்புக லூரே.

 

செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் செப்பிற்பொரு ளல்லாக்

கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள் கடவுள்ளிடம் போலுங்

கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு தூவித்துதி செய்து

மெய்தவத்தின்முயல் வாருயர்வானக மெய்தும்புக லூரே.

 

புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் மேவும்புக லூரைக்

கற்றுநல்லவவர் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் மாலை

பற்றியென்றுமிசை பாடியமாந்தர் பரமன்னடி சேர்ந்து

குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக ழோங்கிப்பொலி வாரே.

 

 

காவிரி தென்கரைத் தலம்.

சுவாமிபெயர் - அக்கினீசுவரர்; தேவியார் - கருந்தார்க்குழலியம்மை

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.3 திருவலிதாயம்

 

பண் - நட்டபாடை

 

பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல் தூவி

ஒத்தசொல்லிஉல கத்தவர்தாம்தொழு தேத்தஉயர் சென்னி

மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலி தாயஞ்

சித்தம்வைத்தஅடி யாரவர்மேல்அடை யாமற்றிடர் நோயே.

 

படையிலங்குகரம் எட்டுடையான்படி றாகக்கன லேந்திக்

கடையிலங்குமனை யில்பலிகொண்டுணுங் கள்வன்னுறை கோயில்

மடையிலங்குபொழி லின்நிழல்வாய்மது வீசும்வலி தாயம்

அடையநின்றஅடி யார்க்கடையாவினை அல்லல்துயர் தானே.

 

ஐயனொய்யன்னணி யன்பிணியில்லவ ரென்றுந்தொழு தேத்தச்

செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்திரு மாதோடுறை கோயில்

வையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் கின்றவலி தாயம்

உய்யும்வண்ணந்நினை மின்நினைந்தால்வினை தீருந்நல மாமே.

 

ஒற்றையேறதுடை யான்நடமாடியோர் பூதப்படை சூழப்

புற்றின்நாகம்அரை யார்த்துழல்கின்றஎம் பெம்மான்மட வாளோ

டுற்றகோயிலுல கத்தொளிமல்கிட உள்கும்வலி தாயம்

பற்றிவாழும்மது வேசரணாவது பாடும்மடி யார்க்கே.

 

புந்தியொன்றிநினை வார்வினையாயின தீரப்பொரு ளாய

அந்தியன்னதொரு பேரொளியானமர் கோயில்அய லெங்கும்

மந்திவந்துகடு வன்னொடுகூடி வணங்கும்வலி தாயஞ்

சிந்தியாதஅவர் தம்மடும்வெந்துயர் தீர்தலெளி தன்றே.

 

ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கத்துள்ளவ ரேத்தக்

கானியன்றகரி யின்உரிபோர்த்துழல் கள்வன்சடை தன்மேல்

வானியன்றபிறை வைத்தஎம்மாதி மகிழும்வலி தாயம்

தேனியன்றநறு மாமலர்கொண்டுநின் றேத்தத்தெளி வாமே.

 

கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமனுயிர் வீட்டிப்

பெண்ணிறைந்தஒரு பால்மகிழ்வெய்திய பெம்மானுறை கோயில்

மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் வணங்கும்வலி தாயத்

துண்ணிறைந்தபெரு மான்கழலேத்தநம் உண்மைக்கதி யாமே.

 

கடலின்நஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநட மாடி

அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மானமர் கோயில்

மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலி தாயம்

உடலிலங்குமுயிர் உள்ளளவுந்தொழ உள்ளத்துயர் போமே.

 

பெரியமேருவரை யேசிலையாமலை வுற்றாரெயில் மூன்றும்

எரியவெய்தவொரு வன்னிருவர்க்கறி வொண்ணாவடி வாகும்

எரியதாகியுற வோங்கியவன்வலி தாயந்தொழு தேத்த

உரியராகவுடை யார்பெரியாரென உள்கும்முல கோரே.

 

ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர் கூடி

ஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப்பொரு ளென்னேல்

வாசிதீரவடி யார்க்கருள்செய்து வளர்ந்தான்வலி தாயம்

பேசுமார்வமுடை யாரடியாரெனப் பேணும்பெரி யோரே.

 

வண்டுவைகும்மணம் மல்கியசோலை வளரும்வலி தாயத்

தண்டவாணனடி யுள்குதலாலருள் மாலைத்தமி ழாகக்

கண்டல்வைகுகடல் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் பத்துங்

கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் வானத்துயர் வாரே.

 

இத்தலம் தொண்டைநாட்டில் பாடியென வழங்கப்பட்டிருக்கின்றது.

சுவாமிபெயர் - வலிதாயநாதர்,

தேவியார் - தாயம்மை

 

திருச்சிற்றம்பலம்

 

 

 

1.4 திருப்புகலியும் - திருவீழிமிழலையும்

 

வினாவுரை

 

பண் - நட்டபாடை

 

மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற

 

வாணுதல் மான்விழி மங்கையோடும்

பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப்

 

புகலி நிலாவிய புண்ணியனே

எம்மிறை யேயிமை யாதமுக்கண்

 

ஈசவென்நேச விதென்கொல் சொல்லாய்

மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை

 

விண்ணிழி கோயில் விரும்பியதே.

 

கழன்மல்கு பந்தொடம் மானைமுற்றில்

 

கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள்

பொழின்மல்கு கிள்ளையைச் சொற்பயிற்றும்

 

புகலி நிலாவிய புண்ணியனே

எழின்மல ரோன்சிர மேந்தியுண்டோ ர்

 

இன்புறு செல்வமி தென்கொல்சொல்லாய்

மிழலையுள் வேதிய ரேத்திவாழ்த்த

 

விண்ணிழி கோயில் விரும்பியதே.

 

கன்னிய ராடல் கலந்துமிக்க

 

கந்துக வாடை கலந்துதுங்கப்

பொன்னியல் மாடம் நெருங்குசெல்வப்

 

புகலி நிலாவிய புண்ணியனே

இன்னிசை யாழ்மொழி யாளோர்பாகத்

 

தெம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்

மின்னியல் நுண்ணிடை யார்மிழலை

 

விண்ணிழி கோயில் விரும்பியதே.

 

நாகப ணந்திகழ் அல்குல்மல்கும்

 

நன்னுதல் மான்விழி மங்கையோடும்

பூகவ ளம்பொழில் சூழ்ந்தஅந்தண்

 

புகலிநி லாவிய புண்ணியனே

ஏகபெ ருந்தகை யாயபெம்மான்

 

எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்

மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை

 

விண்ணிழி கோயில் விரும்பியதே.

 

சந்தள றேறுத டங்கொள்கொங்கைத்

 

தையலோடுந் தளராத வாய்மைப்

புந்தியி னான்மறை யோர்களேத்தும்

 

புகலி நிலாவிய புண்ணியனே

எந்தமை யாளுடை ஈசஎம்மான்

 

எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்

வெந்தவெண் ணீறணி வார்மிழலை

 

விண்ணிழி கோயில் விரும்பியதே.

 

சங்கொலி இப்பிசு றாமகரந்

 

தாங்கி நிரந்து தரங்கம்மேன்மேற்

பொங்கொலி நீர்சுமந் தோங்குசெம்மைப்

 

புகலி நிலாவிய புண்ணியனே

எங்கள்பி ரானிமை யோர்கள்பெம்மான்

 

எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்

வெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை

 

விண்ணிழி கோயில் விரும்பியதே.

 

காமனெ ரிப்பிழம் பாகநோக்கிக்

 

காம்பன தோளியொ டுங்கலந்து

பூமரு நான்முகன் போல்வரேத்தப்

 

புகலி நிலாவிய புண்ணியனே

ஈமவ னத்தெரி யாட்டுகந்த

 

எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

வீமரு தண்பொழில் சூழ்மிழலை

 

விண்ணிழி கோயில் விரும்பியதே.

 

இலங்கையர் வேந்தெழில் வாய்த்ததிண்டோ ள்

 

இற்றல றவ்விர லொற்றியைந்து

புலங்களைக் கட்டவர் போற்றஅந்தண்

 

புகலி நிலாவிய புண்ணியனே

இலங்கெரி யேந்திநின் றெல்லியாடும்

 

எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்

விலங்கலொண் மாளிகை சூழ்மிழலை

 

விண்ணிழி கோயில் விரும்பியதே.

 

செறிமுள ரித்தவி சேறியாறுஞ்

 

செற்றதில் வீற்றிருந் தானும்மற்றைப்

பொறியர வத்தணை யானுங்காணாப்

 

புகலி நிலாவிய புண்ணியனே

எறிமழு வோடிள மான்கையின்றி

 

இருந்தபி ரானிது வென்கொல்சொல்லாய்

வெறிகமழ் பூம்பொழில் சூழ்மிழலை

 

விண்ணிழி கோயில் விரும்பியதே.

 

1.4.9

 

43

 

பத்தர்க ணம்பணிந் தேத்தவாய்த்த

 

பான்மைய தன்றியும் பல்சமணும்

புத்தரும் நின்றலர் தூற்றஅந்தண்

 

புகலி நிலாவிய புண்ணியனே

எத்தவத் தோர்க்குமி லக்காய்நின்ற

 

எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை

 

விண்ணிழி கோயில் விரும்பியதே.

 

1.4.10

 

44

 

விண்ணிழி கோயில் விரும்பிமேவும்

 

வித்தக மென்கொலி தென்றுசொல்லிப்

புண்ணிய னைப்புக லிந்நிலாவு

 

பூங்கொடி யோடிருந் தானைப்போற்றி

நண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி

 

நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன

பண்ணியல் பாடல்வல் லார்களிந்தப்

 

பாரொடு விண்பரி பாலகரே.

 

1.4.11

 

 

இவ்விரண்டும் சோழநாட்டிலுள்ளவை. புகலி என்பது சீகாழிக்கொருபெயர்

வீழிமிழலையில் சுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுசாம்பிகை

 

திருச்சிற்றம்பலம்

 

 

 

1.5 திருக்காட்டுப்பள்ளி

 

பண் - நட்டபாடை

 

45

 

செய்யரு கேபுனல் பாயஓங்கிச்

 

செங்கயல் பாயச் சிலமலர்த்தேன்

கையரு கேகனி வாழையீன்று

 

கானலெலாங் கமழ் காட்டுப்பள்ளிப்

பையரு கேயழல் வாயவைவாய்ப்

 

பாம்பணை யான்பணைத் தோளிபாகம்

மெய்யரு கேயுடை யானையுள்கி

 

விண்டவ ரேறுவர் மேலுலகே.

 

1.5.1

 

45

 

* இப்பதிகத்தில் 2-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

1.5.2

 

46

 

திரைகளெல் லாமல ருஞ்சுமந்து

 

செழுமணி முத்தொடு பொன்வரன்றிக்

கரைகளெல் லாமணி சேர்ந்துரிஞ்சிக்

 

காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி

உரைகளெல் லாமுணர் வெய்திநல்ல

 

உத்தம ராயுயர்ந் தாருலகில்

அரவமெல் லாமரை யார்த்தசெல்வர்க்

 

காட்செய அல்லல் அறுக்கலாமே.

 

1.5.3

 

47

 

தோலுடை யான்வண்ணப் போர்வையினான்

 

சுண்ணவெண் ணீறுது தைந்திலங்கு

நூலுடை யானிமை யோர்பெருமான்

 

நுண்ணறி வால்வழி பாடுசெய்யுங்

காலுடை யான்கரி தாயகண்டன்

 

காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி

மேலுடை யானிமை யாதமுக்கண்

 

மின்னிடை யாளொடும் வேண்டினானே.

 

1.5.4

 

48

 

சலசல சந்தகி லோடும்உந்திச்

 

சந்தன மேகரை சார்த்தியெங்கும்

பலபல வாய்த்தலை யார்த்துமண்டி

 

பாய்ந்திழி காவிரிப் பாங்கரின்வாய்

கலகல நின்றதி ருங்கழலான்

 

காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளிச்

சொலவல தொண்டர்க ளேத்தநின்ற

 

சூலம்வல் லான்கழல் சொல்லுவோமே.

 

1.5.5

 

49

 

தளையவிழ் தண்ணிற நீலம்நெய்தல்

 

தாமரை செங்கழு நீருமெல்லாங்

களையவி ழுங்குழ லார்கடியக்

 

காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளித்

துளைபயி லுங்குழல் யாழ்முரல

 

துன்னிய இன்னிசை யால்துதைந்த

அளைபயில் பாம்பரை யார்த்தசெல்வர்க்

 

காட்செய அல்லல் அறுக்கலாமே.

 

1.5.6

 

50

 

முடிகையி னாற்றொடும் மோட்டுழவர்

 

முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டிக்

கடிகையி னாலெறி காட்டுப்பள்ளி

 

காதல்செய் தான்கரி தாயகண்டன்

பொடியணி மேனியி னானையுள்கிப்

 

போதொடு நீர்சுமந் தேத்திமுன்னின்

றடிகையி னாற்றொழ வல்லதொண்டர்

 

அருவினை யைத்துரந் தாட்செய்வாரே.

 

1.5.7

 

51

 

பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான்

 

பெய்கழல் நாடொறும் பேணியேத்த

மறையுடை யான்மழு வாளுடையான்

 

வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட

கறையுடை யான்கன லாடுகண்ணாற்

 

காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக்

குறையுடை யான்குறட் பூதச்செல்வன்

 

குரைகழ லேகைகள் கூப்பினோமே.

 

1.5.8

 

52

 

செற்றவர் தம்அர ணம்மவற்றைச்

 

செவ்வழல் வாயெரி யூட்டிநின்றுங்

கற்றவர் தாந்தொழு தேத்தநின்றான்

 

காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி

உற்றவர் தாமுணர் வெய்திநல்ல

 

உம்பருள் ளார்தொழு தேத்தநின்ற

பெற்றம ரும்பெரு மானையல்லால்

 

பேசுவதும் மற்றோர் பேச்சிலோமே.

 

1.5.9

 

53

 

ஒண்டுவ ரார்துகி லாடைமெய்போர்த்

 

துச்சிகொ ளாமையுண் டேயுரைக்குங்

குண்டர்க ளோடரைக் கூறையில்லார்

 

கூறுவ தாங்குண மல்லகண்டீர்

அண்டம றையவன் மாலுங்காணா

 

ஆதியி னானுறை காட்டுப்பள்ளி

வண்டம ரும்மலர்க் கொன்றைமாலை

 

வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே.

 

1.5.10

 

54

 

பொன்னியல் தாமரை நீலம்நெய்தல்

 

போதுக ளாற்பொலி வெய்துபொய்கைக்

கன்னியர் தாங்குடை காட்டுப்பள்ளிக்

 

காதல னைக்கடற் காழியர்கோன்

துன்னிய இன்னிசை யாற்றுதைந்து

 

சொல்லிய ஞானசம் பந்தன்நல்ல

தன்னிசை யாற்சொன்ன மாலைபத்துந்

 

தாங்கவல் லார்புகழ் தாங்குவாரே.

 

1.5.11

 

 

இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - ஆரணியச்சுந்தரர், தேவியார் - அகிலாண்டநாயகியம்மை

 

திருச்சிற்றம்பலம்

 

 

 

1.6 திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும்

 

வினாவுரை

 

பண் - நட்டபாடை

 

55

 

அங்கமும் வேதமும் ஓதுநாவர்

 

அந்தணர் நாளும் அடிபரவ

மங்குல் மதிதவழ் மாடவீதி

 

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

செங்கய லார்புனற் செல்வமல்கு

 

சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்

கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்

 

கணபதி யீச்சரங் காமுறவே.

 

1.6.1

 

56

 

நெய்தவழ் மூவெரி காவலோம்பும்

 

நேர்புரி நூன்மறை யாளரேத்த

மைதவழ் மாட மலிந்தவீதி

 

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

செய்தவ நான்மறை யோர்களேத்துஞ்

 

சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்

கைதவழ் கூரெரி யேந்தியாடுங்

 

கணபதி யீச்சரங் காமுறவே.

 

1.6.2

 

57

 

தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர்

 

தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ

மால்புகை போய்விம்மு மாடவீதி

 

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

சேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த

 

சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்

கால்புல்கு பைங்கழ லார்க்கஆடுங்

 

கணபதி யீச்சரங் காமுறவே.

 

1.6.3

 

58

 

நாமரு கேள்வியர் வேள்வியோவா

 

நான்மறை யோர்வழி பாடுசெய்ய

மாமரு வும்மணிக் கோயில்மேய

 

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

தேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த

 

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

காமரு சீர்மகிழ்ந் தெல்லியாடுங்

 

கணபதி யீச்சரங் காமுறவே.

 

1.6.4

 

59

 

பாடல் முழவும் விழவும்ஓவாப்

 

பன்மறை யோரவர் தாம்பரவ

மாட நெடுங்கொடி விண்தடவும்

 

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த

 

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

காடக மேயிட மாகஆடுங்

 

கணபதி யீச்சரங் காமுறவே.

 

1.6.5

 

60

 

புனையழ லோம்புகை அந்தணாளர்

 

பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப

மனைகெழு மாட மலிந்தவீதி

 

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த

 

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

கனைவளர் கூரெரி ஏந்தியாடுங்

 

கணபதி யீச்சரங் காமுறவே.

 

1.6.6

 

60

 

* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

1.6.7

 

61

 

பூண்டங்கு மார்பின் இலங்கைவேந்தன்

 

பொன்னெடுந் தோள்வரை யாலடர்த்து

மாண்டங்கு நூன்மறை யோர்பரவ

 

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

சேண்டங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த

 

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

காண்டங்கு தோள்பெயர்த் தெல்லியாடுங்

 

கணபதி யீச்சரங் காமுறவே.

 

1.6.8

 

62

 

அந்தமும் ஆதியும் நான்முகனும்

 

அரவணை யானும் அறிவரிய

மந்திர வேதங்க ளோதுநாவர்

 

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ்

 

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

கந்தம் அகிற்புகை யேகமழுங்

 

கணபதி யீச்சரங் காமுறவே.

 

1.6.9

 

63

 

இலைமரு தேயழ காகநாளும்

 

இடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும்

நிலையமண் டேரரை நீங்கிநின்று

 

நீதரல் லார்தொழும் மாமருகல்

மலைமகள் தோள்புணர் வாயருளாய்

 

மாசில்செங் காட்டங் குடியதனுள்

கலைமல்கு தோலுடுத் தெல்லியாடுங்

 

கணபதி யீச்சரங் காமுறவே.

 

1.6.10

 

64

 

நாலுங் குலைக்கமு கோங்குகாழி

 

ஞானசம் பந்தன் நலந்திகழும்

மாலின் மதிதவழ் மாடமோங்கும்

 

மருகலின் மற்றதன் மேல்மொழிந்த

சேலுங் கயலுந் திளைத்தகண்ணார்

 

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

சூலம்வல் லான்கழ லேத்துபாடல்

 

சொல்லவல் லார்வினை யில்லையாமே.

 

1.6.11

 

 

இவைகளுஞ் சோழநாட்டிலுள்ளவை.

திருமருகலில் சுவாமிபெயர் - மாணிக்கவண்ணர்; தேவியார் - வண்டுவார்குழலி

திருச்செங்காட்டங்குடியில் சுவாமிபெயர் - கணபதீசுவரர்,

தேவியார் - திருக்குழல்நாயகி.

 

1.7 திருநள்ளாறும் - திருஆலவாயும்

 

வினாவுரை

 

பண் - நட்டபாடை

 

65

 

பாடக மெல்லடிப் பாவையோடும்

 

படுபிணக் காடிடம் பற்றிநின்று

நாடக மாடுநள் ளாறுடைய

 

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

சூடக முன்கை மடந்தைமார்கள்

 

துணைவரொ டுந்தொழு தேத்திவாழ்த்த

ஆடக மாடம் நெருங்குகூடல்

 

ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

 

1.7.1

 

66

 

திங்களம் போதுஞ் செழும்புனலுஞ்

 

செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து

நங்கள் மகிழுநள் ளாறுடைய

 

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

பொங்கிள மென்முலை யார்களோடும்

 

புனமயி லாட நிலாமுளைக்கும்

அங்கள கச்சுதை மாடக்கூடல்

 

ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

 

1.7.2

 

67

 

தண்ணறு மத்தமுங் கூவிளமும்

 

வெண்டலை மாலையுந் தாங்கியார்க்கும்

நண்ணல் அரியநள் ளாறுடைய

 

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

புண்ணிய வாணரும் மாதவரும்

 

புகுந்துட னேத்தப் புனையிழையார்

அண்ணலின் பாட லெடுக்குங்கூடல்

 

ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

 

1.7.3

 

68

 

பூவினில் வாசம் புனலிற்பொற்பு

 

புதுவிரைச் சாந்தினின் நாற்றத்தோடு

நாவினிற் பாடநள் ளாறுடைய

 

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

தேவர்கள் தானவர் சித்தர்விச்சா

 

தரர்கணத் தோடுஞ் சிறந்துபொங்கி

(*)ஆவினில் ஐந்துகந் தாட்டுங்கூடல்

 

ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

(*) ஆவினிலைந்து - பஞ்சகவ்வியம்.

 

1.7.4

 

69

 

செம்பொன்செய் மாலையும் வாசிகையுந்

 

திருந்து புகையு மவியும்பாட்டும்

நம்பும்பெ ருமைநள் ளாறுடைய

 

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

உம்பரும் நாக ருலகந்தானும்

 

ஒலிகடல் சூழ்ந்த வுலகத்தோரும்

அம்புத நால்களால் நீடுங்கூடல்

 

ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

 

1.7.5

 

70

 

பாகமுந் தேவியை வைத்துக்கொண்டு

 

பைவிரி துத்திப் பரியபேழ்வாய்

நாகமும் பூண்டநள் ளாறுடைய

 

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

போகமும் நின்னை மனத்துவைத்துப்

 

புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட

ஆகமு டையவர் சேருங்கூடல்

 

ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

 

1.7.6

 

71

 

கோவண ஆடையும் நீறுப்பூச்சுங்

 

கொடுமழு ஏந்தலுஞ் செஞ்சடையும்

நாவணப் பாட்டுநள் ளாறுடைய

 

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

பூவண மேனி இளையமாதர்

 

பொன்னும் மணியுங் கொழித்தெடுத்து

ஆவண வீதியில் ஆடுங்கூடல்

 

ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

 

1.7.7

 

72

 

இலங்கை யிராவணன் வெற்பெடுக்க

 

எழில்விர லூன்றி யிசைவிரும்பி

நலம்கொளச் சேர்ந்த நள்ளாறுடைய

 

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

புலன்களைச் செற்றுப் பொறியைநீக்கிப்

 

புந்தியிலு நினைச் சிந்தைசெய்யும்

அலங்கல்நல் லார்கள் அமருங்கூடல்

 

ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

 

1.7.8

 

73

 

பணியுடை மாலும் மலரினோனும்

 

பன்றியும் வென்றிப் பறவையாயும்

நணுகல் அரியநள் ளாறுடைய

 

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

மணியொலி சங்கொலி யோடுமற்றை

 

மாமுர சின்னொலி என்றும்ஓவா

தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல்

 

ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

 

1.7.9

 

74

 

தடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ்

 

சாதியின் நீங்கிய வத்தவத்தர்

நடுக்குற நின்றநள் ளாறுடைய

 

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

எடுக்கும் விழவும் நன்னாள்விழவும்

 

இரும்பலி யின்பினோ டெத்திசையும்

அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல்

 

ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

 

1.7.10

 

75

 

அன்புடை யானை அரனைக்கூடல்

 

ஆலவாய் மேவிய தென்கொலென்று

நன்பொனை நாதனை நள்ளாற்றானை

 

நயம்பெறப் போற்றி நலங்குலாவும்

பொன்புடை சூழ்தரு மாடக்காழிப்

 

பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன

இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார்

 

இமையவ ரேத்த இருப்பர்தாமே.

 

1.7.11

 

 

இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - தெர்ப்பாரணியேசுவரர்;

தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.

 

1.8 திருஆவூர்ப்பசுபதீச்சரம்

 

பண் - நட்டபாடை

 

76

 

புண்ணியர் பூதியர் பூதநாதர்

 

புடைபடு வார்தம் மனத்தார்திங்கட்

கண்ணிய ரென்றென்று காதலாளர்

 

கைதொழு தேத்த இருந்தவூராம்

விண்ணுயர் மாளிகை மாடவீதி

 

விரைகமழ் சோலை சுலாவியெங்கும்

பண்ணியல் பாடல றாதஆவூர்ப்

 

பசுபதி யீச்சரம் பாடுநாவே.

 

1.8.1

 

77

 

முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார்

 

முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும்

அத்திய ரென்றென் றடியரேத்தும்

 

ஐயன் அணங்கொ டிருந்தவூராம்

தொத்திய லும்பொழில் மாடுவண்டு

 

துதைந்தெங்கும் தூமதுப் பாயக்கோயிற்

பத்திமைப் பாடல றாதஆவூர்ப்

 

பசுபதி யீச்சரம் பாடுநாவே.

 

1.8.2

 

78

 

பொங்கி வரும்புனற் சென்னிவைத்தார்

 

போம்வழி வந்திழி வேற்றமானார்

இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும்

 

இறையவ ரென்றுமி ருந்தவூராம்

தெங்குயர் சோலைசே ராலைசாலி

 

திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்

பங்கய மங்கை விரும்புமாவூர்ப்

 

பசுபதி யீச்சரம் பாடுநாவே.

 

1.8.3

 

79

 

தேவியோர் கூறின ரேறதேறுஞ்

 

செலவினர் நல்குர வென்னைநீக்கும்

ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும்

 

அப்பனா ரங்கே அமர்ந்தவூராம்

பூவிய லும்பொழில் வாசம்வீசப்

 

புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப்

பாவியல் பாடல றாதஆவூர்ப்

 

பசுபதி யீச்சரம் பாடுநாவே.

 

1.8.4

 

80

 

இந்தணை யுஞ்சடை யார்விடையார்

 

இப்பிறப் பென்னை யறுக்கவல்லார்

வந்தணைந் தின்னிசை பாடுவார்பால்

 

மன்னினர் மன்னி யிருந்தவூராம்

கொந்தணை யுங்குழ லார்விழவில்

 

கூட்டமி டையிடை சேரும்வீதிப்

பந்தணை யும்விர லார்தம்ஆவூர்ப்

 

பசுபதி யீச்சரம் பாடுநாவே.

 

1.8.5

 

81

 

குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார்

 

கும்பிடு வார்தமக் கன்புசெய்வார்

ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார்

 

உறைபதி யாகுஞ் செறிகொள்மாடஞ்

சுற்றிய வாசலின் மாதர்விழாச்

 

சொற்கவி பாடநி தானம்நல்கப்

பற்றிய கையினர் வாழும்ஆவூர்ப்

 

பசுபதி யீச்சரம் பாடுநாவே.

 

1.8.6

 

82

 

நீறுடை யார்நெடு மால்வணங்கும்

 

நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம்

கூறுடை யாருடை கோவணத்தார்

 

குவலய மேத்த இருந்தவூராம்

தாறுடை வாழையிற் கூழைமந்தி

 

தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப்

பாறிடப் பாய்ந்து பயிலும்ஆவூர்ப்

 

பசுபதி யீச்சரம் பாடுநாவே.

 

1.8.7

 

83

 

வெண்டலை மாலை விரவிப்பூண்ட

 

மெய்யுடை யார்விறல் ஆரரக்கன்

வண்டமர் பூமுடி செற்றுகந்த

 

மைந்த ரிடம்வள மோங்கியெங்குங்

கண்டவர் சிந்தைக் கருத்தின்மிக்கார்

 

கதியரு ளென்றுகை யாரக்கூப்பிப்

பண்டலர் கொண்டு பயிலும்ஆவூர்ப்

 

பசுபதி யீச்சரம் பாடுநாவே.

 

1.8.8

 

84

 

மாலும் அயனும் வணங்கிநேட

 

மற்றவ ருக்கெரி யாகிநீண்ட

சீலம் அறிவரி தாகிநின்ற

 

செம்மையி னாரவர் சேருமூராம்

கோல விழாவி னரங்கதேறிக்

 

கொடியிடை மாதர்கள் மைந்தரோடும்

பாலென வேமொழிந் தேத்தும்ஆவூர்ப்

 

பசுபதி யீச்சரம் பாடுநாவே.

 

1.8.9

 

85

 

பின்னிய தாழ்சடை யார்பிதற்றும்

 

பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள்

தன்னிய லும்முரை கொள்ளகில்லாச்

 

சைவரி டந்தள வேறுசோலைத்

துன்னிய மாதரும் மைந்தர்தாமும்

 

சுனையிடை மூழ்கித் தொடர்ந்தசிந்தைப்

பன்னிய பாடல் பயிலும்ஆவூர்ப்

 

பசுபதி யீச்சரம் பாடுநாவே.

 

1.8.10

 

86

 

எண்டிசை யாரும் வணங்கியேத்தும்

 

எம்பெரு மானையெ ழில்கொளாவூர்ப்

பண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும்

 

பசுபதி யீச்சரத் தாதிதன்மேல்

கண்டல்கள் மிண்டிய கானற்காழிக்

 

கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன

கொண்டினி தாயிசை பாடியாடிக்

 

கூடு மவருடை யார்கள்வானே.

 

1.8.11

 

 

இது சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பசுபதீச்சுரர்,

தேவியார் - மங்களநாயகியம்மை

 

1.9 திருவேணுபுரம்

 

பண் - நட்டபாடை

 

87

 

வண்டார்குழ லரிவையொடும் பிரியாவகை பாகம்

பெண்டான்மிக ஆனான்பிறைச் சென்னிப்பெரு மானூர்

தண்டாமரை மலராளுறை தவளந்நெடு மாடம்

விண்டாங்குவ போலும்மிகு வேணுபுர மதுவே.

 

1.9.1

 

80

 

படைப்பும்நிலை யிறுதிப்பயன் பருமையொடு நேர்மை

கிடைப்பல்கண முடையான்கிறி பூதப்படை யானூர்

(*)புடைப்பாளையின் கமுகின்னொடு புன்னைமலர் நாற்றம்

விடைத்தேவரு தென்றல்மிகு வேணுபுர மதுவே.

 

(*) குடைப்பாளை என்றும் பாடம்.

 

1.9.2

 

89

 

கடந்தாங்கிய கரியையவர் வெருவவுரி போர்த்துப்

படந்தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழவூர்

நடந்தாங்கிய நடையார்நல பவளத்துவர் வாய்மேல்

விடந்தாங்கிய கண்ணார்பயில் வேணுபுர மதுவே.

 

1.9.3

 

90

 

தக்கன்தன சிரமொன்றினை அரிவித்தவன் தனக்கு

மிக்கவ்வரம் அருள்செய்தஎம் விண்ணோர்பெரு மானூர்

பக்கம்பல மயிலாடிட மேகம்முழ வதிர

மிக்கம்மது வண்டார்பொழில் வேணுபுர மதுவே.

 

1.9.4

 

91

 

நானாவித உருவாய்நமை யாள்வான்நணு காதார்

வானார்திரி புரமூன்றெரி யுண்ணச்சிலை தொட்டான்

தேனார்ந்தெழு கதலிக்கனி யுண்பான்திகழ் மந்தி

மேனோக்கிநின் றிரங்கும்பொழில் வேணுபுர மதுவே.

 

1.9.5

 

92

 

மண்ணோர்களும் விண்ணோர்களும் வெருவிமிக அஞ்சக்

கண்ணார்சலம் மூடிக்கட லோங்கவ்வுயர்ந் தானூர்

தண்ணார்நறுங் கமலம்மலர் சாயவ்விள வாளை

(**)விண்ணோர்துதி கொள்ளும்வியன் வேணுபுர மதுவே.

(**) விண்ணார் குதிகொள்ளும் என்றும் பாடம்.

 

1.9.6

 

               

* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

1.9.7

 

93

 

மலையான்மகள் அஞ்சவ்வரை எடுத்தவ்வலி யரக்கன்

தலைதோளவை நெரியச்சரண் உகிர்வைத்தவன் தன்னூர்

கலையாறொடு சுருதித்தொகை கற்றோர்மிகு கூட்டம்

விலையாயின சொற்றேர்தரு வேணுபுர மதுவே.

 

1.9.8

 

94

 

வயமுண்டவ மாலும்அடி காணாதல மாக்கும்

பயனாகிய பிரமன்படு தலையேந்திய பரனூர்

கயமேவிய சங்கந்தரு கழிவிட்டுயர் செந்நெல்

வியன்மேவிவந் துறங்கும்பொழில் வேணுபுர மதுவே.

 

1.9.9

 

95

 

மாசேறிய உடலாரமண் (*)கழுக்கள்ளொடு தேரர்

தேசேறிய பாதம்வணங் காமைத்தெரி யானூர்

தூசேறிய அல்குல்துடி இடையார்துணை முலையார்

வீசேறிய புருவத்தவர் வேணுபுர மதுவே.

(*) குழுக்கள் என்றும் பாடம்.

 

1.9.10

 

96

 

வேதத்தொலி யானும்மிகு வேணுபுரந் தன்னைப்

பாதத்தினின் மனம்வைத்தெழு பந்தன்தன பாடல்

ஏதத்தினை இல்லா இவை பத்தும்இசை வல்லார்

கேதத்தினை இல்லார்சிவ கெதியைப்பெறு வாரே. 11

 

 

 

வேணுபுரம் என்பது சீகாழிக்கொருபெயர்

 

1.10 திரு அண்ணாமலை

 

பண் - நட்டபாடை

 

97

 

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்

பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ

மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்

அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.

 

1.10.1

 

98

 

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்

தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற

ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்

பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.

 

1.10.2

 

99

 

பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ் கழைமுத்தஞ்

சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்

ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்

காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.

 

1.10.3

 

100

 

உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்

எதிரும்பலி யுணலாகவும் எருதேறுவ தல்லால்

முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்

அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே.

 

1.10.4

 

101

 

மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி

அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்

உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார்

குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.

 

1.10.5

 

102

 

பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்

பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகிக்

கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி

உருகும்மனம் உடையார்தமக் குறுநோயடை யாவே.

 

1.10.6

 

103

 

கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில்

நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள

எரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல

அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே.

 

1.10.7

 

104

 

ஒளிறூபுலி அதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்

பிளிறூகுரல் மதவாரணம் வதனம்பிடித் துரித்து

வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை

அளறூபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே.

 

1.10.8

 

105

 

விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்

கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்

அளவாவணம் அழலாகிய அண்ணாமலை யண்ணல்

தளராமுலை முறுவல்உமை தலைவன்னடி சரணே.

 

1.10.9

 

106

 

வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும்

மார்வம்புதை மலிசீவர மறையாவரு வாரும்

ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்

கூர்வெண்மழுப் படையான்நல கழல்சேர்வது குணமே.

 

1.10.10

 

107

 

வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்

அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்

கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான

சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.

 

1.10.11

 

 

இது நடுநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - அருணாசலேசுவரர்,

தேவியார் - உண்ணாமுலையம்மை

 

1.11 திருவீழிமிழலை

 

பண் - நட்டபாடை

 

108

 

சடையார்புன லுடையானொரு சரிகோவண முடையான்

படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான்

மடமான்விழி யுமைமாதிடம் உடையானெனை யுடையான்

விடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே.

 

1.11.1

 

109

 

ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்

மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய்

ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்

வேறாயுடன் ஆனானிடம் வீழிம்மிழ லையே.

 

1.11.2

 

110

 

வம்மின்னடி யீர்நாண்மல ரிட்டுத்தொழு துய்ய

உம்மன்பினொ டெம்மன்புசெய் தீசன்னுறை கோயில்

மும்மென்றிசை முரல்வண்டுகள் கொண்டித்திசை யெங்கும்

விம்மும்பொழில் சூழ்தண்வயல் வீழிம்மிழ லையே.

 

1.11.3

 

111

 

பண்ணும்பதம் ஏழும்பல வோசைத்தமி ழவையும்

உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும்

மண்ணும்புனல் உயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும்

விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே.

 

1.11.4

 

112

 

ஆயாதன சமயம்பல அறியாதவன் நெறியின்

தாயானவன் உயிர்கட்குமுன் தலையானவன் மறைமுத்

தீயானவன் சிவனெம்மிறை செல்வத்திரு வாரூர்

மேயானவன் உறையும்மிடம் வீழிம்மிழ லையே.

 

1.11.5

 

113

 

கல்லால்நிழற் கீழாயிடர் காவாயென வானோர்

எல்லாம்ஒரு தேராயயன் மறைபூட்டிநின் றுய்ப்ப

வல்லாய்எரி காற்றீர்க்கரி கோல்வாசுகி நாண்கல்

வில்லால்எயில் எய்தானிடம் வீழிம்மிழ லையே.

 

1.11.6

 

114

 

கரத்தான்மலி சிரத்தான்கரி யுரித்தாயதொர் படத்தான்

புரத்தார்பொடி படத்தன்னடி பணிமூவர்கட் கோவா

வரத்தான்மிக அளித்தானிடம் வளர்புன்னைமுத் தரும்பி

விரைத்தாதுபொன் மணியீன்றணி வீழிம்மிழ லையே.

 

1.11.7

 

115

 

முன்னிற்பவர் இல்லாமுரண் அரக்கன்வட கயிலை

தன்னைப்பிடித் தெடுத்தான்முடி தடந்தோளிற வூன்றிப்

பின்னைப்பணிந் தேத்தப்பெரு வாள்பேரொடு கொடுத்த

மின்னிற்பொலி சடையானிடம் வீழிம்மிழ லையே.

 

1.11.8

 

116

 

பண்டேழுல குண்டானவை கண்டானுமுன் னறியா

ஒண்டீயுரு வானானுறை கோயில்நிறை பொய்கை

வண்டாமரை மலர்மேல்மட அன்னந்நடை பயில

வெண்டாமரை செந்தாதுதிர் வீழிம்மிழ லையே.

 

1.11.9

 

117

 

மசங்கற்சமண் மண்டைக்கையர் குண்டக்குண மிலிகள்

இசங்கும்பிறப் பறுத்தானிடம் இருந்தேன்களித் திரைத்துப்

பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள் ஒளிகொண்டெழு பகலோன்

விசும்பைப்பொலி விக்கும்பொழில் வீழிம்மிழ லையே.

 

1.11.10

 

118

 

வீழிம்மிழ லைம்மேவிய விகிர்தன்றனை விரைசேர்

காழிந்நகர்க் கலைஞானசம் பந்தன்தமிழ் பத்தும்

யாழின்னிசை வல்லார்சொலக் கேட்டாரவ ரெல்லாம்

(*)ஊழின்மலி வினைபோயிட உயர்வானடை வாரே.

(*) ஊழின்வலி என்றும் பாடம்.

 

1.11.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வீழியழகர்,

தேவியார் - சுந்தரகுசாம்பிகை.

 

1.12 திருமுதுகுன்றம்

 

பண் - நட்டபாடை

 

119

 

மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட

தொத்தார்தரு மணிநீண்முடிச் சுடர்வண்ணன திடமாங்

கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு

முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.

 

1.12.1

 

120

 

தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்

இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம்

மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகிர் எரிகண்

முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே.

 

1.12.2

 

121

 

விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண்

டளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம்

களையார்தரு கதிராயிரம் உடையவ்வவ னோடு

முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே.

 

1.12.3

 

122

 

சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலை வில்லா

நரரானபன் முனிவர்தொழ இருந்தானிடம் நலமார்

அரசார்வர அணிபொற்கல னவைகொண்டுபன் னாளும்

முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே.

 

1.12.4

 

123

 

அறையார்கழல் அந்தன்றனை அயில்மூவிலை யழகார்

கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில்

மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு

முறையால்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.

 

1.12.5

 

124

 

ஏவார்சிலை எயினன்னுரு வாகியெழில் விசயற்

கோவாதவின் னருள்செய்தஎம் மொருவற்கிடம் உலகில்

சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்

மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.

 

1.12.6

 

125

 

தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை (*)முடிய

மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில்

விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை

முழவோடிசை (**)நடமுஞ்செயும் முதுகுன்றடை வோமே.

(*) முடியர் என்றும் பாடம்.

(**) நடமுன் செயும் என்றும் பாடம்.

 

1.12.7

 

127

 

செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன்

கதுவாய்கள்பத் தலறியிடக் கண்டானுறை கோயில்

மதுவாயசெங் காந்தள்மலர் நிறையக்குறை வில்லா (*)

முதுவேய்கள்முத் துதிரும்பொழில் முதுகுன்றடை வோமே.

(*) குறை யில்லா என்றும் பாடம்.

 

1.12.8

 

127

 

இயலாடிய பிரமன்னரி இருவர்க்கறி வரிய

செயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன்

புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தடத் தருகே

முயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே.

 

1.12.9

 

128

 

அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான்

மருகன்வரும் இடபக்கொடி யுடையானிடம் மலரார்

கருகுகுழன் மடவார்கடி குறிஞ்சியது பாடி

முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே.

 

1.12.10

 

129

 

முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப்

புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த

நிகரில்லன தமிழ்மாலைகள் இசையோடிவை பத்தும்

பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே.

 

1.12.11

 

 

இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம்.

சுவாமிபெயர் - பழமலைநாதர்;

தேவியார் - பெரியநாயகியம்மை.

 

1.13 திருவியலூர்

 

பண் - நட்டபாடை

 

130

 

குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவ

பொருவெங்கரி படவென்றதன் உரிவையுடல் அணிவோன்

அரவும்மலை புனலும்மிள மதியுந்நகு தலையும்

விரவுஞ்சடை யடிகட்கிடம் விரிநீர்விய லூரே.

 

1.13.1

 

131

 

ஏறார்தரும் ஒருவன்பல உருவன்னிலை யானான்

ஆறார்தரு சடையன்னன லுருவன்புரி வுடையான்

மாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன் மடவாள்

வீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே.

 

1.13.2

 

132

 

செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும்

பெய்ம்மின்பலி எனநின்றிசை பகர்வாரவ ரிடமாம்

உம்மென்றெழும் அருவித்திரள் வரைபற்றிட உறைமேல்

விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர்விய லூரே.

 

1.13.3

 

133

 

அடைவாகிய அடியார்தொழ அலரோன்றலை யதனில்

மடவாரிடு பலிவந்துண லுடையானவ னிடமாங்

கடையார்தர அகிலார்கழை முத்தம்நிரை சிந்தி

மிடையார்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விய லூரே.

 

1.13.4

 

134

 

எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப்

பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனாய்க்

கண்ணார்தரும் உருவாகிய கடவுள்ளிட மெனலாம்

விண்ணோரொடு மண்ணோர்தொழு விரிநீர்விய லூரே.

 

1.13.5

 

135

 

வசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை யறிவான்

திசையுற்றவர் காணச்செரு மலைவான்நிலை யவனை

அசையப்பொரு தசையாவணம் அவனுக்குயர் படைகள்

விசையற்கருள் செய்தானிடம் விரிநீர்வியலூரே.

 

1.13.6

 

136

 

மானார்அர வுடையான்இர வுடையான்பகல் நட்டம்

ஊனார்தரும் உயிரானுயர் விசையான்விளை பொருள்கள்

தானாகிய தலைவன்னென நினைவாரவ ரிடமாம்

மேனாடிய விண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே.

 

1.13.7

 

137

 

பொருவாரெனக் கெதிராரெனப் பொருப்பையெடுத் தான்றன்

கருமால்வரை கரந்தோளுரங் கதிர்நீள்முடி நெரிந்து

சிரமாயின கதறச்செறி கழல்சேர்திரு வடியின்

விரலாலடர் வித்தானிடம் விரிநீர்விய லூரே.

 

1.13.8

 

138

 

வளம்பட்டலர் மலர்மேலயன் மாலும்மொரு வகையால்

அளம்பட்டறி வொண்ணாவகை அழலாகிய அண்ணல்

உளம்பட்டெழு தழல்தூணதன் நடுவேயொரு உருவம்

விளம்பட்டருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே.

 

1.13.9

 

139

 

தடுக்காலுடல் மறைப்பாரவர் தவர்சீவர மூடிப்

பிடக்கேயுரை செய்வாரொடு பேணார்நமர் பெரியோர்

கடற்சேர்தரு விடமுண்டமு தமரர்க்கருள் செய்த

விடைச்சேர்தரு கொடியானிடம் விரிநீர்விய லூரே.

 

1.13.10

 

140

 

விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன்விய லூரைத்

தளங்கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞானசம் பந்தன்

துளங்கில்தமிழ் பரவித்தொழும் அடியாரவர் என்றும்

விளங்கும்புகழ் அதனோடுயர் விண்ணும்முடை யாரே.

 

1.13.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - யோகாநந்தேசுவரர்;

தேவியார் - சவுந்தரநாயகியம்மை;

சாந்தநாயகியம்மை என்றும் பாடம்.

 

1.14 திருக்கொடுங்குன்றம்

 

பண் - நட்டபாடை

 

141

 

வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக்

கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம்

ஆனிற்பொலி வைந்தும்மமர்ந் தாடியுல கேத்தத்

தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே.

 

1.14.1

 

142

 

மயில்புல்குதண் பெடையோடுடன் ஆடும்வளர் சாரல்

குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம்

அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்திநின் றாடி

எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே.

 

1.14.2

 

143

 

மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக்

குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம்

கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல்

வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான்வள நகரே.

 

1.14.3

 

144

 

பருமாமத கரியோடரி யிழியும்விரி சாரல்

குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம்

பொருமாஎயில் வரைவிற்றரு கணையிற்பொடி செய்த

பெருமானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே.

 

1.14.4

 

145

 

மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும்

கூகைக்குலம் ஓடித்திரி சாரற்கொடுங் குன்றம்

நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கை

பாகத்தவன் இமையோர்தொழ மேவும்பழ நகரே.

 

1.14.5

 

146

 

கைம்மாமத கரியின்னினம் இடியின்குர லதிரக்

கொய்ம்மாமலர்ச் சோலைபுக மண்டுங்கொடுங் குன்றம்

அம்மானென உள்கித்தொழு வார்கட்கருள் செய்யும்

பெம்மானவன் இமையோர்தொழ மேவும்பெரு நகரே.

 

1.14.6

 

147

 

மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட

குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம்

அரவத்தொடு மிளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றை

நிரவச்சடை முடிமேலுடன் வைத்தான்நெடு நகரே.

 

1.14.7

 

148

 

முட்டாமுது கரியின்னினம் முதுவேய்களை முனிந்து

குட்டாச்சுனை யவைமண்டிநின் றாடுங்கொடுங் குன்றம்

ஒட்டாவரக் கன்றன்முடி ஒருபஃதவை யுடனே

பிட்டானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே.

 

1.14.8

 

149

 

அறையும்மரி குரலோசையை அஞ்சியடும் ஆனை

குறையும்மன மாகிம்முழை வைகுங்கொடுங் குன்றம்

மறையும்மவை யுடையானென நெடியானென இவர்கள்

இறையும்மறி வொண்ணாதவன் மேயவ்வெழில் நகரே.

 

1.14.9

 

150

 

மத்தக்களி றாளிவ்வர வஞ்சிம்மலை தன்னைக்

குத்திப்பெரு முழைதன்னிடை வைகுங்கொடுங் குன்றம்

புத்தரொடு பொல்லாமனச் சமணர்புறங் கூறப்

பத்தர்க்கருள் செய்தானவன் மேயபழ நகரே.

 

1.14.10

 

151

 

கூனற்பிறை சடைமேல்மிக வுடையான்கொடுங் குன்றைக்

கானற்கழு மலமாநகர்த் தலைவன்நல கவுணி

ஞானத்துயர் சம்பந்தன நலங்கொள்தமிழ் வல்லார்

ஊனத்தொடு துயர்தீர்ந்துல கேத்தும்மெழி லோரே.

 

1.14.11

 

 

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - கொடுங்குன்றேசுவரர்; கொடுங்குன்றீசர் என்றும் பாடம்.

தேவியார் - அமுதவல்லியம்மை; குயிலமுதநாயகி என்றும் பாடம்.

 

1.15 திருநெய்த்தானம்

 

பண் - நட்டபாடை

 

152

 

மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்

கையாடியகேடில் கரியுரிமூடிய வொருவன்

செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும்

நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.

 

1.15.1

 

152

 

பறையும்பழி பாவம்படு துயரம்பல தீரும்

பிறையும்புனல் அரவும்படு சடையெம்பெருமா னூர்

அறையும்புனல் வருகாவிரி அலைசேர்வட கரைமேல்

நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே.

 

1.15.2

 

154

 

பேயாயின பாடப்பெரு நடமாடிய பெருமான்

வேயாயின தோளிக்கொரு பாகம்மிக வுடையான்

தாயாகிய வுலகங்களை நிலைபேறுசெய் தலைவன்

நேயாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.

 

1.15.3

 

155

 

சுடுநீறணி யண்ணல்சுடர் சூலம்மனல் ஏந்தி

நடுநள்ளிருள் நடமாடிய நம்பன்னுறை யிடமாம்

கடுவாளிள அரவாடுமிழ் கடல்நஞ்சம துண்டான்

நெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானமெ னீரே.

 

1.15.4

 

156

 

நுகராரமொ டேலம்மணி செம்பொன்னுரை யுந்திப்

பகராவரு புனற்காவிரி பரவிப்பணிந் தேத்தும்

நிகரான்மண லிடுதன்கரை(*) நிகழ்வாயநெய்த் தான

நகரானடி யேத்தந்நமை நடலையடை யாவே.

(*) தண்கரை என்றும் பாடம்.

 

1.15.5

 

157

 

விடையார்கொடி யுடையவ்வணல் வீந்தார்வெளை யெலும்பும்

உடையார்நறு மாலைச்சடை யுடையாரவர் மேய

புடையேபுனல் பாயும்வயல் பொழில்சூழ்தணெய்த்(*) தானம்

அடையாதவ ரென்றும்அம ருலகம்மடை யாரே.

(*) சூழ்ந்த நெய்த்தானம் என்றும் பாடம்.

 

1.15.6

 

158

 

நிழலார்வயல் கமழ்சோலைகள் நிறைகின்றநெய்த் தானத்

தழலானவன் அனலங்கையி லேந்தியழ காய

கழலானடி நாளுங்கழ லாதேவிட லின்றித்

தொழலாரவர் நாளுந்துய ரின்றித்தொழு வாரே.

 

1.15.7

 

159

 

அறையார்கட லிலங்கைக்கிறை யணிசேர்கயி லாயம்

இறையாரமுன் எடுத்தான்இரு பதுதோளிற ஊன்றி

நிறையார்புனல் நெய்த்தானன்நன் நிகழ்சேவடி பரவக்

கறையார்கதிர் வாளீந்தவர் கழலேத்துதல் கதியே.

 

1.15.8

 

160

 

கோலம்முடி நெடுமாலொடு கொய்தாமரை யானும்

சீலம்மறி வரிதாயொளி திகழ்வாயநெய்த் தானம்

காலம்பெற மலர்நீரவை தூவித்தொழு தேத்தும்

ஞாலம்புகழ் அடியாருடல் உறுநோய்நலி யாவே.

 

1.15.9

 

161

 

மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர்

புத்தரவர் சொன்னம்மொழி பொருளாநினை யேன்மின்

நித்தம்பயில் நிமலன்னுறை நெய்த்தானம தேத்தும்

சித்தம்முடை யடியாருடல் செறுநோயடை யாவே.

 

1.15.10

 

162

 

தலம்மல்கிய புனற்காழியுள் தமிழ்ஞானசம் பந்தன்

நிலம்மல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில்

பலம்மல்கிய பாடல்லிவை பத்தும்மிக வல்லார்

சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்சிவ கதியே.

 

1.15.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - நெய்யாடியப்பர்,

தேவியார் - வாலாம்பிகையம்மை.

 

1.16 திருப்புள்ளமங்கை - திரு ஆலந்துறை

 

பண் - நட்டபாடை

 

163

 

பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான்

போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்

காலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்

ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே.

 

1.16.1

 

164

 

மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தன்மைப்

புலையாயின களைவானிடம் பொழில்சூழ்புள மங்கைக்

கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த

அலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை அதுவே.

 

1.16.2

 

165

 

கறையார்மிட றுடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல்

பொறையார்தரு கங்கைப்புன லுடையான்புள மங்கைச்

சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ்திரு வாலந்

துறையானவன் நறையார்கழல் தொழுமின்துதி செய்தே.

 

1.16.3

 

166

 

தணியார்மதி அரவின்னொடு வைத்தானிடம் மொய்த்தெம்

பணியாயவன் அடியார்தொழு தேத்தும்புள மங்கை

மணியார்தரு கனகம்மவை வயிரத்திர ளோடும்

அணியார்மணல் அணைகாவிரி யாலந்துறை யதுவே.

 

1.16.4

 

167

 

மெய்த்தன்னுறும் வினைதீர்வகை தொழுமின்செழு மலரின்

கொத்தின்னொடு சந்தாரகில் கொணர்காவிரிக் கரைமேல்

பொத்தின்னிடை யாந்தைபல பாடும்புள மங்கை

அத்தன்நமை யாள்வானிடம் ஆலந்துறை யதுவே.

 

1.16.5

 

168

 

மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்

பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை

என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி

அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.

 

1.16.6

 

169

 

முடியார்தரு சடைமேல்முளை இளவெண்மதி சூடி

பொடியாடிய திருமேனியர் பொழில்சூழ்புள மங்கை

கடியார்மலர் புனல்கொண்டுதன் கழலேதொழு தேத்தும்

அடியார்தமக் கினியானிடம் ஆலந்துறை யதுவே.

 

1.16.7

 

170

 

இலங்கைமன்னன் முடிதோளிற எழிலார்திரு விரலால்

விலங்கல்லிடை அடர்த்தானிடம் வேதம்பயின் றேத்திப்

புலன்கள்தமை வென்றார்புக ழவர்வாழ்புள மங்கை

அலங்கல்மலி சடையானிடம் ஆலந்துறை யதுவே.

 

1.16.8

 

171

 

செறியார்தரு வெள்ளைத்திரு நீற்றின்திரு முண்டப்

பொறியார்தரு புரிநூல்வரை மார்பன்புள மங்கை

வெறியார்தரு கமலத்தயன் மாலுந்தனை நாடி

அறியாவகை நின்றானிடம் ஆலந்துறை யதுவே.

 

1.16.9

 

172

 

நீதியறி யாதாரமண் கையரொடு மண்டைப்

போதியவ ரோதும்முரை கொள்ளார்புள மங்கை

ஆதியவர் கோயில்திரு ஆலந்துறை தொழுமின்

சாதிம்மிகு வானோர்தொழு தன்மைபெற லாமே.

 

1.16.10

 

173

 

பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை

அந்தண்புனல் வருகாவிரி யாலந்துறை யானைக்

கந்தம்மலி கமழ்காழியுள் கலைஞானசம் பந்தன்

சந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவ மாமே.

 

1.16.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பசுபதிநாயகர்,

தேவியார் - பால்வளைநாயகியம்மை.

பல்வளைநாயகியம்மை என்றும் பாடம்.

 

1.17 திருஇடும்பாவனம்

 

பண் - நட்டபாடை

 

174

 

மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்

தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்திச்

சினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில்

இனமாதவர் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

 

1.17.1

 

175

 

மலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி

நிலையார்தரு நிமலன்வலி நிலவும்புகழ் ஒளிசேர்

கலையார்தரு புலவோரவர் காவல்மிகு குன்றில்

இலையார்தரு பொழில்சூழ்வரும் இடும்பாவன மிதுவே.

 

1.17.2

 

176

 

சீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்தெழும் எந்தை

ஞாலம்மிகு கடல்சூழ்தரும் உலகத்தவர் நலமார்

கோலம்மிகு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்

ஏலங்கமழ் பொழில்சூழ்தரும் இடும்பாவன மிதுவே.

 

1.17.3

 

177

 

பொழிலார்தரு குலைவாழைகள் எழிலார்திகழ் போழ்தில்

தொழிலான்மிகு தொண்டரவர் தொழுதாடிய முன்றில்

குழலார்தரு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்

எழிலார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

 

1.17.4

 

178

 

பந்தார்விரல் உமையாளொரு பங்காகங்கை முடிமேல்

செந்தாமரை மலர்மல்கிய செழுநீர்வயற் கரைமேல்

கொந்தார்மலர் புன்னைமகிழ் குரவங்கமழ் குன்றில்

எந்தாயென இருந்தானிடம் இடும்பாவன மிதுவே.

 

1.17.5

 

179

 

நெறிநீர்மையர் நீள்வானவர் நினையுந்நினை வாகி

அறிநீர்மையி லெய்தும்மவர்க் கறியும்மறி வருளிக்

குறிநீர்மையர் (*)குணமார்தரு மணமார்தரு குன்றில்

எறிநீர்வயல் புடைசூழ்தரும் இடும்பாவன மிதுவே.

(*) குளமார்தரும் என்றும் பாடம்.

 

1.17.6

 

180

 

நீறேறிய திருமேனியர் நிலவும்முல கெல்லாம்

பாறேறிய படுவெண்டலை கையிற்பலி வாங்காக்

கூறேறிய மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி

ஏறேறிய இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

 

1.17.7

 

181

 

தேரார்தரு திகழ்வாளெயிற் றரக்கன்சிவன் மலையை

ஓராதெடுத் தார்த்தான்முடி யொருபஃதவை நெரித்துக்

கூரார்தரு கொலைவாளொடு குணநாமமுங் கொடுத்த

ஏரார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

 

1.17.8

 

182

 

பொருளார்தரு மறையோர்புகழ் விருத்தர்பொலி மலிசீர்த்

தெருளார்தரு சிந்தையொடு சந்தம்மலர் பலதூய்

மருளார்தரு மாயன்னயன் காணார்மய லெய்த

இருளார்தரு கண்டர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

 

1.17.9

 

183

 

தடுக்கையுடன் இடுக்கித்தலை பறித்துச்(*)சம ணடப்பர்

உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பிட்டுழல் வாரும்

மடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல் மலிநீர்மலர்க் கரைமேல்

இடுக்கண்பல களைவானிடம் இடும்பாவன மிதுவே. 10

(*) சமண்டப்பர் என்றும் பாடம்.

 

1.17.10

 

184

 

கொடியார்நெடு மாடக்குன்ற ளூரிற்கரைக் கோல

இடியார்கட லடிவீழ்தரும் இடும்பாவனத் திறையை

அடியாயுமந் தணர்காழியுள் அணிஞானசம் பந்தன்

படியாற்சொன்ன பாடல்சொலப் பறையும்வினை தானே.

 

1.17.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சற்குணநாதர்,

தேவியார் - மங்களநாயகியம்மை.

 

1.18 திருநின்றியூர்

 

பண் - நட்டபாடை

 

185

 

*சூலம்படை சுண்ணப்பொடி **சாந்தஞ்சுடு நீறு

பாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக்

காலன்வலி காலின்னொடு போக்கிக்கடி கமழும்

நீலம்மலர்ப் பொய்கைநின்றி யூரின்நிலை யோர்க்கே.

(*) சூலப்படை என்றும் பாடம்.

(**) சாத்துஞ் சுடுநீறு என்றும் பாடம்.

 

1.18.1

 

186

 

அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார்

நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில்

நச்சம்மிட றுடையார்நறுங் கொன்றைநயந் தாளும்*

பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே.

(*) நயந்தானா என்றும் பாடம்.

 

1.18.2

 

187

 

பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார

அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை

நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில்

உறையும்மிறை யல்லதென துள்ளம் முணராதே.

 

1.18.3

 

188

 

பூண்டவ்வரை மார்பிற்புரி நூலன்விரி கொன்றை

ஈண்டவ்வத னோடும்மொரு பாலம்மதி யதனைத்

தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றியது தன்னில்

ஆண்டகழல் தொழலல்லது அறியாரவ ரறிவே.

 

1.18.4

 

189

 

குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில் கூவும்

நிழலின்னெழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில்

அழலின்வலன் அங்கையது *ஏந்தியன லாடுங்

கழலின்னோலி ஆடும்புரி கடவுள்களை கண்ணே.

(*) எய்தி என்றும் பாடம்.

 

1.18.5

 

190

 

மூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம்

சாரல்மதி யதனோடுடன் சலவஞ்சடை வைத்த

வீரன்மலி அழகார்பொழில் மிடையுந்திரு நின்றி

யூரன்கழ லல்லாதென துள்ள முணராதே.

 

1.18.6

 

191

 

பற்றியொரு தலைகையினி லேந்திப்பலி தேரும்

பெற்றியது வாகித்திரி தேவர்பெரு மானார்

சுற்றியொரு வேங்கையத ளோடும்பிறை சூடும்

நெற்றியொரு கண்ணார்நின்றி யூரின்நிலை யாரே.

 

1.18.7

 

               

* இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

1.18.8

 

192

 

நல்லமலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான்

அல்லரென ஆவரென நின்றும்மறி வரிய

நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரில்நிலை யாரெஞ்

செல்வரடி யல்லாதென சிந்தையுண ராதே.

 

1.18.9

 

193

 

நெறியில்வரு பேராவகை நினையாநினை வொன்றை

அறிவில்சமண் ஆதருரை கேட்டும்மய ராதே

நெறியில்லவர் குறிகள்நினை யாதேநின்றி யூரில்

மறியேந்திய கையானடி வாழ்த்தும்மது வாழ்த்தே.

 

1.18.10

 

194

 

குன்றமது எடுத்தானுடல் தோளுந்நெரி வாக

நின்றங்கொரு விரலாலுற வைத்தான்நின்றி யூரை

நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்

குன்றாத்தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே.

 

1.18.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - இலட்சுமியீசுவரர்,

தேவியார் - உலகநாயகியம்மை.

 

1.19 திருக்கழுமலம் - திருவிராகம்

 

பண் - நட்டபாடை

 

195

 

பிறையணி படர்சடை முடியிடைப்

 

பெருகிய புனலுடை யவனிறை

இறையணி வளையிணை முலையவ

 

ளிணைவன தெழிலுடை யிடவகை

கறையணி பொழில்நிறை வயலணி

 

கழுமலம் அமர்கனல் உருவினன்

நறையணி மலர்நறு விரைபுல்கு

 

நலம்மலி கழல்தொழன் மருவுமே.

 

1.19.1

 

196

 

பிணிபடு கடல்பிற விகளற

 

லெளிதுள ததுபெரு கியதிரை

அணிபடு கழுமலம் இனிதம

 

ரனலுரு வினனவிர் சடைமிசை

தணிபடு கதிர்வள ரிளமதி

 

புனைவனை உமைதலை வனைநிற

மணிபடு கறைமிட றனைநல

 

மலிகழ லிணைதொழன் மருவுமே.

 

1.19.2

 

197

 

வரியுறு புலியத ளுடையினன்

 

வளர்பிறை யொளிகிளர் கதிர்பொதி

விரியுறு சடைவிரை புழைபொழில்

 

விழவொலி மலிகழு மலம்அமர்

எரியுறு நிறஇறை வனதடி

 

இரவொடு பகல்பர வுவர்தம

தெரியுறு வினைசெறி கதிர்முனை

 

இருள்கெட நனிநினை வெய்துமதே.

 

1.19.3

 

198

 

வினைகெட மனநினை வதுமுடி

 

கெனின்நனி தொழுதெழு குலமதி

புனைகொடி யிடைபொருள் தருபடு

 

களிறின துரிபுதை யுடலினன்

மனைகுட வயிறுடை யனசில

 

வருகுறள் படையுடை யவன்மலி

கனைகட லடைகழு மலமமர்

 

கதிர்மதி யினனதிர் கழல்களே.

 

1.19.4

 

199

 

தலைமதி புனல்விட அரவிவை

 

தலைமைய தொருசடை யிடையுடன்

நிலைமரு வவொரிட மருளினன்

 

நிழன்மழு வினொடழல் கணையினன்

மலைமரு வியசிலை தனின்மதி

 

லெரியுண மனமரு வினன்நல

கலைமரு வியபுற வணிதரு

 

கழுமலம் இனிதமர் தலைவனே.

 

1.19.5

 

200

 

வரைபொரு திழியரு விகள்பல

 

பருகொரு கடல்வரி மணலிடை

கரைபொரு திரையொலி கெழுமிய

 

கழுமலம் அமர்கன லுருவினன்

அரைபொரு புலியதள் உடையினன்

 

அடியிணை தொழவரு வினையெனும்

உரைபொடி படவுறு துயர்கெட

 

வுயருல கெய்தலொரு தலைமையே.

 

1.19.6

 

201

 

முதிருறு கதிர்வளர் இளமதி

 

சடையனை நறநிறை தலைதனில்

உதிருறு மயிர்பிணை தவிர்தசை

 

யுடைபுலி அதளிடை யிருள்கடி

கதிருறு சுடரொளி கெழுமிய

 

கழுமலம் அமர்மழு மலிபடை

அதிருறு கழலடி களதடி

 

தொழுமறி வலதறி வறியமே.

 

1.19.7

 

202

 

கடலென நிறநெடு முடியவ

 

னடுதிறல் தெறஅடி சரணென

அடல்நிறை படையரு ளியபுக

 

ழரவரை யினன்அணி கிளர்பிறை

விடம்நிறை மிடறுடை யவன்விரி

 

சடையவன் விடையுடை யவனுமை

உடனுறை பதிகடல் மறுகுடை

 

யுயர்கழு மலவியன் நகரதே.

 

1.19.8

 

203

 

கொழுமல ருறைபதி யுடையவன்

 

நெடியவ னெனவிவர் களுமவன்

விழுமையை யளவறி கிலரிறை

 

விரைபுணர் பொழிலணி விழவமர்

கழுமலம் அமர்கன லுருவினன்

 

அடியிணை தொழுமவ ரருவினை

எழுமையு மிலநில வகைதனி

 

லெளிதிமை யவர்விய னுலகமே.

 

1.19.9

 

204

 

அமைவன துவரிழு கியதுகி

 

லணியுடை யினர்அமண் உருவர்கள்

சமையமும் ஒருபொரு ளெனுமவை

 

சலநெறி யனஅற வுரைகளும்

இமையவர் தொழுகழு மலமம

 

ரிறைவன தடிபர வுவர்தமை

நமையல வினைநல னடைதலி

 

லுயர்நெறி நனிநணு குவர்களே.

 

1.19.10

 

205

 

பெருகிய தமிழ்விர கினன்மலி

 

பெயரவ னுறைபிணர் திரையொடு

கருகிய நிறவிரி கடலடை

 

கழுமல முறைவிட மெனநனி

பெருகிய சிவனடி பரவிய

 

பிணைமொழி யனவொரு பதுமுடன்

மருவிய மனமுடை யவர்மதி

 

யுடையவர் விதியுடை யவர்களே.

 

1.19.11

 

 

கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர்.

திருச்சிற்றம்பலம்

 

 

1.20 திருவீழிமிழலை - திருவிராகம்

 

பண் - நட்டபாடை

 

206

 

தடநில வியமலை நிறுவியொர்

 

தழலுமிழ் தருபட அரவுகொ

டடல்அசு ரரொடம ரர்கள்அலை

 

கடல்கடை வுழியெழு மிகுசின

விடமடை தருமிட றுடையவன்

 

விடைமிசை வருமவ னுறைபதி

திடமலி தருமறை முறையுணர்

 

மறையவர் நிறைதிரு மிழலையே.

 

1.20.1

 

207

 

தரையொடு திவிதல நலிதரு

 

தகுதிற லுறுசல தரனது

வரையன தலைவிசை யொடுவரு

 

திகிரியை அரிபெற அருளினன்

உரைமலி தருசுர நதிமதி

 

பொதிசடை யவனுறை பதிமிகு

திரைமலி கடல்மண லணிதரு

 

பெறுதிடர் வளர்திரு மிழலையே.

 

1.20.2

 

208

 

மலைமகள் தனையிகழ் வதுசெய்த

 

மதியறு சிறுமன வனதுயர்

தலையினொ டழலுரு வனகரம்

 

அறமுனி வுசெய்தவ னுறைபதி

கலைநில வியபுல வர்களிடர்

 

களைதரு கொடைபயில் பவர்மிகு

சிலைமலி மதில்புடை தழுவிய

 

திகழ்பொழில் வளர்திரு மிழலையே.

 

1.20.3

 

209

 

மருவலர் புரமெரி யினின்மடி

 

தரவொரு கணைசெல நிறுவிய

பெருவலி யினன்நலம் மலிதரு

 

கரனுர மிகுபிணம் அமர்வன

இருளிடை யடையுற வொடுநட

 

விசையுறு பரனினி துறைபதி

தெருவினில் வருபெரு விழவொலி

 

மலிதர வளர்திரு மிழலையே.

 

1.20.4

 

210

 

அணிபெறு வடமர நிழலினி

 

லமர்வொடு மடியிணை யிருவர்கள்

பணிதர அறநெறி மறையொடு

 

மருளிய பரனுறை விடமொளி

மணிபொரு வருமர கதநில

 

மலிபுன லணைதரு வயலணி

திணிபொழில் தருமணம் மதுநுக

 

ரறுபத முரல்திரு மிழலையே.

 

1.20.5

 

211

 

வசையறு வலிவன சரவுரு

 

வதுகொடு நினைவரு தவமுயல்

விசையன திறன்மலை மகளறி

 

வுறுதிற லமர்மிடல்கொடுசெய்து

அசைவில படையருள் புரிதரு

 

மவனுறை பதியது மிகுதரு

திசையினின் மலர்குல வியசெறி

 

பொழின்மலி தருதிரு மிழலையே.

 

1.20.6

 

212

 

நலமலி தருமறை மொழியொடு

 

நதியுறு புனல்புகை ஒளிமுதல்

மலரவை கொடுவழி படுதிறன்

 

மறையவ னுயிரது கொளவரு

சலமலி தருமற லிதனுயிர்

 

கெடவுதை செய்தவர னுறைபதி

(*)திலகமி தெனவுல குகள்புகழ்

 

தருபொழி லணிதிரு மிழலையே.

(*) திலதமிதென என்றும் பாடம்.

 

1.20.7

 

213

 

அரனுறை தருகயி லையைநிலை

 

குலைவது செய்ததச முகனது

கரமிரு பதுநெரி தரவிரல்

 

நிறுவிய கழலடி யுடையவன்

வரன்முறை யுலகவை தருமலர்

 

வளர்மறை யவன்வழி வழுவிய

சிரமது கொடுபலி திரிதரு

 

சிவனுறை பதிதிரு மிழலையே.

 

1.20.8

 

214

 

அயனொடும் எழிலமர் மலர்மகள்

 

மகிழ்கண னளவிட லொழியவொர்

பயமுறு வகைதழல் நிகழ்வதொர்

 

படியுரு வதுவர வரன்முறை

சயசய வெனமிகு துதிசெய

 

வெளியுரு வியவவ னுறைபதி

செயநில வியமதில் மதியது

 

தவழ்தர வுயர்திரு மிழலையே.

 

1.20.9

 

215

 

இகழுரு வொடுபறி தலைகொடு

 

மிழிதொழில் மலிசமண் விரகினர்

திகழ்துவ ருடையுடல் பொதிபவர்

 

கெடஅடி யவர்மிக அருளிய

புகழுடை யிறையுறை பதிபுன

 

லணிகடல் புடைதழு வியபுவி

திகழ்சுரர் தருநிகர் கொடையினர்

 

செறிவொடு திகழ்திரு மிழலையே.

 

1.20.10

 

216

 

சினமலி கரியுரி செய்தசிவ

 

னுறைதரு திருமிழ லையைமிகு

தனமனர் சிரபுர நகரிறை

 

தமிழ்விர கனதுரை யொருபதும்

மனமகிழ் வொடுபயில் பவரெழின்

 

மலர்மகள் கலைமகள் சயமகள்

இனமலி புகழ்மக ளிசைதர

 

இருநில னிடையினி தமர்வரே.

 

1.20.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.21 திருச்சிவபுரம் - திருவிராகம்

 

பண் - நட்டபாடை

 

217

 

புவம்வளி கனல்புனல் புவி(*)கலை

 

யுரைமறை திரிகுணம் அமர்நெறி

திவமலி தருசுரர் முதலியர்

 

திகழ்தரும் உயிரவை யவைதம

பவமலி தொழிலது நினைவொடு

 

பதுமநன் மலரது மருவிய

சிவனது சிவபுரம் நினைபவர்

 

செழுநில னினில்நிலை பெறுவரே. 01

(*) கலைபுரை என்றும் பாடம்.

 

1.21.1

 

218

 

மலைபல வளர்தரு புவியிடை

 

மறைதரு வழிமலி மனிதர்கள்

நிலைமலி சுரர்முதல் உலகுகள்

 

நிலைபெறு வகைநினை வொடுமிகும்

அலைகடல் நடுவறி துயிலமர்

 

அரியுரு வியல்பர னுறைபதி

சிலைமலி மதிள்சிவ புரம்நினை

 

பவர்திரு மகளொடு திகழ்வரே.

 

1.21.2

 

219

 

பழுதில கடல்புடை தழுவிய

 

படிமுத லியவுல குகள்மலி

குழுவிய சுரர்பிறர் மனிதர்கள்

 

குலம்மலி தருமுயி ரவையவை

முழுவதும் அழிவகை நினைவொடு

 

*முதலுரு வியல்பர னுறைபதி

செழுமணி யணிசிவ புரநகர்

 

தொழுமவர் புகழ்மிகு முலகிலே.

(*) முதலுருவிய வரனுரைபதி என்றும் பாடம்.

 

1.21.3

 

220

 

நறைமலி தருமள றொடுமுகை

 

நகுமலர் புகைமிகு வளரொளி

நிறைபுனல் கொடுதனை நினைவொடு

 

நியதமும் வழிபடும் அடியவர்

குறைவில பதமணை தரஅருள்

 

குணமுடை யிறையுறை வனபதி

சிறைபுன லமர்சிவ புரமது

 

நினைபவர் செயமகள் தலைவரே.

 

1.21.4

 

221

 

சினமலி யறுபகை மிகுபொறி

 

சிதைதரு வகைவளி நிறுவிய

மனனுணர் வொடுமலர் மிசையெழு

 

தருபொருள் நியதமும் உணர்பவர்

தனதெழி லுருவது கொடுஅடை

 

தகுபர னுறைவது நகர்மதில்

கனமரு வியசிவ புரம்நினை

 

பவர்கலை மகள்தர நிகழ்வரே.

 

1.21.5

 

222

 

சுருதிகள் பலநல முதல்கலை

 

துகளறு வகைபயில் வொடுமிகு

உருவிய லுலகவை புகழ்தர

 

வழியொழு குமெயுறு பொறியொழி

அருதவ முயல்பவர் தனதடி

 

யடைவகை நினையர னுறைபதி

திருவளர் சிவபுரம் நினைபவர்

 

திகழ்குலன் நிலனிடை நிகழுமே.

 

1.21.6

 

223

 

கதமிகு கருவுரு வொடு*வுகி

 

ரிடைவட வரைகண கணவென

மதமிகு நெடுமுக னமர்வளை

 

மதிதிகழ் எயிறதன் நுதிமிசை

இதமமர் புவியது நிறுவிய

 

எழிலரி வழிபட அருள்செய்த

பதமுடை யவனமர் சிவபுரம்

 

நினைபவர் நிலவுவர் படியிலே.

(*) உகிரிடவட என்றும் படம்.

 

1.21.7

 

224

 

அசைவுறு தவமுயல் வினிலயன்

 

அருளினில் வருவலி கொடுசிவன்

இசைகயி லையையெழு தருவகை

 

இருபது கரமவை நிறுவிய

நிசிசரன் முடியுடை தரவொரு

 

விரல்பணி கொளுமவ னுறைபதி

திசைமலி சிவபுரம் நினைபவர்

 

செழுநில னினில்நிகழ் வுடையரே.

 

1.21.8

 

225

 

அடல்மலி படையரி அயனொடும்

 

அறிவரி யதொரழல் மலிதரு

சுடருரு வொடுநிகழ் தரவவர்

 

வெருவொடு துதியது செயவெதிர்

விடமலி களநுத லமர்கண

 

துடையுரு வெளிபடு மவன்நகர்

திடமலி பொழிலெழில் சிவபுரம்

 

நினைபவர் வழிபுவி திகழுமே.

 

1.21.9

 

226

 

குணமறி வுகள்நிலை யிலபொரு

 

ளுரைமரு வியபொருள் களுமில

திணமெனு மவரொடு செதுமதி

 

மிகுசம ணருமலி தமதுகை

உணலுடை யவருணர் வருபர

 

னுறைதரு பதியுல கினில்நல

கணமரு வியசிவ புரம்நினை

 

பவரெழி லுருவுடை யவர்களே.

 

1.21.10

 

227

 

திகழ்சிவ புரநகர் மருவிய

 

சிவனடி யிணைபணி சிரபுர

நகரிறை தமிழ்விர கனதுரை

 

நலமலி யொருபதும் நவில்பவர்

நிகழ்குல நிலநிறை திருவுரு

 

நிகரில கொடைமிகு சயமகள்

புகழ்புவி வளர்வழி யடிமையின்

 

மிகைபுணர் தரநலம் மிகுவரே.

 

1.21.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பிரமபுரிநாயகர், தேவியார் - பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

1.22 திருமறைக்காடு - திருவிராகம்

 

பண் - நட்டபாடை

 

228

 

சிலைதனை நடுவிடை நிறுவியொர்

 

சினமலி அரவது கொடுதிவி

தலமலி சுரரசு ரர்களொலி

 

சலசல கடல்கடை வுழிமிகு

கொலைமலி விடமெழ அவருடல்

 

குலைதர வதுநுகர் பவனெழில்

மலைமலி மதில்புடை தழுவிய

 

மறைவனம் அமர்தரு பரமனே.

 

1.22.1

 

229

 

கரமுத லியஅவ யவமவை

 

கடுவிட அரவது கொடுவரு

வரல்முறை அணிதரு மவனடல்

 

வலிமிகு புலியத ளுடையினன்

இரவலர் துயர்கெடு வகைநினை

 

இமையவர் புரமெழில் பெறவளர்

மரநிகர் கொடைமனி தர்கள்பயில்

 

மறைவனம் அமர்தரு பரமனே.

 

1.22.2

 

230

 

இழைவளர் தருமுலை மலைமக

 

ளினிதுறை தருமெழி லுருவினன்

முழையினின் மிகுதுயி லுறுமரி

 

முசிவொடும் எழமுள ரியொடெழு

கழைநுகர் தருகரி யிரிதரு

 

கயிலையின் மலிபவ னிருளுறும்

மழைதவழ் தருபொழில் நிலவிய

 

மறைவனம் அமர்தரு பரமனே.

 

1.22.3

 

231

 

நலமிகு திருவித ழியின்மலர்

 

நகுதலை யொடுகன கியின்முகை

பலசுர நதிபட அரவொடு

 

மதிபொதி சடைமுடி யினன்மிகு

தலநில வியமனி தர்களொடு

 

தவமுயல் தருமுனி வர்கள்தம

மலமறு வகைமனம் நினைதரு

 

மறைவன மமர்தரு பரமனே.

 

1.22.4

 

232

 

கதிமலி களிறது பிளிறிட

 

வுரிசெய்த அதிகுண னுயர்பசு

பதியதன் மிசைவரு பசுபதி

 

பலகலை யவைமுறை முறையுணர்

விதியறி தருநெறி யமர்முனி

 

கணனொடு மிகுதவ முயல்தரும்

அதிநிபு ணர்கள்வழி படவளர்

 

மறைவனம் அமர்தரு பரமனே.

 

1.22.5

 

233

 

கறைமலி திரிசிகை படையடல்

 

கனல்மழு வெழுதர வெறிமறி

முறைமுறை யொலிதம ருகமுடை

 

தலைமுகிழ் மலிகணி வடமுகம்

உறைதரு கரனுல கினிலுய

 

ரொளிபெறு வகைநினை வொடுமலர்

மறையவன் மறைவழி வழிபடு

 

மறைவனம் அமர்தரு பரமனே.

 

1.22.6

 

234

 

இருநில னதுபுன லிடைமடி

 

தரஎரி புகஎரி யதுமிகு

பெருவளி யினிலவி தரவளி

 

கெடவிய னிடைமுழு வதுகெட

இருவர்க ளுடல்பொறை யொடுதிரி

 

யெழிலுரு வுடையவன் இனமலர்

மருவிய அறுபதம் இசைமுரல்

 

மறைவனம் அமர்தரு பரமனே.

 

1.22.7

 

235

 

சனம்வெரு வுறவரு தசமுக

 

னொருபது முடியொடு மிருபது

கனமரு வியபுயம் நெரிவகை

 

கழலடி யிலொர்விரல் நிறுவினன்

இனமலி கணநிசி சரன்மகிழ்

 

வுறவருள் செய்தகரு ணையனென

மனமகிழ் வொடுமறை முறையுணர்

 

மறைவனம் அமர்தரு பரமனே.

 

1.22.8

 

236

 

அணிமலர் மகள்தலை மகனயன்

 

அறிவரி யதொர்பரி சினிலெரி

திணிதரு திரளுரு வளர்தர

 

அவர்வெரு வுறலொடு துதிசெய்து

பணியுற வெளியுரு வியபர

 

னவனுரை மலிகடல் திரளெழும்

மணிவள ரொளிவெயில் மிகுதரு

 

மறைவனம் அமர்தரு பரமனே.

 

1.22.9

 

237

 

இயல்வழி தரவிது செலவுற

 

இனமயி லிறகுறு தழையொடு

செயல்மரு வியசிறு கடமுடி

 

யடைகையர் தலைபறி செய்துதவம்

முயல்பவர் துவர்படம் உடல்பொதி

 

பவரறி வருபர னவனணி

வயலினில் வளைவளம் மருவிய

 

மறைவனம் அமர்தரு பரமனே.

 

1.22.10

 

238

 

வசையறு மலர்மகள் நிலவிய

 

மறைவனம் அமர்பர மனைநினை

பசையொடு மிகுகலை பலபயில்

 

புலவர்கள் புகழ்வழி வளர்தரு

இசையமர் கழுமல நகரிறை

 

தமிழ்விர கனதுரை யியல்வல

இசைமலி தமிழொரு பதும்வல

 

அவருல கினிலெழில் பெறுவரே.

 

1.22.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - மறைக்காட்டீசுரர், தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

1.23 திருக்கோலக்கா

 

பண் - தக்கராகம்

 

239

 

மடையில் வாளை பாய மாதரார்

குடையும் பொய்கைக் கோலக் காவுளான்

சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்

உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ.

 

1.23.1

 

240

 

பெண்டான் பாகமாகப் பிறைச் சென்னி

கொண்டான் கோலக் காவு கோயிலாக்

கண்டான் பாதங் கையாற் கூப்பவே

உண்டான் நஞ்சை உலக முய்யவே.

 

1.23.2

 

241

 

பூணற் பொறிகொள் அரவம் புன்சடைக்

கோணற் பிறையன் குழகன் கோலக்கா

மாணப் பாடி மறைவல் லானையே

பேணப் பறையும் பிணிக ளானவே.

 

1.23.3

 

242

 

தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர்

மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான்

குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா

இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே.

 

1.23.4

 

243

 

மயிலார் சாயல் மாதோர் பாகமா

எயிலார் சாய எரித்த எந்தைதன்

குயிலார் சோலைக் கோலக் காவையே

பயிலா நிற்கப் பறையும் பாவமே.

 

1.23.5

 

244

 

வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்

கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்

கொடிகொள் விழவார் கோலக் காவுளெம்

அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே.

 

1.23.6

 

245

 

நிழலார் சோலை நீல வண்டினங்

குழலார் பண்செய் கோலக் காவுளான்

கழலால் மொய்த்த பாதங் கைகளாற்

தொழலார் பக்கல் துயர மில்லையே.

 

1.23.7

 

246

 

எறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்றனை

முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன்

குறியார் பண்செய் கோலக் காவையே

நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.

 

1.23.8

 

247

 

நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில்

ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக்

கூற்ற முதைத்த குழகன் கோலக்கா

ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே.

 

1.23.9

 

248

 

பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும்

உற்ற துவர்தோ யுருவி லாளருங்

குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்

பற்றிப் பரவப் பறையும் பாவமே.

 

1.23.10

 

249

 

நலங்கொள் காழி ஞான சம்பந்தன்

குலங்கொள் கோலக் காவு ளானையே

வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்

உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே.

 

1.23.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சத்தபுரீசர், தேவியார் - ஓசைகொடுத்தநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

1.24 சீகாழி

 

பண் - தக்கராகம்

 

250

 

பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா

காவா யெனநின் றேத்துங் காழியார்

மேவார் புரம்மூன் றட்டா ரவர்போலாம்

பாவா ரின்சொற் பயிலும் பரமரே.

 

1.24.1

 

251

 

எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டிக்

கந்த மாலை கொடுசேர் காழியார்

வெந்த நீற்றர் விமல ரவர்போலாம்

அந்தி நட்டம் ஆடும் அடிகளே.

 

1.24.2

 

252

 

தேனை வென்ற மொழியா ளொருபாகங்

கான மான்கைக் கொண்ட காழியார்

வான மோங்கு கோயி லவர்போலாம்

ஆன இன்பம் ஆடும் அடிகளே.

 

1.24.3

 

253

 

மாணா வென்றிக் காலன் மடியவே

காணா மாணிக் களித்த காழியார்

நாணார் வாளி தொட்டா ரவர்போலாம்

பேணார் புரங்கள் அட்ட பெருமானே.

 

1.24.4

 

254

 

மாடே ஓதம் எறிய வயற்செந்நெல்

காடே றிச்சங் கீனுங் காழியார்

வாடா மலராள் பங்க ரவர்போலாம்

ஏடார் புரமூன் றெரித்த இறைவரே.

 

1.24.5

 

255

 

கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக்

கங்கை புனைந்த சடையார் காழியார்

அங்கண் அரவம் ஆட்டும் அவர்போலாஞ்

செங்கண் அரக்கர் புரத்தை யெரித்தாரே.

 

1.24.6

 

256

 

கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடுங்

கல்ல வடத்தை யுகப்பார் காழியார்

அல்ல விடத்து நடந்தா ரவர்போலாம்

பல்ல விடத்தும் பயிலும் பரமரே.

 

1.24.7

 

257

 

எடுத்த அரக்கன் நெரிய விரலூன்றிக்

கடுத்து முரிய அடர்த்தார் காழியார்

எடுத்த பாடற் கிரங்கு மவர்போலாம்

பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே.

 

1.24.8

 

258

 

ஆற்ற லுடைய அரியும் பிரமனுந்

தோற்றங் காணா வென்றிக் காழியார்

ஏற்ற மேறங் கேறு மவர்போலாங்

கூற்ற மறுகக் குமைத்த குழகரே.

 

1.24.9

 

259

 

பெருக்கப் பிதற்றுஞ் சமணர் சாக்கியர்

கரக்கும் உரையை விட்டார் காழியார்

இருக்கின் மலிந்த இறைவ ரவர்போலாம்

அருப்பின் முலையாள் பங்கத் தையரே.

 

1.24.10

 

260

 

காரார் வயல்சூழ் காழிக் கோன்றனைச்

சீரார் ஞான சம்பந் தன்சொன்ன

பாரார் புகழப் பரவ வல்லவர்

ஏரார் வானத் தினிதா இருப்பரே.

 

1.24.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.25 திருச்செம்பொன்பள்ளி

 

பண் - தக்கராகம்

 

261

 

மருவார் குழலி மாதோர் பாகமாய்த்

திருவார் செம்பொன் பள்ளி மேவிய

கருவார் கண்டத் தீசன் கழல்களை

மருவா தவர்மேல் மன்னும் பாவமே.

 

1.25.1

 

262

 

வாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச்

சீரார் செம்பொன் பள்ளி மேவிய

ஏரார் புரிபுன் சடையெம் ஈசனைச்

சேரா தவர்மேற் சேரும் வினைகளே.

 

1.25.2

 

263

 

வரையார் சந்தோ டகிலும் வருபொன்னித்

திரையார் செம்பொன் பள்ளி மேவிய

நரையார் விடையொன் றூரும் நம்பனை

உரையா தவர்மே லொழியா வூனமே.

 

1.25.3

 

264

 

மழுவா ளேந்தி மாதோர் பாகமாய்ச்

செழுவார் செம்பொன் பள்ளி மேவிய

எழிலார் புரிபுன் சடையெம் மிறைவனைத்

தொழுவார் தம்மேல் துயர மில்லையே.

 

1.25.4

 

265

 

மலையான் மகளோ டுடனாய் மதிலெய்த

சிலையார் செம்பொன் பள்ளி யானையே

இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல்

நிலையா வணங்க நில்லா வினைகளே.

 

1.25.5

 

266

 

அறையார் புனலோ டகிலும் வருபொன்னிச்

சிறையார் செம்பொன் பள்ளி மேவிய

கறையார் கண்டத் தீசன் கழல்களை

நிறையால் வணங்க நில்லா வினைகளே.

 

1.25.6

 

267

 

பையார் அரவே ரல்கு லாளொடுஞ்

செய்யார் செம்பொன் பள்ளி மேவிய

கையார் சூல மேந்து கடவுளை

மெய்யால் வணங்க மேவா வினைகளே.

 

1.25.7

 

268

 

வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத்

தேனார் செம்பொன் பள்ளி மேவிய

ஊனார் தலையிற் பலிகொண் டுழல்வாழ்க்கை

ஆனான் கழலே அடைந்து வாழ்மினே.

 

1.25.8

 

269

 

காரார் வண்ணன் கனகம் அனையானுந்

தேரார் செம்பொன் பள்ளி மேவிய

நீரார் நிமிர்புன் சடையெந் நிமலனை

ஓரா தவர்மே லொழியா வூனமே.

 

1.25.9

 

270

 

மாசா ருடம்பர் மண்டைத் தேரரும்

பேசா வண்ணம் பேசித் திரியவே

தேசார் செம்பொன் பள்ளி மேவிய

ஈசா என்ன நில்லா இடர்களே.

 

1.25.10

 

271

 

நறவார் புகலி ஞான சம்பந்தன்

செறுவார் செம்பொன் பள்ளி மேயானைப்

பெறுமா றிசையாற் பாட லிவைபத்தும்

உறுமா சொல்ல வோங்கி வாழ்வரே.

 

1.25.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சொர்னபுரீசர், தேவியார் - சுகந்தவனநாயகியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.26 திருப்புத்தூர்

 

பண் - தக்கராகம்

 

272

 

வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலைத்

திங்க ளோடு திளைக்குந் திருப்புத்தூர்க்

கங்கை தங்கு முடியா ரவர்போலும்

எங்கள் உச்சி உறையும் இறையாரே.

 

1.26.1

 

273

 

வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலைத்

தேனும் வண்டுந் திளைக்குந் திருப்புத்தூர்

ஊனம் இன்றி யுறைவா ரவர்போலும்

ஏன முள்ளும் எயிறும் புனைவாரே.

 

1.26.2

 

274

 

பாங்கு நல்ல வரிவண் டிசைபாடத்

தேங்கொள் கொன்றை திளைக்குந் திருப்புத்தூர்

ஓங்கு கோயில் உறைவா ரவர்போலுந்

தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே.

 

1.26.3

 

275

 

நாற விண்ட நறுமா மலர்கவ்வித்

தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர்

ஊறல் வாழ்க்கை யுடையா ரவர்போலும்

ஏறு கொண்ட கொடியெம் இறையாரே.

 

1.26.4

 

276

 

இசை விளங்கும் எழில்சூழ்ந் தியல்பாகத்

திசை விளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர்

பசை விளங்கப் படித்தா ரவர்போலும்

வசை விளங்கும் வடிசேர் நுதலாரே.

 

1.26.5

 

277

 

வெண்ணி றத்த விரையோ டலருந்தித்

தெண்ணி றத்த புனல்பாய் திருப்புத்தூர்

ஒண்ணி றத்த ஒளியா ரவர்போலும்

வெண்ணி றத்த விடைசேர் கொடியாரே.

 

1.26.6

 

278

 

நெய்த லாம்பல் கழுநீர் மலர்ந்தெங்குஞ்

செய்கண் மல்கு சிவனார் திருப்புத்தூர்த்

தையல் பாகம் மகிழ்ந்தா ரவர்போலும்

மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே.

 

1.26.7

 

279

 

கருக்கம் எல்லாங் கமழும் பொழிற்சோலைத்

திருக்கொள் செம்மை விழவார் திருப்புத்தூர்

இருக்க வல்ல இறைவ ரவர்போலும்

அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே.

 

1.26.8

 

280

 

மருவி யெங்கும் வளரும் மடமஞ்ஞை

தெருவு தோறுந் திளைக்குந் திருப்புத்தூர்ப்

பெருகி வாழும் பெருமா னவன்போலும்

பிரமன் மாலும் அறியாப் பெரியோனே.

 

1.26.9

 

281

 

கூறை போர்க்குந் தொழிலா ரமண்கூறல்

தேறல் வேண்டா தெளிமின் திருப்புத்தூர்

ஆறும் நான்கும் அமர்ந்தா ரவர்போலும்

ஏறு கொண்ட கொடியெம் இறையாரே.

 

1.26.10

 

282

 

நல்ல கேள்வி ஞான சம்பந்தன்

செல்வர் சேடர் உறையுந் திருப்புத்தூர்ச்

சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும்

அல்லல் தீரும் அவலம் அடையாவே.

 

1.26.11

 

 

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - புத்தூரீசர், தேவியார் - சிவகாமியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.27 திருப்புன்கூர்

 

பண் - தக்கராகம்

 

283

 

முந்தி நின்ற வினைக ளவைபோகச்

சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்

அந்தம் இல்லா அடிக ளவர்போலுங்

கந்த மல்கு கமழ்புன் சடையாரே.

 

1.27.1

 

284

 

மூவ ராய முதல்வர் முறையாலே

தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர்

ஆவ ரென்னும் அடிக ளவர்போலும்

ஏவின் அல்லார் எயில்மூன் றெரித்தாரே.

 

1.27.2

 

285

 

பங்க யங்கள் மலரும் பழனத்துச்

செங்க யல்கள் திளைக்குந் திருப்புன்கூர்க்

கங்கை தங்கு சடையா ரவர்போலும்

எங்கள் உச்சி உறையும் மிறையாரே.

 

1.27.3

 

286

 

கரையு லாவு கதிர்மா மணிமுத்தம்

திரையு லாவு வயல்சூழ் திருப்புன்கூர்

உரையின் நல்ல பெருமா னவர்போலும்

விரையின் நல்ல மலர்ச்சே வடியாரே.

 

1.27.4

 

287

 

பவழ வண்ணப் பரிசார் திருமேனி

திகழும் வண்ணம் உறையுந் திருப்புன்கூர்

அழக ரென்னும் அடிக ளவர்போலும்

புகழ நின்ற புரிபுன் சடையாரே.

 

1.27.5

 

288

 

தெரிந்தி லங்கு கழுநீர் வயற்செந்நெல்

திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்ப்

பொருந்தி நின்ற அடிக ளவர்போலும்

விரிந்தி லங்கு சடைவெண் பிறையாரே.

 

1.27.6

 

289

 

பாரும் விண்ணும் பரவித் தொழுதேத்தும்

தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர்

ஆர நின்ற அடிக ளவர்போலுங்

கூர நின்ற எயில்மூன் றெரித்தாரே.

 

1.27.7

 

290

 

மலையத னாருடை யமதில் மூன்றுஞ்

சிலையத னாலெரித் தார்திருப் புன்கூர்த்

தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை

மலையத னாலடர்த் துமகிழ்ந் தாரே.

 

1.27.8

 

291

 

நாட வல்ல மலரான் மாலுமாய்த்

தேட நின்றா ருறையுந் திருப்புன்கூர்

ஆட வல்ல அடிக ளவர்போலும்

பாட லாடல் பயிலும் பரமரே.

 

1.27.9

 

292

 

குண்டு முற்றிக் கூறை யின்றியே

பிண்ட முண்ணும் பிராந்தர் சொற்கொளேல்

வண்டு பாட மலரார் திருப்புன்கூர்க்

கண்டு தொழுமின் கபாலி வேடமே.

 

1.27.10

 

293

 

மாட மல்கு மதில்சூழ் காழிமன்

சேடர் செல்வ ருறையுந் திருப்புன்கூர்

நாட வல்ல ஞான சம்பந்தன்

பாடல் பத்தும் பரவி வாழ்மினே.

 

1.27.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சிவலோகநாதர், தேவியார் - சொக்கநாயகியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.28 திருச்சோற்றுத்துறை

 

பண் - தக்கராகம்

 

294

 

செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்

துப்ப னென்னா தருளே துணையாக

ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்

றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே.

 

1.28.1

 

295

 

பாலும் நெய்யுந் தயிரும் பயின்றாடித்

தோலும் நூலுந் துதைந்த வரைமார்பர்

மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை

ஆலுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே.

 

1.28.2

 

296

 

செய்யர் செய்ய சடையர் விடையூர்வர்

கைகொள் வேலர் கழலர் கரிகாடர்