முதல் திருமுறை

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த

தேவாரப் பதிகங்கள்

முதல் திருமுறை - 

 

1.1 திருப்பிரமபுரம்

 

பண் - நட்டபாடை

 

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்

காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்

ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த

பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

 

முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம் பவைபூண்டு

வற்றலோடுகலனாப் பலிதேர்ந்தென துள்ளங் கவர்கள்வன்

கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்

பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

 

நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடி

ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் னுள்ளங்கவர் கள்வன்

ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிது வென்னப்

பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

 

விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்

உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்

மண்மகிழ்ந்தஅரவம் மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்

பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

 

ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன

அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்

கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்னப்

பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

 

மறைகலந்தவொலி பாடலொடாடல ராகிமழு வேந்தி

இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர் கள்வன்

கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்

பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

 

சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த

உடைமுயங்கும் அரவோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்

கடல்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிற கன்னம்

பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

 

வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த

உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்

துயரிலங்குமுல கில்பலவூழிகள் தோன்றும்பொழு தெல்லாம்

பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

 

தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்

நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்

வாணுதல்செய்மக ளிர்முதலாகிய வையத்தவ ரேத்தப்

பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

 

புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா

ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்

மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயமிது வென்னப்

பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

 

அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய

பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன் றன்னை

ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரை செய்த

திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்த லெளிதாமே.

 

திருப்பிரமபுர மென்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பிரமபுரீசர்; தேவியார் - திருநிலைநாயகி.

திருத்தோணியில் வீற்றிருப்பவர் தோணியப்பர்.

 

திருச்சிற்றம்பலம்

 

 

 

1.2 திருப்புகலூர்

 

பண் - நட்டபாடை

 

குறிகலந்தஇசை பாடலினான்நசை யாலிவ்வுல கெல்லாம்

நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறும்பலி பேணி

முறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடம்மொய்ம் மலரின்

பொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய லாரும்புக லூரே.

 

காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மார்பன்னொரு பாகம்

மாதிலங்குதிரு மேனியினான்கரு மானின்னுரி யாடை

மீதிலங்கவணிந் தானிமையோர்தொழ மேவும்மிடஞ் சோலைப்

போதிலங்குநசை யால்வரிவண்டிசை பாடும்புக லூரே.

 

பண்ணிலாவுமறை பாடலினானிறை சேரும்வளை யங்கைப்

பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழ லென்றுந்தொழு தேத்த

உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா வொருவற்கிட மென்பர்

மண்ணிலாவும்அடி யார்குடிமைத்தொழில் மல்கும்புக லூரே.

 

நீரின்மல்குசடை யன்விடையன்னடை யார்தம்அரண் மூன்றுஞ்

சீரின்மல்குமலை யேசிலையாக முனிந்தன்றுல குய்யக்(*)

காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட கடவுள்ளிட மென்பர்

ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர் வெய்தும்புக லூரே.

(*) முனிந்தானுலகுய்ய என்றும் பாடம்.

 

செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்மடி யார்மேல்

பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத் தென்றும்பணி வாரை

மெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்பரருள் பேணிப்

பொய்யிலாதமனத் தார்பிரியாதுபொ ருந்தும்புக லூரே.

 

கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற்

குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிட மென்பர்

விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந் தெங்கும்

முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புக லூரே.

 

வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல் விளங்கும்மதி சூடி

உள்ளமார்ந்தஅடி யார்தொழுதேத்த உகக்கும்அருள் தந்தெங்

கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த கடவுட்கிட மென்பர்

புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம் மல்கும்புக லூரே.

 

தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான்முடி திண்டோ ள்

தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை கேட்டன்றருள் செய்த

மின்னிலங்குசடை யான்மடமாதொடு மேவும்மிட மென்பர்

பொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி தோயும்புக லூரே.

 

நாகம்வைத்தமுடி யானடிகைதொழு தேத்தும்மடி யார்கள்

ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு மாலுந்தொழு தேத்த

ஏகம்வைத்தஎரி யாய்மிகவோங்கிய எம்மானிடம் போலும்

போகம்வைத்தபொழி லின்நிழலான்மது வாரும்புக லூரே.

 

செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் செப்பிற்பொரு ளல்லாக்

கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள் கடவுள்ளிடம் போலுங்

கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு தூவித்துதி செய்து

மெய்தவத்தின்முயல் வாருயர்வானக மெய்தும்புக லூரே.

 

புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் மேவும்புக லூரைக்

கற்றுநல்லவவர் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் மாலை

பற்றியென்றுமிசை பாடியமாந்தர் பரமன்னடி சேர்ந்து

குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக ழோங்கிப்பொலி வாரே.

 

 

காவிரி தென்கரைத் தலம்.

சுவாமிபெயர் - அக்கினீசுவரர்; தேவியார் - கருந்தார்க்குழலியம்மை

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.3 திருவலிதாயம்

 

பண் - நட்டபாடை

 

பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல் தூவி

ஒத்தசொல்லிஉல கத்தவர்தாம்தொழு தேத்தஉயர் சென்னி

மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலி தாயஞ்

சித்தம்வைத்தஅடி யாரவர்மேல்அடை யாமற்றிடர் நோயே.

 

படையிலங்குகரம் எட்டுடையான்படி றாகக்கன லேந்திக்

கடையிலங்குமனை யில்பலிகொண்டுணுங் கள்வன்னுறை கோயில்

மடையிலங்குபொழி லின்நிழல்வாய்மது வீசும்வலி தாயம்

அடையநின்றஅடி யார்க்கடையாவினை அல்லல்துயர் தானே.

 

ஐயனொய்யன்னணி யன்பிணியில்லவ ரென்றுந்தொழு தேத்தச்

செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்திரு மாதோடுறை கோயில்

வையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் கின்றவலி தாயம்

உய்யும்வண்ணந்நினை மின்நினைந்தால்வினை தீருந்நல மாமே.

 

ஒற்றையேறதுடை யான்நடமாடியோர் பூதப்படை சூழப்

புற்றின்நாகம்அரை யார்த்துழல்கின்றஎம் பெம்மான்மட வாளோ

டுற்றகோயிலுல கத்தொளிமல்கிட உள்கும்வலி தாயம்

பற்றிவாழும்மது வேசரணாவது பாடும்மடி யார்க்கே.

 

புந்தியொன்றிநினை வார்வினையாயின தீரப்பொரு ளாய

அந்தியன்னதொரு பேரொளியானமர் கோயில்அய லெங்கும்

மந்திவந்துகடு வன்னொடுகூடி வணங்கும்வலி தாயஞ்

சிந்தியாதஅவர் தம்மடும்வெந்துயர் தீர்தலெளி தன்றே.

 

ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கத்துள்ளவ ரேத்தக்

கானியன்றகரி யின்உரிபோர்த்துழல் கள்வன்சடை தன்மேல்

வானியன்றபிறை வைத்தஎம்மாதி மகிழும்வலி தாயம்

தேனியன்றநறு மாமலர்கொண்டுநின் றேத்தத்தெளி வாமே.

 

கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமனுயிர் வீட்டிப்

பெண்ணிறைந்தஒரு பால்மகிழ்வெய்திய பெம்மானுறை கோயில்

மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் வணங்கும்வலி தாயத்

துண்ணிறைந்தபெரு மான்கழலேத்தநம் உண்மைக்கதி யாமே.

 

கடலின்நஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநட மாடி

அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மானமர் கோயில்

மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலி தாயம்

உடலிலங்குமுயிர் உள்ளளவுந்தொழ உள்ளத்துயர் போமே.

 

பெரியமேருவரை யேசிலையாமலை வுற்றாரெயில் மூன்றும்

எரியவெய்தவொரு வன்னிருவர்க்கறி வொண்ணாவடி வாகும்

எரியதாகியுற வோங்கியவன்வலி தாயந்தொழு தேத்த

உரியராகவுடை யார்பெரியாரென உள்கும்முல கோரே.

 

ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர் கூடி

ஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப்பொரு ளென்னேல்

வாசிதீரவடி யார்க்கருள்செய்து வளர்ந்தான்வலி தாயம்

பேசுமார்வமுடை யாரடியாரெனப் பேணும்பெரி யோரே.

 

வண்டுவைகும்மணம் மல்கியசோலை வளரும்வலி தாயத்

தண்டவாணனடி யுள்குதலாலருள் மாலைத்தமி ழாகக்

கண்டல்வைகுகடல் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் பத்துங்

கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் வானத்துயர் வாரே.

 

இத்தலம் தொண்டைநாட்டில் பாடியென வழங்கப்பட்டிருக்கின்றது.

சுவாமிபெயர் - வலிதாயநாதர்,

தேவியார் - தாயம்மை

 

திருச்சிற்றம்பலம்

 

 

 

1.4 திருப்புகலியும் - திருவீழிமிழலையும்

 

வினாவுரை

 

பண் - நட்டபாடை

 

மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற

 

வாணுதல் மான்விழி மங்கையோடும்

பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப்

 

புகலி நிலாவிய புண்ணியனே

எம்மிறை யேயிமை யாதமுக்கண்

 

ஈசவென்நேச விதென்கொல் சொல்லாய்

மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை

 

விண்ணிழி கோயில் விரும்பியதே.

 

கழன்மல்கு பந்தொடம் மானைமுற்றில்

 

கற்றவர் சிற்றிடைக் கன்னிமார்கள்

பொழின்மல்கு கிள்ளையைச் சொற்பயிற்றும்

 

புகலி நிலாவிய புண்ணியனே

எழின்மல ரோன்சிர மேந்தியுண்டோ ர்

 

இன்புறு செல்வமி தென்கொல்சொல்லாய்

மிழலையுள் வேதிய ரேத்திவாழ்த்த

 

விண்ணிழி கோயில் விரும்பியதே.

 

கன்னிய ராடல் கலந்துமிக்க

 

கந்துக வாடை கலந்துதுங்கப்

பொன்னியல் மாடம் நெருங்குசெல்வப்

 

புகலி நிலாவிய புண்ணியனே

இன்னிசை யாழ்மொழி யாளோர்பாகத்

 

தெம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்

மின்னியல் நுண்ணிடை யார்மிழலை

 

விண்ணிழி கோயில் விரும்பியதே.

 

நாகப ணந்திகழ் அல்குல்மல்கும்

 

நன்னுதல் மான்விழி மங்கையோடும்

பூகவ ளம்பொழில் சூழ்ந்தஅந்தண்

 

புகலிநி லாவிய புண்ணியனே

ஏகபெ ருந்தகை யாயபெம்மான்

 

எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்

மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை

 

விண்ணிழி கோயில் விரும்பியதே.

 

சந்தள றேறுத டங்கொள்கொங்கைத்

 

தையலோடுந் தளராத வாய்மைப்

புந்தியி னான்மறை யோர்களேத்தும்

 

புகலி நிலாவிய புண்ணியனே

எந்தமை யாளுடை ஈசஎம்மான்

 

எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்

வெந்தவெண் ணீறணி வார்மிழலை

 

விண்ணிழி கோயில் விரும்பியதே.

 

சங்கொலி இப்பிசு றாமகரந்

 

தாங்கி நிரந்து தரங்கம்மேன்மேற்

பொங்கொலி நீர்சுமந் தோங்குசெம்மைப்

 

புகலி நிலாவிய புண்ணியனே

எங்கள்பி ரானிமை யோர்கள்பெம்மான்

 

எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய்

வெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை

 

விண்ணிழி கோயில் விரும்பியதே.

 

காமனெ ரிப்பிழம் பாகநோக்கிக்

 

காம்பன தோளியொ டுங்கலந்து

பூமரு நான்முகன் போல்வரேத்தப்

 

புகலி நிலாவிய புண்ணியனே

ஈமவ னத்தெரி யாட்டுகந்த

 

எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

வீமரு தண்பொழில் சூழ்மிழலை

 

விண்ணிழி கோயில் விரும்பியதே.

 

இலங்கையர் வேந்தெழில் வாய்த்ததிண்டோ ள்

 

இற்றல றவ்விர லொற்றியைந்து

புலங்களைக் கட்டவர் போற்றஅந்தண்

 

புகலி நிலாவிய புண்ணியனே

இலங்கெரி யேந்திநின் றெல்லியாடும்

 

எம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்

விலங்கலொண் மாளிகை சூழ்மிழலை

 

விண்ணிழி கோயில் விரும்பியதே.

 

செறிமுள ரித்தவி சேறியாறுஞ்

 

செற்றதில் வீற்றிருந் தானும்மற்றைப்

பொறியர வத்தணை யானுங்காணாப்

 

புகலி நிலாவிய புண்ணியனே

எறிமழு வோடிள மான்கையின்றி

 

இருந்தபி ரானிது வென்கொல்சொல்லாய்

வெறிகமழ் பூம்பொழில் சூழ்மிழலை

 

விண்ணிழி கோயில் விரும்பியதே.

 

1.4.9

 

43

 

பத்தர்க ணம்பணிந் தேத்தவாய்த்த

 

பான்மைய தன்றியும் பல்சமணும்

புத்தரும் நின்றலர் தூற்றஅந்தண்

 

புகலி நிலாவிய புண்ணியனே

எத்தவத் தோர்க்குமி லக்காய்நின்ற

 

எம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை

 

விண்ணிழி கோயில் விரும்பியதே.

 

1.4.10

 

44

 

விண்ணிழி கோயில் விரும்பிமேவும்

 

வித்தக மென்கொலி தென்றுசொல்லிப்

புண்ணிய னைப்புக லிந்நிலாவு

 

பூங்கொடி யோடிருந் தானைப்போற்றி

நண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி

 

நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன

பண்ணியல் பாடல்வல் லார்களிந்தப்

 

பாரொடு விண்பரி பாலகரே.

 

1.4.11

 

 

இவ்விரண்டும் சோழநாட்டிலுள்ளவை. புகலி என்பது சீகாழிக்கொருபெயர்

வீழிமிழலையில் சுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுசாம்பிகை

 

திருச்சிற்றம்பலம்

 

 

 

1.5 திருக்காட்டுப்பள்ளி

 

பண் - நட்டபாடை

 

45

 

செய்யரு கேபுனல் பாயஓங்கிச்

 

செங்கயல் பாயச் சிலமலர்த்தேன்

கையரு கேகனி வாழையீன்று

 

கானலெலாங் கமழ் காட்டுப்பள்ளிப்

பையரு கேயழல் வாயவைவாய்ப்

 

பாம்பணை யான்பணைத் தோளிபாகம்

மெய்யரு கேயுடை யானையுள்கி

 

விண்டவ ரேறுவர் மேலுலகே.

 

1.5.1

 

45

 

* இப்பதிகத்தில் 2-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

1.5.2

 

46

 

திரைகளெல் லாமல ருஞ்சுமந்து

 

செழுமணி முத்தொடு பொன்வரன்றிக்

கரைகளெல் லாமணி சேர்ந்துரிஞ்சிக்

 

காவிரி கால்பொரு காட்டுப்பள்ளி

உரைகளெல் லாமுணர் வெய்திநல்ல

 

உத்தம ராயுயர்ந் தாருலகில்

அரவமெல் லாமரை யார்த்தசெல்வர்க்

 

காட்செய அல்லல் அறுக்கலாமே.

 

1.5.3

 

47

 

தோலுடை யான்வண்ணப் போர்வையினான்

 

சுண்ணவெண் ணீறுது தைந்திலங்கு

நூலுடை யானிமை யோர்பெருமான்

 

நுண்ணறி வால்வழி பாடுசெய்யுங்

காலுடை யான்கரி தாயகண்டன்

 

காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி

மேலுடை யானிமை யாதமுக்கண்

 

மின்னிடை யாளொடும் வேண்டினானே.

 

1.5.4

 

48

 

சலசல சந்தகி லோடும்உந்திச்

 

சந்தன மேகரை சார்த்தியெங்கும்

பலபல வாய்த்தலை யார்த்துமண்டி

 

பாய்ந்திழி காவிரிப் பாங்கரின்வாய்

கலகல நின்றதி ருங்கழலான்

 

காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளிச்

சொலவல தொண்டர்க ளேத்தநின்ற

 

சூலம்வல் லான்கழல் சொல்லுவோமே.

 

1.5.5

 

49

 

தளையவிழ் தண்ணிற நீலம்நெய்தல்

 

தாமரை செங்கழு நீருமெல்லாங்

களையவி ழுங்குழ லார்கடியக்

 

காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளித்

துளைபயி லுங்குழல் யாழ்முரல

 

துன்னிய இன்னிசை யால்துதைந்த

அளைபயில் பாம்பரை யார்த்தசெல்வர்க்

 

காட்செய அல்லல் அறுக்கலாமே.

 

1.5.6

 

50

 

முடிகையி னாற்றொடும் மோட்டுழவர்

 

முன்கைத் தருக்கைக் கரும்பின்கட்டிக்

கடிகையி னாலெறி காட்டுப்பள்ளி

 

காதல்செய் தான்கரி தாயகண்டன்

பொடியணி மேனியி னானையுள்கிப்

 

போதொடு நீர்சுமந் தேத்திமுன்னின்

றடிகையி னாற்றொழ வல்லதொண்டர்

 

அருவினை யைத்துரந் தாட்செய்வாரே.

 

1.5.7

 

51

 

பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான்

 

பெய்கழல் நாடொறும் பேணியேத்த

மறையுடை யான்மழு வாளுடையான்

 

வார்தரு மால்கடல் நஞ்சமுண்ட

கறையுடை யான்கன லாடுகண்ணாற்

 

காமனைக் காய்ந்தவன் காட்டுப்பள்ளிக்

குறையுடை யான்குறட் பூதச்செல்வன்

 

குரைகழ லேகைகள் கூப்பினோமே.

 

1.5.8

 

52

 

செற்றவர் தம்அர ணம்மவற்றைச்

 

செவ்வழல் வாயெரி யூட்டிநின்றுங்

கற்றவர் தாந்தொழு தேத்தநின்றான்

 

காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளி

உற்றவர் தாமுணர் வெய்திநல்ல

 

உம்பருள் ளார்தொழு தேத்தநின்ற

பெற்றம ரும்பெரு மானையல்லால்

 

பேசுவதும் மற்றோர் பேச்சிலோமே.

 

1.5.9

 

53

 

ஒண்டுவ ரார்துகி லாடைமெய்போர்த்

 

துச்சிகொ ளாமையுண் டேயுரைக்குங்

குண்டர்க ளோடரைக் கூறையில்லார்

 

கூறுவ தாங்குண மல்லகண்டீர்

அண்டம றையவன் மாலுங்காணா

 

ஆதியி னானுறை காட்டுப்பள்ளி

வண்டம ரும்மலர்க் கொன்றைமாலை

 

வார்சடை யான்கழல் வாழ்த்துவோமே.

 

1.5.10

 

54

 

பொன்னியல் தாமரை நீலம்நெய்தல்

 

போதுக ளாற்பொலி வெய்துபொய்கைக்

கன்னியர் தாங்குடை காட்டுப்பள்ளிக்

 

காதல னைக்கடற் காழியர்கோன்

துன்னிய இன்னிசை யாற்றுதைந்து

 

சொல்லிய ஞானசம் பந்தன்நல்ல

தன்னிசை யாற்சொன்ன மாலைபத்துந்

 

தாங்கவல் லார்புகழ் தாங்குவாரே.

 

1.5.11

 

 

இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - ஆரணியச்சுந்தரர், தேவியார் - அகிலாண்டநாயகியம்மை

 

திருச்சிற்றம்பலம்

 

 

 

1.6 திருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும்

 

வினாவுரை

 

பண் - நட்டபாடை

 

55

 

அங்கமும் வேதமும் ஓதுநாவர்

 

அந்தணர் நாளும் அடிபரவ

மங்குல் மதிதவழ் மாடவீதி

 

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

செங்கய லார்புனற் செல்வமல்கு

 

சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்

கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்

 

கணபதி யீச்சரங் காமுறவே.

 

1.6.1

 

56

 

நெய்தவழ் மூவெரி காவலோம்பும்

 

நேர்புரி நூன்மறை யாளரேத்த

மைதவழ் மாட மலிந்தவீதி

 

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

செய்தவ நான்மறை யோர்களேத்துஞ்

 

சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்

கைதவழ் கூரெரி யேந்தியாடுங்

 

கணபதி யீச்சரங் காமுறவே.

 

1.6.2

 

57

 

தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர்

 

தொகுமறை யோர்கள் வளர்த்தசெந்தீ

மால்புகை போய்விம்மு மாடவீதி

 

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

சேல்புல்கு தண்வயல் சோலைசூழ்ந்த

 

சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்

கால்புல்கு பைங்கழ லார்க்கஆடுங்

 

கணபதி யீச்சரங் காமுறவே.

 

1.6.3

 

58

 

நாமரு கேள்வியர் வேள்வியோவா

 

நான்மறை யோர்வழி பாடுசெய்ய

மாமரு வும்மணிக் கோயில்மேய

 

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

தேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த

 

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

காமரு சீர்மகிழ்ந் தெல்லியாடுங்

 

கணபதி யீச்சரங் காமுறவே.

 

1.6.4

 

59

 

பாடல் முழவும் விழவும்ஓவாப்

 

பன்மறை யோரவர் தாம்பரவ

மாட நெடுங்கொடி விண்தடவும்

 

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த

 

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

காடக மேயிட மாகஆடுங்

 

கணபதி யீச்சரங் காமுறவே.

 

1.6.5

 

60

 

புனையழ லோம்புகை அந்தணாளர்

 

பொன்னடி நாடொறும் போற்றிசைப்ப

மனைகெழு மாட மலிந்தவீதி

 

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

சினைகெழு தண்வயல் சோலைசூழ்ந்த

 

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

கனைவளர் கூரெரி ஏந்தியாடுங்

 

கணபதி யீச்சரங் காமுறவே.

 

1.6.6

 

60

 

* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

1.6.7

 

61

 

பூண்டங்கு மார்பின் இலங்கைவேந்தன்

 

பொன்னெடுந் தோள்வரை யாலடர்த்து

மாண்டங்கு நூன்மறை யோர்பரவ

 

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

சேண்டங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த

 

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

காண்டங்கு தோள்பெயர்த் தெல்லியாடுங்

 

கணபதி யீச்சரங் காமுறவே.

 

1.6.8

 

62

 

அந்தமும் ஆதியும் நான்முகனும்

 

அரவணை யானும் அறிவரிய

மந்திர வேதங்க ளோதுநாவர்

 

மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்

செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ்

 

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

கந்தம் அகிற்புகை யேகமழுங்

 

கணபதி யீச்சரங் காமுறவே.

 

1.6.9

 

63

 

இலைமரு தேயழ காகநாளும்

 

இடுதுவர்க் காயொடு சுக்குத்தின்னும்

நிலையமண் டேரரை நீங்கிநின்று

 

நீதரல் லார்தொழும் மாமருகல்

மலைமகள் தோள்புணர் வாயருளாய்

 

மாசில்செங் காட்டங் குடியதனுள்

கலைமல்கு தோலுடுத் தெல்லியாடுங்

 

கணபதி யீச்சரங் காமுறவே.

 

1.6.10

 

64

 

நாலுங் குலைக்கமு கோங்குகாழி

 

ஞானசம் பந்தன் நலந்திகழும்

மாலின் மதிதவழ் மாடமோங்கும்

 

மருகலின் மற்றதன் மேல்மொழிந்த

சேலுங் கயலுந் திளைத்தகண்ணார்

 

சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்

சூலம்வல் லான்கழ லேத்துபாடல்

 

சொல்லவல் லார்வினை யில்லையாமே.

 

1.6.11

 

 

இவைகளுஞ் சோழநாட்டிலுள்ளவை.

திருமருகலில் சுவாமிபெயர் - மாணிக்கவண்ணர்; தேவியார் - வண்டுவார்குழலி

திருச்செங்காட்டங்குடியில் சுவாமிபெயர் - கணபதீசுவரர்,

தேவியார் - திருக்குழல்நாயகி.

 

1.7 திருநள்ளாறும் - திருஆலவாயும்

 

வினாவுரை

 

பண் - நட்டபாடை

 

65

 

பாடக மெல்லடிப் பாவையோடும்

 

படுபிணக் காடிடம் பற்றிநின்று

நாடக மாடுநள் ளாறுடைய

 

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

சூடக முன்கை மடந்தைமார்கள்

 

துணைவரொ டுந்தொழு தேத்திவாழ்த்த

ஆடக மாடம் நெருங்குகூடல்

 

ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

 

1.7.1

 

66

 

திங்களம் போதுஞ் செழும்புனலுஞ்

 

செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து

நங்கள் மகிழுநள் ளாறுடைய

 

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

பொங்கிள மென்முலை யார்களோடும்

 

புனமயி லாட நிலாமுளைக்கும்

அங்கள கச்சுதை மாடக்கூடல்

 

ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

 

1.7.2

 

67

 

தண்ணறு மத்தமுங் கூவிளமும்

 

வெண்டலை மாலையுந் தாங்கியார்க்கும்

நண்ணல் அரியநள் ளாறுடைய

 

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

புண்ணிய வாணரும் மாதவரும்

 

புகுந்துட னேத்தப் புனையிழையார்

அண்ணலின் பாட லெடுக்குங்கூடல்

 

ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

 

1.7.3

 

68

 

பூவினில் வாசம் புனலிற்பொற்பு

 

புதுவிரைச் சாந்தினின் நாற்றத்தோடு

நாவினிற் பாடநள் ளாறுடைய

 

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

தேவர்கள் தானவர் சித்தர்விச்சா

 

தரர்கணத் தோடுஞ் சிறந்துபொங்கி

(*)ஆவினில் ஐந்துகந் தாட்டுங்கூடல்

 

ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

(*) ஆவினிலைந்து - பஞ்சகவ்வியம்.

 

1.7.4

 

69

 

செம்பொன்செய் மாலையும் வாசிகையுந்

 

திருந்து புகையு மவியும்பாட்டும்

நம்பும்பெ ருமைநள் ளாறுடைய

 

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

உம்பரும் நாக ருலகந்தானும்

 

ஒலிகடல் சூழ்ந்த வுலகத்தோரும்

அம்புத நால்களால் நீடுங்கூடல்

 

ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

 

1.7.5

 

70

 

பாகமுந் தேவியை வைத்துக்கொண்டு

 

பைவிரி துத்திப் பரியபேழ்வாய்

நாகமும் பூண்டநள் ளாறுடைய

 

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

போகமும் நின்னை மனத்துவைத்துப்

 

புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட

ஆகமு டையவர் சேருங்கூடல்

 

ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

 

1.7.6

 

71

 

கோவண ஆடையும் நீறுப்பூச்சுங்

 

கொடுமழு ஏந்தலுஞ் செஞ்சடையும்

நாவணப் பாட்டுநள் ளாறுடைய

 

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

பூவண மேனி இளையமாதர்

 

பொன்னும் மணியுங் கொழித்தெடுத்து

ஆவண வீதியில் ஆடுங்கூடல்

 

ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

 

1.7.7

 

72

 

இலங்கை யிராவணன் வெற்பெடுக்க

 

எழில்விர லூன்றி யிசைவிரும்பி

நலம்கொளச் சேர்ந்த நள்ளாறுடைய

 

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

புலன்களைச் செற்றுப் பொறியைநீக்கிப்

 

புந்தியிலு நினைச் சிந்தைசெய்யும்

அலங்கல்நல் லார்கள் அமருங்கூடல்

 

ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

 

1.7.8

 

73

 

பணியுடை மாலும் மலரினோனும்

 

பன்றியும் வென்றிப் பறவையாயும்

நணுகல் அரியநள் ளாறுடைய

 

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

மணியொலி சங்கொலி யோடுமற்றை

 

மாமுர சின்னொலி என்றும்ஓவா

தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல்

 

ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

 

1.7.9

 

74

 

தடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ்

 

சாதியின் நீங்கிய வத்தவத்தர்

நடுக்குற நின்றநள் ளாறுடைய

 

நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்

எடுக்கும் விழவும் நன்னாள்விழவும்

 

இரும்பலி யின்பினோ டெத்திசையும்

அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல்

 

ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.

 

1.7.10

 

75

 

அன்புடை யானை அரனைக்கூடல்

 

ஆலவாய் மேவிய தென்கொலென்று

நன்பொனை நாதனை நள்ளாற்றானை

 

நயம்பெறப் போற்றி நலங்குலாவும்

பொன்புடை சூழ்தரு மாடக்காழிப்

 

பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன

இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார்

 

இமையவ ரேத்த இருப்பர்தாமே.

 

1.7.11

 

 

இதுவுஞ் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - தெர்ப்பாரணியேசுவரர்;

தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.

 

1.8 திருஆவூர்ப்பசுபதீச்சரம்

 

பண் - நட்டபாடை

 

76

 

புண்ணியர் பூதியர் பூதநாதர்

 

புடைபடு வார்தம் மனத்தார்திங்கட்

கண்ணிய ரென்றென்று காதலாளர்

 

கைதொழு தேத்த இருந்தவூராம்

விண்ணுயர் மாளிகை மாடவீதி

 

விரைகமழ் சோலை சுலாவியெங்கும்

பண்ணியல் பாடல றாதஆவூர்ப்

 

பசுபதி யீச்சரம் பாடுநாவே.

 

1.8.1

 

77

 

முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார்

 

முக்கணர் தக்கன்றன் வேள்விசாடும்

அத்திய ரென்றென் றடியரேத்தும்

 

ஐயன் அணங்கொ டிருந்தவூராம்

தொத்திய லும்பொழில் மாடுவண்டு

 

துதைந்தெங்கும் தூமதுப் பாயக்கோயிற்

பத்திமைப் பாடல றாதஆவூர்ப்

 

பசுபதி யீச்சரம் பாடுநாவே.

 

1.8.2

 

78

 

பொங்கி வரும்புனற் சென்னிவைத்தார்

 

போம்வழி வந்திழி வேற்றமானார்

இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும்

 

இறையவ ரென்றுமி ருந்தவூராம்

தெங்குயர் சோலைசே ராலைசாலி

 

திளைக்கும் விளைவயல் சேரும்பொய்கைப்

பங்கய மங்கை விரும்புமாவூர்ப்

 

பசுபதி யீச்சரம் பாடுநாவே.

 

1.8.3

 

79

 

தேவியோர் கூறின ரேறதேறுஞ்

 

செலவினர் நல்குர வென்னைநீக்கும்

ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும்

 

அப்பனா ரங்கே அமர்ந்தவூராம்

பூவிய லும்பொழில் வாசம்வீசப்

 

புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப்

பாவியல் பாடல றாதஆவூர்ப்

 

பசுபதி யீச்சரம் பாடுநாவே.

 

1.8.4

 

80

 

இந்தணை யுஞ்சடை யார்விடையார்

 

இப்பிறப் பென்னை யறுக்கவல்லார்

வந்தணைந் தின்னிசை பாடுவார்பால்

 

மன்னினர் மன்னி யிருந்தவூராம்

கொந்தணை யுங்குழ லார்விழவில்

 

கூட்டமி டையிடை சேரும்வீதிப்

பந்தணை யும்விர லார்தம்ஆவூர்ப்

 

பசுபதி யீச்சரம் பாடுநாவே.

 

1.8.5

 

81

 

குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார்

 

கும்பிடு வார்தமக் கன்புசெய்வார்

ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணார்

 

உறைபதி யாகுஞ் செறிகொள்மாடஞ்

சுற்றிய வாசலின் மாதர்விழாச்

 

சொற்கவி பாடநி தானம்நல்கப்

பற்றிய கையினர் வாழும்ஆவூர்ப்

 

பசுபதி யீச்சரம் பாடுநாவே.

 

1.8.6

 

82

 

நீறுடை யார்நெடு மால்வணங்கும்

 

நிமிர்சடை யார்நினை வார்தமுள்ளம்

கூறுடை யாருடை கோவணத்தார்

 

குவலய மேத்த இருந்தவூராம்

தாறுடை வாழையிற் கூழைமந்தி

 

தகுகனி யுண்டுமிண் டிட்டினத்தைப்

பாறிடப் பாய்ந்து பயிலும்ஆவூர்ப்

 

பசுபதி யீச்சரம் பாடுநாவே.

 

1.8.7

 

83

 

வெண்டலை மாலை விரவிப்பூண்ட

 

மெய்யுடை யார்விறல் ஆரரக்கன்

வண்டமர் பூமுடி செற்றுகந்த

 

மைந்த ரிடம்வள மோங்கியெங்குங்

கண்டவர் சிந்தைக் கருத்தின்மிக்கார்

 

கதியரு ளென்றுகை யாரக்கூப்பிப்

பண்டலர் கொண்டு பயிலும்ஆவூர்ப்

 

பசுபதி யீச்சரம் பாடுநாவே.

 

1.8.8

 

84

 

மாலும் அயனும் வணங்கிநேட

 

மற்றவ ருக்கெரி யாகிநீண்ட

சீலம் அறிவரி தாகிநின்ற

 

செம்மையி னாரவர் சேருமூராம்

கோல விழாவி னரங்கதேறிக்

 

கொடியிடை மாதர்கள் மைந்தரோடும்

பாலென வேமொழிந் தேத்தும்ஆவூர்ப்

 

பசுபதி யீச்சரம் பாடுநாவே.

 

1.8.9

 

85

 

பின்னிய தாழ்சடை யார்பிதற்றும்

 

பேதைய ராஞ்சமண் சாக்கியர்கள்

தன்னிய லும்முரை கொள்ளகில்லாச்

 

சைவரி டந்தள வேறுசோலைத்

துன்னிய மாதரும் மைந்தர்தாமும்

 

சுனையிடை மூழ்கித் தொடர்ந்தசிந்தைப்

பன்னிய பாடல் பயிலும்ஆவூர்ப்

 

பசுபதி யீச்சரம் பாடுநாவே.

 

1.8.10

 

86

 

எண்டிசை யாரும் வணங்கியேத்தும்

 

எம்பெரு மானையெ ழில்கொளாவூர்ப்

பண்டுரி யார்சிலர் தொண்டர்போற்றும்

 

பசுபதி யீச்சரத் தாதிதன்மேல்

கண்டல்கள் மிண்டிய கானற்காழிக்

 

கவுணியன் ஞானசம் பந்தன்சொன்ன

கொண்டினி தாயிசை பாடியாடிக்

 

கூடு மவருடை யார்கள்வானே.

 

1.8.11

 

 

இது சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பசுபதீச்சுரர்,

தேவியார் - மங்களநாயகியம்மை

 

1.9 திருவேணுபுரம்

 

பண் - நட்டபாடை

 

87

 

வண்டார்குழ லரிவையொடும் பிரியாவகை பாகம்

பெண்டான்மிக ஆனான்பிறைச் சென்னிப்பெரு மானூர்

தண்டாமரை மலராளுறை தவளந்நெடு மாடம்

விண்டாங்குவ போலும்மிகு வேணுபுர மதுவே.

 

1.9.1

 

80

 

படைப்பும்நிலை யிறுதிப்பயன் பருமையொடு நேர்மை

கிடைப்பல்கண முடையான்கிறி பூதப்படை யானூர்

(*)புடைப்பாளையின் கமுகின்னொடு புன்னைமலர் நாற்றம்

விடைத்தேவரு தென்றல்மிகு வேணுபுர மதுவே.

 

(*) குடைப்பாளை என்றும் பாடம்.

 

1.9.2

 

89

 

கடந்தாங்கிய கரியையவர் வெருவவுரி போர்த்துப்

படந்தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழவூர்

நடந்தாங்கிய நடையார்நல பவளத்துவர் வாய்மேல்

விடந்தாங்கிய கண்ணார்பயில் வேணுபுர மதுவே.

 

1.9.3

 

90

 

தக்கன்தன சிரமொன்றினை அரிவித்தவன் தனக்கு

மிக்கவ்வரம் அருள்செய்தஎம் விண்ணோர்பெரு மானூர்

பக்கம்பல மயிலாடிட மேகம்முழ வதிர

மிக்கம்மது வண்டார்பொழில் வேணுபுர மதுவே.

 

1.9.4

 

91

 

நானாவித உருவாய்நமை யாள்வான்நணு காதார்

வானார்திரி புரமூன்றெரி யுண்ணச்சிலை தொட்டான்

தேனார்ந்தெழு கதலிக்கனி யுண்பான்திகழ் மந்தி

மேனோக்கிநின் றிரங்கும்பொழில் வேணுபுர மதுவே.

 

1.9.5

 

92

 

மண்ணோர்களும் விண்ணோர்களும் வெருவிமிக அஞ்சக்

கண்ணார்சலம் மூடிக்கட லோங்கவ்வுயர்ந் தானூர்

தண்ணார்நறுங் கமலம்மலர் சாயவ்விள வாளை

(**)விண்ணோர்துதி கொள்ளும்வியன் வேணுபுர மதுவே.

(**) விண்ணார் குதிகொள்ளும் என்றும் பாடம்.

 

1.9.6

 

               

* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

1.9.7

 

93

 

மலையான்மகள் அஞ்சவ்வரை எடுத்தவ்வலி யரக்கன்

தலைதோளவை நெரியச்சரண் உகிர்வைத்தவன் தன்னூர்

கலையாறொடு சுருதித்தொகை கற்றோர்மிகு கூட்டம்

விலையாயின சொற்றேர்தரு வேணுபுர மதுவே.

 

1.9.8

 

94

 

வயமுண்டவ மாலும்அடி காணாதல மாக்கும்

பயனாகிய பிரமன்படு தலையேந்திய பரனூர்

கயமேவிய சங்கந்தரு கழிவிட்டுயர் செந்நெல்

வியன்மேவிவந் துறங்கும்பொழில் வேணுபுர மதுவே.

 

1.9.9

 

95

 

மாசேறிய உடலாரமண் (*)கழுக்கள்ளொடு தேரர்

தேசேறிய பாதம்வணங் காமைத்தெரி யானூர்

தூசேறிய அல்குல்துடி இடையார்துணை முலையார்

வீசேறிய புருவத்தவர் வேணுபுர மதுவே.

(*) குழுக்கள் என்றும் பாடம்.

 

1.9.10

 

96

 

வேதத்தொலி யானும்மிகு வேணுபுரந் தன்னைப்

பாதத்தினின் மனம்வைத்தெழு பந்தன்தன பாடல்

ஏதத்தினை இல்லா இவை பத்தும்இசை வல்லார்

கேதத்தினை இல்லார்சிவ கெதியைப்பெறு வாரே. 11

 

 

 

வேணுபுரம் என்பது சீகாழிக்கொருபெயர்

 

1.10 திரு அண்ணாமலை

 

பண் - நட்டபாடை

 

97

 

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்

பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ

மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்

அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.

 

1.10.1

 

98

 

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்

தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற

ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்

பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.

 

1.10.2

 

99

 

பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ் கழைமுத்தஞ்

சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்

ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்

காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.

 

1.10.3

 

100

 

உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்

எதிரும்பலி யுணலாகவும் எருதேறுவ தல்லால்

முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்

அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே.

 

1.10.4

 

101

 

மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி

அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்

உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார்

குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.

 

1.10.5

 

102

 

பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்

பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகிக்

கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி

உருகும்மனம் உடையார்தமக் குறுநோயடை யாவே.

 

1.10.6

 

103

 

கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில்

நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள

எரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல

அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே.

 

1.10.7

 

104

 

ஒளிறூபுலி அதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்

பிளிறூகுரல் மதவாரணம் வதனம்பிடித் துரித்து

வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை

அளறூபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே.

 

1.10.8

 

105

 

விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்

கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்

அளவாவணம் அழலாகிய அண்ணாமலை யண்ணல்

தளராமுலை முறுவல்உமை தலைவன்னடி சரணே.

 

1.10.9

 

106

 

வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும்

மார்வம்புதை மலிசீவர மறையாவரு வாரும்

ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்

கூர்வெண்மழுப் படையான்நல கழல்சேர்வது குணமே.

 

1.10.10

 

107

 

வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்

அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்

கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான

சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.

 

1.10.11

 

 

இது நடுநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - அருணாசலேசுவரர்,

தேவியார் - உண்ணாமுலையம்மை

 

1.11 திருவீழிமிழலை

 

பண் - நட்டபாடை

 

108

 

சடையார்புன லுடையானொரு சரிகோவண முடையான்

படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான்

மடமான்விழி யுமைமாதிடம் உடையானெனை யுடையான்

விடையார்கொடி யுடையானிடம் வீழிம்மிழ லையே.

 

1.11.1

 

109

 

ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்

மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய்

ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய்

வேறாயுடன் ஆனானிடம் வீழிம்மிழ லையே.

 

1.11.2

 

110

 

வம்மின்னடி யீர்நாண்மல ரிட்டுத்தொழு துய்ய

உம்மன்பினொ டெம்மன்புசெய் தீசன்னுறை கோயில்

மும்மென்றிசை முரல்வண்டுகள் கொண்டித்திசை யெங்கும்

விம்மும்பொழில் சூழ்தண்வயல் வீழிம்மிழ லையே.

 

1.11.3

 

111

 

பண்ணும்பதம் ஏழும்பல வோசைத்தமி ழவையும்

உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும்

மண்ணும்புனல் உயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும்

விண்ணும்முழு தானானிடம் வீழிம்மிழ லையே.

 

1.11.4

 

112

 

ஆயாதன சமயம்பல அறியாதவன் நெறியின்

தாயானவன் உயிர்கட்குமுன் தலையானவன் மறைமுத்

தீயானவன் சிவனெம்மிறை செல்வத்திரு வாரூர்

மேயானவன் உறையும்மிடம் வீழிம்மிழ லையே.

 

1.11.5

 

113

 

கல்லால்நிழற் கீழாயிடர் காவாயென வானோர்

எல்லாம்ஒரு தேராயயன் மறைபூட்டிநின் றுய்ப்ப

வல்லாய்எரி காற்றீர்க்கரி கோல்வாசுகி நாண்கல்

வில்லால்எயில் எய்தானிடம் வீழிம்மிழ லையே.

 

1.11.6

 

114

 

கரத்தான்மலி சிரத்தான்கரி யுரித்தாயதொர் படத்தான்

புரத்தார்பொடி படத்தன்னடி பணிமூவர்கட் கோவா

வரத்தான்மிக அளித்தானிடம் வளர்புன்னைமுத் தரும்பி

விரைத்தாதுபொன் மணியீன்றணி வீழிம்மிழ லையே.

 

1.11.7

 

115

 

முன்னிற்பவர் இல்லாமுரண் அரக்கன்வட கயிலை

தன்னைப்பிடித் தெடுத்தான்முடி தடந்தோளிற வூன்றிப்

பின்னைப்பணிந் தேத்தப்பெரு வாள்பேரொடு கொடுத்த

மின்னிற்பொலி சடையானிடம் வீழிம்மிழ லையே.

 

1.11.8

 

116

 

பண்டேழுல குண்டானவை கண்டானுமுன் னறியா

ஒண்டீயுரு வானானுறை கோயில்நிறை பொய்கை

வண்டாமரை மலர்மேல்மட அன்னந்நடை பயில

வெண்டாமரை செந்தாதுதிர் வீழிம்மிழ லையே.

 

1.11.9

 

117

 

மசங்கற்சமண் மண்டைக்கையர் குண்டக்குண மிலிகள்

இசங்கும்பிறப் பறுத்தானிடம் இருந்தேன்களித் திரைத்துப்

பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள் ஒளிகொண்டெழு பகலோன்

விசும்பைப்பொலி விக்கும்பொழில் வீழிம்மிழ லையே.

 

1.11.10

 

118

 

வீழிம்மிழ லைம்மேவிய விகிர்தன்றனை விரைசேர்

காழிந்நகர்க் கலைஞானசம் பந்தன்தமிழ் பத்தும்

யாழின்னிசை வல்லார்சொலக் கேட்டாரவ ரெல்லாம்

(*)ஊழின்மலி வினைபோயிட உயர்வானடை வாரே.

(*) ஊழின்வலி என்றும் பாடம்.

 

1.11.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வீழியழகர்,

தேவியார் - சுந்தரகுசாம்பிகை.

 

1.12 திருமுதுகுன்றம்

 

பண் - நட்டபாடை

 

119

 

மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட

தொத்தார்தரு மணிநீண்முடிச் சுடர்வண்ணன திடமாங்

கொத்தார்மலர் குளிர்சந்தகில் ஒளிர்குங்குமங் கொண்டு

முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.

 

1.12.1

 

120

 

தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்

இழையாரிடை மடவாளொடும் இனிதாவுறை விடமாம்

மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகிர் எரிகண்

முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே.

 

1.12.2

 

121

 

விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண்

டளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம்

களையார்தரு கதிராயிரம் உடையவ்வவ னோடு

முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே.

 

1.12.3

 

122

 

சுரர்மாதவர் தொகுகின்னரர் அவரோதொலை வில்லா

நரரானபன் முனிவர்தொழ இருந்தானிடம் நலமார்

அரசார்வர அணிபொற்கல னவைகொண்டுபன் னாளும்

முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே.

 

1.12.4

 

123

 

அறையார்கழல் அந்தன்றனை அயில்மூவிலை யழகார்

கறையார்நெடு வேலின்மிசை யேற்றானிடங் கருதில்

மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு

முறையால்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.

 

1.12.5

 

124

 

ஏவார்சிலை எயினன்னுரு வாகியெழில் விசயற்

கோவாதவின் னருள்செய்தஎம் மொருவற்கிடம் உலகில்

சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார்

மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.

 

1.12.6

 

125

 

தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை (*)முடிய

மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில்

விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை

முழவோடிசை (**)நடமுஞ்செயும் முதுகுன்றடை வோமே.

(*) முடியர் என்றும் பாடம்.

(**) நடமுன் செயும் என்றும் பாடம்.

 

1.12.7

 

127

 

செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன்

கதுவாய்கள்பத் தலறியிடக் கண்டானுறை கோயில்

மதுவாயசெங் காந்தள்மலர் நிறையக்குறை வில்லா (*)

முதுவேய்கள்முத் துதிரும்பொழில் முதுகுன்றடை வோமே.

(*) குறை யில்லா என்றும் பாடம்.

 

1.12.8

 

127

 

இயலாடிய பிரமன்னரி இருவர்க்கறி வரிய

செயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன்

புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தடத் தருகே

முயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே.

 

1.12.9

 

128

 

அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான்

மருகன்வரும் இடபக்கொடி யுடையானிடம் மலரார்

கருகுகுழன் மடவார்கடி குறிஞ்சியது பாடி

முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே.

 

1.12.10

 

129

 

முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப்

புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த

நிகரில்லன தமிழ்மாலைகள் இசையோடிவை பத்தும்

பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே.

 

1.12.11

 

 

இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம்.

சுவாமிபெயர் - பழமலைநாதர்;

தேவியார் - பெரியநாயகியம்மை.

 

1.13 திருவியலூர்

 

பண் - நட்டபாடை

 

130

 

குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவ

பொருவெங்கரி படவென்றதன் உரிவையுடல் அணிவோன்

அரவும்மலை புனலும்மிள மதியுந்நகு தலையும்

விரவுஞ்சடை யடிகட்கிடம் விரிநீர்விய லூரே.

 

1.13.1

 

131

 

ஏறார்தரும் ஒருவன்பல உருவன்னிலை யானான்

ஆறார்தரு சடையன்னன லுருவன்புரி வுடையான்

மாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன் மடவாள்

வீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே.

 

1.13.2

 

132

 

செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும்

பெய்ம்மின்பலி எனநின்றிசை பகர்வாரவ ரிடமாம்

உம்மென்றெழும் அருவித்திரள் வரைபற்றிட உறைமேல்

விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர்விய லூரே.

 

1.13.3

 

133

 

அடைவாகிய அடியார்தொழ அலரோன்றலை யதனில்

மடவாரிடு பலிவந்துண லுடையானவ னிடமாங்

கடையார்தர அகிலார்கழை முத்தம்நிரை சிந்தி

மிடையார்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விய லூரே.

 

1.13.4

 

134

 

எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப்

பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனாய்க்

கண்ணார்தரும் உருவாகிய கடவுள்ளிட மெனலாம்

விண்ணோரொடு மண்ணோர்தொழு விரிநீர்விய லூரே.

 

1.13.5

 

135

 

வசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை யறிவான்

திசையுற்றவர் காணச்செரு மலைவான்நிலை யவனை

அசையப்பொரு தசையாவணம் அவனுக்குயர் படைகள்

விசையற்கருள் செய்தானிடம் விரிநீர்வியலூரே.

 

1.13.6

 

136

 

மானார்அர வுடையான்இர வுடையான்பகல் நட்டம்

ஊனார்தரும் உயிரானுயர் விசையான்விளை பொருள்கள்

தானாகிய தலைவன்னென நினைவாரவ ரிடமாம்

மேனாடிய விண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே.

 

1.13.7

 

137

 

பொருவாரெனக் கெதிராரெனப் பொருப்பையெடுத் தான்றன்

கருமால்வரை கரந்தோளுரங் கதிர்நீள்முடி நெரிந்து

சிரமாயின கதறச்செறி கழல்சேர்திரு வடியின்

விரலாலடர் வித்தானிடம் விரிநீர்விய லூரே.

 

1.13.8

 

138

 

வளம்பட்டலர் மலர்மேலயன் மாலும்மொரு வகையால்

அளம்பட்டறி வொண்ணாவகை அழலாகிய அண்ணல்

உளம்பட்டெழு தழல்தூணதன் நடுவேயொரு உருவம்

விளம்பட்டருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே.

 

1.13.9

 

139

 

தடுக்காலுடல் மறைப்பாரவர் தவர்சீவர மூடிப்

பிடக்கேயுரை செய்வாரொடு பேணார்நமர் பெரியோர்

கடற்சேர்தரு விடமுண்டமு தமரர்க்கருள் செய்த

விடைச்சேர்தரு கொடியானிடம் விரிநீர்விய லூரே.

 

1.13.10

 

140

 

விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன்விய லூரைத்

தளங்கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞானசம் பந்தன்

துளங்கில்தமிழ் பரவித்தொழும் அடியாரவர் என்றும்

விளங்கும்புகழ் அதனோடுயர் விண்ணும்முடை யாரே.

 

1.13.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - யோகாநந்தேசுவரர்;

தேவியார் - சவுந்தரநாயகியம்மை;

சாந்தநாயகியம்மை என்றும் பாடம்.

 

1.14 திருக்கொடுங்குன்றம்

 

பண் - நட்டபாடை

 

141

 

வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக்

கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம்

ஆனிற்பொலி வைந்தும்மமர்ந் தாடியுல கேத்தத்

தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே.

 

1.14.1

 

142

 

மயில்புல்குதண் பெடையோடுடன் ஆடும்வளர் சாரல்

குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம்

அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்திநின் றாடி

எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே.

 

1.14.2

 

143

 

மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக்

குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம்

கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல்

வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான்வள நகரே.

 

1.14.3

 

144

 

பருமாமத கரியோடரி யிழியும்விரி சாரல்

குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம்

பொருமாஎயில் வரைவிற்றரு கணையிற்பொடி செய்த

பெருமானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே.

 

1.14.4

 

145

 

மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும்

கூகைக்குலம் ஓடித்திரி சாரற்கொடுங் குன்றம்

நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கை

பாகத்தவன் இமையோர்தொழ மேவும்பழ நகரே.

 

1.14.5

 

146

 

கைம்மாமத கரியின்னினம் இடியின்குர லதிரக்

கொய்ம்மாமலர்ச் சோலைபுக மண்டுங்கொடுங் குன்றம்

அம்மானென உள்கித்தொழு வார்கட்கருள் செய்யும்

பெம்மானவன் இமையோர்தொழ மேவும்பெரு நகரே.

 

1.14.6

 

147

 

மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட

குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம்

அரவத்தொடு மிளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றை

நிரவச்சடை முடிமேலுடன் வைத்தான்நெடு நகரே.

 

1.14.7

 

148

 

முட்டாமுது கரியின்னினம் முதுவேய்களை முனிந்து

குட்டாச்சுனை யவைமண்டிநின் றாடுங்கொடுங் குன்றம்

ஒட்டாவரக் கன்றன்முடி ஒருபஃதவை யுடனே

பிட்டானவன் உமையாளொடு மேவும்பெரு நகரே.

 

1.14.8

 

149

 

அறையும்மரி குரலோசையை அஞ்சியடும் ஆனை

குறையும்மன மாகிம்முழை வைகுங்கொடுங் குன்றம்

மறையும்மவை யுடையானென நெடியானென இவர்கள்

இறையும்மறி வொண்ணாதவன் மேயவ்வெழில் நகரே.

 

1.14.9

 

150

 

மத்தக்களி றாளிவ்வர வஞ்சிம்மலை தன்னைக்

குத்திப்பெரு முழைதன்னிடை வைகுங்கொடுங் குன்றம்

புத்தரொடு பொல்லாமனச் சமணர்புறங் கூறப்

பத்தர்க்கருள் செய்தானவன் மேயபழ நகரே.

 

1.14.10

 

151

 

கூனற்பிறை சடைமேல்மிக வுடையான்கொடுங் குன்றைக்

கானற்கழு மலமாநகர்த் தலைவன்நல கவுணி

ஞானத்துயர் சம்பந்தன நலங்கொள்தமிழ் வல்லார்

ஊனத்தொடு துயர்தீர்ந்துல கேத்தும்மெழி லோரே.

 

1.14.11

 

 

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - கொடுங்குன்றேசுவரர்; கொடுங்குன்றீசர் என்றும் பாடம்.

தேவியார் - அமுதவல்லியம்மை; குயிலமுதநாயகி என்றும் பாடம்.

 

1.15 திருநெய்த்தானம்

 

பண் - நட்டபாடை

 

152

 

மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்

கையாடியகேடில் கரியுரிமூடிய வொருவன்

செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும்

நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.

 

1.15.1

 

152

 

பறையும்பழி பாவம்படு துயரம்பல தீரும்

பிறையும்புனல் அரவும்படு சடையெம்பெருமா னூர்

அறையும்புனல் வருகாவிரி அலைசேர்வட கரைமேல்

நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே.

 

1.15.2

 

154

 

பேயாயின பாடப்பெரு நடமாடிய பெருமான்

வேயாயின தோளிக்கொரு பாகம்மிக வுடையான்

தாயாகிய வுலகங்களை நிலைபேறுசெய் தலைவன்

நேயாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.

 

1.15.3

 

155

 

சுடுநீறணி யண்ணல்சுடர் சூலம்மனல் ஏந்தி

நடுநள்ளிருள் நடமாடிய நம்பன்னுறை யிடமாம்

கடுவாளிள அரவாடுமிழ் கடல்நஞ்சம துண்டான்

நெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானமெ னீரே.

 

1.15.4

 

156

 

நுகராரமொ டேலம்மணி செம்பொன்னுரை யுந்திப்

பகராவரு புனற்காவிரி பரவிப்பணிந் தேத்தும்

நிகரான்மண லிடுதன்கரை(*) நிகழ்வாயநெய்த் தான

நகரானடி யேத்தந்நமை நடலையடை யாவே.

(*) தண்கரை என்றும் பாடம்.

 

1.15.5

 

157

 

விடையார்கொடி யுடையவ்வணல் வீந்தார்வெளை யெலும்பும்

உடையார்நறு மாலைச்சடை யுடையாரவர் மேய

புடையேபுனல் பாயும்வயல் பொழில்சூழ்தணெய்த்(*) தானம்

அடையாதவ ரென்றும்அம ருலகம்மடை யாரே.

(*) சூழ்ந்த நெய்த்தானம் என்றும் பாடம்.

 

1.15.6

 

158

 

நிழலார்வயல் கமழ்சோலைகள் நிறைகின்றநெய்த் தானத்

தழலானவன் அனலங்கையி லேந்தியழ காய

கழலானடி நாளுங்கழ லாதேவிட லின்றித்

தொழலாரவர் நாளுந்துய ரின்றித்தொழு வாரே.

 

1.15.7

 

159

 

அறையார்கட லிலங்கைக்கிறை யணிசேர்கயி லாயம்

இறையாரமுன் எடுத்தான்இரு பதுதோளிற ஊன்றி

நிறையார்புனல் நெய்த்தானன்நன் நிகழ்சேவடி பரவக்

கறையார்கதிர் வாளீந்தவர் கழலேத்துதல் கதியே.

 

1.15.8

 

160

 

கோலம்முடி நெடுமாலொடு கொய்தாமரை யானும்

சீலம்மறி வரிதாயொளி திகழ்வாயநெய்த் தானம்

காலம்பெற மலர்நீரவை தூவித்தொழு தேத்தும்

ஞாலம்புகழ் அடியாருடல் உறுநோய்நலி யாவே.

 

1.15.9

 

161

 

மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர்

புத்தரவர் சொன்னம்மொழி பொருளாநினை யேன்மின்

நித்தம்பயில் நிமலன்னுறை நெய்த்தானம தேத்தும்

சித்தம்முடை யடியாருடல் செறுநோயடை யாவே.

 

1.15.10

 

162

 

தலம்மல்கிய புனற்காழியுள் தமிழ்ஞானசம் பந்தன்

நிலம்மல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில்

பலம்மல்கிய பாடல்லிவை பத்தும்மிக வல்லார்

சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்சிவ கதியே.

 

1.15.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - நெய்யாடியப்பர்,

தேவியார் - வாலாம்பிகையம்மை.

 

1.16 திருப்புள்ளமங்கை - திரு ஆலந்துறை

 

பண் - நட்டபாடை

 

163

 

பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான்

போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக்

காலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில்

ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே.

 

1.16.1

 

164

 

மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தன்மைப்

புலையாயின களைவானிடம் பொழில்சூழ்புள மங்கைக்

கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த

அலையார்புனல் வருகாவிரி ஆலந்துறை அதுவே.

 

1.16.2

 

165

 

கறையார்மிட றுடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல்

பொறையார்தரு கங்கைப்புன லுடையான்புள மங்கைச்

சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ்திரு வாலந்

துறையானவன் நறையார்கழல் தொழுமின்துதி செய்தே.

 

1.16.3

 

166

 

தணியார்மதி அரவின்னொடு வைத்தானிடம் மொய்த்தெம்

பணியாயவன் அடியார்தொழு தேத்தும்புள மங்கை

மணியார்தரு கனகம்மவை வயிரத்திர ளோடும்

அணியார்மணல் அணைகாவிரி யாலந்துறை யதுவே.

 

1.16.4

 

167

 

மெய்த்தன்னுறும் வினைதீர்வகை தொழுமின்செழு மலரின்

கொத்தின்னொடு சந்தாரகில் கொணர்காவிரிக் கரைமேல்

பொத்தின்னிடை யாந்தைபல பாடும்புள மங்கை

அத்தன்நமை யாள்வானிடம் ஆலந்துறை யதுவே.

 

1.16.5

 

168

 

மன்னானவன் உலகிற்கொரு மழையானவன் பிழையில்

பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை

என்னானவன் இசையானவன் இளஞாயிறின் சோதி

அன்னானவன் உறையும்மிடம் ஆலந்துறை யதுவே.

 

1.16.6

 

169

 

முடியார்தரு சடைமேல்முளை இளவெண்மதி சூடி

பொடியாடிய திருமேனியர் பொழில்சூழ்புள மங்கை

கடியார்மலர் புனல்கொண்டுதன் கழலேதொழு தேத்தும்

அடியார்தமக் கினியானிடம் ஆலந்துறை யதுவே.

 

1.16.7

 

170

 

இலங்கைமன்னன் முடிதோளிற எழிலார்திரு விரலால்

விலங்கல்லிடை அடர்த்தானிடம் வேதம்பயின் றேத்திப்

புலன்கள்தமை வென்றார்புக ழவர்வாழ்புள மங்கை

அலங்கல்மலி சடையானிடம் ஆலந்துறை யதுவே.

 

1.16.8

 

171

 

செறியார்தரு வெள்ளைத்திரு நீற்றின்திரு முண்டப்

பொறியார்தரு புரிநூல்வரை மார்பன்புள மங்கை

வெறியார்தரு கமலத்தயன் மாலுந்தனை நாடி

அறியாவகை நின்றானிடம் ஆலந்துறை யதுவே.

 

1.16.9

 

172

 

நீதியறி யாதாரமண் கையரொடு மண்டைப்

போதியவ ரோதும்முரை கொள்ளார்புள மங்கை

ஆதியவர் கோயில்திரு ஆலந்துறை தொழுமின்

சாதிம்மிகு வானோர்தொழு தன்மைபெற லாமே.

 

1.16.10

 

173

 

பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை

அந்தண்புனல் வருகாவிரி யாலந்துறை யானைக்

கந்தம்மலி கமழ்காழியுள் கலைஞானசம் பந்தன்

சந்தம்மலி பாடல்சொலி ஆடத்தவ மாமே.

 

1.16.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பசுபதிநாயகர்,

தேவியார் - பால்வளைநாயகியம்மை.

பல்வளைநாயகியம்மை என்றும் பாடம்.

 

1.17 திருஇடும்பாவனம்

 

பண் - நட்டபாடை

 

174

 

மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்

தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்திச்

சினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில்

இனமாதவர் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

 

1.17.1

 

175

 

மலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி

நிலையார்தரு நிமலன்வலி நிலவும்புகழ் ஒளிசேர்

கலையார்தரு புலவோரவர் காவல்மிகு குன்றில்

இலையார்தரு பொழில்சூழ்வரும் இடும்பாவன மிதுவே.

 

1.17.2

 

176

 

சீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்தெழும் எந்தை

ஞாலம்மிகு கடல்சூழ்தரும் உலகத்தவர் நலமார்

கோலம்மிகு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்

ஏலங்கமழ் பொழில்சூழ்தரும் இடும்பாவன மிதுவே.

 

1.17.3

 

177

 

பொழிலார்தரு குலைவாழைகள் எழிலார்திகழ் போழ்தில்

தொழிலான்மிகு தொண்டரவர் தொழுதாடிய முன்றில்

குழலார்தரு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்

எழிலார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

 

1.17.4

 

178

 

பந்தார்விரல் உமையாளொரு பங்காகங்கை முடிமேல்

செந்தாமரை மலர்மல்கிய செழுநீர்வயற் கரைமேல்

கொந்தார்மலர் புன்னைமகிழ் குரவங்கமழ் குன்றில்

எந்தாயென இருந்தானிடம் இடும்பாவன மிதுவே.

 

1.17.5

 

179

 

நெறிநீர்மையர் நீள்வானவர் நினையுந்நினை வாகி

அறிநீர்மையி லெய்தும்மவர்க் கறியும்மறி வருளிக்

குறிநீர்மையர் (*)குணமார்தரு மணமார்தரு குன்றில்

எறிநீர்வயல் புடைசூழ்தரும் இடும்பாவன மிதுவே.

(*) குளமார்தரும் என்றும் பாடம்.

 

1.17.6

 

180

 

நீறேறிய திருமேனியர் நிலவும்முல கெல்லாம்

பாறேறிய படுவெண்டலை கையிற்பலி வாங்காக்

கூறேறிய மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி

ஏறேறிய இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

 

1.17.7

 

181

 

தேரார்தரு திகழ்வாளெயிற் றரக்கன்சிவன் மலையை

ஓராதெடுத் தார்த்தான்முடி யொருபஃதவை நெரித்துக்

கூரார்தரு கொலைவாளொடு குணநாமமுங் கொடுத்த

ஏரார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

 

1.17.8

 

182

 

பொருளார்தரு மறையோர்புகழ் விருத்தர்பொலி மலிசீர்த்

தெருளார்தரு சிந்தையொடு சந்தம்மலர் பலதூய்

மருளார்தரு மாயன்னயன் காணார்மய லெய்த

இருளார்தரு கண்டர்க்கிடம் இடும்பாவன மிதுவே.

 

1.17.9

 

183

 

தடுக்கையுடன் இடுக்கித்தலை பறித்துச்(*)சம ணடப்பர்

உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பிட்டுழல் வாரும்

மடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல் மலிநீர்மலர்க் கரைமேல்

இடுக்கண்பல களைவானிடம் இடும்பாவன மிதுவே. 10

(*) சமண்டப்பர் என்றும் பாடம்.

 

1.17.10

 

184

 

கொடியார்நெடு மாடக்குன்ற ளூரிற்கரைக் கோல

இடியார்கட லடிவீழ்தரும் இடும்பாவனத் திறையை

அடியாயுமந் தணர்காழியுள் அணிஞானசம் பந்தன்

படியாற்சொன்ன பாடல்சொலப் பறையும்வினை தானே.

 

1.17.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சற்குணநாதர்,

தேவியார் - மங்களநாயகியம்மை.

 

1.18 திருநின்றியூர்

 

பண் - நட்டபாடை

 

185

 

*சூலம்படை சுண்ணப்பொடி **சாந்தஞ்சுடு நீறு

பாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக்

காலன்வலி காலின்னொடு போக்கிக்கடி கமழும்

நீலம்மலர்ப் பொய்கைநின்றி யூரின்நிலை யோர்க்கே.

(*) சூலப்படை என்றும் பாடம்.

(**) சாத்துஞ் சுடுநீறு என்றும் பாடம்.

 

1.18.1

 

186

 

அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார்

நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில்

நச்சம்மிட றுடையார்நறுங் கொன்றைநயந் தாளும்*

பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே.

(*) நயந்தானா என்றும் பாடம்.

 

1.18.2

 

187

 

பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார

அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை

நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில்

உறையும்மிறை யல்லதென துள்ளம் முணராதே.

 

1.18.3

 

188

 

பூண்டவ்வரை மார்பிற்புரி நூலன்விரி கொன்றை

ஈண்டவ்வத னோடும்மொரு பாலம்மதி யதனைத்

தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றியது தன்னில்

ஆண்டகழல் தொழலல்லது அறியாரவ ரறிவே.

 

1.18.4

 

189

 

குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில் கூவும்

நிழலின்னெழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில்

அழலின்வலன் அங்கையது *ஏந்தியன லாடுங்

கழலின்னோலி ஆடும்புரி கடவுள்களை கண்ணே.

(*) எய்தி என்றும் பாடம்.

 

1.18.5

 

190

 

மூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம்

சாரல்மதி யதனோடுடன் சலவஞ்சடை வைத்த

வீரன்மலி அழகார்பொழில் மிடையுந்திரு நின்றி

யூரன்கழ லல்லாதென துள்ள முணராதே.

 

1.18.6

 

191

 

பற்றியொரு தலைகையினி லேந்திப்பலி தேரும்

பெற்றியது வாகித்திரி தேவர்பெரு மானார்

சுற்றியொரு வேங்கையத ளோடும்பிறை சூடும்

நெற்றியொரு கண்ணார்நின்றி யூரின்நிலை யாரே.

 

1.18.7

 

               

* இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

1.18.8

 

192

 

நல்லமலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான்

அல்லரென ஆவரென நின்றும்மறி வரிய

நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரில்நிலை யாரெஞ்

செல்வரடி யல்லாதென சிந்தையுண ராதே.

 

1.18.9

 

193

 

நெறியில்வரு பேராவகை நினையாநினை வொன்றை

அறிவில்சமண் ஆதருரை கேட்டும்மய ராதே

நெறியில்லவர் குறிகள்நினை யாதேநின்றி யூரில்

மறியேந்திய கையானடி வாழ்த்தும்மது வாழ்த்தே.

 

1.18.10

 

194

 

குன்றமது எடுத்தானுடல் தோளுந்நெரி வாக

நின்றங்கொரு விரலாலுற வைத்தான்நின்றி யூரை

நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்

குன்றாத்தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே.

 

1.18.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - இலட்சுமியீசுவரர்,

தேவியார் - உலகநாயகியம்மை.

 

1.19 திருக்கழுமலம் - திருவிராகம்

 

பண் - நட்டபாடை

 

195

 

பிறையணி படர்சடை முடியிடைப்

 

பெருகிய புனலுடை யவனிறை

இறையணி வளையிணை முலையவ

 

ளிணைவன தெழிலுடை யிடவகை

கறையணி பொழில்நிறை வயலணி

 

கழுமலம் அமர்கனல் உருவினன்

நறையணி மலர்நறு விரைபுல்கு

 

நலம்மலி கழல்தொழன் மருவுமே.

 

1.19.1

 

196

 

பிணிபடு கடல்பிற விகளற

 

லெளிதுள ததுபெரு கியதிரை

அணிபடு கழுமலம் இனிதம

 

ரனலுரு வினனவிர் சடைமிசை

தணிபடு கதிர்வள ரிளமதி

 

புனைவனை உமைதலை வனைநிற

மணிபடு கறைமிட றனைநல

 

மலிகழ லிணைதொழன் மருவுமே.

 

1.19.2

 

197

 

வரியுறு புலியத ளுடையினன்

 

வளர்பிறை யொளிகிளர் கதிர்பொதி

விரியுறு சடைவிரை புழைபொழில்

 

விழவொலி மலிகழு மலம்அமர்

எரியுறு நிறஇறை வனதடி

 

இரவொடு பகல்பர வுவர்தம

தெரியுறு வினைசெறி கதிர்முனை

 

இருள்கெட நனிநினை வெய்துமதே.

 

1.19.3

 

198

 

வினைகெட மனநினை வதுமுடி

 

கெனின்நனி தொழுதெழு குலமதி

புனைகொடி யிடைபொருள் தருபடு

 

களிறின துரிபுதை யுடலினன்

மனைகுட வயிறுடை யனசில

 

வருகுறள் படையுடை யவன்மலி

கனைகட லடைகழு மலமமர்

 

கதிர்மதி யினனதிர் கழல்களே.

 

1.19.4

 

199

 

தலைமதி புனல்விட அரவிவை

 

தலைமைய தொருசடை யிடையுடன்

நிலைமரு வவொரிட மருளினன்

 

நிழன்மழு வினொடழல் கணையினன்

மலைமரு வியசிலை தனின்மதி

 

லெரியுண மனமரு வினன்நல

கலைமரு வியபுற வணிதரு

 

கழுமலம் இனிதமர் தலைவனே.

 

1.19.5

 

200

 

வரைபொரு திழியரு விகள்பல

 

பருகொரு கடல்வரி மணலிடை

கரைபொரு திரையொலி கெழுமிய

 

கழுமலம் அமர்கன லுருவினன்

அரைபொரு புலியதள் உடையினன்

 

அடியிணை தொழவரு வினையெனும்

உரைபொடி படவுறு துயர்கெட

 

வுயருல கெய்தலொரு தலைமையே.

 

1.19.6

 

201

 

முதிருறு கதிர்வளர் இளமதி

 

சடையனை நறநிறை தலைதனில்

உதிருறு மயிர்பிணை தவிர்தசை

 

யுடைபுலி அதளிடை யிருள்கடி

கதிருறு சுடரொளி கெழுமிய

 

கழுமலம் அமர்மழு மலிபடை

அதிருறு கழலடி களதடி

 

தொழுமறி வலதறி வறியமே.

 

1.19.7

 

202

 

கடலென நிறநெடு முடியவ

 

னடுதிறல் தெறஅடி சரணென

அடல்நிறை படையரு ளியபுக

 

ழரவரை யினன்அணி கிளர்பிறை

விடம்நிறை மிடறுடை யவன்விரி

 

சடையவன் விடையுடை யவனுமை

உடனுறை பதிகடல் மறுகுடை

 

யுயர்கழு மலவியன் நகரதே.

 

1.19.8

 

203

 

கொழுமல ருறைபதி யுடையவன்

 

நெடியவ னெனவிவர் களுமவன்

விழுமையை யளவறி கிலரிறை

 

விரைபுணர் பொழிலணி விழவமர்

கழுமலம் அமர்கன லுருவினன்

 

அடியிணை தொழுமவ ரருவினை

எழுமையு மிலநில வகைதனி

 

லெளிதிமை யவர்விய னுலகமே.

 

1.19.9

 

204

 

அமைவன துவரிழு கியதுகி

 

லணியுடை யினர்அமண் உருவர்கள்

சமையமும் ஒருபொரு ளெனுமவை

 

சலநெறி யனஅற வுரைகளும்

இமையவர் தொழுகழு மலமம

 

ரிறைவன தடிபர வுவர்தமை

நமையல வினைநல னடைதலி

 

லுயர்நெறி நனிநணு குவர்களே.

 

1.19.10

 

205

 

பெருகிய தமிழ்விர கினன்மலி

 

பெயரவ னுறைபிணர் திரையொடு

கருகிய நிறவிரி கடலடை

 

கழுமல முறைவிட மெனநனி

பெருகிய சிவனடி பரவிய

 

பிணைமொழி யனவொரு பதுமுடன்

மருவிய மனமுடை யவர்மதி

 

யுடையவர் விதியுடை யவர்களே.

 

1.19.11

 

 

கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர்.

திருச்சிற்றம்பலம்

 

 

1.20 திருவீழிமிழலை - திருவிராகம்

 

பண் - நட்டபாடை

 

206

 

தடநில வியமலை நிறுவியொர்

 

தழலுமிழ் தருபட அரவுகொ

டடல்அசு ரரொடம ரர்கள்அலை

 

கடல்கடை வுழியெழு மிகுசின

விடமடை தருமிட றுடையவன்

 

விடைமிசை வருமவ னுறைபதி

திடமலி தருமறை முறையுணர்

 

மறையவர் நிறைதிரு மிழலையே.

 

1.20.1

 

207

 

தரையொடு திவிதல நலிதரு

 

தகுதிற லுறுசல தரனது

வரையன தலைவிசை யொடுவரு

 

திகிரியை அரிபெற அருளினன்

உரைமலி தருசுர நதிமதி

 

பொதிசடை யவனுறை பதிமிகு

திரைமலி கடல்மண லணிதரு

 

பெறுதிடர் வளர்திரு மிழலையே.

 

1.20.2

 

208

 

மலைமகள் தனையிகழ் வதுசெய்த

 

மதியறு சிறுமன வனதுயர்

தலையினொ டழலுரு வனகரம்

 

அறமுனி வுசெய்தவ னுறைபதி

கலைநில வியபுல வர்களிடர்

 

களைதரு கொடைபயில் பவர்மிகு

சிலைமலி மதில்புடை தழுவிய

 

திகழ்பொழில் வளர்திரு மிழலையே.

 

1.20.3

 

209

 

மருவலர் புரமெரி யினின்மடி

 

தரவொரு கணைசெல நிறுவிய

பெருவலி யினன்நலம் மலிதரு

 

கரனுர மிகுபிணம் அமர்வன

இருளிடை யடையுற வொடுநட

 

விசையுறு பரனினி துறைபதி

தெருவினில் வருபெரு விழவொலி

 

மலிதர வளர்திரு மிழலையே.

 

1.20.4

 

210

 

அணிபெறு வடமர நிழலினி

 

லமர்வொடு மடியிணை யிருவர்கள்

பணிதர அறநெறி மறையொடு

 

மருளிய பரனுறை விடமொளி

மணிபொரு வருமர கதநில

 

மலிபுன லணைதரு வயலணி

திணிபொழில் தருமணம் மதுநுக

 

ரறுபத முரல்திரு மிழலையே.

 

1.20.5

 

211

 

வசையறு வலிவன சரவுரு

 

வதுகொடு நினைவரு தவமுயல்

விசையன திறன்மலை மகளறி

 

வுறுதிற லமர்மிடல்கொடுசெய்து

அசைவில படையருள் புரிதரு

 

மவனுறை பதியது மிகுதரு

திசையினின் மலர்குல வியசெறி

 

பொழின்மலி தருதிரு மிழலையே.

 

1.20.6

 

212

 

நலமலி தருமறை மொழியொடு

 

நதியுறு புனல்புகை ஒளிமுதல்

மலரவை கொடுவழி படுதிறன்

 

மறையவ னுயிரது கொளவரு

சலமலி தருமற லிதனுயிர்

 

கெடவுதை செய்தவர னுறைபதி

(*)திலகமி தெனவுல குகள்புகழ்

 

தருபொழி லணிதிரு மிழலையே.

(*) திலதமிதென என்றும் பாடம்.

 

1.20.7

 

213

 

அரனுறை தருகயி லையைநிலை

 

குலைவது செய்ததச முகனது

கரமிரு பதுநெரி தரவிரல்

 

நிறுவிய கழலடி யுடையவன்

வரன்முறை யுலகவை தருமலர்

 

வளர்மறை யவன்வழி வழுவிய

சிரமது கொடுபலி திரிதரு

 

சிவனுறை பதிதிரு மிழலையே.

 

1.20.8

 

214

 

அயனொடும் எழிலமர் மலர்மகள்

 

மகிழ்கண னளவிட லொழியவொர்

பயமுறு வகைதழல் நிகழ்வதொர்

 

படியுரு வதுவர வரன்முறை

சயசய வெனமிகு துதிசெய

 

வெளியுரு வியவவ னுறைபதி

செயநில வியமதில் மதியது

 

தவழ்தர வுயர்திரு மிழலையே.

 

1.20.9

 

215

 

இகழுரு வொடுபறி தலைகொடு

 

மிழிதொழில் மலிசமண் விரகினர்

திகழ்துவ ருடையுடல் பொதிபவர்

 

கெடஅடி யவர்மிக அருளிய

புகழுடை யிறையுறை பதிபுன

 

லணிகடல் புடைதழு வியபுவி

திகழ்சுரர் தருநிகர் கொடையினர்

 

செறிவொடு திகழ்திரு மிழலையே.

 

1.20.10

 

216

 

சினமலி கரியுரி செய்தசிவ

 

னுறைதரு திருமிழ லையைமிகு

தனமனர் சிரபுர நகரிறை

 

தமிழ்விர கனதுரை யொருபதும்

மனமகிழ் வொடுபயில் பவரெழின்

 

மலர்மகள் கலைமகள் சயமகள்

இனமலி புகழ்மக ளிசைதர

 

இருநில னிடையினி தமர்வரே.

 

1.20.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.21 திருச்சிவபுரம் - திருவிராகம்

 

பண் - நட்டபாடை

 

217

 

புவம்வளி கனல்புனல் புவி(*)கலை

 

யுரைமறை திரிகுணம் அமர்நெறி

திவமலி தருசுரர் முதலியர்

 

திகழ்தரும் உயிரவை யவைதம

பவமலி தொழிலது நினைவொடு

 

பதுமநன் மலரது மருவிய

சிவனது சிவபுரம் நினைபவர்

 

செழுநில னினில்நிலை பெறுவரே. 01

(*) கலைபுரை என்றும் பாடம்.

 

1.21.1

 

218

 

மலைபல வளர்தரு புவியிடை

 

மறைதரு வழிமலி மனிதர்கள்

நிலைமலி சுரர்முதல் உலகுகள்

 

நிலைபெறு வகைநினை வொடுமிகும்

அலைகடல் நடுவறி துயிலமர்

 

அரியுரு வியல்பர னுறைபதி

சிலைமலி மதிள்சிவ புரம்நினை

 

பவர்திரு மகளொடு திகழ்வரே.

 

1.21.2

 

219

 

பழுதில கடல்புடை தழுவிய

 

படிமுத லியவுல குகள்மலி

குழுவிய சுரர்பிறர் மனிதர்கள்

 

குலம்மலி தருமுயி ரவையவை

முழுவதும் அழிவகை நினைவொடு

 

*முதலுரு வியல்பர னுறைபதி

செழுமணி யணிசிவ புரநகர்

 

தொழுமவர் புகழ்மிகு முலகிலே.

(*) முதலுருவிய வரனுரைபதி என்றும் பாடம்.

 

1.21.3

 

220

 

நறைமலி தருமள றொடுமுகை

 

நகுமலர் புகைமிகு வளரொளி

நிறைபுனல் கொடுதனை நினைவொடு

 

நியதமும் வழிபடும் அடியவர்

குறைவில பதமணை தரஅருள்

 

குணமுடை யிறையுறை வனபதி

சிறைபுன லமர்சிவ புரமது

 

நினைபவர் செயமகள் தலைவரே.

 

1.21.4

 

221

 

சினமலி யறுபகை மிகுபொறி

 

சிதைதரு வகைவளி நிறுவிய

மனனுணர் வொடுமலர் மிசையெழு

 

தருபொருள் நியதமும் உணர்பவர்

தனதெழி லுருவது கொடுஅடை

 

தகுபர னுறைவது நகர்மதில்

கனமரு வியசிவ புரம்நினை

 

பவர்கலை மகள்தர நிகழ்வரே.

 

1.21.5

 

222

 

சுருதிகள் பலநல முதல்கலை

 

துகளறு வகைபயில் வொடுமிகு

உருவிய லுலகவை புகழ்தர

 

வழியொழு குமெயுறு பொறியொழி

அருதவ முயல்பவர் தனதடி

 

யடைவகை நினையர னுறைபதி

திருவளர் சிவபுரம் நினைபவர்

 

திகழ்குலன் நிலனிடை நிகழுமே.

 

1.21.6

 

223

 

கதமிகு கருவுரு வொடு*வுகி

 

ரிடைவட வரைகண கணவென

மதமிகு நெடுமுக னமர்வளை

 

மதிதிகழ் எயிறதன் நுதிமிசை

இதமமர் புவியது நிறுவிய

 

எழிலரி வழிபட அருள்செய்த

பதமுடை யவனமர் சிவபுரம்

 

நினைபவர் நிலவுவர் படியிலே.

(*) உகிரிடவட என்றும் படம்.

 

1.21.7

 

224

 

அசைவுறு தவமுயல் வினிலயன்

 

அருளினில் வருவலி கொடுசிவன்

இசைகயி லையையெழு தருவகை

 

இருபது கரமவை நிறுவிய

நிசிசரன் முடியுடை தரவொரு

 

விரல்பணி கொளுமவ னுறைபதி

திசைமலி சிவபுரம் நினைபவர்

 

செழுநில னினில்நிகழ் வுடையரே.

 

1.21.8

 

225

 

அடல்மலி படையரி அயனொடும்

 

அறிவரி யதொரழல் மலிதரு

சுடருரு வொடுநிகழ் தரவவர்

 

வெருவொடு துதியது செயவெதிர்

விடமலி களநுத லமர்கண

 

துடையுரு வெளிபடு மவன்நகர்

திடமலி பொழிலெழில் சிவபுரம்

 

நினைபவர் வழிபுவி திகழுமே.

 

1.21.9

 

226

 

குணமறி வுகள்நிலை யிலபொரு

 

ளுரைமரு வியபொருள் களுமில

திணமெனு மவரொடு செதுமதி

 

மிகுசம ணருமலி தமதுகை

உணலுடை யவருணர் வருபர

 

னுறைதரு பதியுல கினில்நல

கணமரு வியசிவ புரம்நினை

 

பவரெழி லுருவுடை யவர்களே.

 

1.21.10

 

227

 

திகழ்சிவ புரநகர் மருவிய

 

சிவனடி யிணைபணி சிரபுர

நகரிறை தமிழ்விர கனதுரை

 

நலமலி யொருபதும் நவில்பவர்

நிகழ்குல நிலநிறை திருவுரு

 

நிகரில கொடைமிகு சயமகள்

புகழ்புவி வளர்வழி யடிமையின்

 

மிகைபுணர் தரநலம் மிகுவரே.

 

1.21.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பிரமபுரிநாயகர், தேவியார் - பெரியநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

1.22 திருமறைக்காடு - திருவிராகம்

 

பண் - நட்டபாடை

 

228

 

சிலைதனை நடுவிடை நிறுவியொர்

 

சினமலி அரவது கொடுதிவி

தலமலி சுரரசு ரர்களொலி

 

சலசல கடல்கடை வுழிமிகு

கொலைமலி விடமெழ அவருடல்

 

குலைதர வதுநுகர் பவனெழில்

மலைமலி மதில்புடை தழுவிய

 

மறைவனம் அமர்தரு பரமனே.

 

1.22.1

 

229

 

கரமுத லியஅவ யவமவை

 

கடுவிட அரவது கொடுவரு

வரல்முறை அணிதரு மவனடல்

 

வலிமிகு புலியத ளுடையினன்

இரவலர் துயர்கெடு வகைநினை

 

இமையவர் புரமெழில் பெறவளர்

மரநிகர் கொடைமனி தர்கள்பயில்

 

மறைவனம் அமர்தரு பரமனே.

 

1.22.2

 

230

 

இழைவளர் தருமுலை மலைமக

 

ளினிதுறை தருமெழி லுருவினன்

முழையினின் மிகுதுயி லுறுமரி

 

முசிவொடும் எழமுள ரியொடெழு

கழைநுகர் தருகரி யிரிதரு

 

கயிலையின் மலிபவ னிருளுறும்

மழைதவழ் தருபொழில் நிலவிய

 

மறைவனம் அமர்தரு பரமனே.

 

1.22.3

 

231

 

நலமிகு திருவித ழியின்மலர்

 

நகுதலை யொடுகன கியின்முகை

பலசுர நதிபட அரவொடு

 

மதிபொதி சடைமுடி யினன்மிகு

தலநில வியமனி தர்களொடு

 

தவமுயல் தருமுனி வர்கள்தம

மலமறு வகைமனம் நினைதரு

 

மறைவன மமர்தரு பரமனே.

 

1.22.4

 

232

 

கதிமலி களிறது பிளிறிட

 

வுரிசெய்த அதிகுண னுயர்பசு

பதியதன் மிசைவரு பசுபதி

 

பலகலை யவைமுறை முறையுணர்

விதியறி தருநெறி யமர்முனி

 

கணனொடு மிகுதவ முயல்தரும்

அதிநிபு ணர்கள்வழி படவளர்

 

மறைவனம் அமர்தரு பரமனே.

 

1.22.5

 

233

 

கறைமலி திரிசிகை படையடல்

 

கனல்மழு வெழுதர வெறிமறி

முறைமுறை யொலிதம ருகமுடை

 

தலைமுகிழ் மலிகணி வடமுகம்

உறைதரு கரனுல கினிலுய

 

ரொளிபெறு வகைநினை வொடுமலர்

மறையவன் மறைவழி வழிபடு

 

மறைவனம் அமர்தரு பரமனே.

 

1.22.6

 

234

 

இருநில னதுபுன லிடைமடி

 

தரஎரி புகஎரி யதுமிகு

பெருவளி யினிலவி தரவளி

 

கெடவிய னிடைமுழு வதுகெட

இருவர்க ளுடல்பொறை யொடுதிரி

 

யெழிலுரு வுடையவன் இனமலர்

மருவிய அறுபதம் இசைமுரல்

 

மறைவனம் அமர்தரு பரமனே.

 

1.22.7

 

235

 

சனம்வெரு வுறவரு தசமுக

 

னொருபது முடியொடு மிருபது

கனமரு வியபுயம் நெரிவகை

 

கழலடி யிலொர்விரல் நிறுவினன்

இனமலி கணநிசி சரன்மகிழ்

 

வுறவருள் செய்தகரு ணையனென

மனமகிழ் வொடுமறை முறையுணர்

 

மறைவனம் அமர்தரு பரமனே.

 

1.22.8

 

236

 

அணிமலர் மகள்தலை மகனயன்

 

அறிவரி யதொர்பரி சினிலெரி

திணிதரு திரளுரு வளர்தர

 

அவர்வெரு வுறலொடு துதிசெய்து

பணியுற வெளியுரு வியபர

 

னவனுரை மலிகடல் திரளெழும்

மணிவள ரொளிவெயில் மிகுதரு

 

மறைவனம் அமர்தரு பரமனே.

 

1.22.9

 

237

 

இயல்வழி தரவிது செலவுற

 

இனமயி லிறகுறு தழையொடு

செயல்மரு வியசிறு கடமுடி

 

யடைகையர் தலைபறி செய்துதவம்

முயல்பவர் துவர்படம் உடல்பொதி

 

பவரறி வருபர னவனணி

வயலினில் வளைவளம் மருவிய

 

மறைவனம் அமர்தரு பரமனே.

 

1.22.10

 

238

 

வசையறு மலர்மகள் நிலவிய

 

மறைவனம் அமர்பர மனைநினை

பசையொடு மிகுகலை பலபயில்

 

புலவர்கள் புகழ்வழி வளர்தரு

இசையமர் கழுமல நகரிறை

 

தமிழ்விர கனதுரை யியல்வல

இசைமலி தமிழொரு பதும்வல

 

அவருல கினிலெழில் பெறுவரே.

 

1.22.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - மறைக்காட்டீசுரர், தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

1.23 திருக்கோலக்கா

 

பண் - தக்கராகம்

 

239

 

மடையில் வாளை பாய மாதரார்

குடையும் பொய்கைக் கோலக் காவுளான்

சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ்

உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ.

 

1.23.1

 

240

 

பெண்டான் பாகமாகப் பிறைச் சென்னி

கொண்டான் கோலக் காவு கோயிலாக்

கண்டான் பாதங் கையாற் கூப்பவே

உண்டான் நஞ்சை உலக முய்யவே.

 

1.23.2

 

241

 

பூணற் பொறிகொள் அரவம் புன்சடைக்

கோணற் பிறையன் குழகன் கோலக்கா

மாணப் பாடி மறைவல் லானையே

பேணப் பறையும் பிணிக ளானவே.

 

1.23.3

 

242

 

தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர்

மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான்

குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா

இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே.

 

1.23.4

 

243

 

மயிலார் சாயல் மாதோர் பாகமா

எயிலார் சாய எரித்த எந்தைதன்

குயிலார் சோலைக் கோலக் காவையே

பயிலா நிற்கப் பறையும் பாவமே.

 

1.23.5

 

244

 

வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்

கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்

கொடிகொள் விழவார் கோலக் காவுளெம்

அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே.

 

1.23.6

 

245

 

நிழலார் சோலை நீல வண்டினங்

குழலார் பண்செய் கோலக் காவுளான்

கழலால் மொய்த்த பாதங் கைகளாற்

தொழலார் பக்கல் துயர மில்லையே.

 

1.23.7

 

246

 

எறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்றனை

முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன்

குறியார் பண்செய் கோலக் காவையே

நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.

 

1.23.8

 

247

 

நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில்

ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக்

கூற்ற முதைத்த குழகன் கோலக்கா

ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே.

 

1.23.9

 

248

 

பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும்

உற்ற துவர்தோ யுருவி லாளருங்

குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்

பற்றிப் பரவப் பறையும் பாவமே.

 

1.23.10

 

249

 

நலங்கொள் காழி ஞான சம்பந்தன்

குலங்கொள் கோலக் காவு ளானையே

வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்

உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே.

 

1.23.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சத்தபுரீசர், தேவியார் - ஓசைகொடுத்தநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

1.24 சீகாழி

 

பண் - தக்கராகம்

 

250

 

பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா

காவா யெனநின் றேத்துங் காழியார்

மேவார் புரம்மூன் றட்டா ரவர்போலாம்

பாவா ரின்சொற் பயிலும் பரமரே.

 

1.24.1

 

251

 

எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டிக்

கந்த மாலை கொடுசேர் காழியார்

வெந்த நீற்றர் விமல ரவர்போலாம்

அந்தி நட்டம் ஆடும் அடிகளே.

 

1.24.2

 

252

 

தேனை வென்ற மொழியா ளொருபாகங்

கான மான்கைக் கொண்ட காழியார்

வான மோங்கு கோயி லவர்போலாம்

ஆன இன்பம் ஆடும் அடிகளே.

 

1.24.3

 

253

 

மாணா வென்றிக் காலன் மடியவே

காணா மாணிக் களித்த காழியார்

நாணார் வாளி தொட்டா ரவர்போலாம்

பேணார் புரங்கள் அட்ட பெருமானே.

 

1.24.4

 

254

 

மாடே ஓதம் எறிய வயற்செந்நெல்

காடே றிச்சங் கீனுங் காழியார்

வாடா மலராள் பங்க ரவர்போலாம்

ஏடார் புரமூன் றெரித்த இறைவரே.

 

1.24.5

 

255

 

கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக்

கங்கை புனைந்த சடையார் காழியார்

அங்கண் அரவம் ஆட்டும் அவர்போலாஞ்

செங்கண் அரக்கர் புரத்தை யெரித்தாரே.

 

1.24.6

 

256

 

கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடுங்

கல்ல வடத்தை யுகப்பார் காழியார்

அல்ல விடத்து நடந்தா ரவர்போலாம்

பல்ல விடத்தும் பயிலும் பரமரே.

 

1.24.7

 

257

 

எடுத்த அரக்கன் நெரிய விரலூன்றிக்

கடுத்து முரிய அடர்த்தார் காழியார்

எடுத்த பாடற் கிரங்கு மவர்போலாம்

பொடிக்கொள் நீறு பூசும் புனிதரே.

 

1.24.8

 

258

 

ஆற்ற லுடைய அரியும் பிரமனுந்

தோற்றங் காணா வென்றிக் காழியார்

ஏற்ற மேறங் கேறு மவர்போலாங்

கூற்ற மறுகக் குமைத்த குழகரே.

 

1.24.9

 

259

 

பெருக்கப் பிதற்றுஞ் சமணர் சாக்கியர்

கரக்கும் உரையை விட்டார் காழியார்

இருக்கின் மலிந்த இறைவ ரவர்போலாம்

அருப்பின் முலையாள் பங்கத் தையரே.

 

1.24.10

 

260

 

காரார் வயல்சூழ் காழிக் கோன்றனைச்

சீரார் ஞான சம்பந் தன்சொன்ன

பாரார் புகழப் பரவ வல்லவர்

ஏரார் வானத் தினிதா இருப்பரே.

 

1.24.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.25 திருச்செம்பொன்பள்ளி

 

பண் - தக்கராகம்

 

261

 

மருவார் குழலி மாதோர் பாகமாய்த்

திருவார் செம்பொன் பள்ளி மேவிய

கருவார் கண்டத் தீசன் கழல்களை

மருவா தவர்மேல் மன்னும் பாவமே.

 

1.25.1

 

262

 

வாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச்

சீரார் செம்பொன் பள்ளி மேவிய

ஏரார் புரிபுன் சடையெம் ஈசனைச்

சேரா தவர்மேற் சேரும் வினைகளே.

 

1.25.2

 

263

 

வரையார் சந்தோ டகிலும் வருபொன்னித்

திரையார் செம்பொன் பள்ளி மேவிய

நரையார் விடையொன் றூரும் நம்பனை

உரையா தவர்மே லொழியா வூனமே.

 

1.25.3

 

264

 

மழுவா ளேந்தி மாதோர் பாகமாய்ச்

செழுவார் செம்பொன் பள்ளி மேவிய

எழிலார் புரிபுன் சடையெம் மிறைவனைத்

தொழுவார் தம்மேல் துயர மில்லையே.

 

1.25.4

 

265

 

மலையான் மகளோ டுடனாய் மதிலெய்த

சிலையார் செம்பொன் பள்ளி யானையே

இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல்

நிலையா வணங்க நில்லா வினைகளே.

 

1.25.5

 

266

 

அறையார் புனலோ டகிலும் வருபொன்னிச்

சிறையார் செம்பொன் பள்ளி மேவிய

கறையார் கண்டத் தீசன் கழல்களை

நிறையால் வணங்க நில்லா வினைகளே.

 

1.25.6

 

267

 

பையார் அரவே ரல்கு லாளொடுஞ்

செய்யார் செம்பொன் பள்ளி மேவிய

கையார் சூல மேந்து கடவுளை

மெய்யால் வணங்க மேவா வினைகளே.

 

1.25.7

 

268

 

வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத்

தேனார் செம்பொன் பள்ளி மேவிய

ஊனார் தலையிற் பலிகொண் டுழல்வாழ்க்கை

ஆனான் கழலே அடைந்து வாழ்மினே.

 

1.25.8

 

269

 

காரார் வண்ணன் கனகம் அனையானுந்

தேரார் செம்பொன் பள்ளி மேவிய

நீரார் நிமிர்புன் சடையெந் நிமலனை

ஓரா தவர்மே லொழியா வூனமே.

 

1.25.9

 

270

 

மாசா ருடம்பர் மண்டைத் தேரரும்

பேசா வண்ணம் பேசித் திரியவே

தேசார் செம்பொன் பள்ளி மேவிய

ஈசா என்ன நில்லா இடர்களே.

 

1.25.10

 

271

 

நறவார் புகலி ஞான சம்பந்தன்

செறுவார் செம்பொன் பள்ளி மேயானைப்

பெறுமா றிசையாற் பாட லிவைபத்தும்

உறுமா சொல்ல வோங்கி வாழ்வரே.

 

1.25.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சொர்னபுரீசர், தேவியார் - சுகந்தவனநாயகியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.26 திருப்புத்தூர்

 

பண் - தக்கராகம்

 

272

 

வெங்கள் விம்மு வெறியார் பொழிற்சோலைத்

திங்க ளோடு திளைக்குந் திருப்புத்தூர்க்

கங்கை தங்கு முடியா ரவர்போலும்

எங்கள் உச்சி உறையும் இறையாரே.

 

1.26.1

 

273

 

வேனல் விம்மு வெறியார் பொழிற்சோலைத்

தேனும் வண்டுந் திளைக்குந் திருப்புத்தூர்

ஊனம் இன்றி யுறைவா ரவர்போலும்

ஏன முள்ளும் எயிறும் புனைவாரே.

 

1.26.2

 

274

 

பாங்கு நல்ல வரிவண் டிசைபாடத்

தேங்கொள் கொன்றை திளைக்குந் திருப்புத்தூர்

ஓங்கு கோயில் உறைவா ரவர்போலுந்

தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே.

 

1.26.3

 

275

 

நாற விண்ட நறுமா மலர்கவ்வித்

தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்தூர்

ஊறல் வாழ்க்கை யுடையா ரவர்போலும்

ஏறு கொண்ட கொடியெம் இறையாரே.

 

1.26.4

 

276

 

இசை விளங்கும் எழில்சூழ்ந் தியல்பாகத்

திசை விளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர்

பசை விளங்கப் படித்தா ரவர்போலும்

வசை விளங்கும் வடிசேர் நுதலாரே.

 

1.26.5

 

277

 

வெண்ணி றத்த விரையோ டலருந்தித்

தெண்ணி றத்த புனல்பாய் திருப்புத்தூர்

ஒண்ணி றத்த ஒளியா ரவர்போலும்

வெண்ணி றத்த விடைசேர் கொடியாரே.

 

1.26.6

 

278

 

நெய்த லாம்பல் கழுநீர் மலர்ந்தெங்குஞ்

செய்கண் மல்கு சிவனார் திருப்புத்தூர்த்

தையல் பாகம் மகிழ்ந்தா ரவர்போலும்

மையுண் நஞ்சம் மருவும் மிடற்றாரே.

 

1.26.7

 

279

 

கருக்கம் எல்லாங் கமழும் பொழிற்சோலைத்

திருக்கொள் செம்மை விழவார் திருப்புத்தூர்

இருக்க வல்ல இறைவ ரவர்போலும்

அரக்கன் ஒல்க விரலால் அடர்த்தாரே.

 

1.26.8

 

280

 

மருவி யெங்கும் வளரும் மடமஞ்ஞை

தெருவு தோறுந் திளைக்குந் திருப்புத்தூர்ப்

பெருகி வாழும் பெருமா னவன்போலும்

பிரமன் மாலும் அறியாப் பெரியோனே.

 

1.26.9

 

281

 

கூறை போர்க்குந் தொழிலா ரமண்கூறல்

தேறல் வேண்டா தெளிமின் திருப்புத்தூர்

ஆறும் நான்கும் அமர்ந்தா ரவர்போலும்

ஏறு கொண்ட கொடியெம் இறையாரே.

 

1.26.10

 

282

 

நல்ல கேள்வி ஞான சம்பந்தன்

செல்வர் சேடர் உறையுந் திருப்புத்தூர்ச்

சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும்

அல்லல் தீரும் அவலம் அடையாவே.

 

1.26.11

 

 

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - புத்தூரீசர், தேவியார் - சிவகாமியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.27 திருப்புன்கூர்

 

பண் - தக்கராகம்

 

283

 

முந்தி நின்ற வினைக ளவைபோகச்

சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்

அந்தம் இல்லா அடிக ளவர்போலுங்

கந்த மல்கு கமழ்புன் சடையாரே.

 

1.27.1

 

284

 

மூவ ராய முதல்வர் முறையாலே

தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர்

ஆவ ரென்னும் அடிக ளவர்போலும்

ஏவின் அல்லார் எயில்மூன் றெரித்தாரே.

 

1.27.2

 

285

 

பங்க யங்கள் மலரும் பழனத்துச்

செங்க யல்கள் திளைக்குந் திருப்புன்கூர்க்

கங்கை தங்கு சடையா ரவர்போலும்

எங்கள் உச்சி உறையும் மிறையாரே.

 

1.27.3

 

286

 

கரையு லாவு கதிர்மா மணிமுத்தம்

திரையு லாவு வயல்சூழ் திருப்புன்கூர்

உரையின் நல்ல பெருமா னவர்போலும்

விரையின் நல்ல மலர்ச்சே வடியாரே.

 

1.27.4

 

287

 

பவழ வண்ணப் பரிசார் திருமேனி

திகழும் வண்ணம் உறையுந் திருப்புன்கூர்

அழக ரென்னும் அடிக ளவர்போலும்

புகழ நின்ற புரிபுன் சடையாரே.

 

1.27.5

 

288

 

தெரிந்தி லங்கு கழுநீர் வயற்செந்நெல்

திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்ப்

பொருந்தி நின்ற அடிக ளவர்போலும்

விரிந்தி லங்கு சடைவெண் பிறையாரே.

 

1.27.6

 

289

 

பாரும் விண்ணும் பரவித் தொழுதேத்தும்

தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர்

ஆர நின்ற அடிக ளவர்போலுங்

கூர நின்ற எயில்மூன் றெரித்தாரே.

 

1.27.7

 

290

 

மலையத னாருடை யமதில் மூன்றுஞ்

சிலையத னாலெரித் தார்திருப் புன்கூர்த்

தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை

மலையத னாலடர்த் துமகிழ்ந் தாரே.

 

1.27.8

 

291

 

நாட வல்ல மலரான் மாலுமாய்த்

தேட நின்றா ருறையுந் திருப்புன்கூர்

ஆட வல்ல அடிக ளவர்போலும்

பாட லாடல் பயிலும் பரமரே.

 

1.27.9

 

292

 

குண்டு முற்றிக் கூறை யின்றியே

பிண்ட முண்ணும் பிராந்தர் சொற்கொளேல்

வண்டு பாட மலரார் திருப்புன்கூர்க்

கண்டு தொழுமின் கபாலி வேடமே.

 

1.27.10

 

293

 

மாட மல்கு மதில்சூழ் காழிமன்

சேடர் செல்வ ருறையுந் திருப்புன்கூர்

நாட வல்ல ஞான சம்பந்தன்

பாடல் பத்தும் பரவி வாழ்மினே.

 

1.27.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சிவலோகநாதர், தேவியார் - சொக்கநாயகியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.28 திருச்சோற்றுத்துறை

 

பண் - தக்கராகம்

 

294

 

செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்

துப்ப னென்னா தருளே துணையாக

ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்

றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே.

 

1.28.1

 

295

 

பாலும் நெய்யுந் தயிரும் பயின்றாடித்

தோலும் நூலுந் துதைந்த வரைமார்பர்

மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை

ஆலுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே.

 

1.28.2

 

296

 

செய்யர் செய்ய சடையர் விடையூர்வர்

கைகொள் வேலர் கழலர் கரிகாடர்

தைய லாளொர் பாக மாயஎம்

ஐயர் சோற்றுத் துறைசென் றடைவோமே.

 

1.28.3

 

297

 

பிணிகொ ளாக்கை யொழியப் பிறப்புளீர்

துணிகொள் போரார் துளங்கு மழுவாளர்

மணிகொள் கண்டர் மேய வார்பொழில்

அணிகொள் சோற்றுத் துறைசென் றடைவோமே.

 

1.28.4

 

298

 

பிறையும் அரவும் புனலுஞ் சடைவைத்து

மறையும் ஓதி மயானம் இடமாக

உறையுஞ் செல்வம் உடையார் காவிரி

அறையும் சோற்றுத் துறைசென் றடைவோமே.

 

1.28.5

 

299

 

துடிக ளோடு முழவம் விம்மவே

பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப்

படிகொள் பாணி பாடல் பயின்றாடும்

அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே.

 

1.28.6

 

300

 

சாடிக் காலன் மாளத் தலைமாலை

சூடி மிக்குச் சுவண்டாய் வருவார்தாம்

பாடி ஆடிப் பரவு வாருள்ளத்

தாடி சோற்றுத் துறைசென் றடைவோமே.

 

1.28.7

 

301

 

பெண்ணோர் பாகம் உடையார் பிறைச்சென்னிக்

கண்ணோர் பாகங் கலந்த நுதலினார்

எண்ணா தரக்கன் எடுக்க வூன்றிய

அண்ணல் சோற்றுத் துறைசென் றடைவோமே.

 

1.28.8

 

302

 

தொழுவா ரிருவர் துயரம் நீங்கவே

அழலா யோங்கி அருள்கள் செய்தவன்

விழவார் மறுகில் விதியால் மிக்கஎம்

எழிலார் சோற்றுத் துறைசென் றடைவோமே.

 

1.28.9

 

303

 

(*)கோது சாற்றித் திரிவார் அமண்குண்டர்

ஓதும் ஓத்தை யுணரா தெழுநெஞ்சே

நீதி நின்று நினைவார் வேடமாம்

ஆதி சோற்றுத் துறைசென் றடைவோமே.

(*) போதுசாற்றி என்றும் பாடம்.

 

1.28.10

 

304

 

அந்தண் சோற்றுத் துறையெம் மாதியைச்

சிந்தை செய்ம்மின் அடியீ ராயினீர்

சந்தம் பரவு ஞான சம்பந்தன்

வந்த வாறே புனைதல் வழிபாடே.

 

1.28.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - தொலையாச்செல்வர், தேவியார் - ஒப்பிலாம்பிகையம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.29 திருநறையூர்ச்சித்தீச்சரம்

 

பண் - தக்கராகம்

 

305

 

ஊரு லாவு பலிகொண் டுலகேத்த

நீரு லாவு நிமிர்புன் சடையண்ணல்

சீரு லாவு மறையோர் நறையூரிற்

சேருஞ் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே.

 

1.29.1

 

306

 

காடு நாடுங் கலக்கப் பலிநண்ணி

ஓடு கங்கை ஒளிர்புன் சடைதாழ

வீடு மாக மறையோர் நறையூரில்

நீடுஞ் சித்தீச் சரமே நினைநெஞ்சே.

 

1.29.2

 

307

 

கல்வி யாளர் கனக மழல்மேனி

புல்கு கங்கை புரிபுன் சடையானூர்

மல்கு திங்கள் பொழில்சூழ் நறையூரிற்

செல்வர் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே.

 

1.29.3

 

308

 

நீட வல்ல நிமிர்புன் சடைதாழ

ஆட வல்ல அடிக ளிடமாகும்

பாடல் வண்டு பயிலும் நறையூரிற்

சேடர் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.

 

1.29.4

 

309

 

உம்ப ராலும் உலகின் னவராலும்

தம்பெ ருமைய ளத்தற் கரியானூர்

நண்பு லாவு மறையோர் நறையூரிற்

செம்பொன் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.

 

1.29.5

 

310

 

கூரு லாவு படையான் விடையேறிப்

போரு லாவு மழுவான் அனலாடி

பேரு லாவு பெருமான் நறையூரிற்

சேருஞ் சித்தீச் சரமே யிடமாமே.

 

1.29.6

 

311

 

*அன்றி நின்ற அவுணர் புரமெய்த

வென்றி வில்லி விமலன் விரும்புமூர்

மன்றில் வாச மணமார் நறையூரிற்

சென்று சித்தீச் சரமே தெளிநெஞ்சே.

(*) அன்றி நின்ற - பகைத்து நின்ற

 

1.29.7

 

312

 

அரக்கன் ஆண்மை யழிய வரைதன்னால்

நெருக்க வூன்றும் விரலான் விரும்புமூர்

பரக்குங் கீர்த்தி யுடையார் நறையூரிற்

திருக்கொள் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.

 

1.29.8

 

313

 

ஆழி யானும் அலரின் உறைவானும்

ஊழி நாடி உணரார் திரிந்துமேல்

சூழு நேட எரியாம் ஒருவன்சீர்

நீழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே.

 

1.29.9

 

314

 

மெய்யின் மாசர் விரிநுண் துகிலிலார்

கையி லுண்டு கழறும் உரைகொள்ளேல்

உய்ய வேண்டில் இறைவன் நறையூரிற்

செய்யுஞ் சித்தீச் சரமே தவமாமே.

 

1.29.10

 

315

 

மெய்த்து லாவு மறையோர் நறையூரிற்

சித்தன் சித்தீச் சரத்தை உயர்காழி

அத்தன் பாதம் அணிஞான சம்பந்தன்

பத்தும் பாடப் பறையும் பாவமே.

 

1.29.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சித்தநாதேசர், தேவியார் - அழகாம்பிகையம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.30 திருப்புகலி

 

பண் - தக்கராகம்

 

316

 

விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக்

கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும்

பதியா வதுபங் கயநின் றலரத்தேன்

பொதியார் பொழில்சூழ் புகலிந் நகர்தானே.

 

1.30.1

 

317

 

ஒன்னார்புர மூன்று மெரித்த ஒருவன்

மின்னாரிடை யாளொடுங் கூடிய வேடந்

தன்னாலுறை வாவது தண்கடல் சூழ்ந்த

பொன்னார் வயற்பூம் புகலிந் நகர்தானே.

 

1.30.2

 

318

 

வலியின்மதி செஞ்சடை வைத்தம ணாளன்

புலியின்னதள் கொண்டரை யார்த்த புனிதன்

மலியும்பதி மாமறை யோர்நிறைந் தீண்டிப்

பொலியும்புனற் பூம்புக லிந்நகர் தானே.

 

1.30.3

 

319

 

கயலார்தடங் கண்ணி யொடும்மெரு தேறி

அயலார்கடை யிற்பலி கொண்ட அழகன்

இயலாலுறை யும்மிடம் எண்டிசை யோர்க்கும்

புயலார்கடற் பூம்புக லிந்நகர் தானே.

 

1.30.4

 

320

 

காதார்கன பொற்குழை தோட திலங்கத்

தாதார்மலர் தண்சடை யேற முடித்து

(*)நாதான்உறை யும்மிட மாவது நாளும்

போதார்பொழிற் பூம்புக லிந்நகர் தானே.

(*) நாதன் - நாதான் என நீண்டது.

 

1.30.5

 

321

 

வலமார்படை மான்மழு ஏந்திய மைந்தன்

கலமார்கடல் நஞ்சமு துண்ட கருத்தன்

குலமார்பதி கொன்றைகள் பொன்சொரி யத்தேன்

புலமார்வயற் பூம்புக லிந்நகர் தானே.

 

1.30.6

 

322

 

கறுத்தான்கன லால்மதில் மூன்றையும் வேவச்

செறுத்தான்திக ழுங்கடல் நஞ்சமு தாக

அறுத்தான்அயன் தன்சிரம் ஐந்திலும் ஒன்றைப்

பொறுத்தானிடம் பூம்புக லிந்நகர் தானே.

 

1.30.7

 

323

 

தொழிலால்மிகு தொண்டர்கள் தோத்திரஞ் சொல்ல

எழிலார்வரை யாலன் றரக்கனைச் செற்ற

கழலானுறை யும்மிடங் கண்டல்கள் மிண்டி

பொழிலால்மலி பூம்புக லிந்நகர் தானே.

 

1.30.8

 

324

 

மாண்டார்சுட லைப்பொடி பூசி மயானத்

தீண்டாநட மாடிய வேந்தன்றன் மேனி

நீண்டானிரு வர்க்கெரி யாய்அர வாரம்

பூண்டான்நகர் பூம்புக லிந்நகர் தானே.

 

1.30.9

 

325

 

உடையார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்

அடையாதன சொல்லுவர் ஆதர்கள் ஓத்தைக்

கிடையாதவன் றன்னகர் நன்மலி பூகம்

புடையார்தரு பூம்புக லிந்நகர் தானே.

 

1.30.10

 

326

 

இரைக்கும்புனல் செஞ்சடை வைத்தஎம் மான்றன்

புரைக்கும்பொழில் பூம்புக லிந்நகர் தன்மேல்

உரைக்குந்தமிழ் ஞானசம் பந்தனொண் மாலை

வரைக்குந்தொழில் வல்லவர் நல்லவர் தாமே.

 

1.30.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.31 திருக்குரங்கணின்முட்டம்

 

பண் - தக்கராகம்

 

327

 

விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்குங்

கழுநீர்குவ ளைம்மல ரக்கயல் பாயுங்

கொழுநீர்வயல் சூழ்ந்த குரங்கணின் முட்டந்

தொழுநீர்மையர் தீதுறு துன்ப மிலரே.

 

1.31.1

 

328

 

விடைசேர்கொடி அண்ணல் விளங்குயர் மாடக்

கடைசேர்கரு மென்குளத் தோங்கிய காட்டில்

குடையார்புனல் மல்கு குரங்கணின் முட்டம்

உடையானெனை யாளுடை யெந்தை பிரானே.

 

1.31.2

 

329

 

சூலப்படை யான்விடை யான்சுடு நீற்றான்

காலன்றனை ஆருயிர் வவ்விய காலன்

கோலப்பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்டத்

தேலங்கமழ் புன்சடை யெந்தை பிரானே.

 

1.31.3

 

330

 

வாடாவிரி கொன்றை வலத்தொரு காதில்

தோடார்குழை யான்நல பாலன நோக்கிக்

கூடாதன செய்த குரங்கணின் முட்டம்

ஆடாவரு வாரவ ரன்புடை யாரே.

 

1.31.4

 

331

 

இறையார்வளை யாளையொர் பாகத் தடக்கிக்

கறையார்மிடற் றான்கரி கீறிய கையான்

குறையார்மதி சூடி குரங்கணின் முட்டத்

துறைவானெமை யாளுடை யொண்சுட ரானே.

 

1.31.5

 

332

 

பலவும்பய னுள்ளன பற்றும் ஒழிந்தோங்

கலவம்மயில் காமுறு பேடையொ டாடிக்

குலவும்பொழில் சூழ்ந்த குரங்கணின் முட்டம்

நிலவும்பெரு மானடி நித்தல் நினைந்தே.

 

1.31.6

 

333

 

மாடார்மலர்க் கொன்றை வளர்சடை வைத்துத்

தோடார்குழை தானொரு காதில் இலங்கக்

கூடார்மதி லெய்து குரங்கணின் முட்டத்

தாடாரர வம்மரை யார்த்தமர் வானே.

 

1.31.7

 

334

 

மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை

உய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்த

கொய்யாமலர் சூடி குரங்கணின் முட்டங்

கையால்தொழு வார்வினை காண்ட லரிதே.

 

1.31.8

 

335

 

வெறியார்மலர்த் தாமரை யானொடு மாலும்

அறியாதசைந் தேத்தவோர் ஆரழ லாகுங்

குறியால்நிமிர்ந் தான்றன் குரங்கணின் முட்டம்

நெறியால்தொழு வார்வினை நிற்ககி லாவே.

 

1.31.9

 

336

 

கழுவார்துவ ராடை கலந்துமெய் போர்க்கும்

வழுவாச்சமண் சாக்கியர் வாக்கவை கொள்ளேல்

குழுமின்சடை யண்ணல் குரங்கணின் முட்டத்

தெழில்வெண்பிறை யானடி சேர்வ தியல்பே.

 

1.31.10

 

337

 

கல்லார்மதிற் காழியுள் ஞானசம் பந்தன்

கொல்லார்மழு வேந்தி குரங்கணில் முட்டஞ்

சொல்லார்தமிழ் மாலை செவிக்கினி தாக

வல்லார்க்கெளி தாம்பிற வாவகை வீடே.

 

1.31.11

 

 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வாலீசுவரர், தேவியார் - இறையார்வளையம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.32 திருவிடைமருதூர்

 

பண் - தக்கராகம்

 

338

 

ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை

காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ்

வாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந்

தீடாவுறை கின்ற இடைமரு தீதோ.

 

1.32.1

 

339

 

தடம்கொண்டதொர் தாமரைப் பொன்முடி தன்மேல்

குடங்கொண்டடி யார்குளிர் நீர்சுமந் தாட்டப்

படங்கொண்டதொர் பாம்பரை யார்த்த பரமன்

இடங்கொண்டிருந் தான்றன் இடைமரு தீதோ.

 

1.32.2

 

340

 

வெண்கோவணங் கொண்டொரு வெண்டலை யேந்தி

அங்கோல்வளை யாளையொர் பாகம் அமர்ந்து

பொங்காவரு காவிரிக் கோலக் கரைமேல்

எங்கோ னுறைகின்ற இடைமரு தீதோ.

 

1.32.3

 

341

 

அந்தம்மறி யாத அருங்கல முந்திக்

கந்தங்கமழ் காவிரிக் கோலக் கரைமேல்

வெந்தபொடிப் பூசிய வேத முதல்வன்

எந்தையுறை கின்ற இடைமரு தீதோ.

 

1.32.4

 

342

 

வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே

தேசம்புகுந் தீண்டியொர் செம்மை யுடைத்தாய்

பூசம்புகுந் தாடிப் பொலிந்தழ காய

ஈசனுறை கின்ற இடைமரு தீதோ.

 

1.32.5

 

343

 

வன்புற்றிள நாகம் அசைத் தழகாக

என்பிற்பல மாலையும் பூண்டெரு தேறி

அன்பிற்பிரி யாதவ ளோடு முடனாய்

இன்புற்றிருந் தான்றன் இடைமரு தீதோ.

 

1.32.6

 

344

 

தேக்குந்திமி லும்பல வுஞ்சுமந் துந்திப்

போக்கிப்புறம் பூச லடிப்ப வருமால்

ஆர்க்குந்திரைக் காவிரிக் கோலக் கரைமேல்

ஏற்கஇருந் தான்றன் இடைமரு தீதோ.

 

1.32.7

 

345

 

பூவார்குழ லாரகில் கொண்டு புகைப்ப

ஓவாதடி யாரடி யுள்குளிர்ந் தேத்த

ஆவாஅரக் கன்றனை ஆற்ற லழித்த

ஏவார்சிலை யான்றன் இடைமரு தீதோ.

 

1.32.8

 

346

 

முற்றாததொர் பால்மதி சூடு முதல்வன்

நற்றாமரை யானொடு மால்நயந் தேத்தப்

பொற்றோளியுந் தானும் பொலிந்தழ காக

எற்றேயுறை கின்ற இடைமரு தீதோ.

 

1.32.9

 

347

 

சிறுதேரரும் சில்சம ணும்புறங் கூற

நெறியேபல பத்தர்கள் கைதொழு தேத்த

வெறியாவரு காவிரிக் கோலக் கரைமேல்

எறியார்மழு வாளன் இடைமரு தீதோ.

 

1.32.10

 

348

 

கண்ணார்கமழ் காழியுள் ஞானசம் பந்தன்

எண்ணார்புக ழெந்தை யிடைமரு தின்மேல்

பண்ணோடிசை பாடிய பத்தும்வல் லார்கள்

விண்ணோருல கத்தினில் வீற்றிருப் பாரே.

 

1.32.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - மருதீசர், தேவியார் - நலமுலைநாயகியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.33 திரு அன்பிலாலந்துறை

 

பண் - தக்கராகம்

 

349

 

கணைநீடெரி மாலர வம்வரை வில்லா

இணையாஎயில் மூன்றும் எரித்த இறைவர்

பிணைமாமயி லுங்குயில் சேர்மட அன்னம்

அணையும்பொழி லன்பி லாலந் துறையாரே.

 

1.33.1

 

350

 

சடையார்சது ரன்முதி ராமதி சூடி

விடையார்கொடி யொன்றுடை யெந்தை விமலன்

கிடையாரொலி ஓத்தர வத்திசை கிள்ளை

அடையார்பொழில் அன்பி லாலந்துறை யாரே.

 

1.33.2

 

352

 

ஊரும்மர வஞ்சடை மேலுற வைத்துப்

பாரும்பலி கொண்டொலி பாடும் பரமர்

நீருண்கய லும்வயல் வாளை வராலோ

டாரும்புனல் அன்பி லாலந்துறை யாரே.

 

1.33.3

 

353

 

பிறையும்மர வும்முற வைத்த முடிமேல்

நறையுண்டெழு வன்னியு மன்னு சடையார்

மறையும்பல வேதிய ரோத ஒலிசென்

றறையும்புனல் அன்பி லாலந்துறை யாரே.

 

1.33.4

 

354

 

நீடும்புனற் கங்கையுந் தங்க முடிமேல்

கூடும்மலை யாளொரு பாகம் அமர்ந்தார்

மாடும்முழ வம்மதி ரம்மட மாதர்

ஆடும்பதி அன்பி லாலந்துறை யாரே.

 

1.33.5

 

355

 

நீறார்திரு மேனிய ரூனமி லார்பால்

ஊறார்சுவை யாகிய உம்பர் பெருமான்

வேறாரகி லும்மிகு சந்தனம் உந்தி

ஆறார்வயல் அன்பி லாலந்துறை யாரே.

 

1.33.6

 

356

 

செடியார்தலை யிற்பலி கொண்டினி துண்ட

படியார்பர மன்பர மேட்டிதன் சீரைக்

கடியார்மல ரும்புனல் தூவிநின் றேத்தும்

அடியார்தொழும் அன்பி லாலந்துறை யாரே.

 

1.33.7

 

357

 

விடத்தார் திகழும்மிட றன்நட மாடி

படத்தாரர வம்விர வுஞ்சடை ஆதி

கொடித்தேரிலங் கைக்குலக் கோன்வரை யார

அடர்த்தாரருள் அன்பி லாலந்துறை யாரே.

 

1.33.8

 

358

 

வணங்கிம்மலர் மேலய னும்நெடு மாலும்

பிணங்கியறி கின்றிலர் மற்றும் பெருமை

சுணங்குமுகத் தம்முலை யாளொரு பாகம்

அணங்குந்திக ழன்பி லாலந்துறை யாரே.

 

1.33.9

 

359

 

தறியார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர்

நெறியாஉண ராநிலை கேடினர் நித்தல்

வெறியார்மலர் கொண்டடி வீழு மவரை

அறிவாரவர் அன்பி லாலந்துறை யாரே.

 

1.33.10

 

360

 

அரவார்புனல் அன்பி லாலந்துறை தன்மேல்

கரவாதவர் காழியுள் ஞானசம் பந்தன்

பரவார்தமிழ் பத்திசை பாடவல் லார்போய்

விரவாகுவர் வானிடை வீடெளி தாமே.

 

1.33.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

அன்பில் என வழங்கப்பெறும்.

சுவாமிபெயர் - சத்திவாகீசர், தேவியார் - சவுந்தரநாயகியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.34 சீகாழி

 

பண் - தக்கராகம்

 

360

 

அடலே றமருங் கொடியண்ணல்

மடலார் குழலா ளொடுமன்னுங்

கடலார் புடைசூழ் தருகாழி

தொடர்வா ரவர்தூ நெறியாரே.

 

1.34.1

 

361

 

திரையார் புனல்சூ டியசெல்வன்

வரையார் மகளோ டுமகிழ்ந்தான்

கரையார் புனல்சூழ் தருகாழி

நிரையார் மலர்தூ வுமினின்றே.

 

1.34.2

 

362

 

இடியார் குரலே றுடையெந்தை

துடியா ரிடையா ளொடுதுன்னுங்

கடியார் பொழில்சூழ் தருகாழி

அடியார் அறியார் அவலம்மே.

 

1.34.3

 

363

 

ஒளியார் விடமுண் டவொருவன்

அளியார் குழல்மங் கையொடன்பாய்

களியார் பொழில்சூழ் தருகாழி

எளிதாம் அதுகண் டவரின்பே.

 

1.34.4

 

364

 

பனியார் மலரார் தருபாதன்

முனிதா னுமையோ டுமுயங்கி

கனியார் பொழில்சூழ் தருகாழி

இனிதாம் அதுகண் டவரீடே.

 

1.34.5

 

365

 

கொலையார் தருகூற் றமுதைத்து

மலையான் மகளோ டுமகிழ்ந்தான்

கலையார் தொழுதேத் தியகாழி

தலையால் தொழுவார் தலையாரே.

 

1.34.6

 

366

 

திருவார் சிலையால் எயிலெய்து

உருவார் உமையோ டுடனானான்

கருவார் பொழில்சூழ் தருகாழி

மருவா தவர்வான் மருவாரே.

 

1.34.7

 

367

 

அரக்கன் வலியொல் கஅடர்த்து

வரைக்கு மகளோ டுமகிழ்ந்தான்

சுரக்கும் புனல்சூழ் தருகாழி

நிரக்கும் மலர்தூ வுநினைந்தே.

 

1.34.8

 

368

 

இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான்

உருவிற் பெரியா ளொடுசேருங்

கருநற் பரவை கமழ்காழி

மருவப் பிரியும் வினைமாய்ந்தே.

 

1.34.9

 

369

 

சமண்சாக் கியர்தாம் அலர்தூற்ற

அமைந்தான் உமையோ டுடனன்பாய்க்

கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி

சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே.

 

1.34.10

 

370

 

நலமா கியஞான சம்பந்தன்

கலமார் கடல்சூழ் தருகாழி

நிலையா கநினைந் தவர்பாடல்

வலரா னவர்வான் அடைவாரே.

 

1.34.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.35 திருவீழிமிழலை

 

பண் - தக்கராகம்

 

371

 

அரையார் விரிகோ வணஆடை

நரையார் விடையூர் திநயந்தான்

விரையார் பொழில்வீ ழிம்மிழலை

உரையால் உணர்வார் உயர்வாரே.

 

1.35.1

 

372

 

புனைதல் புரிபுன் சடைதன்மேல்

கனைதல் லொருகங் கைகரந்தான்

வினையில் லவர்வீ ழிம்மிழலை

நினைவில் லவர்நெஞ் சமும்நெஞ்சே.

 

1.35.2

 

373

 

அழவல் லவரா டியும்பாடி

எழவல் லவரெந் தையடிமேல்

விழவல் லவர்வீ ழிம்மிழலை

தொழவல் லவர்நல் லவர்தொண்டே.

 

1.35.3

 

374

 

உரவம் புரிபுன் சடைதன்மேல்

அரவம் மரையார்த் தஅழகன்

விரவும் பொழில்வீ ழிம்மிழலை

பரவும் மடியார் அடியாரே.

 

1.35.4

 

375

 

கரிதா கியநஞ் சணிகண்டன்

வரிதா கியவண் டறைகொன்றை

விரிதார் பொழில்வீ ழிம்மிழலை

உரிதா நினைவார் உயர்வாரே.

 

1.35.5

 

376

 

சடையார் பிறையான் சரிபூதப்

படையான் கொடிமே லதொர்பைங்கண்

விடையான் உறைவீ ழிம்மிழலை

அடைவார் அடியார் அவர்தாமே.

 

1.35.6

 

377

 

செறியார் கழலுஞ் சிலம்பார்க்க

நெறியார் குழலா ளொடுநின்றான்

வெறியார் பொழில்வீ ழிம்மிழலை

அறிவார் அவலம் அறியாரே.

 

1.35.7

 

378

 

உளையா வலியொல் கஅரக்கன்

வளையா விரலூன் றியமைந்தன்

விளையார் வயல்வீ ழிம்மிழலை

அளையா வருவா ரடியாரே.

 

1.35.8

 

379

 

மருள்செய் திருவர் மயலாக

அருள்செய் தவனார் அழலாகி

வெருள்செய் தவன்வீ ழிம்மிழலை

தெருள்செய் தவர்தீ வினைதேய்வே.

 

1.35.9

 

380

 

துளங்குந் நெறியா ரவர்தொன்மை

வளங்கொள் ளன்மின்புல் லமண்தேரை

விளங்கும் பொழில்வீ ழிம்மிழலை

உளங்கொள் பவர்தம் வினையோய்வே.

 

1.35.10

 

381

 

நளிர்கா ழியுள்ஞான சம்பந்தன்

குளிரார் சடையான் அடிகூற

மிளிரார் பொழில்வீ ழிம்மிழலை

கிளர்பா டல்வல்லார்க் கிலைகேடே.

 

1.35.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.36 திரு ஐயாறு

 

பண் - தக்கராகம்

 

382

 

கலையார் மதியோ டுரநீரும்

நிலையார் சடையா ரிடமாகும்

மலையா ரமுமா மணிசந்தோ

டலையார் புனல்சே ருமையாறே.

 

1.36.1

 

383

 

மதியொன் றியகொன் றைவடத்தன்

மதியொன் றவுதைத் தவர்வாழ்வும்

மதியின் னொடுசேர் கொடிமாடம்

மதியம் பயில்கின் றவையாறே.

 

1.36.2

 

384

 

கொக்கின் னிறகின் னொடுவன்னி

புக்க சடையார்க் கிடமாகுந்

திக்கின் னிசைதே வர்வணங்கும்

அக்கின் னரையா ரதையாறே.

 

1.36.3

 

385

 

சிறைகொண் டபுரம் மவைசிந்தக்

கறைகொண் டவர்கா தல்செய்கோயில்

மறைகொண் டநல்வா னவர்தம்மில்

அறையும் மொலிசே ருமையாறே.

 

1.36.4

 

386

 

உமையா ளொருபா கமதாகச்

சமைவார் அவர்சார் விடமாகும்

அமையா ருடல்சோர் தரமுத்தம்

அமையா வருமந் தணையாறே.

 

1.36.5

 

387

 

தலையின் தொடைமா லையணிந்து

கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம்

நிலைகொண் டமனத் தவர்நித்தம்

மலர்கொண் டுவணங் குமையாறே.

 

1.36.6

 

388

 

வரமொன் றியமா மலரோன்றன்

சிரமொன் றையறுத் தவர்சேர்வாம்

வரைநின் றிழிவார் தருபொன்னி

அரவங் கொடுசே ருமையாறே.

 

1.36.7

 

389

 

வரையொன் றதெடுத் தஅரக்கன்

சிரமங் கநெரித் தவர்சேர்வாம்

விரையின் மலர்மே தகுபொன்னித்

திரைதன் னொடுசே ருமையாறே.

 

1.36.8

 

390

 

(*)சங்கக் கயனும் மறியாமைப்

பொங்குஞ் சுடரா னவர்கோயில்

கொங்கிற் பொலியும் புனல்கொண்டு

அங்கிக் கெதிர்காட் டுமையாறே.

(*) சங்கத்தயனும் என்றும் பாடம்.

 

1.36.9

 

391

 

துவரா டையர்தோ லுடையார்கள்

கவர்வாய் மொழிகா தல்செய்யாதே

தவரா சர்கள்தா மரையானோ

டவர்தா மணையந் தணையாறே.

 

1.36.10

 

392

 

கலையார் கலிக்கா ழியர்மன்னன்

நலமார் தருஞான சம்பந்தன்

அலையார் புனல்சூ ழுமையாற்றைச்

சொலுமா லைவல்லார் துயர்வீடே.

 

1.36.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - செம்பொன்சோதீசுரர், தேவியார் - அறம்வளர்த்தநாயகியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.37 திருப்பனையூர்

 

பண் - தக்கராகம்

 

393

 

அரவச் சடைமேல் மதிமத்தம்

விரவிப் பொலிகின் றவனூராம்

நிரவிப் பலதொண் டர்கள்நாளும்

பரவிப் பொலியும் பனையூரே.

 

1.37.1

 

394

 

எண்ணொன் றிநினைந் தவர்தம்பால்

உண்ணின் றுமகிழ்ந் தவனூராம்

கண்ணின் றெழுசோ லையில்வண்டு

பண்ணின் றொலிசெய் பனையூரே.

 

1.37.2

 

395

 

அலரும் மெறிசெஞ் சடைதன்மேல்

மலரும் பிறையொன் றுடையானூர்

சிலரென் றுமிருந் தடிபேணப்

பலரும் பரவும் பனையூரே.

 

1.37.3

 

396

 

இடியார் கடல்நஞ் சமுதுண்டு

பொடியா டியமே னியினானூர்

அடியார் தொழமன் னவரேத்தப்

படியார் பணியும் பனையூரே.

 

1.37.4

 

397

 

அறையார் கழல்மே லரவாட

இறையார் பலிதேர்ந் தவனூராம்

பொறையார் மிகுசீர் விழமல்கப்

பறையா ரொலிசெய் பனையூரே.

 

1.37.5

 

398

 

அணியார் தொழவல் லவரேத்த

மணியார் மிடறொன் றுடையானூர்

தணியார் மலர்கொண் டிருபோதும்

பணிவார் பயிலும் பனையூரே.

 

1.37.6

 

399

 

அடையா தவர்மூ வெயில்சீறும்

விடையான் விறலார் கரியின்தோல்

(*)உடையா னவனெண் பலபூதப்

படையா னவனூர் பனையூரே.

(*) உடையா னவனொண் பலபூத என்றும் பாடம்.

 

1.37.7

 

400

 

இலகும் முடிபத் துடையானை

அலல்கண் டருள்செய் தவெம்மண்ணல்

உலகில் லுயிர்நீர் நிலமற்றும்

பலகண் டவனூர் பனையூரே.

 

1.37.8

 

401

 

வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள்

சிரமுன் னடிதா ழவணங்கும்

பிரமன் னொடுமா லறியாத

பரமன் னுறையும் பனையூரே.

 

1.37.9

 

402

 

*அழிவல் லமண ரொடுதேரர்

மொழிவல் லனசொல் லியபோதும்

இழிவில் லதொர்செம் மையினானூர்

பழியில் லவர்சேர் பனையூரே.

(*) அழிவில் லமணஃ தொடுதேரர் என்றும் பாடம்.

 

1.37.10

 

403

 

பாரார் *விடையான் பனையூர்மேல்

சீரார் தமிழ்ஞா னசம்பந்தன்

ஆரா தசொன்மா லைகள்பத்தும்

ஊரூர் நினைவா ருயர்வாரே.

(*) விடையார் என்றும் பாடம்.

 

1.37.11

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சவுந்தரேசர், தேவியார் - பெரியநாயகியம்மை

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.38 திருமயிலாடுதுறை

 

பண் - தக்கராகம்

 

404

 

கரவின் றிநன்மா மலர்கொண்டே

இரவும் பகலுந் தொழுவார்கள்

சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்

வரமா மயிலா டுதுறையே.

 

1.38.1

 

405

 

உரவெங் கரியின் னுரிபோர்த்த

பரமன் னுறையும் பதியென்பர்

குரவஞ் சுரபுன் னையும்வன்னி

மருவும் மயிலா டுதுறையே.

 

1.38.2

 

406

 

ஊனத் திருள்நீங் கிடவேண்டில்

ஞானப் பொருள்கொண் டடிபேணுந்

தேனொத் தினியா னமருஞ்சேர்

வானம் மயிலா டுதுறையே.

 

1.38.3

 

407

 

அஞ்சொண் புலனும் மவைசெற்ற

மஞ்சன் மயிலா டுதுறையை

நெஞ்சொன் றிநினைந் தெழுவார்மேல்

துஞ்சும் பிணியா யினதானே.

 

1.38.4

 

408

 

(*)தணியார் மதிசெஞ் சடையான்றன்

அணியார்ந் தவருக் கருளென்றும்

பிணியா யினதீர்த் தருள்செய்யும்

மணியான் மயிலா டுதுறையே.

(*) கணியார் என்றும் பாடம்.

 

1.38.5

 

409

 

தொண்ட ரிசைபா டியுங்கூடிக்

கண்டு துதிசெய் பவனூராம்

பண்டும் பலவே தியரோத

வண்டார் மயிலா டுதுறையே.

 

1.38.6

 

410

 

அணங்கோ டொருபா கமமர்ந்து

இணங்கி யருள்செய் தவனூராம்

நுணங்கும் புரிநூ லர்கள்கூடி

வணங்கும் மயிலா டுதுறையே.

 

1.38.7

 

411

 

சிரங்கை யினிலேந் தியிரந்த

பரங்கொள் பரமேட் டிவரையால்

அரங்கவ் வரக்கன் வலிசெற்ற

வரங்கொள் மயிலா டுதுறையே.

 

1.38.8

 

412

 

ஞாலத் தைநுகர்ந் தவன்றானுங்

கோலத் தயனும் மறியாத

சீலத் தவனூர் சிலர்கூடி

மாலைத் தீர்மயிலா டுதுறையே.

 

1.38.9

 

413

 

நின்றுண் சமணும் நெடுந்தேரர்

ஒன்றும் மறியா மையுயர்ந்த

வென்றி யருளா னவனூராம்

மன்றன் மயிலா டுதுறையே.

 

1.38.10

 

414

 

நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன்

மயல்தீர் மயிலா டுதுறைமேல்

செயலா லுரைசெய் தனபத்தும்

உயர்வாம் இவையுற் றுணர்வார்க்கே.

 

1.38.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - மாயூரநாதர், தேவியார் - அஞ்சநாயகியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.39 திருவேட்களம்

 

பண் - தக்கராகம்

 

415

 

அந்தமும் ஆதியு மாகிய வண்ணல்

 

ஆரழ லங்கை அமர்ந்திலங்க

மந்த முழவம் இயம்ப

 

மலைமகள் காண நின்றாடிச்

சந்த மிலங்கு நகுதலை கங்கை

 

தண்மதியம் மயலே ததும்ப

வெந்தவெண் ணீறு மெய்பூசும்

 

வேட்கள நன்னக ராரே.

 

1.39.1

 

415

 

சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்துச்

 

சங்கவெண் டோ டு சரிந்திலங்கப்

புடைதனிற் பாரிடஞ் சூழப்

 

போதரு மாறிவர் போல்வார்

உடைதனில் நால்விரற் கோவண ஆடை

 

உண்பது மூரிடு பிச்சைவெள்ளை

விடைதனை ஊர்தி நயந்தார்

 

வேட்கள நன்னக ராரே.

 

1.39.2

 

416

 

பூதமும் பல்கண மும்புடை சூழப்

 

பூமியும் விண்ணும் உடன்பொருந்தச்

சீதமும் வெம்மையு மாகிச்

 

சீரொடு நின்றவெஞ் செல்வர்

ஓதமுங் கானலுஞ் சூழ்தரு வேலை

 

உள்ளங் கலந்திசை யாலெழுந்த

வேதமும் வேள்வியும் ஓவா

 

வேட்கள நன்னக ராரே.

 

1.39.3

 

418

 

அரைபுல்கும் ஐந்தலை யாட லரவம்

 

அமையவெண் கோவணத் தோடசைத்து

வரைபுல்கு மார்பி லோராமை

 

வாங்கி யணிந் தவர்தாந்

திரைபுல்கு தெண்கடல் தண்கழி யோதந்

 

தேனலங் கானலில் வண்டுபண்செய்ய

விரைபுல்கு பைம்பொழில் சூழ்ந்த

 

வேட்கள நன்னக ராரே.

 

1.39.4

 

419

 

பண்ணுறு வண்டறை கொன்றை யலங்கல்

 

பால்புரை நீறுவெண் ணூல்கிடந்த

பெண்ணுறு மார்பினர் பேணார்

 

மும்மதில் எய்த பெருமான்

கண்ணுறு நெற்றி கலந்த வெண்திங்கட்

 

கண்ணியர் விண்ணவர் கைதொழுதேத்தும்

வெண்ணிற மால்விடை அண்ணல்

 

வேட்கள நன்னக ராரே.

 

1.39.5

 

420

 

கறிவளர் குன்ற மெடுத்தவன் காதற்

 

கண்கவ ரைங்கணை யோனுடலம்

பொறிவளர் ஆரழ லுண்ணப்

 

பொங்கிய பூத புராணர்

மறிவள ரங்கையர் மங்கையொர் பங்கர்

 

மைஞ்ஞிற மானுரி தோலுடையாடை

வெறிவளர் கொன்றையந் தாரார்

 

வேட்கள நன்னக ராரே.

 

1.39.6

 

421

 

மண்பொடிக் கொண்டெரித் தோர் சுடலை

 

மாமலை வேந்தன் மகள்மகிழ

நுண்பொடிச் சேர நின்றாடி

 

நொய்யன செய்யல் உகந்தார்

கண்பொடி வெண்டலை யோடுகை யேந்திக்

 

காலனைக் காலாற் கடிந்துகந்தார்

வெண்பொடிச் சேர்திரு மார்பர்

 

வேட்கள நன்னக ராரே.

 

1.39.7

 

422

 

ஆழ்தரு மால்கடல் நஞ்சினை யுண்டார்

 

அமுத மமரர்க் கருளி

சூழ்தரு பாம்பரை யார்த்துச்

 

சூலமோ டொண்மழு வேந்தித்

தாழ்தரு புன்சடை யொன்றினை வாங்கித்

 

தண்மதி யம்மய லேததும்ப

வீழ்தரு கங்கை கரந்தார்

 

வேட்கள நன்னக ராரே.

 

1.39.8

 

423

 

திருவொளி காணிய பேதுறு கின்ற

 

திசைமுக னுந்திசை மேலளந்த

கருவரை யேந்திய மாலுங்

 

கைதொழ நின்றது மல்லால்

அருவரை யொல்க எடுத்த வரக்கன்

 

ஆடெழிற் றோள்களா ழத்தழுந்த

வெருவுற வூன்றிய பெம்மான்

 

வேட்கள நன்னக ராரே.

 

1.39.9

 

424

 

அத்தமண் டோ ய்துவ ராரமண் குண்டர்

 

யாதுமல் லாவுரை யேயுரைத்துப்

பொய்த்தவம் பேசுவ தல்லால்

 

புறனுரை யாதொன்றுங் கொள்ளேல்

முத்தன வெண்முறு வல்லுமை யஞ்ச

 

மூரிவல் லானையின் ஈருரி போர்த்த

வித்தகர் வேத முதல்வர்

 

வேட்கள நன்னக ராரே.

 

1.39.10

 

425

 

விண்ணியன் மாடம் விளங்கொளி வீதி

 

வெண்கொடி யெங்கும் விரிந்திலங்க

நண்ணிய சீர்வளர் காழி

 

நற்றமிழ் ஞானசம் பந்தன்

பெண்ணின்நல் லாளொரு பாகம மர்ந்து

 

பேணிய வேட்கள மேல்மொழிந்த

பண்ணியல் பாடல் வல்லார்கள்

 

பழியொடு பாவமி லாரே.

 

1.39.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பாசுபதேசுவரர், தேவியார் - நல்லநாயகியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.40 திருவாழ்கொளிபுத்தூர் (*)

 

பண் - தக்கராகம்

 

(*) திருவாளொளிபுற்றூர் என்றும் பாடம்.

 

426

 

பொடியுடை மார்பினர் போர்விடை யேறிப்

 

பூதகணம் புடை சூழக்

கொடியுடை யூர்திரிந் தையங்

 

கொண்டு பலபல கூறி

வடிவுடை வாள்நெடுங் கண்ணுமை பாகம்

 

ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்

கடிகமழ் மாமல ரிட்டுக்

 

கறைமிடற் றானடி காண்போம்.

 

1.40.1

 

427

 

அரைகெழு கோவண ஆடையின் மேலோர்

 

ஆடரவம் அசைத் தையம்

புரைகெழு வெண்டலை யேந்திப்

 

போர்விடை யேறிப் புகழ

வரைகெழு மங்கைய தாகமொர் பாகம்

 

ஆயவன் வாழ்கொளி புத்தூர்

விரைகெழு மாமலர் தூவி

 

விரிசடை யானடி சேர்வோம்.

 

1.40.2

 

428

 

பூண்நெடு நாகம் அசைத்தன லாடிப்

 

புன்றலை யங்கையி லேந்தி

ஊணிடு பிச்சையூ ரையம்

 

உண்டி யென்று பலகூறி

வாணெடுங் கண்ணுமை மங்கையொர் பாகம்

 

ஆயவன் வாழ்கொளி புத்தூர்

தாணெடு மாமல ரிட்டுத்

 

தலைவன தாள்நிழல் சார்வோம்.

 

1.40.3

 

429

 

தாரிடு கொன்றையொர் வெண்மதி கங்கை

 

தாழ்சடை மேலவை சூடி

ஊரிடு பிச்சை கொள்செல்வம்

 

உண்டி யென்று பலகூறி

வாரிடு மென்முலை மாதொரு பாகம்

 

ஆயவன் வாழ்கொளி புத்தூர்க்

காரிடு மாமலர் தூவி

 

கறைமிடற் றானடி காண்போம்.

 

1.40.4

 

430

 

கனமலர்க் கொன்றை அலங்கல் இலங்கக்

 

காதிலொர் வெண்குழை யோடு

புனமலர் மாலை புனைந்தூர்

 

புகுதி யென்றே பலகூறி

வனமுலை மாமலை மங்கையொர் பாகம்

 

ஆயவன் வாழ்கொளி புத்தூர்

இனமல ரேய்ந்தன தூவி

 

எம்பெரு மானடி சேர்வோம்.

 

1.40.5

 

431

 

431

அளைவளர் நாகம் அசைத்தன லாடி

 

அலர்மிசை அந்தணன் உச்சிக்

களைதலை யிற்பலி கொள்ளுங்

 

கருத்தனே கள்வனே யென்னா

(*)வளைபொலி முன்கை மடந்தையொர் பாகம்

 

ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்

தளையவிழ் மாமலர் தூவித்

 

தலைவன தாளிணை சார்வோம்.

(*) வளையொலி என்றும் பாடம்.

 

1.40.6

 

432

 

அடர்செவி வேழத்தின் ஈருரி போர்த்து

 

வழிதலை யங்கையி லேந்தி

உடலிடு பிச்சை யோடைய

 

முண்டி யென்று பலகூறி

மடல்நெடு மாமலர்க் கண்ணியொர் பாகம்

 

ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்

தடமல ராயின தூவி

 

தலைவன தாள்நிழல் சார்வோம்.

 

1.40.7

 

433

 

உயர்வரை யொல்க எடுத்த அரக்கன்

 

ஒளிர்கட கக்கை யடர்த்து

அயலிடு பிச்சை யோடையம்

 

ஆர்தலை யென்றடி போற்றி

வயல்விரி நீல நெடுங்கணி பாகம்

 

ஆயவன் வாழ்கொளி புத்தூர்ச்

சயவிரி மாமலர் தூவி

 

தாழ்சடை யானடி சார்வோம்.

 

1.40.8

 

434

 

கரியவன் நான்முகன் கைதொழு தேத்த

 

காணலுஞ் சாரலு மாகா

எரியுரு வாகி யூரையம்

 

இடுபலி யுண்ணி யென்றேத்தி

வரியர வல்குல் மடந்தையொர் பாகம்

 

ஆயவன் வாழ்கொளி புத்தூர்

விரிமல ராயின தூவி

 

விகிர்தன சேவடி சேர்வோம்.

 

1.40.9

 

435

 

குண்டம ணர்துவர்க் கூறைகள் மெய்யில்

 

கொள்கை யினார் புறங்கூற

வெண்டலை யிற்பலி கொண்டல்

 

விரும்பினை யென்று விளம்பி

வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகம்

 

ஆயவன் வாழ்கொளி புத்தூர்த்

தொண்டர்கள் மாமலர் தூவத்

 

தோன்றி நின்றான் அடிசேர்வோம்.

 

1.40.10

 

436

 

கல்லுயர் மாக்கடல் நின்று முழங்குங்

 

கரைபொரு காழிய மூதூர்

நல்லுயர் நான்மறை நாவின்

 

நற்றமிழ் ஞானசம் பந்தன்

வல்லுயர் சூலமும் வெண்மழு வாளும்

 

வல்லவன் வாழ்கொளி புத்தூர்ச்

சொல்லிய பாடல்கள் வல்லார்

 

துயர்கெடு தல்எளி தாமே.

 

1.40.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - மாணிக்கவண்ணவீசுரர், தேவியார் - வண்டார்பூங்குழலம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.41 திருப்பாம்புரம்

 

பண் - தக்கராகம்

 

437

 

சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர்

 

திரிபுர மெரிசெய்த செல்வர்

வாரணி வனமுலை மங்கையோர் பங்கர்

 

மான்மறி யேந்திய மைந்தர்

காரணி மணிதிகழ் மிடறுடை யண்ணல்

 

கண்ணுதல் விண்ணவ ரேத்தும்

பாரணி திகழ்தரு நான்மறை யாளர்

 

பாம்புர நன்னக ராரே.

 

1.41.1

 

438

 

கொக்கிற கோடு கூவிள மத்தங்

 

கொன்றையொ டெருக்கணி சடையர்

அக்கினொ டாமை பூண்டழ காக

 

அனலது ஆடுமெம் மடிகள்

மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும்

 

விண்ணவர் விரைமலர் தூவப்

பக்கம்பல் பூதம் பாடிட வருவார்

 

பாம்புர நன்னக ராரே.

 

1.41.2

 

439

 

துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர்

 

சூறைநல் லரவது சுற்றிப்

பின்னுவார் சடைகள் தாழவிட் டாடிப்

 

பித்தராய்த் திரியுமெம் பெருமான்

மன்னுமா மலர்கள் தூவிட நாளும்

 

மாமலை யாட்டியுந் தாமும்

பன்னுநான் மறைகள் பாடிட வருவார்

 

பாம்புர நன்னக ராரே.

 

1.41.3

 

440

 

துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லாச்

 

சுடர்விடு சோதியெம் பெருமான்

நஞ்சுசேர் கண்ட முடையவென் நாதர்

 

நள்ளிருள் நடஞ்செயும் நம்பர்

மஞ்சுதோய் சோலை மாமயி லாட

 

மாடமா ளிகைதன்மே லேறி

பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும்

 

பாம்புர நன்னக ராரே.

 

1.41.4

 

441

 

நதியத னயலே நகுதலை மாலை

 

நாண்மதி சடைமிசை யணிந்து

கதியது வாகக் காளிமுன் காணக்

 

கானிடை நடஞ்செய்த கருத்தர்

விதியது வழுவா வேதியர் வேள்வி

 

செய்தவர் ஓத்தொலி ஓவாப்

பதியது வாகப் பாவையுந் தாமும்

 

பாம்புர நன்னக ராரே.

 

1.41.5

 

442

 

ஓதிநன் குணர்வார்க் குணர்வுடை யொருவர்

 

ஒளிதிகழ் உருவஞ் சேரொருவர்

மாதினை யிடமா வைத்தவெம் வள்ளல்

 

மான்மறி யேந்திய மைந்தர்

ஆதிநீ யருளென் றமரர்கள் பணிய

 

அலைகடல் கடையவன் றெழுந்த

பாதிவெண் பிறைசடை வைத்தவெம் பரமர்

 

பாம்புர நன்னக ராரே.

 

1.41.6

 

443

 

மாலினுக் கன்று சக்கர மீந்து

 

மலரவற் கொருமுக மொழித்து

ஆலின்கீ ழறமோர் நால்வருக் கருளி

 

அனலது ஆடுமெம் மடிகள்

காலனைக் காய்ந்து தங்கழ லடியாற்

 

காமனைப் பொடிபட நோக்கிப்

பாலனுக் கருள்கள் செய்தவெம் மடிகள்

 

பாம்புர நன்னக ராரே.

 

1.41.7

 

444

 

விடைத்தவல் லரக்கன் வெற்பினை யெடுக்க

 

மெல்லிய திருவிர லூன்றி

அடர்த்தவன் றனக்கன் றருள்செய்த வடிகள்

 

அனலது ஆடுமெம் மண்ணல்

மடக்கொடி யவர்கள் வருபுன லாட

 

வந்திழி அரிசிலின் கரைமேற்

படப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும்

 

பாம்புர நன்னக ராரே.

 

1.41.8

 

445

 

கடிபடு கமலத் தயனொடு மாலுங்

 

காதலோ டடிமுடி தேடச்

செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யுந்

 

தீவணர் எம்முடைச் செல்வர்

முடியுடையமரர் முனிகணத் தவர்கள்

 

முறைமுறை யடிபணிந் தேத்தப்

படியது வாகப் பாவையுந் தாமும்

 

பாம்புர நன்னக ராரே.

 

1.41.9

 

446

 

குண்டர்சாக் கியருங் குணமிலா தாருங்

 

குற்றுவிட் டுடுக்கையர் தாமுங்

கண்டவா றுரைத்துக் கால்நிமிர்த் துண்ணுங்

 

கையர்தாம் உள்ளவா றறியார்

வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க

 

வாரணம் உரிசெய்து போர்த்தார்

பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார்

 

பாம்புர நன்னக ராரே.

 

1.41.10

 

447

 

பார்மலிந் தோங்கிப் பருமதில் சூழ்ந்த

 

பாம்புர நன்னக ராரைக்

கார்மலிந் தழகார் கழனிசூழ் மாடக்

 

கழுமல முதுபதிக் கவுணி

நார்மலிந் தோங்கும் நால்மறை ஞான

 

சம்பந்தன் செந்தமிழ் வல்லார்

சீர்மலிந் தழகார் செல்வம தோங்கிச்

 

சிவனடி நண்ணுவர் தாமே.

 

1.41.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பாம்புரேசர்,

பாம்புரநாதர் என்றும் பாடம். தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை,

வண்டார்பூங்குழலி என்றும் பாடம்.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.42 திருப்பேணுபெருந்துறை

 

பண் - தக்கராகம்

 

448

 

பைம்மா நாகம் பன்மலர்க் கொன்றை

 

பன்றிவெண் கொம்பொன்று பூண்டு

செம்மாந் தையம் பெய்கென்று சொல்லிச்

 

செய்தொழில் பேணியோர் செல்வர்

அம்மா னோக்கிய அந்தளிர் மேனி

 

அரிவையோர் பாக மமர்ந்த

பெம்மான் நல்கிய தொல்புக ழாளர்

 

பேணு பெருந்துறை யாரே.

 

1.42.1

 

449

 

மூவரு மாகி இருவரு மாகி

 

முதல்வனு மாய்நின்ற மூர்த்தி

பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி

 

பல்கணம் நின்று பணியச்

சாவம தாகிய மால்வரை கொண்டு

 

தண்மதில் மூன்று மெரித்த

தேவர்கள் தேவர் எம்பெரு மானார்

 

தீதில் பெருந்துறை யாரே.

 

1.42.2

 

450

 

செய்பூங் கொன்றை கூவிள மாலை

 

சென்னியுட் சேர்புனல் சேர்த்திக்

கொய்பூங் கோதை மாதுமை பாகங்

 

கூடியோர் பீடுடை வேடர்

கைபோ னான்ற கனிகுலை வாழை

 

காய்குலை யிற்கமு கீனப்

பெய்பூம் பாளை பாய்ந்திழி தேறல்

 

பில்கு பெருந்துறை யாரே.

 

1.42.3

 

451

 

நிலனொடு வானும் நீரொடு தீயும்

 

வாயுவு மாகியோ ரைந்து

புலனொடு வென்று பொய்ம்மைகள் தீர்ந்த

 

புண்ணியர் வெண்பொடிப் பூசி

நலனொடு தீங்குந் தானல தின்றி

 

நன்கெழு சிந்தைய ராகி

மலனொடு மாசும் இல்லவர் வாழும்

 

மல்கு பெருந்துறை யாரே.

 

1.42.4

 

452

 

பணிவா யுள்ள நன்கெழு நாவின்

 

பத்தர்கள் பத்திமை செய்யத்

துணியார் தங்கள் உள்ள மிலாத

 

சுமடர்கள் சோதிப் பரியார்

அணியார் நீல மாகிய கண்டர்

 

அரிசி லுரிஞ்சு கரைமேல்

மணிவாய் நீலம் வாய்கமழ் தேறல்

 

மல்கு பெருந்துறை யாரே.

 

1.42.5

 

453

 

எண்ணார் தங்கள் மும்மதில் வேவ

 

ஏவலங் காட்டிய எந்தை

விண்ணோர் சாரத் தன்னருள் செய்த

 

வித்தகர் வேத முதல்வர்

பண்ணார் பாடல் ஆடல றாத

 

பசுபதி ஈசனோர் பாகம்

பெண்ணாண் ஆய வார்சடை யண்ணல்

 

பேணு பெருந்துறை யாரே.

 

1.42.6

 

454

 

விழையா ருள்ளம் நன்கெழு நாவில்

 

வினைகெட வேதமா றங்கம்

பிழையா வண்ணம் பண்ணிய வாற்றல்

 

பெரியோ ரேத்தும் பெருமான்

தழையார் மாவின் தாழ்கனி யுந்தித்

 

தண்(*)அரி சில்புடை சூழ்ந்த

குழையார் சோலை மென்னடை யன்னங்

 

கூடு பெருந்துறை யாரே.

 

(*) அரிசில் என்பது ஒரு நதி. அது அரிசொல்ல வந்ததினால்

அரிசொல் நதியென்று கும்பகோணப் புராணத்திற் சொல்லப்படுகின்றது.

 

1.42.7

 

455

 

பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த

 

பொருகடல் வேலி இலங்கை

மன்ன னொல்க மால்வரை யூன்றி

 

மாமுரண் ஆகமுந் தோளும்

முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த

 

மூவிலை வேலுடை மூர்த்தி

அன்னங் கன்னிப் பேடையொ டாடி

 

அணவு பெருந்துறை யாரே.

 

1.42.8

 

456

 

புள்வாய் போழ்ந்து மாநிலங் கீண்ட

 

பொருகடல் வண்ணனும் பூவின்

உள்வா யல்லி மேலுறை வானும்

 

உணர்வரி யான்உமை கேள்வன்

முள்வாய் தாளில் தாமரை மொட்டின்

 

முகம்மல ரக்கயல் பாயக்

கள்வாய் நீலம் கண்மல ரேய்க்குங்

 

காமர் பெருந்துறை யாரே.

 

1.42.9

 

457

 

குண்டுந் தேருங் கூறை களைந்துங்

 

கூப்பிலர் செப்பில ராகி

மிண்டும் மிண்டர் மிண்டவை கண்டு

 

மிண்டு செயாது விரும்பும்

தண்டும் பாம்பும் வெண்டலை சூலந்

 

தாங்கிய தேவர் தலைவர்

வண்டுந் தேனும் வாழ்பொழிற் சோலை

 

மல்கு பெருந்துறை யாரே.

 

1.42.10

 

458

 

கடையார் மாடம் நன்கெழு வீதிக்

 

கழுமல வூரன் கலந்து

நடையா ரின்சொல் ஞானசம் பந்தன்

 

நல்ல பெருந்துறை மேய

படையார் சூலம் வல்லவன் பாதம்

 

பரவிய பத்திவை வல்லார்

உடையா ராகி உள்ளமு மொன்றி

 

உலகினில் மன்னுவர் தாமே.

 

1.42.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சிவாநந்தநாதர், தேவியார் - மலையரசியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.43 திருக்கற்குடி

 

பண் - தக்கராகம்

 

459

 

வடந்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக மதித்துத்

தடந்திரை சேர்புனல் மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்

இடந்திகழ் முப்புரி நூலர் துன்பமொ டின்பம தெல்லாங்

கடந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே.

 

1.43.1

 

460

 

அங்கமொ ராறுடை வேள்வி யான அருமறை நான்கும்

பங்கமில் பாடலோ டாடல் பாணி பயின்ற படிறர்

சங்கம தார்குற மாதர் தங்கையின் மைந்தர்கள் தாவிக்

கங்குலின் மாமதி பற்றுங் கற்குடி மாமலை யாரே.

 

1.43.2

 

461

 

நீரக லந்தரு சென்னி நீடிய மத்தமும் வைத்துத்

தாரகை யின்னொளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்

போரக லந்தரு வேடர் புனத்திடை யிட்ட விறகில்

காரகி லின்புகை விம்முங் கற்குடி மாமலை யாரே.

 

1.43.3

 

462

 

ஒருங்களி நீயிறை வாவென் றும்பர்கள் ஓல மிடக்கண்

டிருங்கள மார விடத்தை இன்னமு துன்னிய ஈசர்

மருங்களி யார்பிடி வாயில் வாழ்வெதி ரின்முளை வாரிக்

கருங்களி யானை கொடுக்குங் கற்குடி மாமலை யாரே.

 

1.43.4

 

463

 

போர்மலி திண்சிலை கொண்டு பூதக ணம்புடை சூழப்

பார்மலி வேடுரு வாகிப் பண்டொரு வர்க்கருள் செய்தார்

ஏர்மலி கேழல் கிளைத்த இன்னொளி மாமணி யெங்குங்

கார்மலி வேடர் குவிக்குங் கற்குடி மாமலை யாரே.

 

1.43.5

 

464

 

உலந்தவ ரென்ப தணிந்தே ஊரிடு பிச்சைய ராகி

விலங்கல்வில் வெங்கன லாலே மூவெயில் வேவ முனிந்தார்

நலந்தரு சிந்தைய ராகி நாமலி மாலையி னாலே

கலந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே.

 

1.43.6

 

465

 

மானிட மார்தரு கையர் மாமழு வாரும் வலத்தார்

ஊனிடை யார்தலை யோட்டில் உண்கல னாக வுகந்தார்

தேனிடை யார்தரு சந்தின் திண்சிறை யால்தினை வித்திக்

கானிடை வேடர் விளைக்குங் கற்குடி மாமலை யாரே.

 

1.43.7

 

466

 

வாளமர் வீரம் நினைந்த இராவணன் மாமலை யின்கீழ்த்

தோளமர் வன்றலை குன்றத் தொல்விர லூன்று துணைவர்

தாளமர் வேய்தலைப் பற்றித் தாழ்கரி விட்ட விசைபோய்க்

காளம தார்முகில் கீறுங் கற்குடி மாமலை யாரே.

 

1.43.8

 

467

 

தண்டமர் தாமரை யானுந் தாவியிம் மண்ணை அளந்து

கொண்டவ னும்மறி வொண்ணாக் கொள்கையர் வெள்விடை யூர்வர்

வண்டிசை யாயின பாட நீடிய வார்பொழில் நீழல்

கண்டமர் மாமயி லாடுங் கற்குடி மாமலை யாரே.

 

1.43.9

 

468

 

மூத்துவ ராடையி னாரும் (*)மூசு கருப்பொடி யாரும்

நாத்துவர் பொய்ம்மொழி யார்கள் நயமி லராமதி வைத்தார்

ஏத்துயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவரிட ரெல்லாங்

காத்தவர் காமரு சோலைக் கற்குடி மாமலை யாரே.

 

(*) மூசு கடுப்பொடி என்றும் பாடம்.

 

1.43.10

 

469

 

காமரு வார்பொழில் சூழுங் கற்குடி மாமலை யாரை

நாமரு வண்புகழ்க் காழி நலந்திகழ் ஞானசம் பந்தன்

பாமரு செந்தமிழ் மாலை பத்திவை பாடவல் லார்கள்

பூமலி வானவ ரோடும் பொன்னுல கிற்பொலி வாரே.

 

1.43.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - முத்தீசர், தேவியார் - அஞ்சனாட்சியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.44 திருப்பாச்சிலாச்சிராமம் - முயலகன் தீர்த்தது.

 

பண் - தக்கராகம்

 

470

 

துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்

 

சுடர்ச்சடை சுற்றி முடித்துப்

பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ

 

வாரிடமும் பலி தேர்வர்

அணிவளர் கோல மெலாஞ்செய்து பாச்சி

 

லாச்சிரா மத்துறை கின்ற

மணிவளர் கண்டரோ மங்கையை வாட

 

மயல்செய்வ தோயிவர் மாண்பே.

 

1.44.1

 

471

 

கலைபுனை மானுரி தோலுடை யாடை

 

கனல்சுட ராலிவர் கண்கள்

தலையணி சென்னியர் தாரணி மார்பர்

 

தம்மடி கள்ளிவ ரென்ன

அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர் பாச்சி

 

லாச்சிரா மத்துறை கின்ற

இலைபுனை வேலரோ ஏழையை வாட

 

இடர்செய்வ தோயிவ ரீடே.

 

1.44.2

 

472

 

வெஞ்சுட ராடுவர் துஞ்சிருள் மாலை

 

வேண்டுவர் பூண்பது வெண்ணூல்

நஞ்சடை கண்டர் நெஞ்சிட மாக

 

நண்ணுவர் நம்மை நயந்து

மஞ்சடை மாளிகை சூழ்தரு பாச்சி

 

லாச்சிரா மத்துறை கின்ற

செஞ்சுடர் வண்ணரோ பைந்தொடி வாடச்

 

சிதைசெய்வ தோவிவர் சீரே.

 

1.44.3

 

473

 

கனமலர்க் கொன்றை யலங்க லிலங்கக்

 

கனல்தரு தூமதிக் கண்ணி

புனமலர் மாலை யணிந் தழகாய

 

புனிதர் கொலாமிவ ரென்ன

வனமலி வண்பொழில் சூழ்தரு பாச்சி

 

லாச்சிரா மத்துறை கின்ற

மனமலி மைந்தரோ மங்கையை வாட

 

மயல்செய்வ தோவிவர் மாண்பே.

 

1.44.4

 

474

 

மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி

 

வளர்சடை மேற்புனல் வைத்து

மோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை

 

முதிரவோர் வாய்மூரி பாடி

ஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி

 

லாச்சிரா மத்துறை கின்ற

சாந்தணி மார்பரோ தையலை வாடச்

 

சதுர்செய்வ தோவிவர் சார்வே.

 

1.44.5

 

475

 

நீறுமெய்பூசி நிறைசடை தாழ

 

நெற்றிக்கண் ணாலுற்று நோக்கி

ஆறது சூடி ஆடர வாட்டி

 

யைவிரற் கோவண ஆடை

பாறரு மேனியர் பூதத்தர் பாச்சி

 

லாச்சிரா மத்துறை கின்ற

ஏறது ஏறியர் ஏழையை வாட

 

இடர்செய்வ தோவிவ ரீடே.

 

1.44.6

 

476

 

பொங்கிள நாகமொ ரேகவ டத்தோ

 

டாமைவெண் ணூல்புனை கொன்றை

கொங்கிள மாலை புனைந் தழகாய

 

குழகர்கொ லாமிவ ரென்ன

அங்கிள மங்கையோர் பங்கினர் பாச்சி

 

லாச்சிரா மத்துறை கின்ற

சங்கொளி வண்ணரோ தாழ்குழல் வாடச்

 

சதிர்செய்வ தோவிவர் சார்வே.

 

1.44.7

 

477

 

ஏவலத் தால்விச யற்கருள் செய்து

 

இராவண னையீ டழித்து

மூவரி லும்முத லாய்நடு வாய

 

மூர்த்தியை யன்றி மொழியாள்

யாவர் களும்பர வும்மெழிற் பாச்சி

 

லாச்சிரா மத்துறை கின்ற

தேவர்கள் தேவரோ சேயிழை வாடச்

 

சிதைசெய்வ தோவிவர் சேர்வே.

 

1.44.8

 

478

 

மேலது நான்முக னெய்திய தில்லை

 

கீழது சேவடி தன்னை

நீலது வண்ணனு மெய்திய தில்லை

 

எனவிவர் நின்றது மல்லால்

ஆலது மாமதி தோய்பொழிற் பாச்சி

 

லாச்சிரா மத்துறை கின்ற

பாலது வண்ணரோ பைந்தொடி வாடப்

 

பழிசெய்வ தோவிவர் பண்பே.

 

1.44.9

 

479

 

நாணொடு கூடிய சாயின ரேனும்

 

நகுவ ரவரிரு போதும்

ஊணொடு கூடிய உட்குந் தகையார்

 

உரைக ளவைகொள வேண்டா

ஆணொடு பெண்வடி வாயினர் பாச்சி

 

லாச்சிரா மத்துறை கின்ற

பூணெடு மார்பரோ பூங்கொடி வாடப்

 

புனைசெய்வ தோவிவர் பொற்பே.

 

1.44.10

 

480

 

அகமலி அன்பொடு தொண்டர் வணங்க

 

ஆச்சிரா மத்துறை கின்ற

புகைமலி மாலை புனைந் தழகாய

 

புனிதர்கொ லாமிவ ரென்ன

நகைமலி தண்பொழில் சூழ்தரு காழி

 

நற்றமிழ் ஞானசம் பந்தன்

தகைமலி தண்டமிழ் கொண்டிவை யேத்தச்

 

சாரகி லாவினை தானே.

 

1.44.11

 

 

முயலகன் என்பது ஒருவித வலிநோய். இது கொல்லி மழவனின்

மகளுக்குக் கண்டிருந்து இந்தத் திருப்பதிகம் ஓதியருளினவளவில் தீர்ந்தது.

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - மாற்றறிவரதர், தேவியார் - பாலசுந்தரநாயகியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.45 திருப்பழையனூர்-திரு ஆலங்காடு

 

பண் - தக்கராகம்

 

481

 

துஞ்ச வருவாருந் தொழுவிப்பாரும் வழுவிப்போய்

நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும் முனைநட்பாய்

வஞ்சப் படுத்தொருத்தி வாழ்நாள்கொள்ளும் வகைகேட்

டஞ்சும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.

 

1.45.1

 

482

 

கேடும் பிறவியும் ஆக்கினாருங் கேடிலா

வீடு மாநெறி விளம்பினாரெம் விகிர்தனார்

காடுஞ் சுடலையும் கைக்கொண்டெல்லிக் கணப்பேயோ

டாடும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.

 

1.45.2

 

483

 

கந்தங் கமழ்கொன்றைக் கண்ணிசூடி கனலாடி

வெந்த பொடிநீற்றை விளங்கப்பூசும் விகிர்தனார்

கொந்தண் பொழிற்சோலை யரவின்தோன்றிக் கோடல்பூத்

தந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.

 

1.45.3

 

484

 

பால மதிசென்னி படரச்சூடி பழியோராக்

கால னுயிர்செற்ற காலனாய கருத்தனார்

கோலம் பொழிற்சோலைப் பெடையோடாடி மடமஞ்ஞை

ஆலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.

 

1.45.4

 

485

 

ஈர்க்கும் புனல்சூடி இளவெண்டிங்கள் முதிரவே

பார்க்கு மரவம்பூண் டாடிவேடம் பயின்றாருங்

கார்க்கொள் கொடிமுல்லை குருந்தமேறிக் கருந்தேன்மொய்த்

தார்க்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.

 

1.45.5

 

486

 

பறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே

மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார்

பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண்

டறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.

 

1.45.6

 

487

 

நுணங்கு மறைபாடி யாடிவேடம் பயின்றாரும்

இணங்கு மலைமகளோ டிருகூறொன்றாய் இசைந்தாரும்

வணங்குஞ் சிறுத்தொண்டர் வைகலேத்தும் வாழ்த்துங்கேட்

டணங்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.

 

1.45.7

 

488

 

கணையும் வரிசிலையும் எரியுங்கூடிக் கவர்ந்துண்ண

இணையில் எயின்மூன்றும் எரித்திட்டாரெம் இறைவனார்

பிணையுஞ் சிறுமறியுங் கலையுமெல்லாங் கங்குல்சேர்ந்

தணையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.

 

1.45.8

 

489

 

கவிழ மலைதரளக் கடகக்கையால் எடுத்தான்றோள்

பவழ நுனைவிரலாற் பையவூன்றிப் பரிந்தாரும்

தவழுங் கொடிமுல்லை புறவஞ்சேர நறவம்பூத்

தவிழும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.

 

1.45.9

 

490

 

பகலும் இரவுஞ்சேர் பண்பினாரும் நண்போரா

திகலும் இருவர்க்கும் எரியாய்த்தோன்றி நிமிர்ந்தாரும்

புகலும் வழிபாடு வல்லார்க்கென்றுந் தீயபோய்

அகலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.

 

1.45.10

 

491

 

போழம் பலபேசிப் போதுசாற்றித் திரிவாரும்

வேழம் வருமளவும் வெயிலேதுற்றித் திரிவாரும்

கேழல் வினைபோகக் கேட்பிப்பாரும் கேடிலா

ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.

 

1.45.11

 

492

 

சாந்தங் கமழ்மறுகிற் சண்பைஞான சம்பந்தன்

ஆந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளை

வேந்த னருளாலே விரித்தபாடல் இவைவல்லார்

சேர்ந்த விடமெல்லாந் தீர்த்தமாகச் சேர்வாரே.

 

1.45.12

 

 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - ஊர்த்ததாண்டவேசுரர், தேவியார் - வண்டார்குழலியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.46 திரு அதிகைவீரட்டானம்

 

பண் - தக்கராகம்

 

493

 

குண்டைக் குறட்பூதங் குழும அனலேந்திக்

கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்

வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை

விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே.

 

1.46.1

 

493

 

அரும்புங் குரும்பையு மலைத்த மென்கொங்கைக்

கரும்பின் மொழியாளோ டுடன்கை அனல்வீசிச்

சுரும்புண் விரிகொன்றைச் சுடர்பொற் சடைதாழ

விரும்பு மதிகையு ளாடும்வீரட் டானத்தே.

 

1.46.2

 

494

 

ஆடல் அழல்நாக மரைக்கிட் டசைத்தாடப்

பாடல் மறைவல்லான் படுதம்பலி பெயர்வான்

மாட முகட்டின்மேல் மதிதோய் அதிகையுள்

வேடம் பலவல்லா னாடும்வீரட் டானத்தே.

 

1.46.3

 

496

 

எண்ணார் எயிலெய்தான் இறைவன் அனலேந்தி

மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப்

பண்ணார் மறைபாடப் பரமன் அதிகையுள்

விண்ணோர் பரவநின் றாடும்வீரட் டானத்தே.

 

1.46.4

 

497

 

கரிபுன் புறமாய கழிந்தார் இடுகாட்டில்

திருநின் றொருகையால் திருவாம் அதிகையுள்

எரியேந் தியபெருமான் எரிபுன் சடைதாழ

விரியும் புனல்சூடி யாடும்வீரட் டானத்தே.

 

1.46.5

 

498

 

துளங்குஞ் சுடரங்கைத் துதைய விளையாடி

இளங்கொம் பனசாயல் உமையோ டிசைபாடி

வளங்கொள் புனல்சூழ்ந்த வயலா ரதிகையுள்

விளங்கும் பிறைசூடி யாடும்வீரட் டானத்தே.

 

1.46.6

 

499

 

பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி

பூதம் புடைசூழப் புலித்தோ லுடையாகக்

கீதம் உமைபாடக் கெடில வடபக்கம்

வேத முதல்வன்நின் றாடும்வீரட் டானத்தே.

 

1.46.7

 

500

 

கல்லார் வரையரக்கன் தடந்தோள் கவின்வாட

ஒல்லை யடர்த்தவனுக் கருள்செய் ததிகையுள்

பல்லார் பகுவாய நகுவெண் டலைசூடி

வில்லால் எயிலெய்தான் ஆடும்வீரட் டானத்தே.

 

1.46.8

 

501

 

நெடியான் நான்முகனும் நிமிர்ந்தானைக் காண்கிலார்

பொடியாடு மார்பானைப் புரிநூ லுடையானைக்

கடியார் கழுநீலம் மலரு மதிகையுள்

வெடியார் தலையேந்தி யாடும்வீரட் டானத்தே.

 

1.46.9

 

511

 

அரையோ டலர்பிண்டி மருவிக் குண்டிகை

சுரையோ டுடனேந்தி உடைவிட் டுழல்வார்கள்

உரையோ டுரையொவ்வா துமையோ டுடனாகி

விரைதோ யலர்தாரான் ஆடும்வீரட் டானத்தே.

 

1.46.10

 

512

 

ஞாழல் கமழ்காழி யுள்ஞான சம்பந்தன்

வேழம் பொருதெண்ணீர் அதிகைவீரட் டானத்துச்

சூழுங் கழலானைச் சொன்ன தமிழ்மாலை

வாழுந் துணையாக நினைவார் வினையிலாரே.

 

1.46.11

 

 

இத்தலம் நடுநாட்டில் கெடிலநதிக்கு வடபாலுள்ளது.

சுவாமிபெயர் - அதிகைநாதர், வீரட்டானேசுவரர்;

தேவியார் - திருவதிகைநாயகி.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.47 திருச்சிரபுரம்

 

பண் - பழந்தக்கராகம்

 

504

 

பல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வ தன்றியும்போய்

வில்லடைந்த புருவநல்லாள் மேனியில் வைத்தலென்னே

சொல்லடைந்த தொல்மறையோ டங்கங் கலைகளெல்லாஞ்

செல்லடைந்த செல்வர்வாழுஞ் சிரபுரம் மேயவனே.

 

1.47.1

 

505

 

கொல்லைமுல்லை நகையினாளோர் கூறது வன்றியும்போய்

அல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணும் ஆதர வென்னைகொலாஞ்

சொல்லநீண்ட பெருமையாளர் தொல்கலை கற்றுவல்லார்

செல்லநீண்ட செல்வமல்கு சிரபுரம் மேயவனே.

 

1.47.2

 

506

 

நீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி யன்றியும்போய்

ஊரடைந்த ஏறதேறி யுண்பலி கொள்வதென்னே

காரடைந்த சோலைசூழ்ந்து காமரம் வண்டிசைப்பச்

சீரடைந்த செல்வமோங்கு சிரபுரம் மேயவனே.

 

1.47.3

 

507

 

கையடைந்த மானினோடு காரர வன்றியும்போய்

மெய்யடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்ததென்னே

கையடைந்த களைகளாகச் செங்கழு நீர்மலர்கள்

செய்யடைந்த வயல்கள்சூழ்ந்த சிரபுரம் மேயவனே.

 

1.47.4

 

508

 

புரமெரித்த பெற்றியோடும் போர்மத யானை தன்னைக்

கரமெடுத்துத் தோலுரித்த காரணம் ஆவதென்னே

மரமுரித்த தோலுடுத்த மாதவர் தேவரோடுஞ்

சிரமெடுத்த கைகள்கூப்புஞ் சிரபுரம் மேயவனே.

 

1.47.5

 

509

 

கண்ணுமூன்றும் உடையதன்றிக் கையினில் வெண்மழுவும்

பண்ணுமூன்று வீணையோடு பாம்புடன் வைத்ததென்னே

எண்ணுமூன்று கனலுமோம்பி எழுமையும் விழுமியராய்த்

திண்ணமூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே.

 

1.47.6

 

510

 

குறைபடாத வேட்கையோடு கோல்வளை யாளொருபாற்

பொறைபடாத இன்பமோடு புணர்தரு மெய்ம்மையென்னே

இறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்து

சிறைபடாத பாடலோங்கு சிரபுரம் மேயவனே.

 

1.47.7

 

511

 

மலையெடுத்த வாளரக்கன் அஞ்ச ஒருவிரலால்

நிலையெடுத்த கொள்கையானே நின்மல னேநினைவார்

துலையெடுத்த சொற்பயில்வார் மேதகு வீதிதோறுஞ்

சிலையெடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே.

 

1.47.8

 

512

 

மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது

சாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே

நாலுவேதம் ஓதலார்கள் நந்துணை யென்றிறைஞ்சச்

சேலுமேயுங் கழனிசூழ்ந்த சிரபுரம் மேயவனே.

 

1.47.9

 

513

 

புத்தரோடு சமணர்சொற்கள் புறனுரை யென்றிருக்கும்

பத்தர்வந்து பணியவைத்த பான்மைய தென்னைகொலாம்

மத்தயானை யுரியும்போர்த்து மங்கையொ டும்முடனே

சித்தர்வந்து பணியுஞ்செல்வச் சிரபுரம் மேயவனே.

 

1.47.10

 

514

 

தெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுரம் மேயவனை

அங்கம்நீண்ட மறைகள்வல்ல அணிகொள்சம் பந்தனுரை

பங்கம்நீங்கப் பாடவல்ல பத்தர்கள் பாரிதன்மேற்

சங்கமோடு நீடிவாழ்வர் தன்மையி னாலவரே.

 

1.47.11

 

 

சிரபுரமென்பதும் சீகாழிக்கொருபெயர்.

திருச்சிற்றம்பலம்

 

 

1.48 திருச்சேய்ஞலூர்

 

பண் - பழந்தக்கராகம்

 

515

 

நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு

மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை

ஆலடைந்த நீழல்மேவி யருமறை சொன்னதென்னே

சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.

 

1.48.1

 

516

 

நீறடைந்த மேனியின்கண் நேரிழையா ளொருபால்

கூறடைந்த கொள்கையன்றிக் கோலவளர் சடைமேல்

ஆறடைந்த திங்கள்சூடி யரவம் அணிந்ததென்னே

சேறடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.

 

1.48.2

 

517

 

ஊனடைந்த வெண்டலையி னோடுபலி திரிந்து

கானடைந்த பேய்களோடு பூதங் கலந்துடனே

மானடைந்த நோக்கிகாண மகிழ்ந்தெரி யாடலென்னே

தேனடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் மேயவனே.

 

1.48.3

 

518

 

வீணடைந்த மும்மதிலும் வில்மலை யாவரவின்

நாணடைந்த வெஞ்சரத்தால் நல்லெரி யூட்டலென்னே

பாணடைந்த வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்தழகார்

சேணடைந்த மாடம்மல்கு சேய்ஞலூர் மேயவனே.

 

1.48.4

 

519

 

பேயடைந்த காடிடமாப் பேணுவ தன்றியும்போய்

வேயடைந்த தோளியஞ்ச வேழம் உரித்ததென்னே

வாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வித்

தீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே.

 

1.48.5

 

520

 

காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து

வேடடைந்த வேடனாகி விசயனொ டெய்ததென்னே

கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய்

சேடடைந்த செல்வர்வாழுஞ் சேய்ஞலூர் மேயவனே.

 

1.48.6

 

521

 

பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதை

வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்

தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னே

சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே.

 

1.48.7

 

522

 

மாவடைந்த தேரரக்கன் வலிதொலை வித்தவன்றன்

நாவடைந்த பாடல்கேட்டு நயந்தருள் செய்ததென்னே

பூவடைந்த நான்முகன்போற் பூசுரர் போற்றிசெய்யுஞ்

சேவடைந்த ஊர்தியானே சேய்ஞலூர் மேயவனே.

 

1.48.8

 

523

 

காரடைந்த வண்ணனோடு கனக மனையானும்

பாரிடந்தும் விண்பறந்தும் பாத முடிகாணார்

சீரடைந்து வந்துபோற்றச் சென்றருள் செய்ததென்னே

தேரடைந்த மாமறுகிற் சேய்ஞலூர் மேயவனே.

 

1.48.9

 

524

 

மாசடைந்த மேனியாரும் மனந்திரி யாதகஞ்சி

நேசடைந்த ஊணினாரும் நேசமி லாததென்னே

வீசடைந்த தோகையாட விரைகமழும் பொழில்வாய்த்

தேசடைந்த வண்டுபாடுஞ் சேய்ஞலூர் மேயவனே.

 

1.48.10

 

525

 

சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவித்

தோயடைந்த தண்வயல்சூழ் தோணி புரத்தலைவன்

சாயடைந்த ஞானமல்கு சம்பந்தன் இன்னுரைகள்

வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே.

 

1.48.11

 

 

சோழநாட்டில் சுப்பிரமணியசுவாமியினா லுண்டான தலம்.

சுவாமிபெயர் - சத்தகிரீசுவரர், தேவியார் - சகிதேவிநாயகியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.49 திருநள்ளாறு

 

பண் - பழந்தக்கராகம்

 

பச்சைத்திருப்பதிகம்

இது சமணர்கள் வாதின்பொருட்டுத் தீயிலிட்டபோது

வேகாதிருந்தது.

 

526

 

போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்

பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி

ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்

நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

 

1.49.1

 

527

 

தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப்

பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்

ஏடுடைய மேலுலகோ டேழ்கடலுஞ் சூழ்ந்த

நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே.

 

1.49.2

 

528

 

ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி அணியிழையோர்

பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த

மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை

நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே.

 

1.49.3

 

529

 

புல்கவல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்தயலே

மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப்

பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாத நிழல்சேர

நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.

 

1.49.4

 

530

 

ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்

ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி

நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை

நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.

 

1.49.5

 

531

 

திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள்

எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்சத்

தங்களுச்சி யால்வணங்குந் தன்னடி யார்கட்கெல்லாம்

நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே.

 

1.49.6

 

532

 

வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொள் முழவதிர

அஞ்சிடத்தோர் ஆடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச்

செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே

நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

 

1.49.7

 

533

 

சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்

சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போய்ப்

பட்டமார்ந்த சென்னிமேலோர் பால்மதி யஞ்சூடி

நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.

 

1.49.8

 

534

 

உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுட னேயொடுக்கி

அண்ணலாகா வண்ணல்நீழ லாரழல் போலுருவம்

எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர்

நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே.

 

1.49.9

 

535

 

மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணமிலிகள்

பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி அந்நெறி செல்லன்மின்

மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி லும்முடனே

நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே.

 

1.49.10

 

536

 

தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன்

நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்ல

பண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார்

உண்புநீங்கி வானவரோ டுலகி லுறைவாரே.

 

1.49.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ள சப்த தியாகர் தலங்களிலொன்று.

சுவாமிபெயர் - தெர்ப்பாரணியர்,

தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

1.50 திருவலிவலம்

 

பண் - பழந்தக்கராகம்

 

537

 

ஒல்லையாறி உள்ளமொன்றிக் கள்ளம்ஒழிந் துவெய்ய

சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி

நல்லவாறே உன்றன்நாமம் நாவில்நவின் றேத்த

வல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனே.

 

1.50.1

 

538

 

இயங்குகின்ற இரவிதிங்கள் மற்றுநற் றேவரெல்லாம்

பயங்களாலே பற்றிநின்பால் சித்தந்தெளி கின்றிலர்

தயங்குசோதி சாமவேதா காமனைக்காய்ந் தவனே

மயங்குகின்றேன் வந்துநல்காய் வலிவல மேயவனே.

 

1.50.2

 

539

 

பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதைப் பெருங்கடலை

விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனை நோய்நலியக்

கண்டுகண்டே யுன்றன்நாமங் காதலிக் கின்றதுள்ளம்

வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை வலிவல மேயவனே.

 

1.50.3

 

540

 

மெய்யராகிப் பொய்யைநீக்கி வேதனை யைத்துறந்து

செய்யரானார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே

நைவன்நாயேன் உன்றன்நாமம் நாளும் நவிற்றுகின்றேன்

வையம்முன்னே வந்துநல்காய் வலிவல மேயவனே.

 

1.50.4

 

541

 

துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ் சொல்லுவ னுன்றிறமே

தஞ்சமில்லாத் தேவர்வந்துன் தாளிணைக் கீழ்ப்பணிய

நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ நாளும் நினைந்தடியேன்

வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே.

 

1.50.5

 

542

 

புரிசடையாய் புண்ணியனே நண்ணலார் மூவெயிலும்

எரியஎய்தாய் எம்பெருமான் என்றிமை யோர்பரவும்

கரியுரியாய் காலகாலா நீலமணி மிடற்று

வரியரவா வந்துநல்காய் வலிவல மேயவனே.

 

1.50.6

 

543

 

தாயுநீயே தந்தைநீயே சங்கர னேயடியேன்

ஆயுநின்பால் அன்புசெய்வான் ஆதரிக் கின்றதுள்ளம்

ஆயமாய காயந்தன்னுள் ஐவர்நின் றொன்றலொட்டார்

மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே.

 

1.50.7

 

544

 

நீரொடுங்குஞ் செஞ்சடையாய் நின்னுடைய பொன்மலையை

வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற வேந்தனி ராவணனைத்

தேரொடும்போய் வீழ்ந்தலறத் திருவிர லால்அடர்த்த

வாரொடுங்கும் கொங்கைபங்கா வலிவல மேயவனே.

 

1.50.8

 

545

 

ஆதியாய நான்முகனு மாலு மறிவரிய

சோதியானே நீதியில்லேன் சொல்லுவன் நின்றிறமே

ஓதிநாளும் உன்னையேத்தும் என்னை வினைஅவலம்

வாதியாமே வந்துநல்காய் வலிவல மேயவனே.

 

1.50.9

 

546

 

*பொதியிலானே பூவணத்தாய் பொன்திக ழுங்கயிலைப்

பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவி டாதவனே

விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கிய ரென்றிவர்கள்

மதியிலாதார் என்செய்வாரோ வலிவல மேயவனே.

 

(*)பொதியில் என்பது பொதிகைமலை. அது வைப்புத்தலங்களிலொன்று.

 

1.50.10

 

547

 

வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவல மேயவனைப்

பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம் பந்தன்சொன்ன

பன்னுபாடல் பத்தும்வல்லார் மெய்த்தவத் தோர்விரும்பும்

மன்னுசோதி ஈசனோடே மன்னி யிருப்பாரே.

 

1.50.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - மனத்துணைநாதர், தேவியார் - வாளையங்கண்ணியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

1.51 திருச்சோபுரம்

 

பண் - பழந்தக்கராகம்

 

548

 

வெங்கண்ஆனை யீருரிவை போர்த்து விளங்குமொழி

மங்கைபாகம் வைத்துகந்த மாண்பது வென்னைகொலாங்

கங்கையோடு திங்கள்சூடிக் கடிகம ழுங்கொன்றைத்

தொங்கலானே தூயநீற்றாய் சோபுர மேயவனே.

 

1.51.1

 

549

 

விடையமர்ந்து வெண்மழுவொன் றேந்திவி ரிந்திலங்கு

சடையொடுங்கத் தண்புனலைத் தாங்கிய தென்னைகொலாங்

கடையுயர்ந்த மும்மதிலுங் காய்ந்தன லுள்ளழுந்தத்

தொடைநெகிழ்ந்த வெஞ்சிலையாய் சோபுர மேயவனே.

 

1.51.2

 

550

 

தீயராய வல்லரக்கர் செந்தழ லுள்ளழுந்தச்

சாயவெய்து வானவரைத் தாங்கிய தென்னைகாலாம்

பாயும்வெள்ளை ஏற்றையேறிப் பாய்புலித் தோலுடுத்த

தூயவெள்ளை நீற்றினானே சோபுர மேயவனே.

 

1.513

 

551

 

பல்லிலோடு கையிலேந்திப் பல்கடை யும்பலிதேர்ந்

தல்லல்வாழ்க்கை மேலதான ஆதர வென்னைகொலாம்

வில்லைவென்ற நுண்புருவ வேல்நெடுங் கண்ணியொடுந்

தொல்லையூழி யாகிநின்றாய் சோபுர மேயவனே.

 

1.51.4

 

552

 

நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடை மேல்மதியம்

ஏற்றமாக வைத்துகந்த காரண மென்னைகொலாம்

ஊற்றமிக்க காலன்றன்னை ஒல்க வுதைத்தருளித்

தோற்றமீறு மாகிநின்றாய் சோபுர மேயவனே.

 

1.51.5

 

553

 

கொன்னவின்ற மூவிலைவேல் கூர்மழு வாட்படையன்

பொன்னைவென்ற கொன்றைமாலை சூடும்பொற் பென்னைகொலாம்

அன்னமன்ன மென்னடையாள் பாக மமர்ந்தரைசேர்

துன்னவண்ண ஆடையினாய் சோபுர மேயவனே.

 

1.51.6

 

554

 

குற்றமின்மை யுண்மைநீயென் றுன்னடி யார்பணிவார்

கற்றல்கேள்வி ஞானமான காரண மென்னைகொலாம்

வற்றலாமை வாளரவம் பூண்டயன் வெண்டலையில்

துற்றலான கொள்கையானே சோபுர மேயவனே.

 

1.51.7

 

555

 

விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டு விறலரக்கர்

குலங்கள்வாழும் ஊரெரித்த கொள்கையி தென்னைகொலாம்

இலங்கைமன்னு வாளவுணர் கோனை யெழில்விரலால்

துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுர மேயவனே.

 

1.51.8

 

556

 

விடங்கொள்நாக மால்வரையைச் சுற்றி விரிதிரைநீர்

கடைந்தநஞ்சை யுண்டுகந்த காரண மென்னைகொலாம்

இடந்துமண்ணை யுண்டமாலு மின்மலர் மேலயனுந்

தொடர்ந்துமுன்னங் காணமாட்டாச் சோபுர மேயவனே.

 

1.51.9

 

557

 

புத்தரோடு புன்சமணர் பொய்யுரை யேரைத்துப்

பித்தராகக் கண்டுகந்த பெற்றிமை யென்னைகொலாம்

மத்தயானை யீருரிவை போர்த்து வளர்சடைமேல்

துத்திநாகஞ் சூடினானே சோபுர மேயவனே.

 

1.51.10

 

558

 

சோலைமிக்க தண்வயல்சூழ் சோபுர மேயவனைச்

சீலமிக்க தொல்புகழார் சிரபுரக் கோன்நலத்தான்

ஞாலம்மிக்க தண்டமிழான் ஞானசம் பந்தன்சொன்ன

கோலம்மிக்க மாலைவல்லார் கூடுவர் வானுலகே.

 

1.51.11

 

 

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சோபுரநாதர், தேவியார் - சோபுரநாயகியம்மை

திருச்சிற்றம்பலம்

 

 

1.52 திருநெடுங்களம்

 

பண் - பழந்தக்கராகம்

 

559

 

மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல்வளரும்

பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப் பேசினல்லால்

குறையுடையார் குற்றமோராய் கொள்கையி னாலுயர்ந்த

நிறையுடையார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

 

1.52.1

 

560

 

கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடை நஞ்சுதன்னைத்

தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்திய தேவநின்னை

மனத்தகத்தோர் பாடலாடல் பேணி யிராப்பகலும்

நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

 

1.52.2

 

561

 

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத

என்னடியான் உயிரைவவ்வேல் என்றடல் கூற்றுதைத்த

பொன்னடியே பரவிநாளும் பூவொடு நீர்சுமக்கும்

நின்னடியார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

 

1.52.3

 

562

 

மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர் பால்மகிழ்ந்தாய்

அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடை ஆரூரா

தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் றாள்நிழற்கீழ்

நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

 

1.52.4

 

563

 

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிட மும்பலிசேர்

தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழ லேவணங்கித்

தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின் றாள்நிழற்கீழ்

நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

 

1.52.5

 

564

 

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து

கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேற்கரந்தாய்

அருத்தனாய ஆதிதேவன் அடியிணை யேபரவும்

நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

 

1.52.6

 

565

 

கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்

மாறுகொண்டார் புரமெரித்த மன்னவ னேகொடிமேல்

ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெரு மானணிந்த

நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

 

1.52.7

 

566

 

குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதிற் சூழிலங்கை

அன்றிநின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழடர்த்தாய்

என்றுநல்ல வாய்மொழியால் ஏத்தியி ராப்பகலும்

நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.

 

1.52.8

 

567

 

வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனுஞ்

சூழவெங்கும் நேடவாங்கோர் சோதியு ளாகிநின்றாய்

கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப் பொன்னடியின்

நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்கள மேயவனே.

 

1.52.9

 

568

 

வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமி லாச்சமணுந்

தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவ மொன்றறியார்

துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே

நெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

 

1.52.10

 

569

 

நீடவல்ல வார்சடையான் மேயநெ டுங்களத்தைச்

சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக் கோன்நலத்தால்

நாடவல்ல பனுவல்மாலை ஞானசம் பந்தன்சொன்ன

பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.

 

1.52.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - நித்தியசுந்தரர், தேவியார் - ஒப்பிலாநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

1.53 திருமுதுகுன்றம்

 

பண் - பழந்தக்கராகம்

 

570

 

தேவராயும் அசுரராயுஞ் சித்தர் செழுமறைசேர்

நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரி கால்நீரும்

மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும்

மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே.

 

1.53.1

 

571

 

பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதி ரோன்மதிபார்

எற்றுநீர்தீக் காலுமேலை விண்ணிய மானனொடு

மற்றுமாதோர் பல்லுயிராய் மாலய னும்மறைகள்

முற்றுமாகி வேறுமானான் மேயது முதுகுன்றே.

 

1.53.2

 

572

 

வாரிமாகம் வைகுதிங்கள் வாளர வஞ்சூடி

நாரிபாகம் நயந்துபூமேல் நான்முகன் றன்றலையில்

சீரிதாகப் பலிகொள்செல்வன் செற்றலுந் தோன்றியதோர்

மூரிநாகத் துரிவைபோர்த்தான் மேயது முதுகுன்றே.

 

1.53.3

 

573

 

பாடுவாருக் கருளுமெந்தை பனிமுது பௌவமுந்நீர்

நீடுபாரும் முழுதுமோடி அண்டர் நிலைகெடலும்

நாடுதானும் ஊடுமோடி ஞாலமும் நான்முகனும்

ஊடுகாண மூடும்வெள்ளத் துயர்ந்தது முதுகுன்றே.

 

1.53.4

 

574

 

வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம் மீசணவிச்

செழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர் திசைவணங்கத்

தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம் பூதஞ்சூழ

முழங்குசெந்தீ யேந்தியாடி மேயது முதுகுன்றே.

 

1.53.5

 

575

 

சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கள் தொல்லரா நல்லிதழி

சழிந்தசென்னி சைவவேடந் தானினைத் தைம்புலனும்

அழிந்தசிந்தை அந்தணாளர்க் கறம்பொரு ளின்பம்வீடு

மொழிந்தவாயான் முக்கணாதி மேயது முதுகுன்றே.

 

1.53.5

 

               

*இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

1.53.6

 

576

 

மயங்குமாயம் வல்லராகி வானி னொடுநீரும்

இயங்குவோருக் கிறைவனாய இராவணன் தோள்நெரித்த

புயங்கராக மாநடத்தன் புணர்முலை மாதுமையாள்

முயங்குமார்பன் முனிவரேத்த மேயது முதுகுன்றே.

 

1.53.8

 

577

 

ஞாலமுண்ட மாலுமற்றை நான்முக னும்மறியாக்

கோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங் கொய்மலரால்

ஏலஇண்டை கட்டிநாமம் இசையஎப் போதுமேத்தும்

மூலமுண்ட நீற்றர்வாயான் மேயது முதுகுன்றே.

 

1.53.9

 

578

 

உறிகொள்கையர் சீவரத்தர் உண்டுழல் மிண்டர்சொல்லை

நெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங் கைதொழுமின்

மறிகொள்கையன் வங்கமுந்நீர் பொங்கு விடத்தையுண்ட

முறிகொள்மேனி மங்கைபங்கன் மேயது முதுகுன்றே.

 

1.53.10

 

579

 

மொய்த்துவானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை

பித்தர்வேடம் பெருமையென்னும் பிரமபுரத் தலைவன்

.... .... .... .... .... .... .... ....

.... .... .... .... .... .... .... ....

 

1.53.11

 

(*) 11-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் சிதைந்து போயின.

திருச்சிற்றம்பலம்

 

 

1.54 திருஓத்தூர்

 

பண் - பழந்தக்கராகம்

 

580

 

பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி

ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்

ஓத்தூர் மேய வொளிமழு வாள்அங்கைக்

கூத்தீ ரும்ம குணங்களே.

 

1.54.1

 

581

 

இடையீர் போகா இளமுலை யாளையோர்

புடையீ ரேபுள்ளி மானுரி

உடையீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்ச்

சடையீ ரேயும தாளே.

 

1.54.2

 

582

 

உள்வேர் போல நொடிமையி னார்திறம்

கொள்வீ ரல்குலோர் கோவணம்

ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க்

கள்வீ ரேயும காதலே.

 

1.54.3

 

583

 

தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை

ஆட்டீ ரேயடி யார்வினை

ஓட்டீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்

நாட்டீ ரேயருள் நல்குமே.

 

1.54.4

 

584

 

குழையார் காதீர் கொடுமழு வாட்படை

உழையாள் வீர்திரு வோத்தூர்

பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்

அழையா மேயருள் நல்குமே.

 

1.54.5

 

585

 

மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்

தக்கார் தம்மக்க ளீரென்

றுட்கா தாருள ரோதிரு வோத்தூர்

நக்கீ ரேயருள் நல்குமே.

 

1.54.6

 

586

 

தாதார் கொன்றை தயங்கு முடியுடை

நாதா என்று நலம்புகழ்ந்

தோதா தாருள ரோதிரு வோத்தூர்

ஆதீ ரேயருள் நல்குமே.

 

1.54.7

 

587

 

என்றா னிம்மலை யென்ற அரக்கனை

வென்றார் போலும் விரலினால்

ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்

என்றார் மேல்வினை யேகுமே.

 

1.54.8

 

588

 

நன்றா நால்மறை யானொடு மாலுமாய்ச்

சென்றார் போலுந் திசையெலாம்

ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்

நின்றீ ரேயுமை நேடியே.

 

1.54.9

 

589

 

கார மண்கலிங் கத்துவ ராடையர்

தேரர் சொல்லவை தேறன்மின்

ஓரம் பாலெயி லெய்தவ னோத்தூர்ச்

சீர வன்கழல் சேர்மினே.

 

1.54.10

 

590

 

குரும்பை யாண்பனை யின்குலை யோத்தூர்

அரும்பு கொன்றை யடிகளைப்

பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்

விரும்பு வார்வினை வீடே.

 

1.54.11

 

 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வேதநாதர், தேவியார் - இளமுலைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

1.55 திருமாற்பேறு

 

பண் - பழந்தக்கராகம்

 

591

 

ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை

நீறு சேர்திரு மேனியர்

சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின்

மாறி லாமணி கண்டரே.

 

1.55.1

 

592

 

தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை

அடைவா ராமடி கள்ளென

மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே

றுடையீ ரேயுமை யுள்கியே.

 

1.55.2

 

593

 

பையா ரும்மர வங்கொடு வாட்டிய

கையா னென்று வணங்குவர்

மையார் நஞ்சுண்டு மாற்பேற் றிருக்கின்ற

ஐயா நின்னடி யார்களே.

 

1.55.3

 

594

 

சால மாமலர் கொண்டு சரணென்று

மேலை யார்கள் விரும்புவர்

மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று

நீல மார்கண்ட நின்னையே.

 

1.55.4

 

595

 

மாறி லாமணி யேயென்று வானவர்

ஏற வேமிக ஏத்துவர்

கூற னேகுல வுந்திரு மாற்பேற்றின்

நீற னேயென்று நின்னையே.

 

1.55.5

 

596

 

உரையா தாரில்லை யொன்றுநின் தன்மையைப்

பரவா தாரில்லை நாள்களும்

திரையார் பாலியின் தென்கரை மாற்பேற்

றரையா னேயருள் நல்கிடே.

 

1.55.6

 

               

(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று.

 

1.55.7

 

597

 

அரச ளிக்கும் அரக்கன் அவன்றனை

உரைகெ டுத்தவன் ஒல்கிட

வரமி குத்தவெம் மாற்பேற் றடிகளைப்

பரவி டக்கெடும் பாவமே.

 

1.55.8

 

598

 

இருவர் தேவருந் தேடித் திரிந்தினி

ஒருவ ராலறி வொண்ணிலன்

மருவு நீள்கழல் மாற்பேற் றடிகளைப்

பரவு வார்வினை பாறுமே.

 

1.55.9

 

599

 

தூசு போர்த்துழல் வார்கையில் துற்றுணும்

நீசர் தம்முரை கொள்ளெலுந்

தேசம் மல்கிய தென்திரு மாற்பேற்றின்

ஈச னென்றெடுத் தேத்துமே.

 

1.55.10

 

600

 

மன்னி மாலொடு சோமன் பணிசெயும்

மன்னும் மாற்பேற் றடிகளை

மன்னு காழியுள் ஞானசம் பந்தன்சொல்

பன்ன வேவினை பாறுமே.

 

1.55.11

 

 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - மால்வணங்குமீசர், தேவியார் - கருணைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

1.56 திருப்பாற்றுறை

 

பண் - பழந்தக்கராகம்

 

601

 

காரார் கொன்றை கலந்த முடியினர்

சீரார் சிந்தை செலச்செய்தார்

பாரார் நாளும் பரவிய பாற்றுறை

ஆரா ராதி முதல்வரே.

 

1.56.1

 

602

 

நல்லா ரும்மவர் தீய ரெனப்படுஞ்

சொல்லார் நன்மலர் சூடினார்

பல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறை

எல்லா ருந்தொழும் ஈசரே.

 

1.56.2

 

603

 

விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்

எண்ணார் வந்தென் எழில் கொண்டார்

பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை

யுண்ணா ணாளும் உறைவரே.

 

1.56.3

 

604

 

பூவுந் திங்கள் புனைந்த முடியினர்

ஏவின் அல்லா ரெயிலெய்தார்

பாவந் தீர்புனல் மல்கிய பாற்றுறை

ஓவென் சிந்தை யொருவரே.

 

1.56.4

 

605

 

மாகந் தோய்மதி சூடிமகிழ்ந் தென

தாகம் பொன்னிற மாக்கினார்

பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை

நாகம் பூண்ட நயவரே.

 

1.56.5

 

606

 

போது பொன்றிகழ் கொன்றை புனைமுடி

நாதர் வந்தென் நலங்கொண்டார்

பாதந் தொண்டர் பரவிய பாற்றுறை

வேத மோதும் விகிர்தரே.

 

1.56.6

 

607

 

வாடல் வெண்டலை சூடினர் மால்விடை

கோடல் செய்த குறிப்பினார்

பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை

ஆடல் நாகம் அசைத்தாரே.

 

1.56.7

 

608

 

வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர்

எவ்வஞ் செய்தென் எழில்கொண்டார்

பவ்வம் நஞ்சடை கண்டரெம் பாற்றுறை

மவ்வல் சூடிய மைந்தரே.

 

1.56.8

 

608

 

ஏனம் அன்னமும் ஆனவ ருக்கெரி

ஆன வண்ணத்தெம் அண்ணலார்

பான லம்மலர் விம்மிய பாற்றுறை

வான வெண்பிறை மைந்தரே.

 

1.56.9

 

610

 

வெந்த நீற்றினர் வேலினர் நூலினர்

வந்தென் நன்னலம் வௌவினார்

பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை

மைந்தர் தாமோர் மணாளரே.

 

1.56.10

 

611

 

பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய

பத்து நூறு பெயரானைப்

பத்தன் ஞானசம் பந்தன தின்றமிழ்

பத்தும் பாடிப் பரவுமே.

 

1.56.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - திருமூலநாதர், தேவியார் - மோகாம்பிகையம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

1.57 திருவேற்காடு

 

பண் - பழந்தக்கராகம்

 

612

 

ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி

வெள்ளி யானுறை வேற்காடு

உள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில்

தெள்ளி யாரவர் தேவரே.

 

1.57.1

 

613

 

ஆடல் நாகம் அசைத்தள வில்லதோர்

வேடங் கொண்டவன் வேற்காடு

பாடி யும்பணிந் தாரிவ் வுலகினில்

சேட ராகிய செல்வரே.

 

1.57.2

 

614

 

பூதம் பாடப் புறங்காட் டிடையாடி

வேத வித்தகன் வேற்காடு

போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க்

கேதம் எய்துத லில்லையே.

 

1.57.3

 

615

 

ஆழ்க டலெனக் கங்கை கரந்தவன்

வீழ்ச டையினன் வேற்காடு

தாழ்வு டைமனத் தாற்பணிந் தேத்திட

பாழ்ப டும்மவர் பாவமே.

 

1.57.4

 

616

 

காட்டி னாலும் அயர்த்திடக் காலனை

வீட்டி னானுறை வேற்காடு

பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர்

ஓட்டி னார்வினை ஒல்லையே.

 

1.57.5

 

617

 

தோலி னாலுடை மேவவல் லான்சுடர்

வேலி னானுறை வேற்காடு

நூலி னாற்பணிந் தேத்திட வல்லவர்

மாலி னார்வினை மாயுமே.

 

1.57.6

 

618

 

மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர்

வில்லி னானுறை வேற்காடு

சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்

செல்ல வல்லவர் தீர்க்கமே.

 

1.57.8

 

619

 

மூரல் வெண்மதி சூடு முடியுடை

வீரன் மேவிய வேற்காடு

வார மாய்வழி பாடு நினைந்தவர்

சேர்வர் செய்கழல் திண்ணமே.

 

1.57.8

 

620

 

பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி

விரக்கி னானுறை வேற்காட்டூர்

அரக்கன் ஆண்மை யடரப் பட்டானிறை

நெருக்கி னானை நினைமினே.

 

1.57.9

 

621

 

மாறி லாமல ரானொடு மாலவன்

வேற லானுறை வேற்காடு

ஈறி லாமொழி யேமொழி யாயெழில்

கூறி னார்க்கில்லை குற்றமே.

 

1.57.10

 

622

 

விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு

கண்டு நம்பன் கழல்பேணிச்

சண்பை ஞானசம் பந்தன செந்தமிழ்

கொண்டு பாடக் குணமாமே.

 

1.57.11

 

 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வேற்காட்டீசுவரர், தேவியார் - வேற்கண்ணியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

1.58 திருக்கரவீரம்

 

பண் - பழந்தக்கராகம்

 

623

 

அரியும் நம்வினை யுள்ளன ஆசற

வரிகொள் மாமணி போற்கண்டங்

கரிய வன்றிக ழுங்கர வீரத்தெம்

பெரிய வன்கழல் பேணவே.

 

1.58.1

 

624

 

தங்கு மோவினை தாழ்சடை மேலவன்

திங்க ளோடுடன் சூடிய

கங்கை யான்றிக ழுங்கர வீரத்தெம்

சங்க ரன்கழல் சாரவே.

 

1.58.2

 

625

 

ஏதம் வந்தடை யாவினி நல்லன

பூதம் பல்படை யாக்கிய

காத லான்திக ழுங்கர வீரத்தெம்

நாதன் பாதம் நணுகவே.

 

1.58.3

 

626

 

பறையும் நம்வினை யுள்ளன பாழ்பட

மறையும் மாமணி போற்கண்டங்

கறைய வன்றிக ழுங்கர வீரத்தெம்

இறைய வன்கழல் ஏத்தவே.

 

1.58.4

 

627

 

பண்ணி னார்மறை பாடலன் ஆடலன்

விண்ணி னார்மதி லெய்தமுக்

கண்ணி னானுறை யுங்கர வீரத்தை

நண்ணு வார்வினை நாசமே.

 

1.58.5

 

628

 

நிழலி னார்மதி சூடிய நீள்சடை

அழலி னாரன லேந்திய

கழலி னாருறை யுங்கர வீரத்தைத்

தொழவல் லார்க்கில்லை துக்கமே.

 

1.58.6

 

629

 

வண்டர் மும்மதில் மாய்தர எய்தவன்

அண்டன் ஆரழல் போலொளிர்

கண்ட னாருறை யுங்கர வீரத்துத்

தொண்டர் மேற்றுயர் தூரமே.

 

1.58.7

 

630

 

புனலி லங்கையர் கோன்முடி பத்திறச்

சினவ லாண்மை செகுத்தவன்

கனல வனுறை கின்ற கரவீரம்

எனவல் லார்க்கிட ரில்லையே.

 

1.58.8

 

631

 

வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த்

தெள்ளத் தீத்திர ளாகிய

கள்ளத் தானுறை யுங்கர வீரத்தை

உள்ளத் தான்வினை ஓயுமே.

 

1.58.9

 

632

 

செடிய மண்ணொடு சீவரத் தாரவர்

கொடிய வெவ்வுரை கொள்ளன்மின்

கடிய வன்னுறை கின்ற கரவீரத்

தடிய வர்க்கில்லை யல்லலே.

 

1.58.10

 

633

 

வீடி லான்விளங் குங்கர வீரத்தெம்

சேடன் மேற்கசி வாற்றமிழ்

நாடு ஞானசம் பந்தன சொல்லிவை

பாடு வார்க்கில்லை பாவமே.

 

1.58.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - கரவீரேசுவரர், தேவியார் - பிரத்தியட்சமின்னாளம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

1.59 திருத்தூங்கானைமாடம்

 

பண் - பழந்தக்கராகம்

 

634

 

ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை

 

யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்

அடங்கு மிடங்கருதி நின்றீரெல்லாம்

 

அடிக ளடிநிழற்கீ ழாளாம்வண்ணங்

கிடங்கும் மதிலுஞ் சுலாவியெங்குங்

 

கெழுமனைகள் தோறும்ம றையின்னொலி

தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர்

 

தூங்கானை மாடந் தொழுமின்களே.

 

1.59.1

 

635

 

பிணிநீர சாதல் பிறத்தலிவை

 

பிரியப் பிரியாத பேரின்பத்தோ

டணிநீர மேலுலகம் எய்தலுறில்

 

அறிமின் குறைவில்லை ஆனேறுடை

மணிநீல கண்ட முடையபிரான்

 

மலைமகளுந் தானும் மகிழ்ந்துவாழுந்

துணிநீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்

 

தூங்கானை மாடந் தொழுமின்களே.

 

1.59.2

 

636

 

சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை

 

சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்

ஆமா றறியா தலமந்துநீர்

 

அயர்ந்துங் குறைவில்லை ஆனேறுடைப்

பூமாண் அலங்கல் இலங்குகொன்றை

 

புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந்

தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர்

 

தூங்கானை மாடந் தொழுமின்களே.

 

1.59.3

 

637

 

ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை

 

உடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்

மான்று மனங்கருதி நின்றீரெல்லாம்

 

மனந்திரிந்து மண்ணில் மயங்காதுநீர்

மூன்று மதிலெய்த மூவாச்சிலை

 

முதல்வர்க் கிடம்போலும் முகில்தோய்கொடி

தோன்றுங் கடந்தைத் தடங்கோயில்சேர்

 

தூங்கானை மாடந் தொழுமின்களே.

 

1.59.4

 

638

 

மயல்தீர்மை யில்லாத தோற்றம்மிவை

 

மரணத்தொ டொத்தழியு மாறாதலால்

வியல்தீர மேலுக மெய்தலுறின்

 

மிக்கொன்றும் வேண்டா விமலனிடம்

உயர்தீர வோங்கிய நாமங்களா

 

லோவாது நாளும் அடிபரவல்செய்

துயர்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர்

 

தூங்கானை மாடந் தொழுமின்களே.

 

1.59.5

 

639

 

பன்னீர்மை குன்றிச் செவிகேட்பிலா

 

படர்நோக் கின்கண் பவளந்நிற

நன்னீர்மை குன்றித் திரைதோலொடு

 

நரைதோன்றுங் காலம் நமக்காதல்முன்

பொன்னீர்மை துன்றப் புறந்தோன்றுநற்

 

புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந்

தொன்னீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்

 

தூங்கானை மாடந் தொழுமின்களே.

 

1.59.6

 

640

 

இறையூண் துகளோ டிடுக்கணெய்தி

 

யிழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்

நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லாம்

 

நீள்கழ லேநாளும் நினைமின்சென்னிப்

பிறைசூ ழலங்கல் இலங்குகொன்றைப்

 

பிணையும் பெருமான் பிரியாதநீர்த்

துறைசூழ் கடந்தைத் தடங்கோயில்சேர்

 

தூங்கானை மாடந் தொழுமின்களே.

 

1.59.7

 

641

 

பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப்

 

பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்

இல்சூ ழிடங்கருதி நின்றீரெல்லாம்

 

இறையே பிரியா தெழுந்துபோதுங்

கல்சூ ழரக்கன் கதறச்செய்தான்

 

காதலியுந் தானுங் கருதிவாழுந்

தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர்

 

தூங்கானை மாடந் தொழுமின்களே.

 

1.59.8

 

642

 

நோயும் பிணியும் அருந்துயரமும்

 

நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம்

வாயும் மனங்கருதி நின்றீரெல்லாம்

 

மலர்மிசைய நான்முகனும் மண்ணும்விண்ணும்

தாய அடியளந்தான் காணமாட்டாத்

 

தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண்

டோ யும் கடந்தைத் தடங்கோயில்சேர்

 

தூங்கானை மாடந் தொழுமின்களே.

 

1.59.9

 

643

 

பகடூர் பசிநலிய நோய்வருதலாற்

 

பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்

முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும்

 

மூடுதுவ ராடையாரும் நாடிச்சொன்ன

திகழ்தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா

 

திருந்திழை யுந்தானும் பொருந்திவாழுந்

துகள்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர்

 

தூங்கானை மாடந் தொழுமின்களே.

 

1.59.10

 

644

 

மண்ணார் முழவதிரும் மாடவீதி

 

வயல்காழி ஞானசம் பந்தன்நல்ல

பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர்

 

பிறையுரிஞ்சுந் தூங்கானை மாடமேயான்

கண்ணார் கழல்பரவு பாடல்பத்துங்

 

கருத்துணரக் கற்றாருங் கேட்டாரும்போய்

விண்ணோ ருலகத்து மேவிவாழும்

 

விதியது வேயாகும் வினைமாயுமே.

 

1.59.11

 

 

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சுடர்க்கொழுந்தீசர், தேவியார் - கடந்தைநாயகியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

1.60 திருத்தோணிபுரம்

 

பண் - பழந்தக்கராகம்

 

645

 

வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும்

ஒண்டரங்க இசைபாடும் அளிஅரசே ஒளிமதியத்

துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும்

பண்டரங்கர்க் கென்நிலைமை பரிந்தொருகால் பகராயே.

 

1.60.1

 

646

 

எறிசுறவங் கழிக்கானல் இளங்குருகே என்பயலை

அறிவுறா தொழிவதுவும் அருவினையேன் பயனன்றே

செறிசிறார் பதமோதுந் திருத்தோணி புரத்துறையும்

வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே.

 

1.60.2

 

647

 

பண்பழனக் கோட்டகத்து வாட்டமிலாச் செஞ்சூட்டுக்

கண்பகத்தின் வாரணமே கடுவினையேன் உறுபயலை

செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்துறையும்

பண்பனுக்கென் பரிசுரைத்தால் பழியாமோ மொழியாயே.

 

1.60.3

 

648

 

காண்டகைய செங்காலொண் கழிநாராய் காதலாற்

பூண்டகைய முலைமெலிந்து பொன்பயந்தா ளென்றுவளர்

சேண்டகைய மணிமாடத் திருத்தோணி புரத்துறையும்

ஆண்டகையாற் கின்றேசென் றடியறிய உணர்த்தாயே.

 

1.60.4

 

649

 

பாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்த

காராரும் செழுநிறத்துப் பவளக்கால் கபோதகங்காள்

தேராரும் நெடுவீதித் திருத்தோணி புரத்துறையும்

நீராருஞ் சடையாருக் கென்நிலைமை நிகழ்த்தீரே.

 

1.60.5

 

650

 

சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர்வீச

வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண்மறைகள்

தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் துளங்காத

கூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறீரே.

 

1.60.6

 

651

 

முன்றில்வாய் மடல்பெண்ணைக் குரம்பைவாழ் முயங்குசிறை

அன்றில்காள் பிரிவுறும்நோய் அறியாதீர் மிகவல்லீர்

தென்றலார் புகுந்துலவுந் திருத்தோணி புரத்துறையுங்

கொன்றைவார் சடையார்க்கென் கூர்பயலை கூறீரே.

 

1.60.7

 

652

 

பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி

ஏனோர்க்கும் இனிதாக மொழியுமெழில் இளங்குயிலே

தேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்தமரர்

கோனாரை என்னிடத்தே வரவொருகாற் கூவாயே.

 

1.60.8

 

653

 

நற்பதங்கள் மிகஅறிவாய் நானுன்னை வேண்டுகின்றேன்

பொற்பமைந்த வாயலகின் பூவைநல்லாய் போற்றுகின்றேன்

சொற்பதஞ்சேர் மறையாளர் திருத்தோணி புரத்துறையும்

விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே.

 

1.60.9

 

654

 

சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால்

முறையாலே உணத்தருவேன் மொய்பவளத் தொடுதரளந்

துறையாருங் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம்

பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே.

 

1.60.10

 

655

 

போர்மிகுத்த வயற்றோணி புரத்துறையும் புரிசடையெங்

கார்மிகுத்த கறைக்கண்டத் திறையவனை வண்கமலத்

தார்மிகுத்த வரைமார்பன் சம்பந்தன் உரைசெய்த

சீர்மிகுத்த தமிழ்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே.

 

1.60.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.61 திருச்செங்காட்டங்குடி

 

பண் - பழந்தக்கராகம்

 

656

 

நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோ றும்

முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச்

சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள்

கறைகொண்ட கண்டத்தான் கணபதீச் சரத்தானே.

 

1.61.1

 

657

 

வாரேற்ற பறையொலியுஞ் சங்கொலியும் வந்தியம்ப

ஊரேற்ற செல்வத்தோ டோ ங்கியசீர் விழவோவாச்

சீரேற்ற முடைத்தாய செங்காட்டங் குடியதனுள்

காரேற்ற கொன்றையான் கணபதீச் சரத்தானே.

 

1.61.2

 

658

 

வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான்

கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர்

சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைசேருங்

கரந்தையான் வெண்ணீற்றான் கணபதீச் சரத்தானே.

 

1.61.3

 

659

 

தொங்கலுங் கமழ்சாந்தும் அகிற்புகையுந் தொண்டர்கொண்

டங்கையால் தொழுதேத்த அருச்சுனற்கன் றருள்செய்தான்

செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங் குடியதனுள்

கங்கைசேர் வார்சடையான் கணபதீச் சரத்தானே.

 

1.61.4

 

660

 

பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி

நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச்

சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள்

காலினாற் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே.

 

1.61.5

 

661

 

நுண்ணியான் மிகப்பெரியான் ஓவுளார் வாயுளான்

தண்ணியான் வெய்யான்நந் தலைமேலான் மனத்துளான்

திண்ணியான் செங்காட்டங் குடியான்செஞ் சடைமதியக்

கண்ணியான் கண்ணுதலான் கணபதீச் சரத்தானே.

 

1.61.6

 

662

 

மையினார் மலர்நெடுங்கண் மலைமகளோர் பாகமாம்

மெய்யினான் பையரவம் அரைக்கசைத்தான் மீன்பிறழச்

செய்யினார் தண்கழனிச் செங்காட்டங் குடியதனுள்

கையினார் கூரெரியான் கணபதீச் சரத்தானே.

 

1.61.7

 

663

 

தோடுடையான் குழையுடையான் அரக்கன்றன் தோளடர்த்த

பீடுடையான் போர்விடையான் பெண்பாகம் மிகப்பெரியான்

சேடுடையான் செங்காட்டாங் குடியுடையான் சேர்ந்தாடுங்

காடுடையான் நாடுடையான் கணபதீச் சரத்தானே.

 

1.61.8

 

664

 

ஆனூரா வுழிதருவான் அன்றிருவர் தேர்ந்துணரா

வானூரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்துளான்

தேனூரான் செங்காட்டாங் குடியான்சிற் றம்பலத்தான்

கானூரான் கழுமலத்தான் கணபதீச் சரத்தானே.

 

1.61.9

 

665

 

செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும்

படிநுகரா தயருழப்பார்க் கருளாத பண்பினான்

பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக்

கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சரத்தானே.

 

1.61.10

 

666

 

கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்டக் கடிபொழிலின்

நறையிலங்கு வயல்காழித் தமிழ்ஞான சம்பந்தன்

சிறையிலங்கு புனற்படப்பைச் செங்காட்டங் குடிசேர்த்தும்

மறையிலங்கு தமிழ்வல்லார் வானுலகத் திருப்பாரே.

 

1.61.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - கணபதீசுவரர், தேவியார் - திருக்குழல்மாதம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.62 திருக்கோளிலி

 

பண் - பழந்தக்கராகம்

 

667

 

நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே

ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமங்

கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக்

கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே.

 

1.62.1

 

668

 

ஆடரவத் தழகாமை அணிகேழற் கொம்பார்த்த

தோடரவத் தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே

பாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில்

கோடரவந் தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே.

 

1.62.2

 

669

 

நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண்

டொன்றிவழி பாடுசெய லுற்றவன்றன் ஓங்குயிர்மேல்

கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான்

கொன்றைமலர் பொன்றிகழுங் கோளிலியெம் பெருமானே.

 

1.62.3

 

670

 

வந்தமண லாலிலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டுஞ்

சிந்தைசெய்வோன் தன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத்

தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக்

கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே.

 

1.62.4

 

671

 

வஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலும்நற் பூசனையால்

நஞ்சமுது செய்தருளும் நம்பியென வேநினையும்

பஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்துகந்தான்

கொஞ்சுகிளி மஞ்சணவுங் கோளிலியெம் பெருமானே.

 

1.62.5

 

672

 

தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை

ஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும்

நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன்

கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே.

 

1.62.6

 

673

 

கன்னவிலும் மால்வரையான் கார்திகழும் மாமிடற்றான்

சொன்னவிலும் மாமறையான் தோத்திரஞ்செய் வாயினுளான்

மின்னவிலுஞ் செஞ்சடையான் வெண்பொடியான் அங்கையினிற்

கொன்னவிலும் சூலத்தான் கோளிலியெம் பெருமானே.

 

1.62.7

 

674

 

அந்தரத்தில் தேரூரும் அரக்கன்மலை அன்றெடுப்பச்

சுந்தரத்தன் திருவிரலால் ஊன்றஅவன் உடல்நெரிந்து

மந்திரத்த மறைபாட வாளவனுக் கீந்தானுங்

கொந்தரத்த மதிச்சென்னிக் கோளிலியெம் பெருமானே.

 

1.62.8

 

675

 

நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத்

தாணுவெனை ஆளுடையான் தன்னடியார்க் கன்புடைமை

பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்

கோணலிளம் பிறைச்சென்னிக் கோளிலியெம் பெருமானே.

 

1.62.9

 

676

 

தடுக்கமருஞ் சமணரொடு தர்க்கசாத் திரத்தவர்சொல்

இடுக்கண்வரு மொழிகேளா தீசனையே ஏத்துமின்கள்

நடுக்கமிலா அமருலகம் நண்ணலுமாம் அண்ணல்கழல்

கொடுக்ககிலா வரங்கொடுக்குங் கோளிலியெம் பெருமானே.

 

1.62.10

 

677

 

நம்பனைநல் லடியார்கள் நாமுடைமா டென்றிருக்குங்

கொம்பனையாள் பாகனெழிற் கோளிலியெம் பெருமானை

வம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்டமிழ்கொண்

டின்பமர வல்லார்க ளெய்துவர்கள் ஈசனையே.

 

1.62.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - கோளிலியப்பர், தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.63 திருப்பிரமபுரம் - பல்பெயர்ப்பத்து

 

பண் - தக்கேசி

 

678

 

எரியார்மழுவொன் றேந்தியங்கை இடுதலையேகலனா

வரியார்வளையா ரையம்வவ்வாய் மாநலம்வவ்வுதியே

சரியாநாவின் வேதகீதன் தாமரைநான்முகத்தன்

பெரியான்பிரமன் பேணியாண்ட பிரமபுரத்தானே.

 

1.63.1

 

679

 

பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப் பெய்பலிக்கென்றயலே

கயலார்தடங்கண் அஞ்சொல்நல்லார் கண்டுயில்வவ்வுதியே

இயலால்நடாவி இன்பமெய்தி இந்திரனாள்மண்மேல்

வியலார்முரச மோங்குசெம்மை வேணுபுரத்தானே.

 

1.63.2

 

680

 

நகலார்தலையும் வெண்பிறையும் நளிர்சடைமாட்டயலே

பகலாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் பாய்கலைவவ்வுதியே

அகலாதுறையும் மாநிலத்தில் அயலின்மையாலமரர்

புகலால்மலிந்த பூம்புகலி மேவியபுண்ணியனே.

 

1.63.3

 

681

 

சங்கோடிலங்கத் தோடுபெய்து காதிலோர்தாழ்குழையன்

அங்கோல்வளையார் ஐயம்வவ்வா யால்நலம்வவ்வுதியே

செங்கோல்நடாவிப் பல்லுயிர்க்குஞ் செய்வினைமெய்தெரிய

வெங்கோத்தருமன் மேவியாண்ட வெங்குருமேயவனே.

 

1.63.4

 

682

 

தணிநீர்மதியஞ் சூடிநீடு தாங்கியதாழ்சடையன்

பிணிநீர்மடவார் ஐயம்வவ்வாய் பெய்கலைவவ்வுதியே

அணிநீருலக மாகியெங்கும் ஆழ்கடலாலழுங்கத்

துணிநீர்பணியத் தான்மிதந்த தோணிபுரத்தானே.

 

1.63.5

 

683

 

கவர்பூம்புனலுந் தண்மதியுங் கமழ்சடைமாட்டயலே

அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே

அவர்பூணரையர்க் காதியாயவள்தன் மன்னனாள்மண்மேற்

தவர்பூம்பதிகள் எங்குமெங்குந் தங்குதராயவனே.

 

1.63.6

 

684

 

முலையாழ்கெழும மொந்தைகொட்ட முன்கடைமாட்டயலே

நிலையாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் நீநலம்வவ்வுதியே

தலையாய்க்கிடந்திவ் வையமெல்லாந் தன்னதோராணைநடாய்ச்

சிலையால்மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுரமேயவனே.

 

1.63.7

 

685

 

எருதேகொணர்கென் றேறியங்கை இடுதலையேகலனாக்

கருதேர்மடவார் ஐயம்வவ்வாய் கண்டுயில்வவ்வுதியே

ஒருதேர்கடாவி ஆரமரு ளொருபதுதோள்தொலையப்

பொருதேர்வலவன் மேவியாண்ட புறவமர்புண்ணியனே.

 

1.63.8

 

686

 

துவர்சேர்கலிங்கப் போர்வையாருந் தூய்மையிலாச்சமணுங்

கவர்செய்துழலக் கண்டவண்ணங் காரிகைவார்குழலார்

அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே

தவர்செய்நெடுவேற் சண்டனாளச் சண்பையமர்ந்தவனே.

 

1.63.9

 

687

 

நிழலால்மலிந்த கொன்றைசூடி நீறுமெய்பூசிநல்ல

குழலார்மடவா ரையம்வவ்வாய் கோல்வளைவவ்வுதியே

அழலாயுலகங் கவ்வைதீர ஐந்தலைநீண்முடிய

கழல்நாகரையன் காவலாகக் காழியமர்ந்தவனே.

 

1.63.10

 

688

 

கட்டார்துழாயன் தாமரையான் என்றிவர்காண்பரிய

சிட்டார்பலிதேர்ந் தையம்வவ்வாய் செய்கலைவவ்வுதியே

நட்டார்நடுவே நந்தனாள நல்வினையாலுயர்ந்த

கொட்டாறுடுத்த தண்வயல்சூழ் கொச்சையமர்ந்தவனே.

 

1.63.11

 

689

 

கடையார்கொடிநன் மாடவீதிக் கழுமலவூர்க்கவுணி

நடையார்பனுவல் மாலையாக ஞானசம்பந்தன்நல்ல

படையார்மழுவன் றன்மேல்மொழிந்த பல்பெயர்ப்பத்தும்வல்லார்க்

கடையாவினைகள் உலகில்நாளும் அமருலகாள்பவரே.

 

1.63.12

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.64 திருப்பூவணம்

 

பண் - தக்கேசி

 

690

 

அறையார்புனலு மாமலரும் ஆடரவார்சடைமேல்

குறையார்மதியஞ் சூடிமாதோர் கூறுடையானிடமாம்

முறையால்முடிசேர் தென்னர்சேரர் சோழர்கள்தாம்வணங்குந்

திறையாரொளிசேர் செம்மையோங்குந் தென்திருப்பூவணமே.

 

1.64.1

 

691

 

மருவார்மதில்மூன் றொன்றவெய்து மாமலையான்மடந்தை

ஒருபால்பாக மாகச்செய்த உம்பர்பிரானவனூர்

கருவார்சாலி ஆலைமல்கிக் கழல்மன்னர்காத்தளித்த

திருவால்மலிந்த சேடர்வாழுந் தென்திருப்பூவணமே.

 

1.64.2

 

692

 

போரார்மதமா உரிவைபோர்த்துப் பொடியணிமேனியனாய்க்

காரார்கடலில் நஞ்சமுண்ட கண்ணுதல்விண்ணவனூர்

பாரார்வைகைப் புனல்வாய்பரப்பிப் பன்மணிபொன்கொழித்துச்

சீரார்வாரி சேரநின்ற தென்திருப்பூவணமே.

 

1.64.3

 

693

 

கடியாரலங்கல் கொன்றைசூடிக் காதிலோர்வார்குழையன்

கொடியார்வெள்ளை ஏறுகந்த கோவணவன்னிடமாம்

படியார்கூடி நீடியோங்கும் பல்புகழாற்பரவச்

செடியார்வைகை சூழநின்ற தென்திருப்பூவணமே.

 

1.64.4

 

694

 

கூரார்வாளி சிலையிற்கோத்துக் கொடிமதிற்கூட்டழித்த

போரார்வில்லி மெல்லியலாளோர் பால்மகிழ்ந்தானிடமாம்

ஆராவன்பில் தென்னர்சேரர் சோழர்கள்போற்றிசைப்பத்

தேரார்வீதி மாடம்நீடுந் தென்திருப்பூவணமே.

 

1.64.5

 

695

 

நன்றுதீதென் றொன்றிலாத நான்மறையோன்கழலே

சென்றுபேணி யேத்தநின்ற தேவர்பிரானிடமாங்

குன்றிலொன்றி ஓங்கமல்கு குளிர்பொழில்சூழ்மலர்மேல்

தென்றலொன்றி முன்றிலாருந் தென்திருப்பூவணமே.

 

1.64.6

 

696

 

பைவாயரவம் அரையிற்சாத்திப் பாரிடம்போற்றிசைப்ப

மெய்வாய்மேனி நீறுபூசி ஏறுகந்தானிடமாம்

கைவாழ்வளையார் மைந்தரோடுங் கலவியினால்நெருங்கிச்

செய்வார்தொழிலின் பாடலோவாத் தென்திருப்பூவணமே.

 

1.64.7

 

697

 

மாடவீதி மன்னிலங்கை மன்னனைமாண்பழித்துக்

கூடவென்றி வாள்கொடுத்தாள் கொள்கையினார்க்கிடமாம்

பாடலோடும் ஆடலோங்கிப் பன்மணிபொன்கொழித்து

ஓடநீரால் வைகைசூழும் உயர்திருப்பூவணமே.

 

1.64.8

 

698

 

பொய்யாவேத நாவினானும் பூமகள்காதலனுங்

கையாற்றொழுது கழல்கள்போற்றக் கனலெரியானவனூர்

மையார்பொழிலின் வண்டுபாட வைகைமணிகொழித்துச்

செய்யார்கமலந் தேனரும்புந் தென்திருப்பூவணமே.

 

1.64.9

 

699

 

அலையார்புனலை நீத்தவருந் தேரருமன்புசெய்யா

நிலையாவண்ணம் மாயம்வைத்த நின்மலன்றன்னிடமாம்

மலைபோல்துன்னி வென்றியோங்கும் மாளிகைசூழ்ந்தயலே

சிலையார்புரிசை பரிசுபண்ணுந் தென்திருப்பூவணமே.

 

1.64.10

 

700

 

திண்ணார்புரிசை மாடமோங்குந் தென்திருப்பூவணத்துப்

பெண்ணார்மேனி எம்மிறையைப் பேரியல்இன்றமிழால்

நண்ணார்உட்கக் காழிமல்கும் ஞானசம்பந்தன்சொன்ன

பண்ணார்பாடல் பத்தும்வல்லார் பயில்வதுவானிடையே.

 

1.64.11

 

 

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பூவணநாதர், தேவியார் - மின்னாம்பிகையம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.65 காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம்

 

பண் - தக்கேசி

 

701

 

அடையார்தம் புரங்கள்மூன்றும் ஆரழலில்லழுந்த

விடையார்மேனிய ராய்ச்சீறும் வித்தகர்மேயவிடம்

கடையார்மாடம் நீடியெங்குங் கங்குல்புறந்தடவப்

படையார்புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவனீச்சரமே.

 

1.65.1

 

702

 

எண்ணாரெயில்கள் மூன்றுஞ்சீறும் எந்தைபிரானிமையோர்

கண்ணாயுலகங் காக்கநின்ற கண்ணுதல்நண்ணுமிடம்

மண்ணார்சோலைக் கோலவண்டு வைகலுந்தேனருந்திப்

பண்ணார்செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே.

 

1.65.2

 

703

 

மங்கையங்கோர் பாகமாக வாள்நிலவார்சடைமேல்

கங்கையங்கே வாழவைத்த கள்வனிருந்தவிடம்

பொங்கயஞ்சேர் புணரியோத மீதுயர்பொய்கையின்மேற்

பங்கயஞ்சேர் பட்டினத்துப் பல்லவனீச்சரமே.

 

1.65.3

 

704

 

தாரார்கொன்றை பொன்றயங்கச் சாத்தியமார்பகலம்

நீரார்நீறு சாந்தம்வைத்த நின்மலன்மன்னுமிடம்

போரார்வேற்கண் மாதர்மைந்தர் புக்கிசைபாடலினாற்

பாரார்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சரமே.

 

1.65.4

 

705

 

மைசேர்கண்டர் அண்டவாணர் வானவருந்துதிப்ப

மெய்சேர்பொடியர் அடியாரேத்த மேவியிருந்தவிடங்

கைசேர்வளையார் விழைவினோடு காதன்மையாற்கழலே

பைசேரரவார் அல்குலார்சேர் பல்லவனீச்சரமே.

 

1.65.5

 

706

 

குழலினோசை வீணைமொந்தை கொட்டமுழவதிரக்

கழலினோசை யார்க்கஆடுங் கடவுளிருந்தவிடஞ்

சுழியிலாருங் கடலிலோதந் தெண்டிரை மொண்டெறியப்

பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே.

 

1.65.6

 

707

 

வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச்சாடிவிண்ணோர்

வந்தெலாமுன் பேணநின்ற மைந்தன்மகிழ்ந்தவிடம்

மந்தலாய மல்லிகையும் புன்னைவளர்குரவின்

பந்தலாரும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே.

 

1.65.7

 

708

 

தேரரக்கன் மால்வரையைத் தெற்றியெடுக்கஅவன்

தாரரக்குந் திண்முடிகள் ஊன்றியசங்கரனூர்

காரரக்குங் கடல்கிளர்ந்த காலமெலாமுணரப்

பாரரக்கம் பயில்புகாரில் பல்லவனீச்சரமே.

 

1.65.8

 

709

 

அங்கமாறும் வேதநான்கும் ஓதும்அயன்நெடுமால்

தங்கணாலும் நேடநின்ற சங்கரன்தங்குமிடம்

வங்கமாரும் முத்தம்இப்பி வார்கடலூடலைப்பப்

பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே.

 

1.65.9

 

710

 

உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நகவேதிரிவார்

கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறியாதவிடந்

தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம்பயில்வார்

பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவனீச்சரமே.

 

1.65.10

 

711

 

பத்தரேத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தெம்

அத்தன்தன்னை அணிகொள்காழி ஞானசம்பந்தன்சொல்

சித்தஞ்சேரச் செப்புமாந்தர் தீவினைநோயிலராய்

ஒத்தமைந்த உம்பர்வானில் உயர்வினொடோ ங்குவரே.

 

1.65.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பல்லவனேசர், தேவியார் - சவுந்தராம்பிகையம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.66 திருச்சண்பைநகர்

 

பண் - தக்கேசி

 

712

 

பங்மேறு மதிசேர்சடையார் விடையார்பலவேதம்

அங்கமாறும் மறைநான்கவையு மானார்மீனாரும்

வங்கமேவு கடல்வாழ்பரதர் மனைக்கேநுனைமூக்கின்

சங்கமேறி முத்தமீனுஞ் சண்பைநகராரே.

 

1.66.1

 

713

 

சூதகஞ்சேர் கொங்கையாளோர் பங்கர்சுடர்க்கமலப்

போதகஞ்சேர் புண்ணியனார் பூதகணநாதர்

மேதகஞ்சேர் மேகமந்தண் சோலையில்விண்ணார்ந்த

சாதகஞ்சேர் பாளைநீர்சேர் சண்பைநகராரே.

 

1.66.2

 

714

 

மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய்தவனுடைய

நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் நீலகண்டனார்

பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம்பணிந்தேத்தத்

தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பைநகராரே.

 

1.66.3

 

715

 

மொய்வல்லசுரர் தேவர்கடைந்த முழுநஞ்சதுவுண்ட

தெய்வர்செய்ய வுருவர்கரிய கண்டர்திகழ்சுத்திக்

கையர்கட்டங் கத்தர்கரியின் உரியர்காதலாற்

சைவர்பாசு பதர்கள்வணங்குஞ் சண்பைநகராரே.

 

1.66.4

 

716

 

கலமார்கடலுள் விடமுண்டமரர்க் கமுதம்அருள்செய்த

குலமார்கயிலைக் குன்றதுடைய கொல்லையெருதேறி

நலமார்வெள்ளை நாளிகேரம் விரியார்நறும்பாளை

சலமார்கரியின் மருப்புக்காட்டுஞ் சண்பைநகராரே.

 

1.66.5

 

717

 

மாகரஞ்சேர் அத்தியின்தோல் போர்த்துமெய்ம்மாலான்

சூகரஞ்சேர் எயிறுபூண்ட சோதியன்மேதக்க

ஆகரஞ்சேர் இப்பிமுத்தை அந்தண்வயலுக்கே

சாகரஞ்சேர் திரைகளுந்துஞ் சண்பைநகராரே.

 

1.66.6

 

               

(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

1.66.7

 

718

 

இருளைப்புரையும் நிறத்திலரக்கன்ன்றனையீடழிவித்து

அருளைச்செய்யும் அம்மானேரா ரந்தண்கந்தத்தின்

மருளைச்சுரும்பு பாடியளக்கர் வரையார்திரைக்கையால்

தரளத்தோடு பவளமீனுஞ் சண்பைநகராரே.

 

1.66.8

 

719

 

மண்டான்முழுதும் உண்டமாலும் மலர்மிசைமேலயனும்

எண்டானறியா வண்ணம்நின்ற இறைவன்மறையோதி

தண்டார்குவளைக் கள்ளருந்தித் தாமரைத்தாதின்மேற்

பண்டான்கொண்டு வண்டுபாடுஞ் சண்பைநகராரே.

 

1.66.9

 

720

 

போதியாரும் பிண்டியாரும் புகழலசொன்னாலும்

நீதியாகக் கொண்டங்கருளும் நிமலனிருநான்கின்

மாதிசித்தர் மாமறையின் மன்னியதொன்னூலர்

சாதிகீத வர்த்தமானர் சண்பைநகராரே.

 

1.66.10

 

721

 

வந்தியோடு பூசையல்லாப் போழ்தில்மறைபேசிச்

சந்திபோதிற் சமாதிசெய்யுஞ் சண்பைநகர்மேய

அந்திவண்ணன் தன்னையழகார் ஞானசம்பந்தன்சொல்

சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதிசேர்வாரே.

 

1.66.11

 

 

 

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த

தேவாரப் பதிகங்கள்

முதல் திருமுறை -இரண்டாம் பகுதி

 

1.67 திருப்பழனம்

 

பண் - தக்கேசி

 

722

 

வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளையெருதேறிப்

பூதஞ்சூழப் பொலியவருவார் புலியினுரிதோலார்

நாதாஎனவும் நக்காஎனவும் நம்பாஎனநின்று

பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழனநகராரே.

 

1.67.1

 

723

 

கண்மேற்கண்ணுஞ் சடைமேற்பிறையும் உடையார்காலனைப்

புண்ணாறுதிர மெதிராறோடப் பொன்றப்புறந்தாளால்

எண்ணாதுதைத்த எந்தைபெருமான் இமவான்மகளோடும்

பண்ணார்களிவண் டறைபூஞ்சோலைப் பழனநகராரே.

 

1.67.2

 

724

 

பிறையும்புனலுஞ் சடைமேலுடையார் பறைபோல்விழிகட்பேய்

உறையுமயான மிடமாவுடையார் உலகர்தலைமகன்

அறையும்மலர்கொண் டடியார்பரவி ஆடல்பாடல்செய்

பறையுஞ்சங்கும் பலியுமோவாப் பழனநகராரே.

 

1.67.3

 

725

 

உரம்மன்னுயர்கோட் டுலறுகூகை யலறுமயானத்தில்

இரவிற்பூதம் பாடஆடி எழிலாரலர்மேலைப்

பிரமன்றலையின் நறவமேற்ற பெம்மானெமையாளும்

பரமன்பகவன் பரமேச்சுவரன் பழனநகராரே.

 

1.67.4

 

726

 

குலவெஞ்சிலையால் மதில்மூன்றெரித்த கொல்லேறுடையண்ணல்

கலவமயிலுங் குயிலும்பயிலுங் கடல்போற்காவேரி

நலமஞ்சுடைய நறுமாங்கனிகள் குதிகொண்டெதிருந்திப்

பலவின்கனிகள் திரைமுன்சேர்க்கும் பழனநகராரே.

 

1.67.5

 

727

 

வீளைக்குரலும் விளிசங்கொலியும் விழவின்னொலியோவா

மூளைத்தலைகொண் டடியாரேத்தப் பொடியாமதிளெய்தார்

ஈளைப்படுகில் இலையார்தெங்கின் குலையார்வாழையின்

பாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப் பழனநகராரே.

 

1.67.6

 

728

 

பொய்யாமொழியார் முறையாலேத்திப் புகழ்வார்திருமேனி

செய்யார்கரிய மிடற்றார்வெண்ணூல் சேர்ந்தஅகலத்தார்

கையாடலினார் புனலால்மல்கு சடைமேற்பிறையோடும்

பையாடரவ முடனேவைத்தார் பழனநகராரே.

 

1.67.7

 

729

 

மஞ்சோங்குயரம் உடையான்மலையை மாறாயெடுத்தான்றோள்

அஞ்சோடஞ்சும் ஆறுநான்கும் அடரவூன்றினார்

நஞ்சார்சுடலைப் பொடிநீறணிந்த நம்பான்வம்பாரும்

பைந்தாமரைகள் கழனிசூழ்ந்த பழனநகராரே.

 

1.67.8

 

730

 

கடியார்கொன்றைச் சுரும்பின்மாலை கமழ்புன்சடையார்விண்

முடியாப்படிமூ வடியாலுலக முழுதுந்தாவிய

நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காணாத

படியார்பொடியா டகலமுடையார் பழனநகராரே.

 

1.67.9

 

731

 

கண்டான்கழுவா முன்னேயோடிக் கலவைக்கஞ்சியை

உண்டாங்கவர்கள் உரைக்குஞ்சிறுசொல் லோரார்பாராட்ட

வண்டாமரையின் மலர்மேல்நறவ மதுவாய்மிகவுண்டு

பண்டான்கெழும வண்டியாழ்செய்யும் பழனநகராரே.

 

1.67.10

 

732

 

வேய்முத்தோங்கி விரைமுன்பரக்கும் வேணுபுரந்தன்னுள்

நாவுய்த்தனைய திறலான்மிக்க ஞானசம்பந்தன்

பேசற்கினிய பாடல்பயிலும் பெருமான்பழனத்தை

வாயிற்பொலிந்த மாலைபத்தும் வல்லார்நல்லாரே.

 

1.67.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பெரியநாயகியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

 

1.68 திருக்கயிலாயம்

 

பண் - தக்கேசி

 

733

 

பொடிகொளுருவர் புலியினதளர் புரிநூல்திகழ்மார்பில்

கடிகொள்கொன்றை கலந்தநீற்றர் கறைசேர்கண்டத்தர்

இடியகுரலால் இரியுமடங்கல் தொடங்குமுனைச்சாரல்

கடியவிடைமேற் கொடியொன்றுடையார் கயிலைமலையாரே.

 

1.68.1

 

734

 

புரிகொள்சடையார் அடியர்க்கெளியார் கிளிசேர்மொழிமங்கை

தெரியவுருவில் வைத்துகந்த தேவர்பெருமானார்

பரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்கவிருள்கூர்ந்த

கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலைமலையாரே.

 

1.68.2

 

735

 

மாவினுரிவை மங்கைவெருவ மூடிமுடிதன்மேல்

மேவுமதியும் நதியும்வைத்த விளைவர்கழலுன்னுந்

தேவர்தேவர் திரிசூலத்தர் திரங்கல்முகவன்சேர்

காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ் கயிலைமலையாரே.

 

1.68.3

 

736

 

முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட முதல்வர்மதனன்றன்

தென்னீருருவம் அழியத்திருக்கண் சிவந்தநுதலினார்

மன்னீணர்மடுவும் படுகல்லறையின் உழுவைசினங்கொண்டு

கன்னீணர்வரைமே லிரைமுன்தேடுங் கயிலைமலையாரே.

 

1.68.4

 

737

 

ஒன்றும்பலவு மாயவேடத் தொருவர்கழல்சேர்வார்

நன்றுநினைந்து நாடற்குரியார் கூடித்திரண்டெங்குந்

தென்றியிருளில் திகைத்தகரிதண் சாரல்நெறியோடிக்

கன்றும்பிடியும் அடிவாரஞ்சேர் கயிலைமலையாரே.

 

1.68.5

 

738

 

தாதார்கொன்றை தயங்குமுடியர் முயங்குமடவாளைப்

போதார்பாக மாகவைத்த புனிதர்பனிமல்கும்

மூதாருலகில் முனிவருடனாய் அறநான்கருள்செய்த

காதார்குழையர் வேதத்திரளர் கயிலைமலையாரே.

 

1.68.6

 

               

(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

1.68.7

 

734

 

தொடுத்தார்புரமூன் றெரியச்சிலைமே லெரியொண்பகழியால்

எடுத்தான்றிரள்தோள் முடிகள்பத்தும் இடியவிரல்வைத்தார்

கொடுத்தார்படைகள் கொண்டாராளாக் குறுகிவருங்கூற்றைக்

கடுத்தாங்கவனைக் கழலாலுதைத்தார் கயிலைமலையாரே.

 

1.68.8

 

740

 

ஊணாப்பலிகொண் டுலகிலேற்றார் இலகுமணிநாகம்

பூணாணார மாகப்பூண்டார் புகழுமிருவர்தாம்

பேணாவோடி நேடவெங்கும் பிறங்குமெரியாகிக்

காணாவண்ண முயர்ந்தார்போலுங் கயிலைமலையாரே.

 

1.68.9

 

741

 

விருதுபகரும் வெஞ்சொற்சமணர் வஞ்சச்சாக்கியர்

பொருதுபகரும் மொழியைக்கொள்ளார் புகழ்வார்க்கணியராய்

எருதொன்றுகைத்திங் கிடுவார்தம்பால் இரந்துண்டிகழ்வார்கள்

கருதும்வண்ணம் உடையார்போலுங் கயிலைமலையாரே.

 

1.68.10

 

742

 

போரார்கடலிற் புனல்சூழ்காழிப் புகழார்சம்பந்தன்

காரார்மேகங் குடிகொள்சாரற் கயிலைமலையார்மேல்

தேராவுரைத்த செஞ்சொல்மாலை செப்புமடியார்மேல்

வாராபிணிகள் வானோருலகில் மருவும்மனத்தாரே.

 

1.68.11

 

 

சுவாமிபெயர் - கயிலாயநாதர், தேவியார் - பார்வதியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.69 திரு அண்ணாமலை

 

பண் - தக்கேசி

 

743

 

பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள்

மூவார்புரங்கள் எரித்தஅன்று மூவர்க்கருள்செய்தார்

தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின்நிரையோடும்

ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.

 

1.69.1

 

744

 

மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர்பெருமானார்

நஞ்சைக்கண்டத் தடக்குமதுவும் நன்மைப்பொருள்போலும்

வெஞ்சொற்பேசும் வேடர்மடவார் இதணமதுவேறி

அஞ்சொற்கிளிகள் ஆயோஎன்னும் அண்ணாமலையாரே.

 

1.69.2

 

745

 

ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல்

ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப்பொருள்போலும்

ஏனத்திரளோ டினமான்கரடி இழியுமிரவின்கண்

ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.

 

1.69.3

 

746

 

இழைத்தஇடையாள் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்

தழைத்தசடையார் விடையொன்றேறித் தரியார்புரமெய்தார்

பிழைத்தபிடியைக் காணாதோடிப் பெருங்கைமதவேழம்

அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல் அண்ணாமலையாரே.

 

1.69.4

 

747

 

உருவிற்றிகழும் உமையாள்பங்கர் இமையோர்பெருமானார்

செருவில்லொருகால் வளையஊன்றிச் செந்தீயெழுவித்தார்

பருவிற்குறவர் புனத்திற்குவித்த பருமாமணிமுத்தம்

அருவித்திரளோ டிழியுஞ்சாரல் அண்ணாமலையாரே.

 

1.69.5

 

748

 

எனைத்தோரூழி யடியாரேத்த இமையோர்பெருமானார்

நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலருறைகோயில்

கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற்குழலூத

அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் அண்ணாமலையாரே.

 

1.69.6

 

749

 

வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வருமேல்வினையோடு

பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமனுறைகோயில்

முந்தியெழுந்த முழவினோசை முதுகல்வரைகள்மேல்

அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.

 

1.69.7

 

750

 

மறந்தான்கருதி வலியைநினைந்து மாறாயெடுத்தான்றோள்

நிறந்தான்முரிய நெரியவூன்றி நிறையஅருள்செய்தார்

திறந்தான்காட்டி அருளாயென்று தேவரவர்வேண்ட

அறந்தான்காட்டி அருளிச்செய்தார் அண்ணாமலையாரே.

 

1.69.8

 

751

 

தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர்பெருமானை

மூடியோங்கி முதுவேயுகுத்த முத்தம்பலகொண்டு

கூடிக்குறவர் மடவார்குவித்துக் கொள்ளவம்மினென்

றாடிப்பாடி யளக்குஞ்சாரல் அண்ணாமலையாரே.

 

1.69.9

 

752

 

தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச் சமணேநின்றுண்ணும்

பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா பேணித்தொழுமின்கள்

வட்டமுலையாள் உமையாள்பங்கர் மன்னியுறைகோயில்

அட்டமாளித் திரள்வந்தணையும் அண்ணாமலையாரே.

 

1.69.10

 

753

 

அல்லாடரவம் இயங்குஞ்சாரல் அண்ணாமலையாரை

நல்லார்பரவப் படுவான்காழி ஞானசம்பந்தன்

சொல்லால்மலிந்த பாடலான பத்துமிவைகற்று

வல்லாரெல்லாம் வானோர்வணங்க மன்னிவாழ்வாரே.

 

1.69.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.70 திரு ஈங்கோய்மலை

 

பண் - தக்கேசி

 

754

 

வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் மத்தமலர்சூடித்

தேனொத்தனமென் மொழிமான்விழியாள் தேவிபாகமாக்

கானத்திரவில் எரிகொண்டாடுங் கடவுளுலகேத்த

ஏனத்திரள்வந் திழியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.

 

1.70.1

 

755

 

சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகாடிடமாகக்

கோலச்சடைகள்தாழக் குழல்யாழ் மொந்தைகொட்டவே

பாலொத்தனைய மொழியாள்காண ஆடும்பரமனார்

ஏலத்தொடுநல் இலவங்கமழும் ஈங்கோய்மலையாரே.

 

1.70.2

 

756

 

கண்கொள்நுதலார் கறைகொள்மிடற்றார் கரியினுரிதோலார்

விண்கொள்மதிசேர் சடையார்விடையார் கொடியார்வெண்ணீறு

பெண்கொள்திருமார் பதனில்பூசும் பெம்மானெமையாள்வார்

எண்கும்அரியுந் திரியுஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.

 

1.70.3

 

757

 

மறையின்னிசையார் நெறிமென்கூந்தல் மலையான்மகளோடுங்

குறைவெண்பிறையும் புனலும்நிலவுங் குளிர்புன்சடைதாழப்

பறையுங்குழலுங் கழலுமார்ப்பப் படுகாட்டெரியாடும்

இறைவர்சிறைவண் டறைபூஞ்சாரல் ஈங்கோய்மலையாரே.

 

1.70.4

 

758

 

நொந்தசுடலைப் பொடிநீறணிவார் நுதல்சேர்கண்ணினார்

கந்தமலர்கள் பலவும்நிலவு கமழ்புன்சடைதாழப்

பந்தண்விரலாள் பாகமாகப் படுகாட்டெரியாடும்

எந்தம்மடிகள் கடிகொள்சாரல் ஈங்கோய்மலையாரே.

 

1.70.5

 

759

 

நீறாரகலம் உடையார்நிரையார் கொன்றையரவோடும்

ஆறார்சடையார் அயில்வெங்கணையால் அவுணர்புரம்மூன்றுஞ்

சீறாவெரிசெய் தேவர்பெருமான் செங்கண்அடல்வெள்ளை

ஏறார்கொடியார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.

 

1.70.6

 

760

 

வினையாயினதீர்த் தருளேபுரியும் விகிர்தன்விரிகொன்றை

நனையார்முடிமேல் மதியஞ்சூடும் நம்பானலமல்கு

தனையார்கமல மலர்மேலுறைவான் தலையோடனலேந்தும்

எனையாளுடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.

 

1.70.7

 

761

 

பரக்கும்பெருமை இலங்கையென்னும் பதியிற்பொலிவாய

அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளும் அணியார்விரல்தன்னால்

நெருக்கியடர்த்து நிமலாபோற்றி யென்றுநின்றேத்த

இரக்கம்புரிந்தார் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.

 

1.70.8

 

762

 

வரியார்புலியின் உரிதோலுடையான் மலையான்மகளோடும்

பிரியாதுடனாய் ஆடல்பேணும் பெம்மான்திருமேனி

அரியோடயனும் அறியாவண்ணம் அளவில்பெருமையோ

டெரியாய்நிமிர்ந்த எங்கள்பெருமான் ஈங்கோய்மலையாரே.

 

1.70.9

 

763

 

பிண்டியேன்று பெயராநிற்கும் பிணங்குசமணரும்

மண்டைகலனாக் கொண்டுதிரியும் மதியில்தேரரும்

உண்டிவயிறார் உரைகள்கொள்ளா துமையோடுடனாகி

இண்டைச்சடையான் இமையோர்பெருமான் ஈங்கோய்மலையாரே.

 

1.70.10

 

764

 

விழவாரொலியும் முழவும்ஓவா வேணுபுரந்தன்னுள்

அழலார்வண்ணத் தடிகளருள்சேர் அணிகொள்சம்பந்தன்

எழிலார்சுனையும் பொழிலும்புடைசூழ் ஈங்கோய்மலையீசன்

கழல்சேர்பாடல் பத்தும்வல்லார் கவலைகளைவாரே.

 

1.70.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.71 திருநறையூர்ச்சித்தீச்சரம்

 

பண் - தக்கேசி

 

765

 

765

பிறைகொள்சடையர் புலியினுரியர் பேழ்வாய்நாகத்தர்

கறைகொள்கண்டர் கபாலமேந்துங் கையர்கங்காளர்

மறைகொள்கீதம் பாடச்சேடர் மனையில்மகிழ்வெய்திச்

சிறைகொள்வண்டு தேனார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.

 

1.71.1

 

766

 

பொங்கார்சடையர் புனலர்அனலர் பூதம்பாடவே

தங்காதலியுந் தாமுமுடனாய்த் தனியோர்விடையேறிக்

கொங்கார்கொன்றை வன்னிமத்தஞ் சூடிக்குளிர்பொய்கைச்

செங்கால்அனமும் பெடையுஞ்சேரும் சித்தீச்சரத்தாரே.

 

1.71.2

 

767

 

முடிகொள்சடையர் முளைவெண்மதியர் மூவாமேனிமேல்

பொடிகொள்நூலர் புலியினதளர் புரிபுன்சடைதாழக்

கடிகொள்சோலை வயல்சூழ்மடுவிற் கயலாரினம்பாயக்

கொடிகொள்மாடக் குழாமார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.

 

1.71.3

 

768

 

பின்றாழ்சடைமேல் நகுவெண்டலையர் பிரமன்றலையேந்தி

மின்றாழுருவிற் சங்கார்குழைதான் மிளிரும்ஒருகாதர்

பொன்றாழ்கொன்றை செருந்திபுன்னை பொருந்துசெண்பகஞ்

சென்றார்செல்வத் திருவார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.

 

1.71.4

 

769

 

நீரார்முடியர் கறைகொள்கண்டர் மறைகள்நிறைநாவர்

பாரார்புகழால் பத்தர்சித்தர் பாடியாடவே

தேரார்வீதி முழவார்விழவின் ஒலியுந்திசைசெல்லச்

சீரார்கோலம் பொலியும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.

 

1.71.5

 

770

 

நீண்டசடையர் நிரைகொள்கொன்றை விரைகொள்மலர்மாலை

தூண்டுசுடர்பொன் னொளிகொள்மேனிப் பவளத்தெழிலார்வந்

தீண்டுமாடம் எழிலார்சோலை இலங்குகோபுரந்

தீண்டுமதியந் திகழும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.

 

1.71.6

 

771

 

குழலார்சடையர் கொக்கின்இறகர் கோலநிறமத்தந்

தழலார்மேனித் தவளநீற்றர் சரிகோவணக்கீளர்

எழிலார்நாகம் புலியினுடைமேல் இசைத்துவிடையேறிக்

கழலார்சிலம்பு புலம்பவருவார் சித்தீச்சரத்தாரே.

 

1.71.7

 

772

 

கரையார்கடல்சூழ் இலங்கைமன்னன் கயிலைமலைதன்னை

வரையார்தோளா லெடுக்கமுடிகள் நெரித்துமனமொன்றி

உரையார்கீதம் பாடநல்ல வுலப்பிலருள்செய்தார்

திரையார்புனல்சூழ் செல்வநறையூர்ச் சித்தீச்சரத்தாரே.

 

1.71.8

 

773

 

நெடியான்பிரமன் நேடிக்காணார் நினைப்பார்மனத்தாராய்

அடியாரவரும் அருமாமறையும் அண்டத்தமரரும்

முடியால்வணங்கிக் குணங்களேத்தி முதல்வாஅருளென்ன

செடியார்செந்நெல் திகழும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.

 

1.71.9

 

774

 

நின்றுண்சமணர் இருந்துண்தேரர் நீண்டபோர்வையார்

ஒன்றுமுணரா ஊமர்வாயில் உரைகேட்டுழல்வீர்காள்

கன்றுண்பயப்பா லுண்ணமுலையில் கபாலமயல்பொழியச்

சென்றுண்டார்ந்து சேரும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.

 

1.71.10

 

775

 

குயிலார்கோல மாதவிகள் குளிர்பூஞ்சுரபுன்னை

செயிலார்பொய்கை சேரும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரை

மயிலார்சோலை சூழ்ந்தகாழி மல்குசம்பந்தன்

பயில்வார்க்கினிய பாடல்வல்லார் பாவநாசமே.

 

1.71.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.72 திருக்குடந்தைக்காரோணம்

 

பண் - தக்கேசி

 

776

 

வாரார்கொங்கை மாதோர்பாக மாகவார்சடை

நீரார்கங்கை திங்கள்சூடி நெற்றிஒற்றைக்கண்

கூரார்மழுவொன் றேந்தியந்தண் குழகன்குடமூக்கிற்

காரார்கண்டத் தெண்டோ ளெந்தை காரோணத்தாரே.

 

1.72.1

 

777

 

முடியார்மன்னர் மடமான்விழியார் மூவுலகும்மேத்தும்

படியார்பவள வாயார்பலரும் பரவிப்பணிந்தேத்தக்

கொடியார்விடையார் மாடவீதிக் குடந்தைக்குழகாருங்

கடியார்சோலைக் கலவமயிலார் காரோணத்தாரே.

 

1.72.2

 

778

 

மலையார்மங்கை பங்கரங்கை அனலர்மடலாருங்

குலையார்தெங்கு குளிர்கொள்வாழை யழகார்குடமூக்கின்

முலையாரணிபொன் முளைவெண்ணகையார் மூவாமதியினார்

கலையார்மொழியார் காதல்செய்யுங் காரோணத்தாரே.

 

1.72.3

 

779

 

போதார்புனல்சேர் கந்தமுந்திப் பொலியவ்வழகாருந்

தாதார்பொழில்சூழ்ந் தெழிலார்புறவி லந்தண்குடமூக்கின்

மாதார்மங்கை பாகமாக மனைகள்பலிதேர்வார்

காதார்குழையர் காளகண்டர் காரோணத்தாரே.

 

1.72.4

 

780

 

பூவார்பொய்கை அலர்தாமரைசெங் கழுநீர்புறவெல்லாந்

தேவார்சிந்தை அந்தணாளர் சீராலடிபோற்றக்

கூவார்குயில்கள் ஆலும்மயில்கள் இன்சொற்கிளிப்பிள்ளை

காவார்பொழில்சூழ்ந் தழகார்குடந்தைக் காரோணத்தாரே.

 

1.72.5

 

781

 

மூப்பூர்நலிய நெதியார்விதியாய் முன்னேஅனல்வாளி

கோப்பார்பார்த்தன் நிலைகண்டருளுங் குழகர்குடமூக்கில்

தீர்ப்பாருடலில் அடுநோயவலம் வினைகள்நலியாமைக்

காப்பார்காலன் அடையாவண்ணங் காரோணத்தாரே.

 

1.72.6

 

782

 

ஊனார்தலைகை யேந்தியுலகம் பலிதேர்ந்துழல்வாழ்க்கை

மானார்தோலார் புலியினுடையார் கரியினுரிபோர்வை

தேனார்மொழியார் திளைத்தங்காடித் திகழுங்குடமூக்கிற்

கானார்நட்டம் உடையார்செல்வக் காரோணத்தாரே.

 

1.72.7

 

783

 

வரையார்திரள்தோள் மதவாளரக்கன் எடுப்பமலைசேரும்

விரையார்பாதம் நுதியாலூன்ற நெரிந்துசிரம்பத்தும்

உரையார்கீதம் பாடக்கேட்டங் கொளிவாள்கொடுத்தாருங்

கரையார்பொன்னி சூழ்தண்குடந்தைக் காரோணத்தாரே.

 

1.72.8

 

784

 

கரியமாலுஞ் செய்யபூமேல் அயனுங்கழறிப்போய்

அரியவண்டந் தேடிப்புக்கும் அளக்கவொண்கிலார்

தெரியவரிய தேவர்செல்வந் திகழுங்குடமூக்கிற்

கரியகண்டர் காலகாலர் காரோணத்தாரே.

 

1.72.9

 

785

 

நாணார்அமணர் நல்லதறியார் நாளுங்குரத்திகள்

பேணார்தூய்மை மாசுகழியார் பேசேலவரோடுஞ்

சேணார்மதிதோய் மாடமல்கு செல்வநெடுவீதிக்

கோணாகரமொன் றுடையார்குடந்தைக் காரோணத்தாரே.

 

1.72.10

 

786

 

கருவார்பொழில்சூழ்ந் தழகார்செல்வக் காரோணத்தாரைத்

திருவார்செல்வம் மல்குசண்பைத் திகழுஞ்சம்பந்தன்

உருவார்செஞ்சொல் மாலையிவைபத் துரைப்பாருலகத்துக்

கருவாரிடும்பைப் பிறப்பதறுத்துக் கவலைகழிவாரே.

 

1.72.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சோமநாதர், தேவியார் - தேனார்மொழியம்மை.

திருச்சிற்றம்பலம்

 

 

1.73 திருக்கானூர்

 

பண் - தக்கேசி

 

787

 

வானார்சோதி மன்னுசென்னி வன்னிபுனங்கொன்றைத்

தேனார்போது தானார்கங்கை திங்களொடுசூடி

மானேர்நோக்கி கண்டங்குவப்ப மாலையாடுவார்

கானூர்மேய கண்ணார்நெற்றி ஆனூர் செல்வரே.

 

1.73.1

 

788

 

நீந்தலாகா வெள்ளமூழ்கு நீள்சடைதன்மேலோர்

ஏய்ந்தகோணற் பிறையோடரவு கொன்றையெழிலார

போந்தமென்சொல் இன்பம்பயந்த மைந்தரவர்போலாங்

காந்தள்விம்மு கானூர்மேய சாந்தநீற்றாரே.

 

1.73.2

 

789

 

சிறையார்வண்டுந் தேனும்விம்மு செய்யமலர்க்கொன்றை

மறையார்பாட லாடலோடு மால்விடைமேல்வருவார்

இறையார்வந்தென் இல்புகுந்தென் எழில்நலமுங்கொண்டார்

கறையார்சோலைக் கானூர்மேய பிறையார்சடையாரே.

 

1.73.3

 

790

 

விண்ணார்திங்கள் கண்ணிவெள்ளை மாலையதுசூடித்

தண்ணாரக்கோ டாமைபூண்டு தழைபுன்சடைதாழ

எண்ணாவந்தென் இல்புகுந்தங் கெவ்வநோய்செய்தான்

கண்ணார்சோலைக் கானூர்மேய விண்ணோர்பெருமானே.

 

1.73.4

 

791

 

தார்கொள்கொன்றைக் கண்ணியோடுந் தண்மதியஞ்சூடி

சீர்கொள்பாட லாடலோடு சேடராய்வந்து

ஊர்கள்தோறும் ஐயம்ஏற்றென் னுள்வெந்நோய்செய்தார்

கார்கொள்சோலைக் கானூர்மேய கறைக்கண்டத்தாரே.

 

1.73.5

 

792

 

முளிவெள்ளெலும்பு நீறுநூலும் மூழ்குமார்பராய்

எளிவந்தார்போல் ஐயமென்றென் இல்லேபுகுந்துள்ளத்

தெளிவுநாணுங் கொண்டகள்வர் தேறலார்பூவில்

களிவண்டியாழ்செய் கானூர்மேய ஒளிவெண்பிறையாரே.

 

1.73.6

 

793

 

மூவாவண்ணர் முளைவெண்பிறையர் முறுவல்செய்திங்கே

பூவார்கொன்றை புனைந்துவந்தார் பொக்கம்பலபேசிப்

போவார்போல மால்செய்துள்ளம் புக்கபுரிநூலர்

தேவார்சோலைக் கானூர்மேய தேவதேவரே.

 

1.73.7

 

794

 

தமிழின்நீர்மை பேசித்தாளம் வீணைபண்ணிநல்ல

முழவம்மொந்தை மல்குபாடல் செய்கையிடமோவார்

குமிழின்மேனி தந்துகோல நீர்மையதுகொண்டார்

கமழுஞ்சோலைக் கானூர்மேய பவளவண்ணரே.

 

1.73.8

 

795

 

அந்தமாதி அயனுமாலும் ஆர்க்குமறிவரியான்

சிந்தையுள்ளும் நாவின்மேலுஞ் சென்னியுமன்னினான்

வந்தென்னுள்ளம் புகுந்துமாலை காலையாடுவான்

கந்தமல்கு கானூர்மேய எந்தைபெம்மானே.

 

1.73.9

 

796

 

ஆமையரவோ டேனவெண்கொம் பக்குமாலைபூண்

டாமோர்கள்வர் வெள்ளர்போல உள்வெந்நோய்செய்தார்

ஓமவேத நான்முகனுங் கோணாகணையானுஞ்

சேமமாய செல்வர்கானூர் மேயசேடரே.

 

1.73.10

 

797

 

கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் கானூர்மேயானைப்

பழுதில்ஞான சம்பந்தன்சொல் பத்தும்பாடியே

தொழுதுபொழுது தோத்திரங்கள் சொல்லித்துதித்துநின்

றழுதுநக்கும் அன்புசெய்வார் அல்லலறுப்பாரே.

 

1.73.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - செம்மேனிநாயகர், தேவியார் - சிவயோகநாயகியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.74 திருப்புறவம்

 

பண் - தக்கேசி

 

798

 

நறவநிறைவண் டறைதார்க்கொன்றை நயந்துநயனத்தால்

சுறவஞ்செறிவண் கொடியோனுடலம் பொடியாவிழிசெய்தான்

புறவமுறைவண் பதியாமதியார் புரமூன்றெரிசெய்த

இறைவனறவன் இமையோரேத்த உமையோடிருந்தானே.

 

1.74.1

 

799

 

உரவன்புலியின் உரிதோலாடை உடைமேல்படநாகம்

விரவிவிரிபூங் கச்சாவசைத்த விகிர்தன்னுகிர்தன்னால்

பொருவெங்களிறு பிளிறவுரித்துப் புறவம்பதியாக

இரவும்பகலும் இமையோரேத்த உமையோடிருந்தானே.

 

1.74.2

 

800

 

பந்தமுடைய பூதம்பாடப் பாதஞ்சிலம்பார்க்கக்

கந்தமல்கு குழலிகாணக் கரிகாட்டெரியாடி

அந்தண்கடல்சூழ்ந் தழகார்புறவம் பதியாவமர்வெய்தி

எந்தம்பெருமான் இமையோரேத்த உமையோடிருந்தானே.

 

1.74.3

 

801

 

நினைவார்நினைய இனியான்பனியார் மலர்தூய்நித்தலுங்

கனையார்விடையொன் றுடையான்கங்கை திங்கள்கமழ்கொன்றைப்

புனைவார்சடையின் முடியான்கடல்சூழ் புறவம்பதியாக

எனையாளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.

 

1.74.4

 

802

 

செங்கண்அரவும் நகுவெண்டலையும் முகிழ்வெண்திங்களுந்

தங்குசடையன் விடையனுடையன் சரிகோவணஆடை

பொங்குதிரைவண் கடல்சூழ்ந்தழகார் புறவம்பதியாக

எங்கும்பரவி இமையோரேத்த உமையோடிருந்தானே.

 

1.74.5

 

803

 

பின்னுசடைகள் தாழக்கேழல் எயிறுபிறழப்போய்

அன்னநடையார் மனைகள்தோறும் அழகார்பலிதேர்ந்து

புன்னைமடலின் பொழில்சூழ்ந்தழகார் புறவம்பதியாக

என்னையுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.

 

1.74.6

 

804

 

உண்ணற்கரிய நஞ்சையுண் டொருதோழந்தேவர்

விண்ணிற்பொலிய அமுதமளித்த விடைசேர்கொடியண்ணல்

பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலைப் புறவம்பதியாக

எண்ணிற்சிறந்த இமையோரேத்த உமையோடிருந்தானே.

 

1.74.7

 

805

 

விண்டானதிர வியனார்கயிலை வேரோடெடுத்தான்றன்

திண்டோ ளுடலும் முடியுநெரியச் சிறிதேயூன்றிய

புண்டானொழிய அருள்செய்பெருமான் புறவம்பதியாக

எண்டோ ளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.

 

1.74.8

 

806

 

நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காண்கில்லாப்

படியாமேனி யுடையான்பவள வரைபோல்திருமார்பிற்

பொடியார்கோலம் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக

இடியார்முழவார் இமையோரேத்த உமையோடிருந்தானே.

 

1.74.9

 

807

 

ஆலும்மயிலின் பீலியமணர் அறிவில்சிறுதேரர்

கோலும்மொழிகள் ஒழியக்குழுவுந் தழலுமெழில்வானும்

போலும்வடிவும் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக

ஏலும்வகையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.

 

1.74.10

 

808

 

பொன்னார்மாடம் நீடுஞ்செல்வப் புறவம்பதியாக

மின்னாரிடையாள் உமையாளோடும் இருந்தவிமலனைத்

தன்னார்வஞ்செய் தமிழின்விரகன் உரைத்ததமிழ்மாலை

பன்னாள்பாடி யாடப்பிரியார் பரலோகந்தானே.

 

1.74.11

 

 

திருப்புறவம் என்பதும் சீகாழிக்கொருபெயர்.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.75 திருவெங்குரு

 

பண் - குறிஞ்சி

 

809

 

காலைநன் மாமலர் கொண்டடி பரவிக்

 

கைதொழு மாணியைக் கறுத்தவெங் காலன்

ஓலம திடமுன் உயிரொடு மாள

 

உதைத்தவ னுமையவள் விருப்பனெம் பெருமான்

மாலைவந் தணுக ஓதம்வந் துலவி

 

மறிதிரை சங்கொடு பவளம்முன் உந்தி

வேலைவந் தணையுஞ் சோலைகள் சூழ்ந்த

 

வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

 

1.75.1

 

810

 

பெண்ணினைப் பாகம் அமர்ந்துசெஞ் சடைமேற்

 

பிறையொடும் அரவினை யணிந் தழகாகப்

பண்ணினைப் பாடி யாடிமுன் பலிகொள்

 

பரமரெம் மடிகளார் பரிசுகள் பேணி

மண்ணினை மூடி வான்முக டேறி

 

மறிதிரை கடல்முகந் தெடுப்பமற் றுயர்ந்து

விண்ணள வோங்கி வந்திழி கோயில்

 

வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

 

1.75.2

 

811

 

ஓரியல் பில்லா உருவம தாகி

 

ஒண்டிறல் வேடன துருவது கொண்டு

காரிகை காணத் தனஞ்சயன் றன்னைக்

 

கறுத்தவற் களித்துடன் காதல்செய் பெருமான்

நேரிசை யாக அறுபத முரன்று

 

நிரைமலர்த் தாதுகள் மூசவிண் டுதிர்ந்து

வேரிக ளெங்கும் விம்மிய சோலை

 

வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

 

1.75.3

 

812

 

வண்டணை கொன்றை வன்னியு மத்தம்

 

மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க

கொண்டணி சடையர் விடையினர் பூதங்

 

கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப்

பண்டிகழ் வாகப் பாடியோர் வேதம்

 

பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல்

வெண்பிறை சூடி உமையவ ளோடும்

 

வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

 

1.75.4

 

813

 

சடையினர் மேனி நீறது பூசித்

 

தக்கைகொள் பொக்கண மிட்டுட னாகக்

கடைதொறும் வந்து பலியது கொண்டு

 

கண்டவர் மனமவை கவர்ந் தழகாகப்

படையது ஏந்திப் பைங்கயற் கண்ணி

 

உமையவள் பாகமு மமர்ந்தருள் செய்து

விடையொடு பூதஞ் சூழ்தரச் சென்று

 

வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

 

1.75.5

 

814

 

கரைபொரு கடலில் திரையது மோதக்

 

கங்குல்வந் தேறிய சங்கமு மிப்பி

உரையுடை முத்தம் மணலிடை வைகி

 

ஓங்குவா னிருளறத் துரப்பவெண் டிசையும்

புரைமலி வேதம் போற்றுபூ சுரர்கள்

 

புரிந்தவர் நலங்கொள்ஆ குதியினில் நிறைந்த

விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும்

 

வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

 

1.75.6

 

815

 

வல்லிநுண் ணிடையாள் உமையவள் தன்னை

 

மறுகிட வருமத களிற்றினை மயங்க

ஒல்லையிற் பிடித்தங் குரித்தவள் வெருவல்

 

கெடுத்தவர் விரிபொழில் மிகுதிரு ஆலில்

நல்லற முரைத்து ஞானமோ டிருப்ப

 

நலிந்திட லுற்று வந்தவக் கருப்பு

வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி

 

வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

 

1.75.7

 

816

 

பாங்கிலா வரக்கன் கயிலைஅன் றெடுப்பப்

 

பலதலை முடியொடு தோளவை நெரிய

ஓங்கிய விரலால் ஊன்றியன் றவற்கே

 

ஒளிதிகழ் வாளது கொடுத் தழகாய

கோங்கொடு செருந்தி கூவிள மத்தம்

 

கொன்றையுங் குலாவிய செஞ்சடைச் செல்வர்

வேங்கைபொன் மலரார் விரைதரு கோயில்

 

வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

 

1.75.8

 

817

 

ஆறுடைச் சடையெம் அடிகளைக் காண

 

அரியொடு பிரமனும் அளப்பதற் காகிச்

சேறிடைத் திகழ்வா னத்திடை புக்குஞ்

 

செலவறத் தவிர்ந்தனர் எழிலுடைத் திகழ்வெண்

நீறுடைக் கோல மேனியர் நெற்றிக்

 

கண்ணினர் விண்ணவர் கைதொழு தேத்த

வேறெமை யாள விரும்பிய விகிர்தர்

 

வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

 

1.75.9

 

818

 

பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர்

 

பயில்தரு மறவுரை விட்டழ காக

ஏடுடை மலராள் பொருட்டு வன்தக்கன்

 

எல்லையில் வேள்வியைத் தகர்த்தருள் செய்து

காடிடைக் கடிநாய் கலந்துடன் சூழக்

 

கண்டவர் வெருவுற விளித்து வெய்தாய

வேடுடைக் கோலம் விரும்பிய விகிர்தர்

 

வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

 

1.75.10

 

819

 

விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான்

 

வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரை

நண்ணிய நூலன் ஞானச ம்பந்தன்

 

நவின்றயிவ் வாய்மொழி நலம்மிகு பத்தும்

பண்ணியல் பாகப் பத்திமை யாலே

 

பாடியு மாடியும் பயில வல்லார்கள்

விண்ணவர் விமானங் கொடுவர வேறி

 

வியனுல காண்டுவீற் றிருப்பவர் தாமே.

 

1.75.11

 

 

இதுவுஞ் சீகாழிக்குப்பெயர்.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.76 திரு இலம்பையங்கோட்டூர்

 

பண் - குறிஞ்சி

 

820

 

மலையினார் பருப்பதந் துருத்தி மாற்பேறு

 

மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம்

நிலையினான் எனதுரை தனதுரை யாக

 

நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்

கலையினார் மடப்பிணை துணையொடுந் துயிலக்

 

கானலம் பெடைபுல்கிக் கணமயி லாலும்

இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்

 

இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.

 

1.76.1

 

821

 

திருமலர்க் கொன்றையான் நின்றியூர் மேயான்

 

தேவர்கள் தலைமகன் திருக்கழிப் பாலை

நிருமல னெனதுரை தனதுரை யாக

 

நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்

கருமலர்க் கமழ்சுனை நீள்மலர்க் குவளை

 

கதிர்முலை யிளையவர் மதிமுகத் துலவும்

இருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டூர்

 

இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.

 

1.76.2

 

822

 

பாலனாம் விருத்தனாம் பசுபதி தானாம்

 

பண்டுவெங் கூற்றுதைத் தடியவர்க் கருளுங்

காலனாம் எனதுரை தனதுரை யாகக்

 

கனலெரி யங்கையில் ஏந்திய கடவுள்

நீலமா மலர்ச்சுனை வண்டுபண் செய்ய

 

நீர்மலர்க் குவளைகள் தாதுவிண் டோ ங்கும்

ஏலம்நா றும்பொழில் இலம்பையங் கோட்டூர்

 

இருக்கையாப் பேணியென் எழில்கொள் வதியல்பே.

 

1.76.3

 

823

 

உளங்கொள்வார் உச்சியார் கச்சியே கம்பன்

 

ஒற்றியூ ருறையுமண் ணாமலை யண்ணல்

விளம்புவா னெனதுரை தனதுரை யாக

 

வெள்ளநீர் விரிசடைத் தாங்கிய விமலன்

குளம்புறக் கலைதுள மலைகளுஞ் சிலம்பக்

 

கொழுங்கொடி யெழுந்தெங்குங் கூவிளங் கொள்ள

இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்

 

இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.

 

1.76.4

 

824

 

தேனுமா யமுதமாய்த் தெய்வமுந் தானாய்த்

 

தீயொடு நீருடன் வாயுவாந் தெரியில்

வானுமா மெனதுரை தனதுரை யாக

 

வரியரா வரைக்கசைத் துழிதரு மைந்தன்

கானமான் வெருவுறக் கருவிர லூகங்

 

கடுவனோ டுகளுமூர் கற்கடுஞ் சாரல்

ஏனமா னுழிதரும் இலம்பையங் கோட்டூர்

 

இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.

 

1.76.5

 

825

 

மனமுலாம் அடியவர்க் கருள்புரி கின்ற

 

வகையலாற் பலிதிரிந் துண்பிலான் மற்றோர்

தனமிலா னெனதுரை தனதுரை யாகத்

 

தாழ்சடை யிளமதி தாங்கிய தலைவன்

புனமெலாம் அருவிகள் இருவிசேர் முத்தம்

 

பொன்னொடு மணிகொழித் தீண்டிவந் தெங்கும்

இனமெலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர்

 

இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.

 

1.76.6

 

826

 

நீருளான் தீயுளான் அந்தரத் துள்ளான்

 

நினைப்பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும்

ஊருளான் எனதுரை தனதுரை யாக

 

ஒற்றைவெள் ளேறுகந் தேறிய வொருவன்

பாருளார் பாடலோ டாடல றாத

 

பண்முரன் றஞ்சிறை வண்டினம் பாடும்

ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்

 

இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.

 

1.76.7

 

827

 

வேருலா மாழ்கடல் வருதிரை யிலங்கை

 

வேந்தன தடக்கைகள் அடர்த்தவ னுலகில்

ஆருலா மெனதுரை தனதுரை யாக

 

ஆகமோ ரரவணிந் துழிதரு மண்ணல்

வாருலா நல்லன மாக்களுஞ் சார

 

வாரண முழிதரும் மல்லலங் கானல்

ஏருலாம் பொழிலணி இலம்பையங் கோட்டூர்

 

இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.

 

1.76.8

 

828

 

கிளர்மழை தாங்கினான் நான்முக முடையோன்

 

கீழடி மேல்முடி தேர்ந்தளக் கில்லா

உளமழை யெனதுரை தனதுரை யாக

 

வொள்ளழல் அங்கையி லேந்திய வொருவன்

வளமழை யெனக்கழை வளர்துளி சோர

 

மாசுண முழிதரு மணியணி மாலை

இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்

 

இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.

 

1.76.9

 

829

 

உரிஞ்சன கூறைகள் உடம்பின ராகி

 

உழிதரு சமணருஞ் சாக்கியப் பேய்கள்

பெருஞ்செல்வ னெனதுரை தனதுரை யாகப்

 

பெய்பலிக் கென்றுழல் பெரியவர் பெருமான்

கருஞ்சுனை முல்லைநன் பொன்னடை வேங்கைக்

 

களிமுக வண்டொடு தேனின முரலும்

இருஞ்சுனை மல்கிய இலம்பையங் கோட்டூர்

 

இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.

 

1.76.10

 

830

 

கந்தனை மலிகனை கடலொலி யோதங்

 

கானலங் கழிவளர் கழுமல மென்னும்

நந்தியா ருறைபதி நால்மறை நாவன்

 

நற்றமிழ்க் கின்துணை ஞானசம் பந்தன்

எந்தையார் வளநகர் இலம்பையங் கோட்டூர்

 

இசையொடு கூடிய பத்தும்வல் லார்போய்

வெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும்

 

வீடுபெற் றிம்மையின் வீடெளி தாமே.

 

1.76.11

 

 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சந்திரசேகரர், தேவியார் - கோடேந்துமுலையம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.77 திருஅச்சிறுபாக்கம்

 

பண் - குறிஞ்சி

 

831

 

பொன்றிரண் டன்ன புரிசடை புரள

 

பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக்

குன்றிரண் டன்ன தோளுடை யகலங்

 

குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர்

மின்றிரண் டன்ன நுண்ணிடை யரிவை

 

மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி

அன்றிரண் டுருவ மாயவெம் அடிகள்

 

அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

 

1.77.1

 

832

 

தேனினு மினியர் பாலன நீற்றர்

 

தீங்கரும் பனையர்தந் திருவடி தொழுவார்

ஊன்நயந் துருக உவகைகள் தருவார்

 

உச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார்

வானக மிறந்து வையகம் வணங்க

 

வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார்

ஆனையி னுரிவை போர்த்தவெம் மடிகள்

 

அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

 

1.77.2

 

833

 

காரிரு ளுருவ மால்வரை புரையக்

 

களிற்றின துரிவைகொண் டரிவைமே லோடி

நீருரு மகளை நிமிர்சடைத் தாங்கி

 

நீறணிந் தேறுகந் தேறிய நிமலர்

பேரரு ளாளர் பிறவியில் சேரார்

 

பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழ

ஆரிருள் மாலை ஆடுமெம் மடிகள்

 

அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

 

1.77.3

 

834

 

மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும்

 

மலைமக ளவளொடு மருவின ரெனவும்

செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ்

 

சென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார்

தம்மல ரடியொன் றடியவர் பரவத்

 

தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேர

அம்மலர்க் கொன்றை யணிந்த வெம்மடிகள்

 

அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

 

1.77.4

 

835

 

விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும்

 

விரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும்

பண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும்

 

பலபுக ழல்லது பழியில ரெனவும்

எண்ணலா காத இமையவர் நாளும்

 

ஏத்தர வங்களோ டெழில்பெற நின்ற

அண்ணலா னூர்தி ஏறுமெம் மடிகள்

 

அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

 

1.77.5

 

836

 

நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க

 

நிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசித்

தோடொரு காதினிற் பெய்துவெய் தாய

 

சுடலையி லாடுவர் தோலுடை யாகக்

காடரங் காகக் கங்குலும் பகலுங்

 

கழுதொடு பாரிடங் கைதொழு தேத்த

ஆடர வாட ஆடுமெம் மடிகள்

 

அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

 

1.77.6

 

837

 

ஏறுமொன் றேறி நீறுமெய் பூசி

 

இளங்கிளை யரிவையொ டொருங்குட னாகிக்

கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங்

 

குளிரிள மதியமுங் கூவிள மலரும்

நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும்

 

மகிழிள வன்னியும் இவைநலம் பகர

ஆறுமோர் சடைமேல் அணிந்த வெம்மடிகள்

 

அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

 

1.77.7

 

838

 

கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர்

 

கதிர்முடி சுடர்விடக் கவரியுங் குடையும்

பிச்சமும் பிறவும் பெண்ணணங் காய

 

பிறைநுத லவர்தமைப் பெரியவர் பேணப்

பச்சமும் வலியுங் கருதிய வரக்கன்

 

பருவரை யெடுத்ததிண் டோ ள்களை யடர்வித்

தச்சமும் அருளுங் கொடுத்த வெம்மடிகள்

 

அச்சிறு பாக்கம தாட்சி கொண்டாரே.

 

1.77.8

 

839

 

நோற்றலா ரேனும் வேட்டலா ரேனும்

 

நுகர்புகர் சாந்தமோ டேந்திய மாலைக்

கூற்றலா ரேனும் இன்னவா றென்றும்

 

எய்தலா காததோர் இயல்பினை யுடையார்

தோற்றலார் மாலும் நான்முக முடைய

 

தோன்றலும் அடியொடு முடியுறத் தங்கள்

ஆற்றலாற் காணா ராயவெம் மடிகள்

 

அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

 

1.77.9

 

840

 

வாதுசெய் சமணுஞ் சாக்கியப்பேய்கள்

 

நல்வினை நீக்கிய வல்வினை யாளர்

ஓதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார்

 

உள்கலா காததோர் இயல்பினை யுடையார்

வேதமும் வேத நெறிகளு மாகி

 

விமலவே டத்தொடு கமலமா மதிபோல்

ஆதியும் ஈறும் ஆயவெம் மடிகள்

 

அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

 

1.77.10

 

841

 

மைச்செறி குவளை தவளைவாய் நிறைய

 

மதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப்

பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப்

 

பதியவ ரதிபதி கவுணியர் பெருமான்

கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக்

 

கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண்

டச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும்

 

அன்புடை யடியவர் அருவினை யிலரே.

 

1.77.11

 

 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பாக்கபுரேசர், தேவியார் - சுந்தரமாதம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.78 திரு இடைச்சுரம்

 

பண் - குறிஞ்சி

 

842

 

வரிவள ரவிரொளி யரவரை தாழ

 

வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்

கரிவளர் தருகழல் கால்வல னேந்திக்

 

கனலெரி யாடுவர் காடரங் காக

விரிவளர் தருபொழில் இனமயி லால

 

வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்

எரிவள ரினமணி புனமணி சாரல்

 

இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

 

1.78.1

 

843

 

ஆற்றையு மேற்றதோர் அவிர்சடை யுடையர்

 

அழகினை யருளுவர் குழகல தறியார்

கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர்

 

நடுவிரு ளாடுவர் கொன்றையந் தாரார்

சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை

 

செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி

ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல்

 

இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

 

1.78.2

 

844

 

கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங்

 

காதலர் தீதிலர் கனல்மழு வாளர்

வானமும் நிலமையும் இருமையு மானார்

 

வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்

நானமும் புகையொளி விரையொடு கமழ

 

நளிர்பொழி லிளமஞ்ஞை மன்னிய பாங்கர்

ஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல்

 

இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

 

1.78.3

 

845

 

கடமணி மார்பினர் கடல்தனி லுறைவார்

 

காதலர் தீதிலர் கனல்மழு வாளர்

விடமணி மிடறினர் மிளிர்வதோ ரரவர்

 

வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்

வடமுலை யயலன கருங்குருந் தேறி

 

வாழையின் தீங்கனி வார்ந்து தேனட்டும்

இடமுலை யரிவையர் எழில்திகழ் சாரல்

 

இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

 

1.78.4

 

844

 

கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக்

 

கண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை

நீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர்

 

நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர்

சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யுஞ்

 

செழும்புன லனையன செங்குலை வாழை

ஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ் சாரல்

 

இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

 

1.78.5

 

845

 

தோடணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர்

 

சுடலையி னாடுவர் தோலுடை யாகப்

பீடுயர் செய்ததோர் பெருமையை யுடையர்

 

பேயுட னாடுவர் பெரியவர் பெருமான்

கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி

 

குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்

ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல்

 

இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

 

1.78.6

 

846

 

கழல்மல்கு காலினர் வேலினர் நூலர்

 

கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர்

அழல்மல்கு மெரியொடும் அணிமழு வேந்தி

 

ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர்

பொழில்மல்கு நீடிய அரவமு மரவம்

 

மன்னிய கவட்டிடைப் புணர்குயி லாலும்

எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும்

 

இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

 

1.78.7

 

847

 

தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார்

 

திகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி

வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி

 

வேறுமோர் சரிதையர் வேடமு முடையர்

சாந்தமும் அகிலொடு முகில்பொதிந் தலம்பித்

 

தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி

ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ் சாரல்

 

இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

 

1.78.8

 

850

 

பலஇலம் இடுபலி கையிலொன் றேற்பர்

 

பலபுக ழல்லது பழியிலர் தாமுந்

தலையிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன்

 

தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை யுடையர்

மலையிலங் கருவிகள் மணமுழ வதிர

 

மழைதவ ழிளமஞ்ஞை மல்கிய சாரல்

இலைஇல வங்கமும் ஏலமுங் கமழும்

 

இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

 

1.78.9

 

851

 

பெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற

 

பெருங்கடல் வண்ணனும் பிரமனு மோரா

அருமையர் அடிநிழல் பரவிநின் றேத்தும்

 

அன்புடை யடியவர்க் கணியரு மாவர்

கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக்

 

கயலினம் வயலிள வாளைகள் இரிய

எருமைகள் படிதர இளஅனம் ஆலும்

 

இடைச்சுர மேவிய இவர்வண மென்னே.

 

1.78.10

 

852

 

மடைச்சுர மறிவன வாளையுங் கயலும்

 

மருவிய வயல்தனில் வருபுனற் காழிச்

சடைச்சுரத் துறைவதோர் பிறையுடை யண்ணல்

 

சரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன்

புடைச்சுரத் தருவரைப் பூக்கமழ் சாரல்

 

புணர்மட நடையவர் புடையிடை யார்ந்த

இடைச்சுர மேத்திய இசையொடு பாடல்

 

இவைசொல வல்லவர் பிணியிலர் தாமே.

 

1.78.11

 

 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - இடைச்சுரநாதர், தேவியார் - இமயமடக்கொடியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.79 திருக்கழுமலம்

 

பண் - குறிஞ்சி

 

853

 

அயிலுறு படையினர் விடையினர் முடிமேல்

 

அரவமும் மதியமும் விரவிய அழகர்

மயிலுறு சாயல் வனமுலை யொருபால்

 

மகிழ்பவர் வானிடை முகில்புல்கு மிடறர்

பயில்வுறு சரிதையர் எருதுகந் தேறிப்

 

பாடியு மாடியும் பலிகொள்வர் வலிசேர்

கயிலையும் பொதியிலும் இடமென வுடையார்

 

கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.

 

1.79.1

 

854

 

கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர்

 

கொடுமுடி யுறைபவர் படுதலைக் கையர்

பண்டல ரயன்சிரம் அரிந்தவர் பொருந்தும்

 

படர்சடை யடிகளார் பதியத னயலே

வண்டலும் வங்கமுஞ் சங்கமுஞ் சுறவும்

 

மறிகடல் திரைகொணர்ந் தெற்றிய கரைமேற்

கண்டலுங் கைதையும் நெய்தலுங் குலவுங்

 

கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.

 

1.792

 

855

 

எண்ணிடை யொன்றினர் இரண்டின ருருவம்

 

எரியிடை மூன்றினர் நான்மறை யாளர்

மண்ணிடை ஐந்தினர் ஆறின ரங்கம்

 

வகுத்தன ரேழிசை எட்டிருங் கலைசேர்

பண்ணிடை யொன்பதும் உணர்ந்தவர் பத்தர்

 

பாடிநின் றடிதொழ மதனனை வெகுண்ட

கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில்

 

கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.

 

1.79.3

 

856

 

எரியொரு கரத்தினர் இமையவர்க் கிறைவர்

 

ஏறுகந் தேறுவர் நீறுமெய் பூசித்

திரிதரு மியல்பினர் அயலவர் புரங்கள்

 

தீயெழ விழித்தனர் வேய்புரை தோளி

வரிதரு கண்ணிணை மடவர லஞ்ச

 

மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த

கரியுரி மருவிய அடிகளுக் கிடமாங்

 

கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.

 

1.79.4

 

857

 

ஊரெதிர்ந் திடுபலி தலைகல னாக

 

உண்பவர் விண்பொலிந் திலங்கிய வுருவர்

பாரெதிர்ந் தடிதொழ விரைதரு மார்பிற்

 

படஅர வாமையக் கணிந்தவர்க் கிடமாம்

நீரெதிர்ந் திழிமணி நித்தில முத்தம்

 

நிரைசொரி சங்கமொ டொண்மணி வரன்றிக்

காரெதிர்ந் தோதம்வன் திரைகரைக் கெற்றுங்

 

கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.

 

1.79.5

 

858

 

முன்னுயிர்த் தோற்றமும் இறுதியு மாகி

 

முடியுடை அமரர்கள் அடிபணிந் தேத்தப்

பின்னிய சடைமிசைப் பிறைநிறை வித்த

 

பேரரு ளாளனார் பேணிய கோயில்

பொன்ணியல் நறுமலர் புனலொடு தூபஞ்

 

சாந்தமு மேந்திய கையின ராகிக்

கன்னியர் நாடொறும் வேடமே பரவுங்

 

கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.

 

1.79.6

 

859

 

கொலைக்கணித் தாவரு கூற்றுதை செய்தார்

 

குரைகழல் பணிந்தவர்க் கருளிய பொருளின்

நிலைக்கணித் தாவர நினையவல் லார்தம்

 

நெடுந்துயர் தவிர்த்தவெம் நிமலருக் கிடமாம்

மலைக்கணித் தாவர வன்றிரை முரல

 

மதுவிரி புன்னைகள் முத்தென வரும்பக்

கலைக்கணங் கானலின் நீழலில் வாழுங்

 

கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.

 

1.79.7

 

860

 

புயம்பல வுடையதென் இலங்கையர் வேந்தன்

 

பொருவரை யெடுத்தவன் பொன்முடி திண்டோ ள்

பயம்பல படவடர்த் தருளிய பெருமான்

 

பரிவொடு மினிதுறை கோயில தாகும்

வியன்பல விண்ணினும் மண்ணினு மெங்கும்

 

வேறுவே றுகங்களிற் பெயருள தென்னக்

கயம்பல படக்கடற் றிரைகரைக் கெற்றுங்

 

கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.

 

1.79.8

 

861

 

விலங்கலொன் றேந்திவன் மழைதடுத் தோனும்

 

வெறிகமழ் தாமரை யோனுமென் றிவர்தம்

பலங்களால் நேடியும் அறிவரி தாய

 

பரிசினன் மருவிநின் றினிதுறை கோயில்

மலங்கிவன் றிரைவரை எனப்பரந் தெங்கும்

 

மறிகட லோங்கிவெள் ளிப்பியுஞ் சுமந்து

கலங்கடன் சரக்கொடு நிரக்கவந் தேறுங்

 

கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.

 

1.79.9

 

862

 

ஆம்பல தவமுயன் றறவுரை சொல்லும்

 

அறிவிலாச் சமணருந் தேரருங் கணிசேர்

நோம்பல தவமறி யாதவர் நொடிந்த

 

மூதுரை கொள்கிலா முதல்வர் தம்மேனிச்

சாம்பலும் பூசிவெண் டலைகல னாகத்

 

தையலா ரிடுபலி வையகத் தேற்றுக்

காம்பன தோளியொ டினிதுறை கோயில்

 

கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.

 

1.79.10

 

863

 

கலிகெழு பாரிடை யூரென வுளதாங்

 

கழுமலம் விரும்பிய கோயில்கொண் டவர்மேல்

வலிகெழு மனம்மிக வைத்தவன் மறைசேர்

 

வருங்கலை ஞானசம் பந்தன தமிழின்

ஒலிகெழு மாலையென் றுரைசெய்த பத்தும்

 

உண்மையி னால்நினைந் தேத்தவல் லார்மேல்

மெலிகெழு துயரடை யாவினை சிந்தும்

 

விண்ணவ ராற்றலின் மிகப்பெறு வாரே.

 

1.79.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.80 கோயில்

 

பண் - குறிஞ்சி

 

864

 

கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே

செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய

முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே

பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.

 

1.80.1

 

865

 

பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ்

சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய

பிறப்பில் பெருமானைப் பின்தாழ் சடையானை

மறப்பி லார்கண்டீர் மையல் தீர்வாரே.

 

1.80.2

 

866

 

மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக்

கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுள்

பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச்

செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே.

 

1.80.3

 

867

 

நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்

பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்

சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய

இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே.

 

1.80.4

 

868

 

செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்

செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற

செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய

செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே.

 

1.80.5

 

869

 

வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந்

திருமாந் தில்லையுட் சிற்றம் பலமேய

கருமான் உரியாடைக் கறைசேர் கண்டத்தெம்

பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே.

 

1.80.6

 

870

 

அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம்

மலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகேத்தச்

சிலையால் எயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத்

தலையால் வணங்குவார் தலையா னார்களே.

 

1.80.7

 

871

 

கூர்வாள் அரக்கன்றன் வலியைக் குறைவித்துச்

சீரா லேமல்கு சிற்றம் பலமேய

நீரார் சடையானை நித்த லேத்துவார்

தீரா நோயெல்லாந் தீர்தல் திண்ணமே.

 

1.80.8

 

872

 

கோணா கணையானுங் குளிர்தா மரையானுங்

காணார் கழலேத்தக் கனலாய் ஓங்கினான்

சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேத்த

மாணா நோயெல்லாம் வாளா மாயுமே.

 

1.80.9

 

873

 

பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும்

முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே

சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய

நட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே.

 

1.80.10

 

874

 

ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன்

சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேய

சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை

கோலத் தாற்பாட வல்லார் நல்லாரே.

 

1.80.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர், சபாநாதர்,

தேவியார் - சிவகாமியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.81 சீர்காழி

 

பண் - குறிஞ்சி

 

875

 

நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ்

சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த

வில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங்

கல்லார் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே.

 

1.81.1

 

876

 

துளிவண் டேன்பாயும் இதழி தூமத்தந்

தெளிவெண் டிங்கள்மா சுணநீர் திகழ்சென்னி

ஒளிவெண் டலைமாலை உகந்தா னூர்போலுங்

களிவண்டியாழ் செய்யுங் காழிந் நகர்தானே.

 

1.81.2

 

877

 

ஆலக் கோலத்தின் நஞ்சுண் டமுதத்தைச்

சாலத் தேவர்க்கீந் தளித்தான் தன்மையால்

பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தால்

காலற் காய்ந்தானூர் காழிந் நகர்தானே.

 

1.81.3

 

               

(*) இப்பதிகத்தில் 4,5,6,7-ம்செய்யுட்கள் மறைந்துபோயின.

 

1.81.4-7

 

878

 

இரவில் திரிவோர்கட் கிறைதோ ளிணைபத்தும்

நிரவிக் கரவாளை நேர்ந்தா னிடம்போலும்

பரவித் திரிவோர்க்கும் பால்நீ றணிவோர்க்குங்

கரவில் தடக்கையார் காழிந் நகர்தானே.

 

1.81.8

 

879

 

மாலும் பிரமனும் அறியா மாட்சியான்

தோலும் புரிநூலுந் துதைந்த வரைமார்பன்

ஏலும் பதிபோலும் இரந்தோர்க் கெந்நாளுங்

காலம் பகராதார் காழிந் நகர்தானே.

 

1.81.9

 

880

 

தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள்

பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள்

மங்கை யொருபாகம் மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக்

கங்கை தரித்தானூர் காழிந் நகர்தானே.

 

1.81.10

 

881

 

வாசங் கமழ்காழி மதிசெஞ் சடைவைத்த

ஈசன் நகர்தன்னை இணையில் சம்பந்தன்

பேசுந் தமிழ்வல்லோர் பெருநீ ருலகத்துப்

பாசந் தனையற்றுப் பழியில் புகழாரே.

 

1.81.11

 

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.82 திருவீழிமிழலை

 

பண் - குறிஞ்சி

 

882

 

இரும்பொன் மலைவில்லா எரியம் பாநாணில்

திரிந்த புரமூன்றுஞ் செற்றான் உறைகோயில்

தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும்

விரும்பி யெதிர்கொள்வார் வீழி மிழலையே.

 

1.82.1

 

883

 

வாதைப் படுகின்ற வானோர் துயர்தீர

ஓதக் கடல்நஞ்சை உண்டான் உறைகோயில்

கீதத் திசையோடுங் கேள்விக் கிடையோடும்

வேதத் தொலியோவா வீழி மிழலையே.

 

1.82.2

 

884

 

பயிலும் மறையாளன் தலையிற் பலிகொண்டு

துயிலும் பொழுதாடுஞ் சோதி யுறைகோயில்

மயிலும் மடமானும் மதியும் மிளவேயும்

வெயிலும் பொலிமாதர் வீழி மிழலையே.

 

1.82.3

 

885

 

இரவன் பகலோனும் எச்சத் திமையோரை

நிரவிட் டருள்செய்த நிமலன் உறைகோயில்

குரவஞ் சுரபுன்னை குளிர்கோங் கிளவேங்கை

விரவும் பொழிலந்தண் வீழி மிழலையே.

 

1.82.4

 

886

 

கண்ணிற் கனலாலே காமன் பொடியாகப்

பெண்ணுக் கருள்செய்த பெருமான் உறைகோயில்

மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும்

விண்ணிற் புயல்காட்டும் வீழி மிழலையே.

 

1.82.5

 

887

 

மாலா யிரங்கொண்டு மலர்க்கண் ணிடஆழி

ஏலா வலயத்தோ டீந்தான் உறைகோயில்

சேலா கியபொய்கைச் செழுநீர்க் கமலங்கள்

மேலா லெரிகாட்டும் வீழி மிழலையே.

 

1.82.6

 

888

 

மதியால் வழிபட்டான் வாணாள் கொடுபோவான்

கொதியா வருகூற்றைக் குமைத்தான் உறைகோயில்

நெதியான் மிகுசெல்வர் நித்த நியமங்கள்

விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே.

 

1.82.7

 

889

 

எடுத்தான் தருக்கினை இழித்தான் விரலூன்றிக்

கொடுத்தான் வாள்ஆளாக் கொண்டான் உறைகோயில்

படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை

விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே.

 

1.82.8

 

890

 

கிடந்தான் இருந்தானுங் கீழ்மேல் காணாது

தொடர்ந்தாங் கவரேத்தச் சுடரா யவன்கோயில்

படந்தாங் கரவல்குல் பவளத் துவர்வாய்மேல்

விடந்தாங் கியகண்ணார் வீழி மிழலையே.

 

1.82.9

 

891

 

சிக்கார் துவராடைச் சிறுதட் டுடையாரும்

நக்காங் கலர்தூற்றும் நம்பான் உறைகோயில்

தக்கார் மறைவேள்வித் தலையா யுலகுக்கு

மிக்கார் அவர்வாழும் வீழி மிழலையே.

 

1.82.10

 

892

 

மேனின் றிழிகோயில் வீழி மிழலையுள்

ஏனத் தெயிற்றானை எழிலார் பொழில்காழி

ஞானத் துயர்கின்ற நலங்கொள் சம்பந்தன்

வாய்மைத் திவைசொல்ல வல்லோர் நல்லோரே.

 

1.82.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.83 திரு அம்பர்மாகாளம்

 

பண் - குறிஞ்சி

 

893

 

அடையார் புரமூன்றும் அனல்வாய்விழ வெய்து

மடையார் புனலம்பர் மாகா ளம்மேய

விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைசூடுஞ்

சடையான் கழலேத்தச் சாரா வினைதானே.

 

1.83.1

 

894

 

தேனார் மதமத்தந் திங்கள் புனல்சூடி

வானார் பொழிலம்பர் மாகா ளம்மேய

ஊனார் தலைதன்னிற் பலிகொண் டுழல்வாழ்க்கை

ஆனான் கழலேத்த அல்லல் அடையாவே.

 

1.83.2

 

895

 

திரையார் புனலோடு செல்வ மதிசூடி

விரையார் பொழிலம்பர் மாகா ளம்மேய

நரையார் விடையூரும் நம்பான் கழல்நாளும்

உரையா தவர்கண்மேல் ஒழியா வூனம்மே.

 

1.83.3

 

896

 

கொந்தண் பொழிற்சோலைக் கோல வரிவண்டு

மந்தம் மலியம்பர் மாகா ளம்மேய

கந்தங் கமழ்கொன்றை கமழ்புன் சடைவைத்த

எந்தை கழலேத்த இடர்வந் தடையாவே.

 

1.83.4

 

897

 

அணியார் மலைமங்கை ஆகம் பாகமாய்

மணியார் புனலம்பர் மாகா ளம்மேய

துணியா ருடையினான் துதைபொற் கழல்நாளும்

பணியா தவர்தம்மேற் பறையா பாவம்மே.

 

1.83.5

 

898

 

பண்டாழ் கடல்நஞ்சை உண்டு களிமாந்தி

வண்டார் பொழிலம்பர் மாகா ளம்மேய

விண்டார் புரம்வேவ மேருச் சிலையாகக்

கொண்டான் கழலேத்தக் குறுகா குற்றம்மே.

 

1.83.6

 

899

 

மிளிரும் மரவோடு வெள்ளைப் பிறைசூடி

வளரும் பொழிலம்பர் மாகா ளம்மேய

கிளருஞ் சடையண்ணல் கேடில் கழலேத்தத்

தளரும் முறுநோய்கள் சாருந் தவந்தானே.

 

1.83.7

 

900

 

கொலையார் மழுவோடு கோலச் சிலையேந்தி

மலையார் புனலம்பர் மாகா ளம்மேய

இலையார் திரிசூலப் படையான் கழல்நாளும்

நிலையா நினைவார்மேல் நில்லா வினைதானே.

 

1.83.8

 

901

 

சிறையார் வரிவண்டு தேனுண் டிசைபாட

மறையார் நிறையம்பர் மாகா ளம்மேய

நறையார் மலரானும் மாலுங் காண்பொண்ணா

இறையான் கழலேத்த எய்தும் இன்பமே.

 

1.83.9

 

902

 

மாசூர் வடிவின்னார் மண்டை யுணல்கொள்வார்

கூசா துரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல

வாசார் பொழிலம்பர் மாகா ளம்மேய

ஈசா என்பார்கட் கில்லை யிடர்தானே.

 

1.83.10

 

903

 

வெருநீர் கொளவோங்கும் வேணு புரந்தன்னுள்

திருமா மறைஞான சம்பந் தனசேணார்

பெருமான் மலியம்பர் மாகா ளம்பேணி

உருகா வுரைசெய்வார் உயர்வான் அடைவாரே.

 

1.83.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - காளகண்டேசுவரர், தேவியார் - பட்சநாயகியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.84 திருக்கடனாகைக்காரோணம்

 

பண் - குறிஞ்சி

 

904

 

புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய

நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி

வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக்

கனையுங் கடல்நாகைக் காரோ ணத்தானே.

 

1.84.1

 

905

 

பெண்ணா ணெனநின்ற பெம்மான் பிறைச்சென்னி

அண்ணா மலைநாடன் ஆரூ ருறையம்மான்

மண்ணார் முழவோவா மாட நெடுவீதிக்

கண்ணார் கடல்நாகைக் காரோ ணத்தானே.

 

1.84.2

 

906

 

பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதில்மூன்றும்

ஆரார் அழலூட்டி அடியார்க் கருள்செய்தான்

தேரார் விழவோவாச் செல்வன் திரைசூழ்ந்த

காரார் கடல்நாகைக் காரோ ணத்தானே.

 

1.84.3

 

907

 

மொழிசூழ் மறைபாடி முதிருஞ் சடைதன்மேல்

அழிசூழ் புனலேற்ற அண்ண லணியாயப்

பழிசூழ் விலராய பத்தர் பணிந்தேத்தக்

கழிசூழ் கடல்நாகைக் காரோ ணத்தானே.

 

1.84.4

 

908

 

ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருள்நல்கிச்

சேணின் றவர்க்கின்னஞ் சிந்தை செயவல்லான்

பேணி வழிபாடு பிரியா தெழுந்தொண்டர்

காணுங் கடல்நாகைக் காரோ ணத்தானே.

 

1.84.5

 

909

 

ஏனத் தெயிறோடும் மரவ மெய்பூண்டு

வானத் திளந்திங்கள் வளருஞ் சடையண்ணல்

ஞானத் துறைவல்லார் நாளும் பணிந்தேத்தக்

கானற் கடல்நாகைக் காரோ ணத்தானே.

 

1.84.6

 

910

 

அரையார் அழல்நாகம் அக்கோ டசைத்திட்டு

விரையார் வரைமார்பின் வெண்ணீ றணியண்ணல்

வரையார் வனபோல வளரும்வங்கங்கள்

கரையார் கடல்நாகைக் காரோ ணத்தானே.

 

1.84.7

 

911

 

வலங்கொள் புகழ்பேணி வரையா லுயர்திண்டோ ள்

இலங்கைக் கிறைவாட அடர்த்தங் கருள்செய்தான்

பலங்கொள் புகழ்மண்ணிற் பத்தர் பணிந்தேத்தக்

கலங்கொள் கடல்நாகைக் காரோ ணத்தானே.

 

1.84.8

 

912

 

திருமா லடிவீழத் திசைநான் முகனேத்தப்

பெருமா னெனநின்ற பெம்மான் பிறைச்சென்னிச்

செருமால் விடையூருஞ் செல்வன் திரைசூழ்ந்த

கருமால் கடல்நாகைக் காரோ ணத்தானே.

 

1.84.9

 

913

 

நல்லா ரறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற

அல்லா ரலர்தூற்ற அடியார்க் கருள்செய்வான்

பல்லார் தலைமாலை யணிவான் பணிந்தேத்தக்

கல்லார் கடல்நாகைக் காரோ ணத்தானே.

 

1.84.10

 

914

 

கரையார் கடல்நாகைக் காரோ ணம்மேய

நரையார் விடையானை நவிலுஞ் சம்பந்தன்

உரையார் தமிழ்மாலை பாடு மவரெல்லாங்

கரையா வுருவாகிக் கலிவான் அடைவாரே.

 

1.84.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர், தேவியார் - நீலாயதாட்சியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.85 திருநல்லம்

 

பண் - குறிஞ்சி

 

915

 

கல்லால் நிழல்மேய கறைசேர் கண்டாவென்

றெல்லா மொழியாலும் இமையோர் தொழுதேத்த

வில்லால் அரண்மூன்றும் வெந்து விழவெய்த

நல்லான் நமையாள்வான் நல்லம் நகரானே.

 

1.85.1

 

916

 

தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரைத்

துக்கம் பலசெய்து சுடர்பொற் சடைதாழக்

கொக்கின் இறகோடு குளிர்வெண் பிறைசூடும்

நக்கன் நமையாள்வான் நல்லம் நகரானே.

 

1.85.2

 

917

 

அந்தி மதியோடும் அரவச் சடைதாழ

முந்தி யனலேந்தி முதுகாட் டெரியாடி

சிந்தித் தெழவல்லார் தீரா வினைதீர்க்கும்

நந்தி நமையாள்வான் நல்லம் நகரானே.

 

1.85.3

 

918

 

குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ

மிளிரும் மரவோடு வெண்ணூல் திகழ்மார்பில்

தளிருந் திகழ்மேனித் தையல் பாகமாய்

நளிரும் வயல்சூழ்ந்த நல்லம் நகரானே.

 

1.85.4

 

919

 

மணியார் திகழ்கண்டம் முடையான் மலர்மல்கு

பிணிவார் சடையெந்தை பெருமான் கழல்பேணித்

துணிவார் மலர்கொண்டு தொண்டர் தொழுதேத்த

நணியான் நமையாள்வான் நல்லம் நகரானே.

 

1.85.5

 

920

 

வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும்

பூசுஞ் சுடுநீறு புனைந்தான் விரிகொன்றை

ஈச னெனவுள்கி யெழுவார் வினைகட்கு

நாசன் நமையாள்வான் நல்லம் நகரானே.

 

1.85.6

 

921

 

அங்கோல் வளைமங்கை காண அனலேந்திக்

கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக

வெங்கா டிடமாக வெந்தீ விளையாடும்

நங்கோன் நமையாள்வான் நல்லம் நகரானே.

 

1.85.7

 

922

 

பெண்ணார் திருமேனிப் பெருமான் பிறைமல்கு

கண்ணார் நுதலினான் கயிலை கருத்தினால்

எண்ணா தெடுத்தானை இறையே விரலூன்றி

நண்ணார் புரமெய்தான் நல்லம் நகரானே.

 

1.85.8

 

923

 

நாகத் தணையானும் நளிர்மா மலரானும்

போகத் தியல்பினாற் பொலிய அழகாகும்

ஆகத் தவளோடும் அமர்ந்தங் கழகாரும்

நாகம் மரையார்த்தான் நல்லம் நகரானே.

 

1.85.9

 

924

 

குறியில் சமணோடு குண்டர் வண்தேரர்

அறிவில் லுரைகேட்டங் கவமே கழியாதே

பொறிகொள் ளரவார்த்தான் பொல்லா வினைதீர்க்கும்

நறைகொள் பொழில்சூழ்ந்த நல்லம் நகரானே.

 

1.85.10

 

925

 

நலமார் மறையோர்வாழ் நல்லம் நகர்மேய

கொலைசேர் மழுவானைக் கொச்சை யமர்ந்தோங்கு

தலமார் தமிழ்ஞான சம்பந் தன்சொன்ன

கலைக ளிவைவல்லார் கவலை கழிவாரே.

 

1.85.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - உமாமகேசுவரர், தேவியார் - மங்களநாயகியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.86 திருநல்லூர்

 

பண் - குறிஞ்சி

 

926

 

கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி

நட்டம் பயின்றாடும் நல்லூர்ப் பெருமானை

முட்டின் றிருபோதும் முனியா தெழுந்தன்பு

பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே.

 

1.86.1

 

927

 

ஏறில் எருதேறும் எழிலா யிழையோடும்

வேறும் முடனுமாம் விகிர்தர் அவரென்ன

நாறும் மலர்ப்பொய்கை நல்லூர்ப் பெருமானைக்

கூறு மடியார்கட் கடையா குற்றமே.

 

1.86.2

 

928

 

சூடும் இளந்திங்கள் சுடர் பொற்சடைதாழ

ஓடுண் கலனாக வூரூ ரிடுபிச்சை

நாடும் நெறியானை நல்லூர்ப் பெருமானைப்

பாடும் மடியார்கட் கடையா பாவமே.

 

1.86.3

 

929

 

நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை

நாத்த நெறியானை நல்லூர்ப் பெருமானைக்

காத்த நெறியானைக் கைகூப்பித் தொழு

தேத்தும் அடியார்கட் கில்லை யிடர்தானே.

 

1.86.4

 

930

 

ஆகத் துமைகேள்வன் அரவச் சடைதாழ

நாகம் மசைத்தானை நல்லூர்ப் பெருமானைத்

தாகம் புகுந்தண்மித் தாள்கள் தொழுந்தொண்டர்

போகம் மனத்தராய்ப் புகழத் திரிவாரே.

 

1.86.5

 

931

 

கொல்லுங் களியானை யுரிபோர்த் துமையஞ்ச

நல்ல நெறியானை நல்லூர்ப் பெருமானைச்

செல்லும் நெறியானைச் சேர்ந்தா ரிடர்தீரச்

சொல்லு மடியார்கள் அறியார் துக்கமே.

 

1.86.6

 

932

 

எங்கள் பெருமானை இமையோர் தொழுதேத்தும்

நங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லா

தங்கை தலைக்கேற்றி ஆளென் றடிநீழல்

தங்கும் மனத்தார்கள் தடுமாற் றறுப்பாரே.

 

1.86.7

 

933

 

காமன் எழில்வாட்டிக் கடல்சூழ் இலங்கைக்கோன்

நாமம் இறுத்தானை நல்லூர்ப் பெருமானை

ஏம மனத்தாராய் இகழா தெழுந்தொண்டர்

தீப மனத்தார்கள் அறியார் தீயவே.

 

1.86.8

 

934

 

வண்ண மலரானும் வையம் அளந்தானும்

நண்ண லரியானை நல்லூர்ப் பெருமானைத்

தண்ண மலர்தூவித் தாள்கள் தொழுதேத்த

எண்ணும் அடியார்கட் கில்லை யிடுக்கணே.

 

1.86.9

 

935

 

பிச்சக் குடைநீழற் சமணர் சாக்கியர்

நிச்சம் அலர்தூற்ற நின்ற பெருமானை

நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை

எச்சும் அடியார்கட் கில்லை யிடர்தானே.

 

1.86.10

 

936

 

தண்ணம் புனற்காழி ஞான சம்பந்தன்

நண்ணும் புனல்வேலி நல்லூர்ப் பெருமானை

வண்ணம் புனைமாலை வைகலேத்துவார்

விண்ணும் நிலனுமாய் விளங்கும் புகழாரே.

 

1.86.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பெரியாண்டேசுவரர், தேவியார் - திரிபுரசுந்தரியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.87 திருவடுகூர்

 

பண் - குறிஞ்சி

 

937

 

சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர்

கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர்

கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார்

வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே.

 

1.87.1

 

938

 

பாலு நறுநெய்யுந் தயிரும் பயின்றாடி

ஏலுஞ் சுடுநீறும் என்பும் ஒளிமல்கக்

கோலம் பொழிற்சோலைக் கூடி மடவன்னம்

ஆலும் வடுகூரில் ஆடும் மடிகளே.

 

1.87.2

 

939

 

சூடும் இளந்திங்கள் சுடர்பொற் சடைதன்மேல்

ஓடுங் களியானை உரிபோர்த் துமையஞ்ச

ஏடு மலர்மோந்தங் கெழிலார் வரிவண்டு

பாடும் வடுகூரில் ஆடும் மடிகளே.

 

1.87.3

 

940

 

துவரும் புரிசையுந் துதைந்த மணிமாடம்

கவர வெரியோட்டிக் கடிய மதிலெய்தார்

கவரு மணிகொல்லைக் கடிய முலைநல்லார்

பவரும் வடுகூரில் ஆடும் மடிகளே.

 

1.87.4

 

941

 

துணியா ருடையாடை துன்னி யரைதன்மேல்

தணியா அழல்நாகந் தரியா வகைவைத்தார்

பணியா ரடியார்கள் பலரும் பயின்றேத்த

அணியார் வடுகூரில் ஆடும் மடிகளே.

 

1.87.5

 

942

 

தளருங் கொடியன்னாள் தன்னோ டுடனாகிக்

கிளரும் அரவார்த்துக் கிளரும் முடிமேலோர்

வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட

ஒளிரும் வடுகூரில் ஆடும் மடிகளே.

 

1.87.6

 

943

 

நெடியர் சிறிதாய நிரம்பா மதிசூடும்

முடியர் விடையூர்வர் கொடியர் மொழிகொள்ளார்

கடிய தொழிற்காலன் மடிய வுதைகொண்ட

அடியர் வடுகூரில் ஆடும் மடிகளே.

 

1.87.7

 

944

 

பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார்

மறையும் பலபாடி மயானத் துறைவாரும்

பறையும் அதிர்குழலும் போலப் பலவண்டாங்

கறையும் வடுகூரில் ஆடும் மடிகளே.

 

1.87.8

 

945

 

சந்தம் மலர்வேய்ந்த சடையின் இடைவிம்மு

கந்தம் மிகுதிங்கள் சிந்து கதிர்மாலை

வந்து நயந்தெம்மை நன்றும் அருள்செய்வார்

அந்தண் வடுகூரில் ஆடும் மடிகளே.

 

1.87.9

 

946

 

திருமா லடிவீழத் திசைநான் முகனாய

பெருமா னுணர்கில்லாப் பெருமான் நெடுமுடிசேர்

செருமால் விடையூருஞ் செம்மான் திசைவில்லா

அருமா வடுகூரில் ஆடும் மடிகளே.

 

1.87.10

 

947

 

படிநோன் பவையாவர் பழியில் புகழான

கடிநாண் நிகழ்சோலை கமழும் வடுகூரைப்

படியா னசிந்தை மொழியார் சம்பந்தன்

அடிஞா னம்வல்லா ரடிசேர் வார்களே.

 

1.87.11

 

 

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வடுகேசுவரர், தேவியார் - வடுவகிர்க்கண்ணியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.88 திரு ஆப்பனூர்

 

பண் - குறிஞ்சி

 

948

 

முற்றுஞ் சடைமுடிமேன் முதிரா இளம்பிறையன்

ஒற்றைப் படவரவம் அதுகொண் டரைக்கணிந்தான்

செற்றமில் சீரானைத் திருஆப்ப னூரானைப்

பற்று மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

 

1.88.1

 

949

 

குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர்

விரவுந் திருமேனி விளங்கும் வளையெயிற்றின்

அரவம் அணிந்தானை அணியாப்ப னூரானைப்

பரவும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

 

1.88.2

 

950

 

முருகு விரிகுழலார் மனங்கொள் அநங்கனைமுன்

பெரிது முனிந்துகந்தான் பெருமான் பெருங்காட்டின்

அரவம் அணிந்தானை அணியாப்ப னூரானைப்

பரவும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

 

1.88.3

 

951

 

பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில்

துணியின் உடைதாழச் சுடரேந்தி யாடுவான்

அணியும் புனலானை அணியாப்ப னூரானைப்

பணியும் மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

 

1.88.4

 

952

 

தகர மணியருவித் தடமால்வரை சிலையா

நகர மொருமூன்றும் நலங்குன்ற வென்றுகந்தான்

அகர முதலானை அணியாப்ப னூரானைப்

பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

 

1.88.5

 

953

 

ஓடுந் திரிபுரங்கள் உடனே யுலந்தவியக்

காட திடமாகக் கனல்கொண்டு நின்றிரவில்

ஆடுந் தொழிலானை அணியாப்ப னூரானைப்

பாடு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

 

1.88.6

 

954

 

இயலும் விடையேறி எரிகொள் மழுவீசிக்

கயலி னிணைக்கண்ணாள் ஒருபால் கலந்தாட

இயலும் இசையானை எழிலாப்ப னூரானைப்

பயிலு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

 

1.88.7

 

955

 

கருக்கு மணிமிடறன் கதநாகக் கச்சையினான்

உருக்கும் அடியவரை ஒளிவெண் பிறைசூடி

அரக்கன் றிறலழித்தான் அணியாப்ப னூரானைப்

பருக்கு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.

 

1.88.8

 

956

 

கண்ணன் கடிக்கமல மலர்மே லினிதுறையும்

அண்ணற் களப்பரிதாய் நின்றங் கடியார்மேல்

எண்ணில் வினைகளைவான் எழிலாப்ப னூரானைப்

பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே.

 

1.88.9

 

957

 

செய்ய கலிங்கத்தார் சிறுதட் டுடையார்கள்

பொய்யர் புறங்கூறப் புரிந்தவடியாரை

ஐயம் அகற்றுவான் அணியாப்ப னூரானைப்

பைய நினைந்தெழுவார் வினைபற் றறுப்பாரே.

 

1.88.10

 

958

 

அந்தண் புனல்வைகை அணியாப்ப னூர்மேய

சந்த மலர்க்கொன்றை சடைமே லுடையானை

நந்தி யடிபரவும் நலஞான சம்பந்தன்

சந்த மிவைவல்லார் தடுமாற் றறுப்பாரே.

 

1.88.11

 

 

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - ஆப்பனூரீசுவரர், தேவியார் - அம்பிகையம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.89 திரு எருக்கத்தம்புலியூர்

 

பண் - குறிஞ்சி

 

959

 

படையார் தருபூதப் பகடார் உரிபோர்வை

உடையான் உமையோடும் உடனா யிடுகங்கைச்

சடையான் எருக்கத்தம் புலியூர்த் தகுகோயில்

விடையான் அடியேத்த மேவா வினைதானே.

 

1.89.1

 

960

 

இலையார் தருசூலப் படையெம் பெருமானாய்

நிலையார் மதில்மூன்றும் நீறாய் விழவெய்த

சிலையான் எருக்கத்தம் புலியூர்த் திகழ்கோயிற்

கலையான் அடியேத்தக் கருதா வினைதானே.

 

1.89.2

 

961

 

விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ

பெண்ணாண் அலியாகும் பித்தா பிறைசூடி

எண்ணார் எருக்கத்தம் புலியூ ருறைகின்ற

அண்ணா எனவல்லார்க் கடையா வினைதானே.

 

1.89.3

 

962

 

அரையார் தருநாகம் அணிவான் அலர்மாலை

விரையார் தருகொன்றை யுடையான் விடையேறி

வரையான் எருக்கத்தம் புலியூர் மகிழ்கின்ற

திரையார் சடையானைச் சேரத் திருவாமே.

 

1.89.4

 

963

 

வீறார் முலையாளைப் பாகம் மிகவைத்துச்

சீறா வருகாலன் சினத்தை யழிவித்தான்

ஏறான் எருக்கத்தம் புலியூ ரிறையானை

வேறா நினைவாரை விரும்பா வினைதானே.

 

1.89.5

 

964

 

நகுவெண் டலையேந்தி நானா விதம்பாடிப்

புகுவா னயம்பெய்யப் புலித்தோல் பியற்கிட்டுத்

தகுவான் எருக்கத்தம் புலியூர்த் தகைந்தங்கே

தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே.

 

1.89.6

 

               

(*) இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

1.89.7

 

965

 

ஆவா வெனஅரக்கன் அலற அடர்த்திட்டுத்

தேவா எனஅருளார் செல்வங் கொடுத்திட்ட

கோவே யெருக்கத்தம் புலியூர் மிகுகோயிற்

தேவே யெனஅல்லல் தீர்தல் திடமாமே.

 

1.89.8

 

966

 

மறையான் நெடுமால்காண் பரியான் மழுவேந்தி

நிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தே

இறையான் எருக்கத்தம் புலியூ ரிடங்கொண்ட

கறையார் மிடற்றானைக் கருதக் கெடும்வினையே.

 

1.89.9

 

967

 

புத்தர் அருகர்தம் பொய்கள் புறம்போக்கிச்

சுத்தி தரித்துறையுஞ் சோதி யுமையோடும்

நித்தன் எருக்கத்தம் புலியூர் நிகழ்வாய

அத்தன் அறவன்றன் அடியே அடைவோமே.

 

1.89.10

 

968

 

ஏரார் எருக்கத்தம் புலியூர் உறைவானைச்

சீரார் திகழ்காழித் திருவார் சம்பந்தன்

ஆரா அருந்தமிழ் மாலை யிவைவல்லார்

பாரா ரவரேத்தப் பதிவான் உறைவாரே.

 

1.89.11

 

 

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - நீலகண்டேசுரர், தேவியார் - நீலமலர்க்கண்ணம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.90 திருப்பிரமபுரம் - திருவிருக்குக்குறள்

 

பண் - குறிஞ்சி

 

969

 

அரனை உள்குவீர், பிரம னூருளெம்

பரனை யேமனம், பரவி உய்ம்மினே.

 

1.90.1

 

970

 

காண உள்குவீர், வேணு நற்புரத்

தாணுவின் கழல், பேணி உய்ம்மினே.

 

1.90.2

 

971

 

நாதன் என்பிர்காள், காதல் ஒண்புகல்

ஆதி பாதமே, ஓதி உய்ம்மினே.

 

1.90.3

 

972

 

அங்கம் மாதுசேர், பங்கம் ஆயவன்

வெங்கு ருமன்னும், எங்க ளீசனே.

 

1.90.4

 

973

 

வாணி லாச்சடைத், தோணி வண்புரத்

தாணி நற்பொனைக், காணு மின்களே.

 

1.90.5

 

974

 

பாந்த ளார்சடைப், பூந்த ராய்மன்னும்

ஏந்து கொங்கையாள், வேந்த னென்பரே.

 

1.90.6

 

975

 

கரிய கண்டனைச், சிரபு ரத்துளெம்

அரசை நாடொறும், பரவி உய்ம்மினே.

 

1.90.6

 

976

 

நறவ மார்பொழிற், புறவம் நற்பதி

இறைவன் நாமமே, மறவல் நெஞ்சமே.

 

1.90.8

 

977

 

தென்றில் அரக்கனைக், குன்றிற் சண்பைமன்

அன்று நெரித்தவா, நின்று நினைமினே.

 

1.90.9

 

978

 

அயனும் மாலுமாய், முயலுங் காழியான்

பெயல்வை எய்திநின், றியலும் உள்ளமே.

 

1.90.10

 

979

 

தேரர் அமணரைச், சேர்வில் கொச்சைமன்

நேரில் கழல்நினைந், தோரும் உள்ளமே.

 

1.90.11

 

980

 

தொழும னத்தவர், கழும லத்துறை

பழுதில் சம்பந்தன், மொழிகள் பத்துமே.

 

1.90.12

 

 

பிரம்மபுரமென்பது சீகாழி.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.91 திருஆரூர் - திருவிருக்குக்குறள்

 

பண் - குறிஞ்சி

 

981

 

சித்தம் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்

பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே.

 

1.91.1

 

982

 

பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை

மறவா தேத்துமின், துறவி யாகுமே.

 

1.91.2

 

983

 

துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர்

நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே.

 

1.91.3

 

984

 

உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக்

கையி னாற்றொழ, நையும் வினைதானே.

 

1.91.4

 

985

 

பிண்டம் அறுப்பீர்காள், அண்டன் ஆரூரைக்

கண்டு மலர்தூவ, விண்டு வினைபோமே.

 

1.915

 

986

 

பாசம் அறுப்பீர்காள், ஈசன் அணியாரூர்

வாச மலர்தூவ, நேச மாகுமே.

 

1.91.6

 

987

 

வெய்ய வினைதீர, ஐயன் அணியாரூர்

செய்ய மலர்தூவ, வைய முமதாமே.

 

1.91.7

 

988

 

அரக்கன் ஆண்மையை, நெருக்கி னானாரூர்

கரத்தி னாற்றொழத், திருத்த மாகுமே.

 

1.91.8

 

989

 

துள்ளும் இருவர்க்கும், வள்ளல் ஆரூரை

உள்ளு மவர்தம்மேல், விள்ளும் வினைதானே.

 

1.91.9

 

990

 

கடுக்கொள் சீவரை, அடக்கி னானாரூர்

எடுத்து வாழ்த்துவார், விடுப்பர் வேட்கையே.

 

1.91.10

 

991

 

சீரூர் சம்பந்தன், ஆரூரைச் சொன்ன

பாரூர் பாடலார், பேரா ரின்பமே.

 

1.91.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வன்மீகநாதர், தேவியார் - அல்லியங்கோதையம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.92 திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள்

 

பண் - குறிஞ்சி

 

992

 

வாசி தீரவே, காசு நல்குவீர்

மாசின் மிழலையீர், ஏச லில்லையே.

 

1.92.1

 

993

 

இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்

கறைகொள் காசினை, முறைமை நல்குமே.

 

1.92.2

 

994

 

செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்

பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.

 

1.92.3

 

995

 

நீறு பூசினீர், ஏற தேறினீர்

கூறு மிழலையீர், பேறும் அருளுமே.

 

1.92.4

 

996

 

காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்

நாம மிழலையீர், சேமம் நல்குமே.

 

1.92.5

 

997

 

பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்

அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.

 

1.92.6

 

998

 

மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்

கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.

 

1.92.7

 

999

 

அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்

பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.

 

1.92.8

 

1000

 

அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்

இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.

 

1.92.9

 

1001

 

பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்

வெறிகொள் மிழலையீர், பிரிவ தரியதே.

 

1.92.10

 

1002

 

காழி மாநகர், வாழி சம்பந்தன்

வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.

 

1.92.11

 

 

இது படிக்காசு சுவாமியருளியபோது வட்டந்தீர ஓதியது.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.93 திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள்

 

பண் - குறிஞ்சி

 

1003

 

நின்று மலர்தூவி, இன்று முதுகுன்றை

நன்றும் ஏத்துவீர்க், கென்றும் இன்பமே.

 

1.93.1

 

1004

 

அத்தன் முதுகுன்றைப், பத்தி யாகிநீர்

நித்தம் ஏத்துவீர்க், குய்த்தல் செல்வமே.

 

1.93.2

 

1005

 

ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று

கைகள் கூப்புவீர், வைய முமதாமே.

 

1.93.3

 

1006

 

ஈசன் முதுகுன்றை, நேச மாகிநீர்

வாச மலர்தூவப், பாச வினைபோமே.

 

1.93.4

 

1007

 

மணியார் முதுகுன்றைப், பணிவா ரவர்கண்டீர்

பிணியா யினகெட்டுத், தணிவா ருலகிலே.

 

1.93.5

 

1008

 

மொய்யார் முதுகுன்றில், ஐயா வெனவல்லார்

பொய்யா ரிரவோர்க்குச், செய்யாள் அணியாளே.

 

1.93.6

 

1009

 

விடையான் முதுகுன்றை, இடையா தேத்துவார்

படையா யினசூழ, உடையா ருலகமே.

 

1.93.7

 

1010

 

பத்துத் தலையோனைக், கத்த விரலூன்றும்

அத்தன் முதுகுன்றை, மொய்த்துப் பணிமினே.

 

1.93.8

 

1011

 

இருவ ரறியாத, ஒருவன் முதுகுன்றை

உருகி நினைவார்கள், பெருகி நிகழ்வோரே.

 

1.93.9

 

1012

 

தேரர் அமணருஞ், சேரும் வகைஇல்லான்

நேரில் முதுகுன்றை, நீர்நின் றுள்குமே.

 

1.93.10

 

1013

 

நின்று முதுகுன்றை, நன்று சம்பந்தன்

ஒன்றும் உரைவல்லார், என்றும் உயர்வோரே.

 

1.93.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.94 திருஆலவாய் - திருவிருக்குக்குறள்

 

பண் - குறிஞ்சி

 

1014

 

நீல மாமிடற், றால வாயிலான்

பால தாயினார், ஞாலம் ஆள்வரே.

 

1.94.1

 

1015

 

ஞால மேழுமாம், ஆல வாயிலார்

சீல மேசொலீர், காலன் வீடவே.

 

1.94.2

 

1015

 

ஆல நீழலார், ஆல வாயிலார்

கால காலனார், பால தாமினே.

 

1.94.3

 

1017

 

அந்த மில்புகழ், எந்தை யாலவாய்

பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே.

 

1.94.4

 

1018

 

ஆட லேற்றினான், கூட லாலவாய்

பாடி யேமனம், நாடி வாழ்மினே.

 

1.94.5

 

1019

 

அண்ணல் ஆலவாய், நண்ணி னான்றனை

எண்ணி யேதொழத், திண்ணம் இன்பமே.

 

1.94.6

 

1020

 

அம்பொன் ஆலவாய், நம்ப னார்கழல்

நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே.

 

1.94.7

 

1021

 

அரக்க னார்வலி, நெருக்க னாலவாய்

உரைக்கு முள்ளத்தார்க், கிரக்கம் உண்மையே.

 

1.94.8

 

1022

 

அருவன் ஆலவாய், மருவி னான்றனை

இருவ ரேத்தநின், றுருவ மோங்குமே.

 

1.94.9

 

1023

 

ஆரம் நாகமாம், சீரன் ஆலவாய்த்

தேர மண்செற்ற, வீர னென்பரே.

 

1.94.10

 

1024

 

அடிகள் ஆலவாய்ப், படிகொள் சம்பந்தன்

முடிவி லின்றமிழ்ச், செடிகள் நீக்குமே.

 

1.94.11

 

 

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை.

சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி, தேவியார் - மீனாட்சியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.95 திருவிடைமருதூர் - திருவிருக்குக்குறள்

 

பண் - குறிஞ்சி

 

1025

 

தோடொர் காதினன், பாடு மறையினன்

காடு பேணிநின், றாடு மருதனே.

 

1.95.1

 

1026

 

கருதார் புரமெய்வர், எருதே இனிதூர்வர்

மருதே யிடமாகும், விருதாம் வினைதீர்ப்பே.

 

1.95.2

 

1027

 

எண்ணும் அடியார்கள், அண்ணல் மருதரை

பண்ணின் மொழிசொல்ல, விண்ணுந் தமதாமே.

 

1.95.3

 

1028

 

விரியார் சடைமேனி, எரியார் மருதரைத்

தரியா தேத்துவார், பெரியா ருலகிலே.

 

1.95.4

 

1029

 

பந்த விடையேறும், எந்தை மருதரைச்

சிந்தை செய்பவர், புந்தி நல்லரே.

 

1.95.5

 

1030

 

கழலுஞ் சிலம்பார்க்கும், எழிலார் மருதரைத்

தொழலே பேணுவார்க், குழலும் வினைபோமே.

 

1.95.6

 

1031

 

பிறையார் சடையண்ணல், மறையார் மருதரை

நிறையால் நினைபவர், குறையா ரின்பமே.

 

1.95.7

 

1032

 

எடுத்தான் புயந்தன்னை, அடுத்தார் மருதரைத்

தொடுத்தார் மலர்சூட்ட, விடுத்தார் வேட்கையே.

 

1.95.8

 

1033

 

இருவர்க் கெரியாய, உருவ மருதரைப்

பரவி யேத்துவார், மருவி வாழ்வரே.

 

1.95.9

 

1034

 

நின்றுண் சமண்தேரர், என்று மருதரை

அன்றி யுரைசொல்ல, நன்று மொழியாரே.

 

1.95.10

 

1035

 

கருது சம்பந்தன், மருத ரடிபாடிப்

பெரிதுந் தமிழ்சொல்லப், பொருத வினைபோமே.

 

1.95.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.96 திரு அன்னியூர் - திருவிருக்குக்குறள்

 

பண் - குறிஞ்சி

 

1036

 

மன்னி யூரிறை, சென்னி யார்பிறை

அன்னி யூரமர், மன்னு சோதியே.

 

1.96.1

 

1037

 

பழகுந் தொண்டர்வம், அழகன் அன்னியூர்க்

குழகன் சேவடி, தொழுது வாழ்மினே.

 

1.96.2

 

1038

 

நீதி பேணுவீர், ஆதி அன்னியூர்ச்

சோதி நாமமே, ஓதி உய்ம்மினே.

 

1.96.3

 

1039

 

பத்த ராயினீர், அத்தர் அன்னியூர்ச்

சித்தர் தாள்தொழ, முத்த ராவரே.

 

1.96.4

 

1040

 

நிறைவு வேண்டுவீர், அறவன் அன்னியூர்

மறையு ளான்கழற், குறவு செய்ம்மினே.

 

1.96.5

 

1041

 

இன்பம் வேண்டுவீர், அன்பன் அன்னியூர்

நன்பொ னென்னுமின், உம்ப ராகவே.

 

1.96.6

 

1042

 

அந்த ணாளர்தம், தந்தை அன்னியூர்

எந்தை யேயெனப், பந்தம் நீங்குமே.

 

1.96.7

 

1043

 

தூர்த்த னைச்செற்ற, தீர்த்தன் அன்னியூர்

ஆத்த மாவடைந், தேத்தி வாழ்மினே.

 

1.96.8

 

1044

 

இருவர் நாடிய, அரவன் அன்னியூர்

பரவுவார் விண்ணுக், கொருவ ராவரே.

 

1.96.9

 

1045

 

குண்டர் தேரருக், கண்டன் அன்னியூர்த்

தொண்டு ளார்வினை, விண்டு போகுமே.

 

1.96.10

 

1046

 

பூந்த ராய்ப்பந்தன், ஆய்ந்த பாடலால்

வேந்தன் அன்னியூர், சேர்ந்து வாழ்மினே.

 

1.96.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பெரியநாயகியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.97 திருப்புறவம்

 

பண் - குறிஞ்சி

 

1047

 

எய்யாவென்றித் தானவரூர்மூன் றெரிசெய்த

மையார்கண்டன் மாதுமைவைகுந் திருமேனிச்

செய்யான்வெண்ணீ றணிவான்றிகழ்பொற் பதிபோலும்

பொய்யாநாவின் அந்தணர்வாழும் புறவம்மே.

 

1.97.1

 

1048

 

மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற

நாதனென்றேத்தும் நம்பரன்வைகுந் நகர்போலும்

மாதவிமேய வண்டிசைபாட மயிலாடப்

போதலர்செம்பொன் புன்னைகொடுக்கும் புறவம்மே.

 

1.97.2

 

1049

 

வற்றாநதியும் மதியும்பொதியும் சடைமேலே

புற்றாடரவின் படமாடவுமிப் புவனிக்கோர்

பற்றாயிடுமின் பலியென்றடைவார் பதிபோலும்

பொற்றாமரையின் பொய்கைநிலாவும் புறவம்மே.

 

1.97.3

 

1050

 

துன்னார்புரமும் பிரமன்சிரமுந் துணிசெய்து

மின்னார்சடைமேல் அரவும்மதியும் விளையாடப்

பன்னாளிடுமின் பலியென்றடைவார் பதிபோலும்

பொன்னார்புரிநூல் அந்தணர்வாழும் புறவம்மே.

 

1.97.4

 

1051

 

தேவாஅரனே சரணென்றிமையோர் திசைதோறுங்

காவாயென்று வந்தடையக்கார் விடமுண்டு

பாவார்மறையும் பயில்வோருறையும் பதிபோலும்

பூவார்கோலச் சோலைசுலாவும் புறவம்மே.

 

1.97.5

 

1052

 

கற்றறிவெய்திக் காமன்முன்னாகும் முகவெல்லாம்

அற்றரனேநின் னடிசரணென்னும் அடியோர்க்குப்

பற்றதுவாய பாசுபதன்சேர் பதியென்பர்

பொற்றிகழ்மாடத் தொளிகள்நிலாவும் புறவம்மே.

 

1.97.6

 

1053

 

எண்டிசையோரஞ் சிடுவகைகார்சேர் வரையென்னக்

கொண்டெழுகோல முகில்போற் பெரியகரிதன்னைப்

பண்டுரிசெய்தோன் பாவனைசெய்யும் பதியென்பர்

புண்டரிகத்தோன் போன்மறையோர்சேர் புறவம்மே.

 

1.97.7

 

1054

 

பரக்குந்தொல்சீர்த் தேவர்கள்சேனைப் பௌவத்தைத்

துரக்குஞ்செந்தீப் போலமர்செய்யுந் தொழில்மேவும்

அரக்கன்திண்டோ ள் அழிவித்தானக் காலத்திற்

புரக்கும்வேந்தன் சேர்தருமூதூர் புறவம்மே.

 

1.97.8

 

1055

 

மீத்திகழண்டந் தந்தயனோடு மிகுமாலும்

மூர்த்தியைநாடிக் காணவொணாது முயல்விட்டாங்

கேத்தவெளிப்பா டெய்தியவன்றன் னிடமென்பர்

பூத்திகழ்சோலைத் தென்றலுலாவும் புறவம்மே.

 

1.97.9

 

1056

 

வையகம்நீர்தீ வாயுவும்விண்ணும் முதலானான்

மெய்யலதேரர் உண்டிலையென்றே நின்றேதம்

கையினிலுண்போர் காணவொணாதான் நகரென்பர்

பொய்யகமில்லாப் பூசுரர்வாழும் புறவம்மே.

 

1.97.10

 

1057

 

பொன்னியல்மாடப் புரிசைநிலாவும் புறவத்து

மன்னியஈசன் சேவடிநாளும் பணிகின்ற

தன்னியல்பில்லாச் சண்பையர்கோன்சீர்ச் சம்பந்தன்

இன்னிசைஈரைந் தேத்தவல்லோர்கட் கிடர்போமே.

 

1.97.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.98 திருச்சிராப்பள்ளி

 

பண் - குறிஞ்சி

 

1058

 

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே

றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்

சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்

குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே.

 

1.98.1

 

1059

 

கைம்மகவேந்திக் கடுவனொடூடிக் கழைபாய்வான்

செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி

வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ

பைம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே.

 

1.98.2

 

1060

 

மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்

செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச்

சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்

எந்தம்மடிகள் அடியார்க்கல்லல் இல்லையே.

 

1.98.3

 

1061

 

துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச்

சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக்

கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம்

பிறைமல்குசென்னி யுடையவனெங்கள் பெருமானே.

 

1.98.4

 

1062

 

கொலைவரையாத கொள்கையர்தங்கண் மதின்மூன்றுஞ்

சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித்

தலைவரைநாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள்

நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே.

 

1.98.5

 

1063

 

வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது

செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்

தையலொர்பாகம் மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்

ஐயமுங்கொள்வர் ஆரிவர்செய்கை அறிவாரே.

 

1.98.6

 

1064

 

வேயுயர்சாரல் கருவிரலூகம் விளையாடும்

சேயுயர்கோயில் சிராப்பள்ளிமேய செல்வனார்

பேயுயர்கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்

தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே.

 

1.98.7

 

1065

 

மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன்

தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார்

சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால்

சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே.

 

1.98.8

 

1066

 

அரப்பள்ளியானும் மலருறைவானும் அறியாமைக்

கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த

சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும்

இரப்புள்ளீரும்மை ஏதிலர்கண்டால் இகழாரே.

 

1.98.9

 

1067

 

நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை

ஊணாப்பகலுண் டோ துவோர்கள் உரைக்குஞ்சொல்

பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்

சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே.

 

1.98.10

 

1068

 

தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த

கானல்சங்கேறுங் கழுமலவூரில் கவுணியன்

ஞானசம்பந்தன் நலம்மிகுபாடல் இவைவல்லார்

வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே.

 

1.98.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - தாயுமானேசுவரர், தேவியார் - மட்டுவார்குழலம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.99 திருக்குற்றாலம்

 

பண் - குறிஞ்சி

 

1069

 

வம்பார்குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக்

கொம்பார்சோலைக் கோலவண்டியாழ்செய் குற்றாலம்

அம்பால்நெய்யோ டாடலமர்ந்தான் அலர்கொன்றை

நம்பான்மேய நன்னகர்போலு நமரங்காள்.

 

1.99.1

 

1070

 

பொடிகள்பூசித் தொண்டர்பின்செல்லப் புகழ்விம்மக்

கொடிகளோடு நாள்விழமல்கு குற்றாலங்

கடிகொள்கொன்றை கூவிளமாலை காதல்செய்

அடிகள்மேய நன்னகர்போலு மடியீர்காள்.

 

1.99.2

 

1071

 

செல்வம்மல்கு செண்பகம்வேங்கை சென்றேறிக்

கொல்லைமுல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம்

வில்லின்ஒல்க மும்மதிலெய்து வினைபோக

நல்குநம்பான் நன்னகர்போலு நமரங்காள்.

 

1.99.3

 

1072

 

பக்கம்வாழைப் பாய்கனியோடு பலவின்றேன்

கொக்கின்கோட்டுப் பைங்கனிதூங்குங் குற்றாலம்

அக்கும்பாம்பும் ஆமையும்பூண்டோ ர் அனலேந்தும்

நக்கன்மேய நன்னகர்போலு நமரங்காள்.

 

1.99.4

 

1073

 

மலையார்சாரல் மகவுடன்வந்த மடமந்தி

குலையார்வாழைத் தீங்கனிமாந்துங் குற்றாலம்

இலையார்சூல மேந்தியகையான் எயிலெய்த

சிலையான்மேய நன்னகர்போலுஞ் சிறுதொண்டீர்.

 

1.99.5

 

1074

 

மைம்மாநீலக் கண்ணியர்சாரல் மணிவாரிக்

கொய்ம்மாஏனல் உண்கிளியோப்புங் குற்றாலங்

கைம்மாவேழத் தீருரிபோர்த்த கடவுள்ளெம்

பெம்மான்மேய நன்னகர்போலும் பெரியீர்காள்.

 

1.99.6

 

1075

 

நீலநெய்தல் தண்சுனைசூழ்ந்த நீள்சோலைக்

கோலமஞ்ஞை பேடையொடாடுங் குற்றாலங்

காலன்றன்னைக் காலாற்காய்ந்த கடவுள்ளெஞ்

சூலபாணி நன்னகர்போலுந் தொழுவீர்காள்.

 

1.99.7

 

1076

 

போதும்பொன்னும் உந்தியருவி புடைசூழக்

கூதன்மாரி நுண்துளிதூங்குங் குற்றாலம்

மூதூரிலங்கை முட்டியகோனை முறைசெய்த

நாதன்மேய நன்னகர்போலு நமரங்காள்.

 

1.99.8

 

1077

 

அரவின்வாயின் முள்ளெயிறேய்ப்ப அரும்பீன்று

குரவம்பாவை முருகமர்சோலைக் குற்றாலம்

பிரமன்னோடு மாலறியாத பெருமையெம்

பரமன்மேய நன்னகர்போலும் பணிவீர்காள்.

 

1.99.9

 

1078

 

பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு பெடைபுல்கிக்

குருந்தம்மேறிச் செவ்வழிபாடுங் குற்றாலம்

இருந்துண்தேரும் நின்றுண்சமணும் எடுத்தார்ப்ப

அருந்தண்மேய நன்னகர்போலும் அடியீர்காள்.

 

1.99.10

 

1079

 

மாடவீதி வருபுனற்காழி யார்மன்னன்

கோடலீன்று கொழுமுனைகூம்புங் குற்றாலம்

நாடவல்ல நற்றமிழ்ஞான சம்பந்தன்

பாடல்பத்தும் பாடநம்பாவம் பறையுமே.

 

1.99.11

 

 

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - குறும்பலாவீசுவரர், தேவியார் - குழல்வாய்மொழியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.100 திருப்பரங்குன்றம்

 

பண் - குறிஞ்சி

 

1080

 

நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றைச்

சூடலனந்திச் சுடரெரியேந்திச் சுடுகானில்

ஆடலனஞ்சொல் அணியிழையாளை யொருபாகம்

பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.

 

1.100.1

 

1081

 

அங்கமொராறும் அருமறைநான்கு மருள்செய்து

பொங்குவெண்ணூலும் பொடியணிமார்பிற் பொலிவித்துத்

திங்களும்பாம்புந் திகழ்சடைவைத்தோர் தேன்மொழி

பங்கினன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே.

 

1.100.2

 

1082

 

நீரிடங்கொண்ட நிமிர்சடைதன்மேல் நிரைகொன்றைச்

சீரிடங்கொண்ட எம்மிறைபோலுஞ் சேய்தாய

ஓருடம்புள்ளே உமையொருபாகம் உடனாகிப்

பாரிடம்பாட இனிதுறைகோயில் பரங்குன்றே.

 

1.100.3

 

1083

 

வளர்பூங்கோங்கம் மாதவியோடு மல்லிகைக்

குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றந்

தளிர்போல்மேனித் தையல்நல்லாளோ டொருபாகம்

நளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே.

 

1.100.4

 

1084

 

பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத்

துன்னியசோதி யாகியஈசன் தொன்மறை

பன்னியபாடல் ஆடலன்மேய பரங்குன்றை

உன்னியசிந்தை உடையவர்க்கில்லை உறுநோயே.

 

1.100.5

 

1085

 

கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங் கனல்மூழ்கத்

தொடைநவில்கின்ற வில்லினனந்திச் சுடுகானில்

புடைநவில்பூதம் பாடநின்றாடும் பொருசூலப்

படைநவில்வான்றன் நன்னகர்போலும் பரங்குன்றே.

 

1.100.6

 

1086

 

அயிலுடைவேலோர் அனல்புல்குகையின் அம்பொன்றால்

எயில்படவெய்த எம்மிறைமேய இடம்போலும்

மயில்பெடைபுல்கி மாநடமாடும் வளர்சோலைப்

பயில்பெடைவண்டு பாடலறாத பரங்குன்றே.

 

1.100.7

 

1087

 

மைத்தகுமேனி வாளரக்கன்றன் மகுடங்கள்

பத்தினதிண்டோ ளிருபதுஞ்செற்றான் பரங்குன்றைச்

சித்தமதொன்றிச் செய்கழலுன்னிச் சிவனென்று

நித்தலுமேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே.

 

1.100.8

 

1088

 

முந்தியிவ்வையந் தாவியமாலும் மொய்யொளி

உந்தியில்வந்திங் கருமறையீந்த உரவோனும்

சிந்தையினாலுந் தெரிவரிதாகித் திகழ்சோதி

பந்தியலங்கை மங்கையொர்பங்கன் பரங்குன்றே.

 

1.100.9

 

1089

 

குண்டாய்முற்றுந் திரிவார்கூறை மெய்போர்த்து

மிண்டாய்மிண்டர் பேசியபேச்சு மெய்யல்ல

பண்டால்நீழல் மேவியஈசன் பரங்குன்றைத்

தொண்டாலேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே.

 

1.100.10

 

1090

 

தடமலிபொய்கைச் சண்பைமன்ஞான சம்பந்தன்

படமலிநாகம் அரைக்கசைத்தான்றன் பரங்குன்றைத்

தொடைமலிபாடல் பத்தும்வல்லார்தந் துயர்போகி

விடமலிகண்டன் அருள்பெறுந்தன்மை மிக்கோரே.

 

1.100.11

 

 

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பரங்கிரிநாதர், தேவியார் - ஆவுடைநாயகியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.101 திருக்கண்ணார்கோயில்

 

பண் - குறிஞ்சி

 

1091

 

தண்ணார்திங்கட் பொங்கரவந்தாழ் புனல்சூடிப்

பெண்ணாணாய பேரருளாளன் பிரியாத

கண்ணார்கோயில் கைதொழுவோர்கட் கிடர்பாவம்

நண்ணாவாகும் நல்வினையாய நணுகும்மே.

 

1.101.1

 

1092

 

கந்தமர்சந்துங் காரகிலுந்தண் கதிர்முத்தும்

வந்தமர்தெண்ணீர் மண்ணிவளஞ்சேர் வயல்மண்டிக்

கொந்தலர்சோலைக் கோகிலமாடக் குளிர்வண்டு

செந்திசைபாடுஞ் சீர்திகழ்கண்ணார் கோயிலே.

 

1.101.2

 

1093

 

பல்லியல்பாணிப் பாரிடமேத்தப் படுகானின்

எல்லிநடஞ்செய் யீசனெம்மான்றன் இடமென்பர்

கொல்லையின்முல்லை மல்லிகைமௌவற் கொடிபின்னிக்

கல்லியல்இஞ்சி மஞ்சமர்கண்ணார் கோயிலே.

 

1.101.3

 

1094

 

தருவளர்கானந் தங்கியதுங்கப் பெருவேழம்

மருவளர்கோதை அஞ்சவுரித்து மறைநால்வர்க்

குருவற்ஆல நீழலமர்ந்தீங் குரைசெய்தார்

கருவளர்கண்ணார் கோயிலடைந்தோர் கற்றோரே.

 

1.101.4

 

1095

 

மறுமாணுருவாய் மற்றிணையின்றி வானோரைச்

செறுமாவலிபால் சென்றுலகெல்லாம் அளவிட்ட

குறுமாணுருவன் தற்குறியாகக் கொண்டாடும்

கறுமாகண்டன் மேயதுகண்ணார் கோயிலே.

 

1.101.5

 

1096

 

விண்ணவருக்காய் வேலையுள்நஞ்சம் விருப்பாக

உண்ணவனைத்தே வர்க்கமுதீந்தெவ் வுலகிற்கும்

கண்ணவனைக்கண் ணார்திகழ்கோயிற் கனிதன்னை

நண்ணவல்லோர்கட் கில்லைநமன்பால் நடலையே.

 

1.101.6

 

1097

 

முன்னொருகாலத் திந்திரனுற்ற முனிசாபம்

பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித்

தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர்

கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே.

 

1.101.7

 

1098

 

பெருக்கெண்ணாத பேதையரக்கன் வரைக்கீழால்

நெருக்குண்ணாத்தன் நீள்கழல்நெஞ்சில் நினைந்தேத்த

முருக்குண்ணாதோர் மொய்கதிர்வாள்தேர் முன்னீந்த

திருக்கண்ணாரென் பார்சிவலோகஞ் சேர்வாரே.

 

1.101.8

 

1099

 

செங்கமலப்போ திற்திகழ்செல்வன் திருமாலும்

அங்கமலக்கண் நோக்கரும்வண்ணத் தழலானான்

தங்கமலக்கண் ணார்திகழ்கோயில் தமதுள்ளத்

தங்கமலத்தோ டேத்திடஅண்டத் தமர்வாரே.

 

1.101.9

 

1100

 

தாறிடுபெண்ணைத் தட்டுடையாருந் தாமுண்ணுஞ்

சோறுடையார்சொல் தேறன்மின்வெண்ணூல் சேர்மார்பன்

ஏறுடையன்பரன் என்பணிவான்நீள் சடைமேலோர்

ஆறுடையண்ணல் சேர்வதுகண்ணார் கோயிலே.

 

1.101.10

 

1101

 

காமருகண்ணார் கோயிலுளானைக் கடல்சூழ்ந்த

பூமருசோலைப் பொன்னியல்மாடப் புகலிக்கோன்

நாமருதொன்மைத் தன்மையுள்ஞான சம்பந்தன்

பாமருபாடல் பத்தும்வல்லார்மேல் பழிபோமே.

 

1.101.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - கண்ணாயிரேசுவரர், தேவியார் - முருகுவளர்கோதையம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.102 சீகாழி

 

பண் - குறிஞ்சி

 

1102

 

உரவார்கலையின் கவிதைப்புலவர்க் கொருநாளுங்

கரவாவண்கைக் கற்றவர்சேருங் கலிக்காழி

அரவார்அரையா அவுணர்புரமூன் றெரிசெய்த

சரவாவென்பார் தத்துவஞானத் தலையாரே.

 

1.102.1

 

1103

 

மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய் முரண்வேழக்

கைபோல்வாழை காய்குலையீனுங் கலிக்காழி

மைசேர்கண்டத் தெண்டோ ள்முக்கண் மறையோனே

ஐயாவென்பார்க் கல்லல்களான அடையாவே.

 

1.102.2

 

1104

 

இளகக்கமலத் தீன்களியங்குங் கழிசூழக்

களகப்புரிசைக் கவினார்சாருங் கலிக்காழி

அளகத்திருநன் நுதலிபங்கா அரனேயென்

றுளகப்பாடும் அடியார்க்குறுநோய் அடையாவே.

 

1.102.3

 

1105

 

எண்ணார்முத்தம் ஈன்றுமரகதம் போற்காய்த்துக்

கண்ணார்கமுகு பவளம்பழுக்குங் கலிக்காழிப்

பெண்ணோர்பாகா பித்தாபிரானே யென்பார்க்கு

நண்ணாவினைகள் நாடொறுமின்பம் நணுகும்மே.

 

1.102.4

 

1106

 

மழையார்சாரல் செம்புனல்வந்தங் கடிவருடக்

கழையார்கரும்பு கண்வளர்சோலைக் கலிக்காழி

உழையார்கரவா உமையாள்கணவா ஒளிர்சங்கக்

குழையாவென்று கூறவல்லார்கள் குணவோரே.

 

1.102.5

 

1107

 

குறியார்திரைகள் வரைகள்நின்றுங் கோட்டாறு

கறியார்கழிசம் பிரசங்கொடுக்குங் கலிக்காழி

வெறியார்கொன்றைச் சடையாவிடையா என்பாரை

அறியாவினைகள் அருநோய்பாவம் அடையாவே.

 

1.102.6

 

               

* இப்பதிகத்தின் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

1.102.7

 

1108

 

உலங்கொள்சங்கத் தார்கலியோதத் துதையுண்டு

கலங்கள்வந்து கார்வயலேறுங் கலிக்காழி

இலங்கைமன்னன் தன்னையிடர்கண் டருள்செய்த

சலங்கொள்சென்னி மன்னாஎன்னத் தவமாமே.

 

1.102.8

 

1109

 

ஆவிக்கமலத் தன்னமியங்குங் கழிசூழக்

காவிக்கண்ணார் மங்கலம்ஓவாக் கலிக்காழிப்

பூவிற்றோன்றும் புத்தேளொடுமா லவன்றானும்

மேவிப்பரவும் அரசேயென்ன வினைபோமே.

 

1.102.9

 

1110

 

மலையார்மாடம் நீடுயர்இஞ்சி மஞ்சாருங்

கலையார்மதியஞ் சேர்தரும்அந்தண் கலிக்காழித்

தலைவாசமணர் சாக்கியர்க்கென்றும் அறிவொண்ணா

நிலையாயென்ன தொல்வினையாய நில்லாவே.

 

1.102.10

 

1111

 

வடிகொள்வாவிச் செங்கழுநீரிற் கொங்காடிக்

கடிகொள்தென்றல் முன்றிலில்வைகுங் கலிக்காழி

அடிகள்தம்மை அந்தமில்ஞான சம்பந்தன்

படிகொள்பாடல் வல்லவர்தம்மேற் பழிபோமே.

 

1.102.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.103 திருக்கழுக்குன்றம்

 

பண் - குறிஞ்சி

 

1112

 

தோடுடையானொரு காதில்தூய குழைதாழ

ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும்

நாடுடையான் நள்ளிருள்ஏம நடமாடுங்

காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

 

1.103.1

 

1113

 

கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை

பூணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை

பேணவல்லான் பெண்மகள்தன்னை யொருபாகங்

காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

 

1.103.2

 

1114

 

தேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை

தானகத்தார் தண்மதிசூடித் தலைமேலோர்

வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்துங்

கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

 

1.103.3

 

1115

 

துணையல்செய்தான் தூயவண்டியாழ்செய் சுடர்க்கொன்றை

பிணையல்செய்தான் பெண்ணின்நல்லாளை யொருபாகம்

இணையல்செய்யா இலங்கெயின்மூன்றும் எரியுண்ணக்

கணையல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

 

1.103.4

 

1116

 

பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற

மெய்யுடையான் வெண்பிறைசூடி விரிகொன்றை

மையுடைய மாமிடற்றண்ணல் மறிசேர்ந்த

கையுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

 

1.103.5

 

1117

 

வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை

கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ் சிறுத்தொண்டர்

உள்ளமெல்லாம் உள்கிநின்றாங்கே உடனாடுங்

கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

 

1.103.6

 

               

* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

1.103.7

 

1118

 

ஆதல்செய்தான் அரக்கர்தங்கோனை அருவரையின்

நோதல்செய்தான் நொடிவரையின்கண் விரலூன்றிப்

பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ டொருபாகங்

காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

 

1.103.8

 

1119

 

இடந்தபெம்மான் ஏனமதாயும் அனமாயுந்

தொடர்ந்தபெம்மான் தூமதிசூடி வரையார்தம்

மடந்தைபெம்மான் வார்கழலோச்சிக் காலனைக்

கடந்தபெம்மான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

 

1.103.9

 

1120

 

தேயநின்றான் திரிபுரங்கங்கை சடைமேலே

பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த வுலகெல்லாஞ்

சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கியர்

காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

 

1.103.10

 

1121

 

கண்ணுதலான் காதல்செய்கோயில் கழுக்குன்றை

நண்ணியசீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை

பண்ணியல்பாற் பாடியபத்தும் இவைவல்லார்

புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.

 

1.103.11

 

 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வேதகிரீசுவரர், தேவியார் - பெண்ணினல்லாளம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.104 திருப்புகலி

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1122

 

ஆடல் அரவசைத்தான் அருமாமறை தான்விரித்தான் கொன்றை

சூடிய செஞ்சடையான் சுடுகாடமர்ந்த பிரான்

ஏடவிழ் மாமலையாள் ஒருபாகம் அமர்ந்தடியார் ஏத்த

ஆடிய எம்மிறையூர் புகலிப் பதியாமே.

 

1.104.1

 

1123

 

ஏல மலிகுழலார் இசைபாடி எழுந்தருளாற் சென்று

சோலை மலிசுனையிற் குடைந்தாடித் துதிசெய்ய

ஆலை மலிபுகைபோய் அண்டர்வானத்தை மூடிநின்று நல்ல

மாலை யதுசெய்யும் புகலிப் பதியாமே.

 

1.104.2

 

1124

 

ஆறணி செஞ்சடையான் அழகார்புரம் மூன்றுமன்று வேவ

நீறணி யாகவைத்த நிமிர்புன்சடை எம்மிறைவன்

பாறணி வெண்டலையிற் பகலேபலி என்றுவந்து நின்ற

வேறணி கோலத்தினான் விரும்பும் புகலியதே.

 

1.104.3

 

1125

 

வெள்ள மதுசடைமேற் கரந்தான் விரவார்புரங்கள் மூன்றுங்

கொள்ள எரிமடுத்தான் குறைவின்றி யுறைகோயில்

அள்ளல் விளைகழனி அழகார்விரைத் தாமரைமேல் அன்னப்

புள்ளினம் வைகியெழும் புகலிப் பதிதானே.

 

1.104.4

 

1126

 

சூடும் மதிச்சடைமேல் சுரும்பார்மலர்க் கொன்றைதுன்ற நட்டம்

ஆடும் அமரர்பிரான் அழகார்உமை யோடுமுடன்

வேடு படநடந்த விகிர்தன் குணம்பரவித் தொண்டர்

பாட இனிதுறையும் புகலிப் பதியாமே.

 

1.104.5

 

1127

 

மைந்தணி சோலையின்வாய் மதுப்பாய்வரி வண்டினங்கள் வந்து

நந்திசை பாடநடம் பயில்கின்ற நம்பனிடம்

அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள் பரவியெழ விரும்பும்

புந்திசெய் நால்மறையோர் புகலிப் பதிதானே.

 

1.104.6

 

1128

 

மங்கையோர் கூறுகந்த மழுவாளன் வார்சடைமேல் திங்கள்

கங்கைதனைக் கரந்த கறைக்கண்டன் கருதுமிடஞ்

செங்கயல் வார்கழனி திகழும் புகலிதனைச் சென்றுதம்

அங்கையி னால்தொழுவார் அவலம் அறியாரே.

 

1.104.7

 

1129

 

வல்லிய நுண்ணிடையாள் உமையாள் விருப்பனவன் நண்ணும்

நல்லிட மென்றறியான் நலியும் விறலரக்கன்

பல்லொடு தோள்நெரிய விரலூன்றிப் பாடலுமே கைவாள்

ஒல்லை அருள்புரிந்தான் உறையும் புகலியதே.

 

1.104.8

 

1130

 

தாதலர் தாமரைமேல் அயனுந் திருமாலுந் தேடி

ஓதியுங் காண்பரிய உமைகோன் உறையுமிடம்

மாதவி வான்வகுளம் மலர்ந்தெங்கும் விரைதோய வாய்ந்த

போதலர் சோலைகள்சூழ் புகலிப் பதிதானே.

 

1.104.9

 

1131

 

வெந்துவர் மேனியினார் விரிகோவ ணநீத்தார் சொல்லும்

அந்தர ஞானமெல்லாம் அவையோர் பொருளென்னேல்

வந்தெதி ரும்புரமூன் றெரித்தான் உறைகோயில் வாய்ந்த

புந்தியினார் பயிலும் புகலிப் பதிதானே.

 

1.104.10

 

1132

 

வேதமோர் கீதமுணர் வாணர்தொழு தேத்தமிகு வாசப்

போதனைப் போல்மறையோர் பயிலும் புகலிதன்னுள்

நாதனை ஞானமிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில்

ஓதவல் லாருலகில் உறுநோய் களைவாரே.

 

1.104.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.105 திருஆரூர்

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1133

 

பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள்

சூடலன் மூவிலைய சூலம் வலனேந்திக்

கூடலர் மூவெயிலும் எரியுண்ணக் கூரெரிகொண் டெல்லி

ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே.

 

1.105.1

 

1134

 

சோலையில் வண்டினங்கள் சுரும்போ டிசைமுரலச் சூழ்ந்த

ஆலையின் வெம்புகைபோய் முகில்தோயும் ஆரூரில்

பாலொடு நெய்தயிரும் பயின்றாடும் பரமேட்டி பாதம்

காலையும் மாலையும்போய்ப் பணிதல் கருமமே.

 

1.105.2

 

1135

 

உள்ளமோர் இச்சையினால் உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர் மெய்யே

கள்ளம் ஒழிந்திடுமின் கரவா திருபொழுதும்

வெள்ளமோர் வார்சடைமேற் கரந்திட்ட வெள்ளேற்றான் மேய

அள்ளல் அகன்கழனி ஆரூர் அடைவோமே.

 

1.105.6

 

1136

 

வெந்துறு வெண்மழுவாட் படையான் மணிமிடற்றான் அரையின்

ஐந்தலை யாடரவம் அசைத்தான் அணியாரூர்ப்

பைந்தளிர்க் கொன்றையந்தார்ப் பரமன் அடிபரவப் பாவம்

நைந்தறும் வந்தணையும் நாடொறும் நல்லனவே.

 

1.105.7

 

1137

 

வீடு பிறப்பெளிதாம் அதனை வினவுதிரேல் வெய்ய

காடிட மாகநின்று கனலேந்திக் கைவீசி

ஆடும் அவிர்சடையான் அவன்மேய ஆரூரைச் சென்று

பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே.

 

1.105.8

 

1138

 

கங்கையோர் வார்சடைமேற் கரந்தான் கிளிமழலைக் கேடில்

மங்கையோர் கூறுடையான் மறையான் மழுவேந்தும்

அங்கையி னான்அடியே பரவி யவன்மேய ஆரூர்

தங்கையினாற் றொழுவார் தடுமாற் றறுப்பாரே.

 

1.105.6

 

1138

 

நீறணி மேனியனாய் நிரம்பா மதிசூடி நீண்ட

ஆறணி வார்சடையான் ஆரூர் இனிதமர்ந்தான்

சேறணி மாமலர்மேல் பிரமன் சிரமரிந்த செங்கண்

ஏறணி வெல்கொடியான் அவனெம் பெருமானே.

 

1.105.7

 

               

(*) இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

1.105.8

 

1140

 

வல்லியந் தோலுடையான் வளர்திங்கள் கண்ணியினான் வாய்த்த

நல்லியல் நான்முகத்தோன் தலையின் னறவேற்றான்

அல்லியங் கோதைதன்னை ஆகத் தமர்ந்தருளி ஆரூர்ப்

புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே.

 

1.105.9

 

1141

 

செந்துவர் ஆடையினார் உடைவிட்டு நின்றுழல்வார் சொன்ன

இந்திர ஞாலமொழிந் தின்புற வேண்டுதிரேல்

அந்தர மூவெயிலு மரணம் எரியூட்டி ஆரூர்த்

தந்திர மாவுடையான் அவனெந் தலைமையனே.

 

1.105.10

 

1142

 

நல்ல புனற்புகலித் தமிழ்ஞான சம்பந்தன் நல்ல

அல்லி மலர்க்கழனி ஆரூர் அமர்ந்தானை

வல்லதோ ரிச்சையினால் வழிபாடிவை பத்தும் வாய்க்கச்

சொல்லுதல் கேட்டல்வல்லார் துன்பந் துடைப்பாரே.

 

1.105.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.106 திருஊறல்

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1143

 

மாறில் அவுணரரணம் மவைமாயவோர் வெங்கணையா லன்று

நீறெழ எய்தவெங்கள் நிமலன் இடம்வினவில்

தேறல் இரும்பொழிலும் திகழ்செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த

ஊறல் அமர்ந்தபிரான் ஒலியார்கழல் உள்குதுமே.

 

1.106.1

 

1144

 

மத்த மதக்கரியை மலையான்மகள் அஞ்சவன்று கையால்

மெத்த உரித்தவெங்கள் விமலன் விரும்புமிடம்

தொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர் நீலம்நாளுந் நயனம்

ஒத்தல ருங்கழனித் திருவூறலை உள்குதுமே.

 

1.106.2

 

1145

 

ஏன மருப்பினொடும் எழிலாமையும் பூண்டழகார் நன்றுங்

கானமர் மான்மறிக் கைக்கடவுள் கருதுமிடம்

வான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்தழகார் நம்மை

ஊனம் அறுத்தபிரான் திருவூறலை உள்குதுமே.

 

1.106.3

 

1146

 

நெய்யணி மூவிலைவேல் நிறைவெண்மழு வும்மனலும் அன்று

கையணி கொள்கையினான் கடவுள் ளிடம்வினவின்

மையணி கண்மடவார் பலர்வந் திறைஞ்சமன்னி நம்மை

உய்யும் வகைபுரிந்தான் திருவூறலை உள்குதுமே.

 

1.106.4

 

1147

 

எண்டிசை யோர்மகிழ எழில்மாலையும் போனகமும் பண்டு

சண்டி தொழவளித்தான் அவன்றாழும் இடம்வினவில்

கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கை கள்சூழ்ந்து நஞ்சை

உண்டபி ரானமருந் திருவூறலை உள்குதுமே.

 

1.106.5

 

1148

 

(*) இப்பதிகத்தில் 6,7-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

 

1.106.6

 

1149

 

கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந் தெய்துதலுங் கலங்கி

மறுக்குறும் மாணிக்கருள மகிழ்ந்தானிடம் வினவில்

செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளும் மெய்யுந்நெரிய அன்று

ஒறுத்தருள் செய்தபிரான் திருவூறலை உள்குதுமே.

 

1.106.7

 

1150

 

நீரின் மிசைத்துயின்றோன் நிறைநான் முகனும்மறியா தன்று

தேரும் வகைநிமிர்ந்தான் அவன்சேரும் இடம்வினவில்

பாரின் மிசையடியார் பலர்வந் திறைஞ்சமகிழ்ந் தாகம்

ஊரும் அரவசைத்தான் திருவூறலை உள்குதுமே.

 

1.106.8

 

1151

 

பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர் மோட்டமணர் குண்டர்

என்னும் இவர்க்கருளா ஈசன் இடம்வினவில்

தென்னென வண்டினங்கள் செறியார்பொழில் சூழ்ந்தழகார் தன்னை

உன்னவினை கெடுப்பான் திருவூறலை உள்குதுமே.

 

1.106.9

 

1152

 

கோட லிரும்புறவிற் கொடிமாடக் கொச்சையர்மன் மெச்ச

ஓடுபுனல் சடைமேற் கரந்தான் திருவூறல்

நாட லரும்புகழான் மிகுஞானசம் பந்தன்சொன்ன நல்ல

பாடல்கள் பத்தும்வல்லார் பரலோகத்து இருப்பாரே.

 

1.106.10

 

 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. தக்கோலமென வழங்குகின்றது.

சுவாமிபெயர் - உமாபதீசுவரர், தேவியார் - உமையம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.107 திருக்கொடிமாடச்செங்குன்றூர்

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1152

 

வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பின் நல்ல

பந்தணவும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்

கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற

அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பாரே.

 

1.107.1

 

1153

 

அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம்

மலைமகள் கூறுடையான் மலையார் இளவாழைக்

குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற

தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே.

 

1.107.2

 

1154

 

பாலன நீறுபுனை திருமார்பிற் பல்வளைக்கை நல்ல

ஏலம லர்க்குழலாள் ஒருபாகம் அமர்ந்தருளிக்

கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்

நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே.

 

1.107.3

 

1155

 

வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ்மார்பில் நண்ணுங்

காருறு கொன்றையொடுங் கதநாகம் பூண்டருளிச்

சீருறும் அந்தணர்வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற

நீருறு செஞ்சடையான் கழலேத்தல் நீதியே.

 

1.107.4

 

1156

 

பொன்றிகழ் ஆமையொடு புரிநூல் திகழ்மார்பில் நல்ல

பன்றியின் கொம்பணிந்து பணைத்தோளியோர் பாகமாகக்

குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் செங்குன்றூர் வானில்

மின்றிகழ் செஞ்சடையான் கழலேத்தல் மெய்ப்பொருளே.

 

1.107.5

 

1157

 

ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி

தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து

கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த

பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே.

 

1.107.6

 

1158

 

நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ வெள்ளை

வாடலுடை தலையிற் பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க்

கோடல் வளம்புறவிற் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற

சேடன தாள்தொழுவார் வினையாய தேயுமே.

 

1.107.7

 

1159

 

மத்தநன் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்று

தொத்தலர் செஞ்சடைமேல் துதைய வுடன்சூடிக்

கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய

தத்துவனைத் தொழுவார் தடுமாற் றறுப்பாரே.

 

1.107.8

 

1160

 

செம்பொனின் மேனியனாம் பிரமன்திரு மாலுந்தேட நின்ற

அம்பவ ளத்திரள்போல் ஒளியாய ஆதிபிரான்

கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய

நம்பன தாள்தொழுவார் வினையாய நாசமே.

 

1.107.9

 

1161

 

போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல்

ஓதிய கட்டுரைகேட் டுழல்வீர் வரிக்குயில்கள்

கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற

வேதியனைத் தொழநும் வினையான வீடுமே.

 

1.107.10

 

1162

 

அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார் புகலிந்நகர் பேணுந்

தலைமக னாகிநின்ற தமிழ்ஞான சம்பந்தன்

கொலைமலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்றூ ரேத்தும்

நலம்மலி பாடல்வல்லார் வினையான நாசமே.

 

1.107.11

 

 

இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது.

திருச்செங்கோடு என வழங்குகின்றது.

சுவாமிபெயர் - அர்த்தநாரீசுவரர், தேவியார் - அர்த்தநாரீசுவரி.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.108 திருப்பாதாளீச்சரம்

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1163

 

மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல

பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும்

அன்னம் அனநடையாள் ஒருபாகத் தமர்ந்தருளி நாளும்

பன்னிய பாடலினான் உறைகோயில் பாதாளே.

 

1.108.1

 

1164

 

நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளைத்

தோடமர் காதில்நல்ல குழையான் சுடுநீற்றான்

ஆடர வம்பெருக அனலேந்திக் கைவீசி வேதம்

பாடலி னாலினியான் உறைகோயில் பாதாளே.

 

1.108.2

 

1165

 

நாகமும் வான்மதியும் நலம்மல்கு செஞ்சடையான் சாமம்

போகநல் வில்வரையாற் புரம்மூன் றெரித்துகந்தான்

தோகைநல் மாமயில்போல் வளர்சாயல் தூமொழியைக் கூடப்

பாகமும் வைத்துகந்தான் உறைகோயில் பாதாளே.

 

1.108.3

 

1166

 

அங்கமும் நான்மறையு மருள்செய் தழகார்ந்த அஞ்சொல்

மங்கையோர் கூறுடையான் மறையோன் உறைகோயில்

செங்கயல் நின்றுகளுஞ் செறுவில் திகழ்கின்ற சோதிப்

பங்கயம் நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே.

 

1.108.4

 

1167

 

பேய்பல வுந்நிலவப் பெருங்காடரங் காகவுன்னி நின்று

தீயொடு மான்மறியும் மழுவும் திகழ்வித்துத்

தேய்பிறை யும்மரவும் பொலிகொன்றைச் சடைதன்மேற் சேரப்

பாய்புன லும்முடையான் உறைகோயில் பாதாளே.

 

1.108.5

 

1168

 

கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன்மே னின்றும்

விண்ணியல் மாமதியு முடன்வைத்தவன் விரும்பும்

பெண்ணமர் மேனியினான் பெருங்கா டரங்காக ஆடும்

பண்ணியல் பாடலினான் உறைகோயில் பாதாளே.

 

1.108.6

 

1169

 

விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள நாகம்வன்னி திகழ்

வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார்சடையான்

விண்டவர் தம்புரம்மூன் றெரிசெய் துரைவேதம் நான்குமவை

பண்டிசை பாடலினான் உறைகோயில் பாதாளே.

 

1.108.7

 

1170

 

மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை மறுகஅன்று கையால்

தொல்லை மலையெடுத்த அரக்கன்றலை தோள்நெரித்தான்

கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள் சடைக்க ணிந்தோன்

பல்லிசை பாடலினான் உறைகோயில் பாதாளே.

 

1.108.8

 

1171

 

தாமரை மேலயனும் அரியுந்தம தாள்வினையாற் றேடிக்

காமனை வீடுவித்தான் கழல்காண்பில ராயகன்றார்

பூமரு வுங்குழலாள் உமைநங்கை பொருந்தியிட்ட நல்ல

பாமரு வுங்குணத்தான் உறைகோயில் பாதாளே.

 

1.108.9

 

1172

 

காலையில் உண்பவருஞ் சமண்கையருங் கட்டுரைவிட் டன்று

ஆலவிடம் நுகர்ந்தான் அவன்றன் அடியேபரவி

மாலையில் வண்டினங்கள் மதுவுண் டிசைமுரல வாய்த்த

பாலையாழ்ப் பாட்டுகந்தான் உறைகோயில் பாதாளே.

 

1.108.10

 

1173

 

பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப்

பொன்னியன் மாடமல்கு புகலிந்நகர் மன்னன்

தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன

இன்னிசை பத்தும்வல்லார் எழில்வானத் திருப்பாரே.

 

1.108.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.109 திருச்சிரபுரம்

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1174

 

வாருறு வனமுலை மங்கைபங்கன்

நீருறு சடைமுடி நிமலனிடங்

காருறு கடிபொழில் சூழ்ந்தழகார்

சீருறு வளவயற் சிரபுரமே.

 

1.109.1

 

1175

 

அங்கமொ டருமறை யருள்புரிந்தான்

திங்களொ டரவணி திகழ்முடியன்

மங்கையொ டினிதுறை வளநகரஞ்

செங்கயல் மிளிர்வயல் சிரபுரமே.

 

1.109.2

 

1176

 

பரிந்தவன் பன்முடி அமரர்க்காகித்

திரிந்தவர் புரமவை தீயின்வேவ

வரிந்தவெஞ் சிலைபிடித் தடுசரத்தைத்

தெரிந்தவன் வளநகர் சிரபுரமே.

 

1.109.3

 

1177

 

நீறணி மேனியன் நீள்மதியோ

டாறணி சடையினன் அணியிழையோர்

கூறணிந் தினிதுறை குளிர்நகரஞ்

சேறணி வளவயல் சிரபுரமே.

 

1.109.4

 

1178

 

அருந்திறல் அவுணர்கள் அரணழியச்

சரந்துரந் தெரிசெய்த சங்கரனூர்

குருந்தொடு கொடிவிடு மாதவிகள்

திருந்திய புறவணி சிரபுரமே.

 

1.109.5

 

1179

 

கலையவன் மறையவன் காற்றொடுதீ

மலையவன் விண்ணொடு மண்ணுமவன்

கொலையவன் கொடிமதில் கூட்டழித்த

சிலையவன் வளநகர் சிரபுரமே.

 

1.109.6

 

1180

 

வானமர் மதியொடு மத்தஞ்சூடித்

தானவர் புரமெய்த சைவனிடங்

கானமர் மடமயில் பெடைபயிலுந்

தேனமர் பொழிலணி சிரபுரமே.

 

1.109.7

 

1181

 

மறுத்தவர் திரிபுரம் மாய்ந்தழியக்

கறுத்தவன் காரரக் கன்முடிதோள்

இறுத்தவன் இருஞ்சினக் காலனைமுன்

செறுத்தவன் வளநகர் சிரபுரமே.

 

1.109.8

 

1182

 

வண்ணநன் மலருறை மறையவனுங்

கண்ணனுங் கழல்தொழக் கனலுருவாய்

விண்ணுற வோங்கிய விமலனிடம்

திண்ணநன் மதிலணி சிரபுரமே.

 

1.109.9

 

1183

 

வெற்றரை யுழல்பவர் விரிதுகிலார்

கற்றிலர் அறவுரை புறனுரைக்கப்

பற்றலர் திரிபுரம் மூன்றும்வேவச்

செற்றவன் வளநகர் சிரபுரமே.

 

1.109.10

 

1184

 

அருமறை ஞானசம் பந்தனந்தண்

சிரபுர நகருறை சிவனடியைப்

பரவிய செந்தமிழ் பத்தும்வல்லார்

திருவொடு புகழ்மல்கு தேசினரே.

 

1.109.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.110 திருவிடைமருதூர்

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1185

 

மருந்தவன் வானவர் தானவர்க்கும்

பெருந்தகை பிறவினொ டிறவுமானான்

அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ்

இருந்தவன் வளநகர் இடைமருதே.

 

1.110.1

 

1186

 

தோற்றவன் கேடவன் துணைமுலையாள்

கூற்றவன் கொல்புலித் தோலசைத்த

நீற்றவன் நிறைபுனல் நீள்சடைமேல்

ஏற்றவன் வளநகர் இடைமருதே.

 

1.110.2

 

1187

 

படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன்

நடைநவில் ஏற்றினன் ஞாலமெல்லாம்

முடைதலை இடுபலி கொண்டுழல்வான்

இடைமரு தினிதுறை யெம்மிறையே.

 

1.110.3

 

1188

 

பணைமுலை உமையொரு பங்கனொன்னார்

துணைமதில் மூன்றையுஞ் சுடரில்மூழ்கக்

கணைதுரந் தடுதிறற் காலற்செற்ற

இணையிலி வளநகர் இடைமருதே.

 

1.110.4

 

1189

 

பொழிலவன் புயலவன் புயலியக்குந்

தொழிலவன் துயரவன் துயரகற்றுங்

கழலவன் கரியுரி போர்த்துகந்த

எழிலவன் வளநகர் இடைமருதே.

 

1.110.5

 

1190

 

நிறையவன் புனலொடு மதியும்வைத்த

பொறையவன் புகழவன் புகழநின்ற

மறையவன் மறிகடல் நஞ்சையுண்ட

இறையவன் வளநகர் இடைமருதே.

 

1.110.6

 

1191

 

நனிவளர் மதியொடு நாகம்வைத்த

பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்

முனிவரொ டமரர்கள் முறைவணங்க

இனிதுறை வளநகர் இடைமருதே.

 

1.110.7

 

1192

 

தருக்கின அரக்கன தாளுந்தோளும்

நெரித்தவன் நெடுங்கைமா மதகரியன்

றுரித்தவன் ஒன்னலர் புரங்கள்மூன்றும்

எரித்தவன் வளநகர் இடைமருதே.

 

1.110.8

 

1193

 

பெரியவன் பெண்ணினொ டாணுமானான்

வரியர வணைமறி கடற்றுயின்ற

கரியவன் அலரவன் காண்பரிய

எரியவன் வளநகர் இடைமருதே.

 

1.110.9

 

1194

 

சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன

புந்தியில் உரையவை பொருள்கொளாதே

அந்தணர் (*)ஓத்தினொ டரவமோவா

எந்தைதன் வளநகர் இடைமருதே.

 

(*) ஓத்து என்பது வேதம்.

 

1.110.10

 

1195

 

இலைமலி பொழிலிடை மருதிறையை

நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன

பலமிகு தமிழிவை பத்தும்வல்லார்

உலகுறு புகழினொ டோ ங்குவரே.

 

1.110.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.111 திருக்கடைமுடி

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1196

 

அருத்தனை அறவனை அமுதனைநீர்

விருத்தனைப் பாலனை வினவுதிரேல்

ஒருத்தனை யல்லதிங் குலகமேத்துங்

கருத்தவன் வளநகர் கடைமுடியே.

 

1.111.1

 

1197

 

திரைபொரு திருமுடி திங்கள்விம்மும்

அரைபொரு புலியதள் அடிகளிடந்

திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர்

கரைபொரு வளநகர் கடைமுடியே.

 

1.111.2

 

1198

 

ஆலிள மதியினொ டரவுகங்கை

கோலவெண் ணீற்றனைத் தொழுதிறைஞ்சி

ஏலநன் மலரொடு விரைகமழுங்

காலன வளநகர் கடைமுடியே.

 

1.111.3

 

1199

 

கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார்

மையணி மிடறுடை மறையவனூர்

பையணி யரவொடு மான்மழுவாள்

கையணி பவனிடங் கடைமுடியே.

 

1.111.4

 

1200

 

மறையவன் உலகவன் மாயமவன்

பிறையவன் புனலவன் அனலுமவன்

இறையவன் எனவுல கேத்துங்கண்டங்

கறையவன் வளநகர் கடைமுடியே.

 

1.111.5

 

1201

 

படவர வேரல்குற் பல்வளைக்கை

மடவர லாளையொர் பாகம்வைத்துக்

குடதிசை மதியது சூடுசென்னிக்

கடவுள்தன் வளநகர் கடைமுடியே.

 

1.111.6

 

1202

 

பொடிபுல்கு மார்பினிற் புரிபுல்குநூல்

அடிபுல்கு பைங்கழல் அடிகளிடங்

கொடிபுல்கு மலரொடு குளிர்சுனைநீர்

கடிபுல்கு வளநகர் கடைமுடியே.

 

1.111.7

 

1203

 

நோதல்செய் தரக்கனை நோக்கழியச்

சாதல்செய் தவனடி சரணெனலும்

ஆதர வருள்செய்த அடிகளவர்

காதல்செய் வளநகர் கடைமுடியே.

 

1.111.8

 

1204

 

அடிமுடி காண்கிலர் ஓரிருவர்

புடைபுல்கி யருளென்று போற்றிசைப்பச்

சடையிடைப் புனல்வைத்த சதுரனிடங்

கடைமுடி யதனயல் காவிரியே.

 

1.111.9

 

1205

 

மண்ணுதல் பறித்தலு மாயமிவை

எண்ணிய காலவை யின்பமல்ல

ஒண்ணுத லுமையையொர் பாகம்வைத்த

கண்ணுதல் வளநகர் கடைமுடியே.

 

1.111.10

 

1206

 

பொன்றிகழ் காவிரிப் பொருபுனல்சீர்

சென்றடை கடைமுடிச் சிவனடியை

நன்றுணர் ஞானசம் பந்தன்சொன்ன

இன்றமி ழிவைசொல இன்பமாமே.

 

1.111.11

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - கடைமுடியீசுவரர், தேவியார் - அபிராமியம்பிகை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.112 திருச்சிவபுரம்

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1207

 

இன்குர லிசைகெழும் யாழ்முரலத்

தன்கரம் மருவிய சதுரன்நகர்

பொன்கரை பொருபழங் காவிரியின்

தென்கரை மருவிய சிவபுரமே.

 

1.112.1

 

1208

 

அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்

பொன்றிட வுதைசெய்த புனிதன்நகர்

வென்றிகொள் ளெயிற்றுவெண் பன்றிமுன்னாள்

சென்றடி வீழ்தரு சிவபுரமே.

 

1.112.2

 

1209

 

மலைமகள் மறுகிட மதகரியைக்

கொலைமல்க வுரிசெய்த குழகன்நகர்

அலைமல்கும் (*)அரிசிலி னதனயலே

சிலைமல்கு மதிலணி சிவபுரமே.

(*) அரிசில் என்பது ஒரு நதி.

 

1.112.3

 

1210

 

மண்புன லனலொடு மாருதமும்

விண்புனை மருவிய விகிர்தன்நகர்

பண்புனை குரல்வழி வண்டுகெண்டிச்

செண்பக மலர்பொழிற் சிவபுரமே.

 

1.112.4

 

1211

 

வீறுநன் குடையவள் மேனிபாகங்

கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்

நாறுநன் குரவிரி வண்டுகிண்டித்

தேறலுண் டெழுதரு சிவபுரமே.

 

1.112.5

 

1212

 

மாறெதிர் வருதிரி புரமெரித்து

நீறது வாக்கிய நிமலன்நகர்

நாறுடை நடுபவர் உழவரொடுஞ்

சேறுடை வயலணி சிவபுரமே.

 

1.112.6

 

1213

 

ஆவிலைந் தமர்ந்தவன் அரிவையொடு

மேவிநன் கிருந்ததொர் வியனகர்தான்

பூவில்வண் டமர்தரு பொய்கையன்னச்

சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே.

 

1.112.7

 

1214

 

எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன்

முழுவலி யடக்கிய முதல்வன்நகர்

விழவினி லெடுத்தவெண் கொடிமிடைந்து

செழுமுகி லடுக்கும்வண் சிவபுரமே.

 

1.112.8

 

1215

 

சங்கள வியகையன் சதுர்முகனும்

அங்கள வறிவரி யவன்நகர்தான்

கங்குலும் பறவைகள் கமுகுதொறுஞ்

செங்கனி நுகர்தரு சிவபுரமே.

 

1.112.9

 

1216

 

மண்டையின் குண்டிகை மாசுதரும்

மிண்டரை விலக்கிய விமலன்நகர்

பண்டமர் தருபழங் காவிரியின்

தெண்டிரை பொருதெழு சிவபுரமே.

 

1.112.10

 

1217

 

சிவனுறை தருசிவ புரநகரைக்

கவுணியர் குலபதி காழியர்கோன்

தவமல்கு தமிழிவை சொல்லவல்லார்

நவமொடு சிவகதி நண்ணுவரே.

 

1.112.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.113 திருவல்லம்

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1218

 

எரித்தவன் முப்புரம் எரியில்மூழ்கத்

தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்

விரித்தவன் வேதங்கள் வேறுவேறு

தெரித்தவன் உறைவிடந் திருவல்லமே.

 

1.113.1

 

1219

 

தாயவன் உலகுக்குத் தன்னொப்பிலாத்

தூயவன் தூமதி சூடியெல்லாம்

ஆயவன் அமரர்க்கும் முனிவர்கட்குஞ்

சேயவன் உறைவிடந் திருவல்லமே.

 

1.113.2

 

1220

 

பார்த்தவன் காமனைப் பண்பழியப்

போர்த்தவன் போதகத் தின்னுரிவை

ஆர்த்தவன் நான்முகன் தலையையன்று

சேர்த்தவன் உறைவிடந் திருவல்லமே.

 

1.113.3

 

1221

 

கொய்தஅம் மலரடி கூடுவார்தம்

மைதவழ் திருமகள் வணங்கவைத்துப்

பெய்தவன் பெருமழை யுலகமுய்யச்

செய்தவன் உறைவிடந் திருவல்லமே.

 

1.113.4

 

1222

 

சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும்வண்ணம்

நேர்ந்தவன் நேரிழை யோடுங்கூடித்

தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே

சேர்ந்தவன் உறைவிடந் திருவல்லமே.

 

1.113.5

 

1223

 

பதைத்தெழு காலனைப் பாதமொன்றால்

உதைத்தெழு மாமுனிக் குண்மைநின்று

விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்று

சிதைத்தவன் உறைவிடந் திருவல்லமே.

 

1.113.6

 

               

(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

1.113.7

 

1224

 

இகழ்ந்தரு வரையினை எடுக்கலுற்றாங்

ககழ்ந்தவல் லரக்கனை அடர்த்தபாதம்

நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே

திகழ்ந்தவன் உறைவிடந் திருவல்லமே.

 

1.113.8

 

1225

 

பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய

அரியவன் அருமறை யங்கமானான்

கரியவன் நான்முகன் காணவொண்ணாத்

தெரியவன் உறைவிடந் திருவல்லமே.

 

1.113.9

 

1226

 

அன்றிய அமணர்கள் சாக்கியர்கள்

குன்றிய அறவுரை கூறாவண்ணம்

வென்றவன் புலனைந்தும் விளங்கவெங்குஞ்

சென்றவன் உறைவிடந் திருவல்லமே.

 

1.113.10

 

1227

 

கற்றவர் திருவல்லங் கண்டுசென்று

நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன

குற்றமில் செந்தமிழ் கூறவல்லார்

பற்றுவர் ஈசன்பொற் பாதங்களே.

 

1.113.11

 

 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - வல்லநாதர், தேவியார் - வல்லாம்பிகையம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.114 திருமாற்பேறு

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1228

 

குருந்தவன் குருகவன் கூர்மையவன்

பெருந்தகை பெண்ணவன் ஆணுமவன்

கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும்

மருந்தவன் வளநகர் மாற்பேறே.

 

1.114.1

 

1229

 

பாறணி வெண்டலை கையிலேந்தி

வேறணி பலிகொளும் வேட்கையனாய்

நீறணிந் துமையொரு பாகம்வைத்த

மாறிலி வளநகர் மாற்பேறே.

 

1.114.2

 

1230

 

கருவுடை யாருல கங்கள்வேவச்

செருவிடை ஏறியுஞ் சென்றுநின்

றுருவுடை யாளுமை யாளுந்தானும்

மருவிய வளநகர் மாற்பேறே.

 

1.114.3

 

1231

 

தலையவன் தலையணி மாலைபூண்டு

கொலைநவில் கூற்றினைக் கொன்றுகந்தான்

கலைநவின் றான்கயி லாயமென்னும்

மலையவன் வளநகர் மாற்பேறே.

 

1.114.4

 

1232

 

துறையவன் தொழிலவன் தொல்லுயிர்க்கும்

பிறையணி சடைமுடிப் பெண்ணொர்பாகன்

கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற

மறையவன் வளநகர் மாற்பேறே.

 

1.114.3

 

1233

 

பெண்ணின்நல் லாளையொர் பாகம்வைத்துக்

கண்ணினாற் காமனைக் காய்ந்தவன்றன்

விண்ணவர் தானவர் முனிவரொடு

மண்ணவர் வணங்குநன் மாற்பேறே.

 

1.114.4

 

               

(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

1.114.5

 

1234

 

தீதிலா மலையெடுத் தவ்வரக்கன்

நீதியால் வேதகீ தங்கள்பாட

ஆதியா னாகிய அண்ணலெங்கள்

மாதிதன் வளநகர் மாற்பேறே.

 

1.114.8

 

1235

 

செய்யதண் தாமரைக் கண்ணனொடுங்

கொய்யணி நறுமலர் மேலயனும்

ஐயன்நன் சேவடி அதனையுள்க

மையல்செய் வளநகர் மாற்பேறே.

 

1.114.9

 

1236

 

குளித்துணா அமணர்குண் டாக்கரென்றுங்

களித்துநன் கழலடி காணலுற்றார்

முளைத்தவெண் மதியினொ டரவஞ்சென்னி

வளைத்தவன் வளநகர் மாற்பேறே.

 

1.114.10

 

1237

 

அந்தமில் ஞானசம் பந்தன்நல்ல

செந்திசை பாடல்செய் மாற்பேற்றைச்

சந்தமின் றமிழ்கள்கொண் டேத்தவல்லார்

எந்தைதன் கழலடி எய்துவரே.

 

1.114.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.115 திரு இராமனதீச்சரம்

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1238

 

சங்கொளிர் முன்கையர் தம்மிடையே

அங்கிடு பலிகொளு மவன்கோபப்

பொங்கர வாடலோன் புவனியோங்க

எங்குமன் இராமன தீச்சுரமே.

 

1.115.1

 

1239

 

சந்தநன் மலரணி தாழ்சடையன்

தந்தம தத்தவன் தாதையோதான்

அந்தமில் பாடலோன் அழகன்நல்ல

எந்தவன் இராமன தீச்சுரமே.

 

1.115.2

 

1240

 

தழைமயி லேறவன் தாதையோதான்

மழைபொதி சடையவன் மன்னுகாதிற்

குழையது விலங்கிய கோலமார்பின்

இழையவன் இராமன தீச்சுரமே.

 

1.115.3

 

1241

 

சத்தியு ளாதியோர் தையல்பங்கன்

முத்திய தாகிய மூர்த்தியோதான்

அத்திய கையினில் அழகுசூலம்

வைத்தவன் இராமன தீச்சுரமே.

 

1.115.4

 

1242

 

தாழ்ந்த குழற்சடை முடியதன்மேல்

தோய்ந்த இளம்பிறை துளங்குசென்னிப்

பாய்ந்தகங் கையொடு படவரவம்

ஏய்ந்தவன் இராமன தீச்சுரமே.

 

1.115.5

 

1243

 

சரிகுழல் இலங்கிய தையல்காணும்

பெரியவன் காளிதன் பெரியகூத்தை

அரியவன் ஆடலோன் அங்கையேந்தும்

எரியவன் இராமன தீச்சுரமே.

 

1.115.6

 

1244

 

மாறிலா மாதொரு பங்கன்மேனி

நீறது ஆடலோன் நீள்சடைமேல்

ஆறது சூடுவான் அழகன்விடை

ஏறவன் இராமன தீச்சுரமே.

 

1.115.7

 

1245

 

தடவரை அரக்கனைத் தலைநெரித்தோன்

படவர வாட்டிய படர்சடையன்

நடமது வாடலான் நான்மறைக்கும்

இடமவன் இராமன தீச்சுரமே.

 

1.115.8

 

1246

 

தனமணி தையல்தன் பாகன்றன்னை

அனமணி அயன்அணி முடியுங்காணான்

பனமணி அரவரி பாதங்காணான்

இனமணி இராமன தீச்சுரமே.

 

1.115.9

 

1247

 

தறிபோலாஞ் சமணர்சாக் கியர்சொற்கொளேல்

அறிவோரால் நாமம் அறிந்துரைமின்

மறிகையோன் தன்முடி மணியார்கங்கை

எறிபவன் இராமன தீச்சுரமே.

 

1.115.10

 

1248

 

தேன் மலர்க் கொன்றை யோன்........

........ முந்தமக்கூனமன்றே.

 

1.115.11*

 

(*) இப்பதிகத்தில் 11-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - இராமநாதேசுவரர், தேவியார் - சரிவார்குழலியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.116 திரு நீலகண்டம்

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1249

 

அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்

உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே

கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்

செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

 

1.116.1

 

1250

 

காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்

ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்

பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்

தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

 

1.116.2

 

1251

 

முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம்

விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்

இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்

சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

 

1.116.3

 

1252

 

விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்

புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே

கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்

திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

 

1.116.4

 

1253

 

மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர்

கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ

சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்

செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

 

1.116.5

 

1254

 

மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப்

பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்

பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்

சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

 

1.116.6

 

               

(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

1.116.7

 

1255

 

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே

உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்

செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே

திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

 

1.116.8

 

1256

 

நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து

தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர்

தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்

சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

 

1.116.9

 

1257

 

சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்

பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார்

பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்

தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.

 

1.116.10

 

1258

 

பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்

இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண்

திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்

நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.

 

1.116.11

 

 

இது திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்குக்

கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.117 திருப்பிரமபுரம் - மொழிமாற்று

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1259

 

காட தணிகலங் காரர வம்பதி காலதனிற்

தோட தணிகுவர் சுந்தரக் காதினில் தூச்சிலம்பர்

வேட தணிவர் விசயற் குருவம்வில் லுங்கொடுப்பர்

பீட தணிமணி மாடப் பிரம புரத்தாரே.

 

1.117.1

 

1260

 

கற்றைச் சடையது கங்கணம் முன்கையில் திங்கள்கங்கை

பற்றித்து முப்புரம் பார்படைத் தோன்றலை சுட்டதுபண்

டெற்றித்துப் பாம்பை யணிந்தது கூற்றை யெழில்விளங்கும்

வெற்றிச் சிலைமதில் வேணு புரத்தெங்கள் வேதியரே.

 

1.117.2

 

1261

 

கூவிளங் கையது பேரி சடைமுடிக் கூட்டத்தது

தூவிளங் கும்பொடி பூண்டது பூசிற்று துத்திநாகம்

ஏவிளங் குந்நுத லாளையும் பாகம் உரித்தனரின்

பூவிளஞ் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே.

 

1.117.3

 

1262

 

உரித்தது பாம்பை யுடல்மிசை இட்டதோர் ஒண்களிற்றை

எரித்ததொ ராமையை இன்புறப் பூண்டது முப்புரத்தைச்

செருத்தது சூலத்தை ஏந்திற்று தக்கனை வேள்விபன்னூல்

விரித்தவர் வாழ்தரு வேங்குரு வில்வீற் றிருந்தவரே.

 

1.117.4

 

1263

 

கொட்டுவர் அக்கரை யார்ப்பது தக்கை குறுந்தாளன

விட்டுவர் பூதங் கலப்பில ரின்புக ழென்புலவின்

மட்டுவ ருந்தழல் சூடுவர் மத்தமும் ஏந்துவர்வான்

தொட்டுவ ருங்கொடித் தோணி புரத்துறை சுந்தரரே.

 

1.117.5

 

1264

 

சாத்துவர் பாசந் தடக்கையி லேந்துவர் கோவணந்தங்

கூத்தவர் கச்சுக் குலவிநின் றாடுவர் கொக்கிறகும்

பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர் பேரெழிலார்

பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே.

 

1.117.6

 

1265

 

காலது கங்கை கற்றைச்சடை யுள்ளாற் கழல்சிலம்பு

மாலது ஏந்தல் மழுவது பாகம் வளர்கொழுங்கோட்

டாலது ஊர்வர் அடலேற் றிருப்பர் அணிமணிநீர்ச்

சேலது கண்ணியொர் பங்கர் சிரபுரம் மேயவரே.

 

1.117.7

 

1266

 

நெருப்புரு வெள்விடை மேனியர் ஏறுவர் நெற்றியின்கண்

மருப்புரு வன்கண்ணர் தாதையைக் காட்டுவர் மாமுருகன்

விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை யார்விறல் மாதவர்வாழ்

பொருப்புறு மாளிகைத் தென்புற வத்தணி புண்ணியரே.

 

1.117.8

 

1267

 

இலங்கைத் தலைவனை யேந்திற் றிறுத்த திரலை யின்னாள்

கலங்கிய கூற்றுயிர் பெற்றது மாணி குமைபெற்றது

கலங்கிளர் மொந்தையின் ஆடுவர் கொட்டுவர் காட்டகத்துச்

சலங்கிளர் வாழ்வயல் சண்பையுள் மேவிய தத்துவரே.

 

1.117.9

 

1268

 

அடியிணை கண்டிலன் தாமரை யோன்மால் முடிகண்டிலன்

கொடியணி யும்புலி யேறுகந் தேறுவர் தோலுடுப்பர்

பிடியணி யுந்நடை யாள்வெற் பிருப்பதோர் கூறுடையர்

கடியணி யும்பொழிற் காழியுள் மேய கறைக்கண்டரே.

 

1.117.10

 

1269

 

கையது வெண்குழை காதது சூலம் அமணர்புத்தர்

எய்துவர் தம்மை அடியவர் எய்தாரோர் ஏனக்கொம்பு

மெய்திகழ் கோவணம் பூண்ப துடுப்பது மேதகைய

கொய்தலர் பூம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே.

 

1.117.11

 

1270

 

கல்லுயர் கழுமல விஞ்சியுள் மேவிய கடவுள்தன்னை

நல்லுரை ஞானசம் பந்தன்ஞா னத்தமிழ் நன்குணரச்

சொல்லிடல் கேட்டல் வல்லோர் தொல்லைவானவர் தங்களொடுஞ்

செல்குவர் சீரரு ளாற்பெற லாம்சிவ லோகமதே.

 

1.117.12

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.118 திருப்பருப்பதம்

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1271

 

சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர அரைக்கசைத்தான்

இடுமணி யெழிலானை யேறலன் எருதேறி

விடமணி மிடறுடையான் மேவிய நெடுங்கோட்டுப்

படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.

 

1.118.1

 

1272

 

நோய்புல்கு தோல்திரைய நரைவரு நுகருடம்பில்

நீபுல்கு தோற்றமெல்லாம் நினையுள்கு மடநெஞ்சே

வாய்புல்கு தோத்திரத்தால் வலஞ்செய்து தலைவணங்கிப்

பாய்புலித் தோலுடையான் பருப்பதம் பரவுதுமே.

 

1.118.2

 

1273

 

துனியுறு துயர்தீரத் தோன்றியோர் நல்வினையால்

இனியுறு பயனாதல் இரண்டுற மனம்வையேல்

கனியுறு மரமேறிக் கருமுசுக் கழையுகளும்

பனியுறு கதிர்மதியான் பருப்பதம் பரவுதுமே.

 

1.118.3

 

1274

 

கொங்கணி நறுங்கொன்றைத் தொங்கலன் குளிர்சடையான்

எங்கள்நோய் அகலநின்றா னெனவரு ளீசனிடம்

ஐங்கணை வரிசிலையான் அநங்கனை அழகழித்த

பைங்கண்வெள் ளேறுடையான் பருப்பதம் பரவுதுமே.

 

1.118.4

 

1275

 

துறைபல சுனைமூழ்கித் தூமலர் சுமந்தோடி

மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்தச்

சிறையொலி கிளிபயிலுந் தேனினம் ஒலியோவா

பறைபடு விளங்கருவிப் பருப்பதம் பரவுதுமே.

 

1.118.5

 

1276

 

சீர்கெழு சிறப்போவாச் செய்தவ நெறிவேண்டில்

ஏர்கெழு மடநெஞ்சே யிரண்டுற மனம்வையேல்

கார்கெழு நறுங்கொன்றைக் கடவுள திடம்வகையால்

பார்கெழு புகழோவா பருப்பதம் பரவுதுமே.

 

1.118.6

 

1277

 

புடைபுல்கு படர்கமலம் புகையொடு விரைகமழத்

தொடைபுல்கு நறுமாலை திருமுடி மிசையேற

விடைபுல்கு கொடியேந்தி வெந்தவெண் ணீறணிவான்

படைபுல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே.

 

1.118.7

 

1278

 

நினைப்பெனும் நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதே

மனத்தினை வலித்தொழிந்தேன் அவலம்வந் தடையாமைக்

கனைத்தெழு திரள்கங்கை கமழ்சடைக் கரந்தான்றன்

பனைத்திரள் பாயருவிப் பருப்பதம் பரவுதுமே.

 

1.118.8

 

1279

 

மருவிய வல்வினைநோய் அவலம்வந் தடையாமல்

திருவுரு அமர்ந்தானுந் திசைமுகம் உடையானும்

இருவரும் அறியாமை எழுந்ததோ ரெரிநடுவே

பருவரை யுறநிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே.

 

1.118.10

 

1279

 

சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்

மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்

குடங்கொண்டு நீர்க்குச்செல்வார் போதுமின் குஞ்சரத்தின்

படங்கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே.

 

1.118.11

 

1280

 

வெண்செநெல் விளைகழனி விழவொலி கழுமலத்தான்

பண்செலப் பலபாடல் இசைமுரல் பருப்பதத்தை

நன்சொலி னாற்பரவு ஞானசம் பந்தன்நல்ல

ஒண்சொலின் இவைமாலை யுருவெணத் தவமாமே.

 

1.118.12

 

 

இத்தலம் வடதேசத்திலுள்ளது. ஸ்ரீசைலமென்றும்

மல்லிகார்ச்சுன மென்றும் வழங்குகின்றது.

சுவாமிபெயர் - பருப்பதேசுவரர், தேவியார் - பருப்பதமங்கையம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.119 திருக்கள்ளில்

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1282

 

முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலை

வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த

கள்ளில்மேய அண்ணல் கழல்கள் நாளும்

உள்ளுமேல் உயர்வெய்தல் ஒரு தலையே.

 

1.119.1

 

1283

 

ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான்

ஓடலாற் கலனில்லான் உறை பதியால்

காடலாற் கருதாத கள்ளில் மேயான்

பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே.

 

1.119.2

 

1284

 

எண்ணார்மும் மதிலெய்த இமையா முக்கண்

பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி

கண்ணார் நீறணிமார்பன் கள்ளில் மேயான்

பெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே.

 

1.119.3

 

1285

 

பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும்

நறைபெற்ற விரிகொன்றைத் தார் நயந்த

கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளில் மேயான்

நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சு ளானே.

 

1.119.4

 

1286

 

விரையாலும் மலராலும் விழுமை குன்றா

உரையாலு மெதிர்கொள்ள வூரா ரம்மாக்

கரையார்பொன் புனல்வேலிக் கள்ளில் மேயான்

அரையார்வெண் கோவணத்த அண்ணல் தானே.

 

1.119.5

 

1287

 

நலனாய பலிகொள்கை நம்பான் நல்ல

வலனாய மழுவாளும் வேலும் வல்லான்

கலனாய தலையோட்டான் கள்ளில் மேயான்

மலனாய தீர்த்தெய்தும் மாதவத் தோர்க்கே.

 

1.119.6

 

1288

 

பொடியார்மெய் பூசினும் புறவின் நறவங்

குடியாவூர் திரியினுங் கூப்பி டினுங்

கடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளில் மேயான்

அடியார்பண் பிகழ்வார்கள் ஆதர் களே.

 

1.119.7

 

1289

 

திருநீல மலரொண்கண் தேவி பாகம்

புரிநூலுந் திருநீறும் புல்கு மார்பில்

கருநீல மலர்விம்மு கள்ளி லென்றும்

பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே.

 

1.119.8

 

1290

 

வரியாய மலரானும் வையந் தன்னை

உரிதாய அளந்தானும் உள்ளு தற்கங்

கரியானும் அறியாத கள்ளில் மேயான்

பெரியானென் றறிவார்கள் பேசு வாரே.

 

1.119.9

 

1291

 

ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர்

பேச்சிவை நெறியல்ல பேணு மின்கள்

மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில்

தீச்செய்த சடையண்ணல் திருந் தடியே.

 

1.119.10

 

1292

 

திகைநான்கும் புகழ்காழிச் செல்வம் மல்கு

பகல்போலும் பேரொளியான் பந்தன் நல்ல

முகைமேவு முதிர்சடையான் கள்ளி லேத்தப்

புகழோடும் பேரின்பம் புகுதும் அன்றே.

 

1.119.11

 

 

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - சிவானந்தேசுவரர், தேவியார் - ஆனந்தவல்லியம்மை.

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.120 திருவையாறு - திருவிராகம்

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1293

 

பணிந்தவர் அருவினை பற்றறுத் தருள்செயத்

துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்

பிணிந்தவன் அரவொடு பேரெழி லாமைகொண்

டணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.

 

1.120.1

 

1294

 

கீர்த்திமிக் கவன்நகர் கிளரொளி யுடனடப்

பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்துப்

போர்த்தவன் கரியுரி புலியதள் அரவரை

ஆர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.

 

1.120.2

 

1295

 

வரிந்தவெஞ் சிலைபிடித் தவுணர்தம் வளநகர்

எரிந்தற வெய்தவன் எழில்திகழ் மலர்மேல்

இருந்தவன் சிரமது இமையவர் குறைகொள

அரிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.

 

1.120.3

 

1296

 

வாய்ந்தவல் லவுணர்தம் வளநகர் எரியிடை

மாய்ந்தற எய்தவன் வளர்பிறை விரிபுனல்

தோய்ந்தெழு சடையினன் தொன்மறை ஆறங்கம்

ஆய்ந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.

 

1.120.4

 

1297

 

வானமர் மதிபுல்கு சடையிடை அரவொடு

தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன்

மானன மென்விழி மங்கையொர் பாகமும்

ஆனவன் வளநகர் அந்தண் ஐயாறே.

 

1.120.5

 

1298

 

முன்பனை முனிவரொ டமரர்கள் தொழுதெழும்

இன்பனை இணையில இறைவனை எழில்திகழ்

என்பொனை யேதமில் வேதியர் தாந்தொழும்

அன்பன வளநகர் அந்தண் ஐயாறே.

 

1.120.6

 

1299

 

வன்றிறல் அவுணர்தம் வளநகர் எரியிடை

வெந்தற எய்தவன் விளங்கிய மார்பினில்

பந்தமர் மெல்விரல் பாகம தாகிதன்

அந்தமில் வளநகர் அந்தண் ஐயாறே.

 

1.120.7

 

1300

 

விடைத்தவல் லரக்கன்நல் வெற்பினை யெடுத்தலும்

அடித்தலத் தால்இறை யூன்றிமற் றவனது

முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை

அடர்த்தவன் வளநகர் அந்தண் ஐயாறே.

 

1.120.8

 

1301

 

விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோனனல்

எண்ணிலி தேவர்கள் இந்திரன் வழிபட

கண்ணனும் பிரமனும் காண்பரி தாகிய

அண்ணல்தன் வளநகர் அந்தண் ஐயாறே.

 

1.120.9

 

1302

 

மருளுடை மனத்துவன் சமணர்கள் மாசறா

இருளுடை இணைத்துவர்ப் போர்வையி னார்களுந்

தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா

அருளுடை யடிகள்தம் அந்தண் ஐயாறே.

 

1.120.10

 

1303

 

நலம்மலி ஞானசம் பந்தன தின்றமிழ்

அலைமலி புனல்மல்கும் அந்தண்ஐ யாற்றினைக்

கலைமலி தமிழிவை கற்றுவல் லார்மிக

நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே.

 

1.120.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.121 திருவிடைமருதூர் - திருவிராகம்

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1304

 

நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்த

படைமரு தழலெழ மழுவல பகவன்

புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய

இடைமரு தடையநம் இடர்கெடல் எளிதே.

 

1.121.1

 

1305

 

மழைநுழை மதியமொ டழிதலை மடமஞ்ஞை

கழைநுழை புனல்பெய்த கமழ்சடை முடியன்

குழைநுழை திகழ்செவி அழகொடு மிளிர்வதொர்

இழைநுழை புரியணல் இடமிடை மருதே.

 

1.121.2

 

1306

 

அருமையன் எளிமையன் அழல்விட மிடறினன்

கருமையின் ஒளிபெறு கமழ்சடை முடியன்

பெருமையன் சிறுமையன் பிணைபெணொ டொருமையின்

இருமையும் உடையணல் இடமிடை மருதே.

 

1.121.3

 

1307

 

பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்கு

நரிவளர் சுடலையுள் நடமென நவில்வோன்

வரிவளர் குளிர்மதி யொளிபெற மிளிர்வதொர்

எரிவளர் சடையணல் இடமிடை மருதே.

 

1.121.4

 

1308

 

வருநல மயிலன மடநடை மலைமகள்

பெருநல முலையிணை பிணைசெய்த பெருமான்

செருநல மதிலெய்த சிவனுறை செழுநகர்

இருநல புகழ்மல்கும் இடமிடை மருதே.

 

1.121.5

 

1309

 

கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை

மலையுடை மடமகள் தனையிடம் உடையோன்

விலையுடை அணிகலன் இலனென மழுவினொ

டிலையுடை படையவன் இடமிடை மருதே.

 

1.121.6

 

1310

 

வளமென வளர்வன வரிமுரல் பறவைகள்

இளமணல் அணைகரை யிசைசெயும் இடைமரு

துளமென நினைபவர் ஒலிகழல் இணையடி

குளமண லுறமூழ்கி வழிபடல் குணமே.

 

1.121.7

 

1311

 

மறையவன் உலகவன் மதியவன் மதிபுல்கு

துறையவன் எனவல அடியவர் துயரிலர்

கறையவன் மிடறது கனல்செய்த கமழ்சடை

இறையவன் உறைதரும் இடமிடை மருதே.

 

1.121.8

 

1312

 

மருதிடை நடவிய மணிவணர் பிரமரும்

இருதுடை யகலமொ டிகலின ரினதெனக்

கருதிடல் அரியதொர் உருவொடு பெரியதொர்

எருதுடை யடிகள்தம் இடமிடை மருதே.

 

1.121.9

 

1313

 

துவருறு விரிதுகில் உடையரும் அமணரும்

அவருறு சிறுசொலை நயவன்மின் இடுமணல்

கவருறு புனலிடை மருதுகை தொழுதெழும்

அவருறு வினைகெடல் அணுகுதல் குணமே.

 

1.121.10

 

1314

 

தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்

இடமலி பொழிலிடை மருதினை யிசைசெய்த

படமலி தமிழிவை பரவவல் லவர்வினை

கெடமலி புகழொடு கிளரொளி யினரே.

 

1.121.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.122 திருவிடைமருதூர் - திருவிராகம்

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1315

 

விரிதரு புலியுரி விரவிய அரையினர்

திரிதரும் எயிலவை புனைகணை யினிலெய்த

எரிதரு சடையினர் இடைமரு தடைவுனல்

புரிதரு மன்னவர் புகழ்மிக வுளதே.

 

1.122.1

 

1316

 

மறிதிரை படுகடல் விடமடை மிடறினர்

எறிதிரை கரைபொரும் இடைமரு தெனுமவர்

செறிதிரை நரையொடு செலவிலர் உலகினில்

பிறிதிரை பெறுமுடல் பெருகுவ தரிதே.

 

1.122.2

 

1317

 

சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள்

நிலவிய உடலினர் நிறைமறை மொழியினர்

இலரென இடுபலி யவரிடை மருதினை

வலமிட வுடல்நலி விலதுள வினையே.

 

1.122.3

 

1318

 

விடையினர் வெளியதொர் தலைகல னெனநனி

கடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர்

இடைவிட லரியவர் இடைமரு தெனும்நகர்

உடையவர் அடியிணை தொழுவதெம் உயர்வே.

 

1.122.4

 

1319

 

உரையரும் உருவினர் உணர்வரு வகையினர்

அரைபொரு புலியதள் உடையினர் அதன்மிசை

இரைமரும் அரவினர் இடைமரு தெனவுளம்

உரைகள துடையவர் புகழ்மிக வுளதே.

 

1.122.5

 

1320

 

ஒழுகிய புனல்மதி யரவமொ டுறைதரும்

அழகிய முடியுடை அடிகள தறைகழல்

எழிலினர் உறையிடை மருதினை மலர்கொடு

தொழுதல்செய் தெழுமவர் துயருறல் இலரே.

 

1.122.6

 

1321

 

கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும்

நிலையினர் சலமகள் உலவிய சடையினர்

மலைமகள் முலையிணை மருவிய வடிவினர்

இலைமலி படையவர் இடமிடை மருதே.

 

1.122.7

 

1322

 

செருவடை யிலவல செயல்செயத் திறலொடும்

அருவரை யினிலொரு பதுமுடி நெரிதர

இருவகை விரனிறி யவரிடைமருதது

பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே.

 

1.122.8

 

1323

 

அரியொடு மலரவன் எனவிவ ரடிமுடி

தெரிவகை அரியவர் திருவடி தொழுதெழ

எரிதரும் உருவர்தம் இடைமரு தடைவுறல்

புரிதரும் மன்னவர் புகழ்மிக உளதே.

 

1.122.9

 

1324

 

குடைமயி லினதழை மருவிய வுருவினர்

உடைமரு துவரினர் பலசொல வுறவிலை

அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர்

இடைமரு தெனமனம் நினைவதும் எழிலே.

 

1.122.10

 

1325

 

பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு

விரகினன் விரிதரு பொழிலிடைமருதினைப்

பரவிய ஒருபது பயிலவல் லவரிடர்

விரவிலர் வினையொடு வியனுல குறவே.

 

1.122.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.123 திருவலிவலம் - திருவிராகம்

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1326

 

பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்

ஏவியல் கணைபிணை எதிர்விழி யுமையவள்

மேவிய திருவுரு வுடையவன் விரைமலர்

மாவியல் பொழில்வலி வலமுறை யிறையே.

 

1.123.1

 

1327

 

இட்டம தமர்பொடி யிசைதலின் நசைபெறு

பட்டவிர் பவளநல் மணியென அணிபெறு

விட்டொளிர் திருவுரு வுடையவன் விரைமலர்

மட்டமர் பொழில்வலி வலமுறை யிறையே.

 

1.123.2

 

1328

 

உருமலி கடல்கடை வுழியுல கமருயிர்

வெருவுறு வகையெழு விடம்வெளி மலையணி

கருமணி நிகர்களம் உடையவன் மிடைதரு

மருமலி பொழில்வலி வலமுறை யிறையே.

 

1.123.3

 

1329

 

அனல்நிகர் சடையழல் அவியுற வெனவரு

புனல்நிகழ் வதுமதி நனைபொறி அரவமும்

எனநினை வொடுவரு மிதுமெல முடிமிசை

மனமுடை யவர்வலி வலமுறை யிறையே.

 

1.123.4

 

1330

 

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்

கடிகண பதிவர அருளினன் மிகுகொடை

வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

 

1.123.5

 

1331

 

தரைமுதல் உலகினில் உயிர்புணர் தகைமிக

விரைமலி குழலுமை யொடுவிர வதுசெய்து

நரைதிரை கெடுதகை யதுவரு ளினனெழில்

வரைதிகழ் மதில்வலி வலமுறை யிறையே.

 

1.123.6

 

1332

 

நலிதரு தரைவர நடைவரும் இடையவர்

பொலிதரு மடவர லியர்மனை யதுபுகு

பலிகொள வருபவன் எழில்மிகு தொழில்வளர்

வலிவரு மதில்வலி வலமுறை யிறையே.

 

1.123.7

 

1333

 

இரவணன் இருபது கரமெழில் மலைதனின்

இரவண நினைதர அவன்முடி பொடிசெய்து

இரவணம் அமர்பெயர் அருளின னகநெதி

இரவண நிகர்வலி வலமுறை யிறையே.

 

1.123.8

 

1334

 

தேனமர் தருமலர் அணைபவன் வலிமிகும்

ஏனம தாய்நிலம் அகழ்அரி யடிமுடி

தானணை யாவுரு வுடையவன் மிடைகொடி

வானணை மதில்வலி வலமுறை யிறையே.

 

1.123.9

 

1335

 

இலைமலி தரமிகு துவருடை யவர்களும்

நிலைமையில் உணலுடை யவர்களும் நினைவது

தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன்

மலைமலி மதில்வலி வலமுறை யிறையே.

 

1.123.10

 

1336

 

மன்னிய வலிவல நகருறை யிறைவனை

இன்னியல் கழுமல நகரிறை யெழில்மறை

தன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை

உன்னிய வொருபதும் உயர்பொருள் தருமே.

 

1.123.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.124 திருவீழிமிழலை - திருவிராகம்

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1337

 

அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர்

மலர்மலி குழலுமை தனையிடம் மகிழ்பவர்

நலம்மலி யுருவுடை யவர்நகர் மிகுபுகழ்

நிலமலி மிழலையை நினையவ லவரே.

 

1.124.1

 

1338

 

இருநில மிதன்மிசை யெழில்பெறும் உருவினர்

கருமலி தருமிகு புவிமுதல் உலகினில்

இருளறு மதியினர் இமையவர் தொழுதெழு

நிருபமன் மிழலையை நினையவ லவரே.

 

1.124.2

 

1339

 

கலைமகள் தலைமகன் இவனென வருபவர்

அலைமலி தருபுனல் அரவொடு நகுதலை

இலைமலி யிதழியு மிசைதரு சடையினர்

நிலைமலி மிழலையை நினையவ லவரே.

 

1.124.3

 

1340

 

மாடமர் சனமகிழ் தருமனம் உடையவர்

காடமர் கழுதுக ளவைமுழ வொடுமிசை

பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில்

நீடமர் மிழலையை நினையவ லவரே.

 

1.124.4

 

1341

 

புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை

இகழ்வுசெய் தவனுடை யெழின்மறை வழிவளர்

முகமது சிதைதர முனிவுசெய் தவன்மிகு

நிகழ்தரு மிழலையை நினையவ லவரே.

 

1.124.5

 

1342

 

1342

அன்றினர் அரியென வருபவர் அரிதினில்

ஒன்றிய திரிபுரம் ஒருநொடி யினிலெரி

சென்றுகொள் வகைசிறு முறுவல்கொ டொளிபெற

நின்றவன் மிழலையை நினையவ லவரே.

 

1.124.6

 

1343

 

கரம்பயில் கொடையினர் கடிமல ரயனதொர்

சிரம்பயில் வறவெறி சிவனுறை செழுநகர்

வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறி

நிரம்பினர் மிழலையை நினையவ லவரே.

 

1.124.7

 

1344

 

ஒருக்கிய வுணர்வினொ டொளிநெறி செலுமவர்

அரக்கன்நன் மணிமுடி யொருபதும் இருபது

கரக்கன நெரிதர மலரடி விரல்கொடு

நெருக்கினன் மிழலையை நினையவ லவரே.

 

1.124.8

 

1345

 

அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்

கடிமலர் அயனரி கருதரு வகைதழல்

வடிவுரு வியல்பினொ டுலகுகள் நிறைதரு

நெடியவன் மிழலையை நினையவ லவரே.

 

1.124.9

 

1346

 

மன்மத னெனவொளி பெறுமவர் மருதமர்

வன்மலர் துவருடை யவர்களும் மதியிலர்

துன்மதி யமணர்கள் தொடர்வரு மிகுபுகழ்

நின்மலன் மிழலையை நினையவ லவரே.

 

1.124.10

 

1347

 

நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள்

வித்தக மறைமலி தமிழ்விர கனமொழி

பத்தியில் வருவன பத்திவை பயில்வொடு

கற்றுவல் லவருல கினிலடி யவரே.

 

1.124.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.125 திருச்சிவபுரம் - திருவிராகம்

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1348

 

கலைமலி யகலல்குல் அரிவைதன் உருவினன்

முலைமலி தருதிரு வுருவம துடையவன்

சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ

இலைநலி வினையிரு மையுமிடர் கெடுமே.

 

1.125.1

 

1349

 

படரொளி சடையினன் விடையினன் மதிலவை

சுடரெரி கொளுவிய சிவனவன் உறைபதி

திடலிடு புனல்வயல் சிவபுரம் அடையநம்

இடர்கெடும் உயர்கதி பெறுவது திடனே.

 

1.125.2

 

1350

 

வரைதிரி தரவர வகடழ லெழவரு

நுரைதரு கடல்விடம் நுகர்பவன் எழில்திகழ்

திரைபொரு புனலரி சிலதடை சிவபுரம்

உரைதரும் அடியவர் உயர்கதி யினரே.

 

1.125.3

 

1351

 

துணிவுடை யவர்சுடு பொடியினர் உடலடு

பிணியடை விலர்பிற வியுமற விசிறுவர்

தணிவுடை யவர்பயில் சிவபுரம் மருவிய

மணிமிட றனதடி இணைதொழு மவரே.

 

1.125.4

 

1352

 

மறையவன் மதியவன் மலையவன் நிலையவன்

நிறையவன் உமையவள் மகிழ்நடம் நவில்பவன்

இறையவன் இமையவர் பணிகொடு சிவபுரம்

உறைவென உடையவன் எமையுடை யவனே.

 

1.125.5

 

1353

 

முதிர்சடை யிளமதி நதிபுனல் பதிவுசெய்

ததிர்கழல் ஒலிசெய வருநடம் நவில்பவன்

எதிர்பவர் புரமெய்த இணையிலி யணைபதி

சதிர்பெறும் உளமுடை யவர்சிவ புரமே.

 

1.125.6

 

1354

 

வடிவுடை மலைமகள் சலமக ளுடனமர்

பொடிபடும் உழையதள் பொலிதிரு வுருவினன்

செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம்

அடைதரும் அடியவர் அருவினை யிலரே.

 

1.125.7

 

1355

 

கரமிரு பதுமுடி யொருபதும் உடையவன்

உரம்நெரி தரவரை யடர்வுசெய் தவனுறை

பரனென அடியவர் பணிதரு சிவபுர

நகரது புகுதல்நம் உயர்கதி யதுவே.

 

1.125.8

 

1356

 

அன்றிய லுருவுகொள் அரியய னெனுமவர்

சென்றள விடலரி யவனுறை சிவபுரம்

என்றிரு பொழுதுமுன் வழிபடு மவர்துயர்

ஒன்றிலர் புகழொடும் உடையரிவ் வுலகே.

 

1.125.9

 

1357

 

புத்தரொ டமணர்கள் அறவுரை புறவுரை

வித்தக மொழிகில விடையுடை யடிகள்தம்

இத்தவம் முயல்வுறில் இறைவன சிவபுரம்

மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே.

 

1.125.10

 

1358

 

புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம்

பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை

எந்தையை யுரைசெய்த இசைமொழி பவர்வினை

சிந்திமு னுறவுயர் கதிபெறு வர்களே.

 

1.125.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.126 திருக்கழுமலம் - திருத்தாளச்சதி

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1359

 

பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின் றவும்பரப்

 

பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுஞ்

சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடுஞ்

 

சேர்வார்நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ்

சந்தித்தே யிந்தப்பார் சனங்கள்நின்று தங்கணாற்

 

தாமேகாணா வாழ்வாரத் தகவுசெய் தவனதிடங்

கந்தத்தால் எண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தனக்

 

காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே.

 

1.126.1

 

1360

 

பிச்சைக்கே யிச்சித்துப் பிசைந்தணிந்த வெண்பொடிப்

 

பீடார்நீடார் மாடாரும் பிறைநுதல் அரிவையொடும்

உச்சத்தால் நச்சிப்போல் தொடர்ந்தடர்ந்த வெங்கணே

 

றூராவூரா நீள்வீதிப் பயில்வொடும் ஒலிசெயிசை

வச்சத்தான் நச்சுச்சேர் வடங்கொள்கொங்கை மங்கைமார்

 

வாராநேரே மாலாகும் வசிவல வவனதிடங்

கச்சத்தான் மெச்சிப்பூக் கலந்திலங்கு வண்டினங்

 

காரார்காரார் நீள்சோலைக் கழுமல வளநகரே.

 

1.126.2

 

1361

 

திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின்

 

சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோ

டங்கைச்சேர் வின்றிக்கே அடைந்துடைந்த வெண்டலைப்

 

பாலேமேலே மாலேயப் படர்வுறு மவனிறகும்

பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின்

 

போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையனிடங்

கங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த பொன்னியின்

 

காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.

 

1.126.3

 

1362

 

அண்டத்தா லெண்டிக்கு மமைந்தடங்கு மண்டலத்

 

தாறேவேறே வானாள்வார் அவரவ ரிடமதெலாம்

மண்டிப்போய் வென்றிப்போர் மலைந்தலைந்த வும்பரும்

 

மாறேலாதார் தாமேவும் வலிமிகு புரமெரிய

முண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த இஞ்சிசூழ்

 

மூவாமூதூர் மூதூரா முனிவுசெய் தவனதிடங்

கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திரக்

 

காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.

 

1.126.4

 

1363

 

திக்கிற்றே வற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டலச்

 

சீறார்வீறார் போரார்தா ரகனுட லவனெதிரே

புக்கிட்டே வெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீப்

 

போலேபூநீர் தீகான்மீப் புணர்தரு முயிர்கள்திறஞ்

சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்தமங்கை செங்கதத்

 

தோடேயாமே மாலோகத் துயர்களை பவனதிடங்

கைக்கப்போ யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக்

 

காடேயோடா ஊரேசேர் கழுமல வளநகரே.

 

1.126.5

 

1364

 

செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ்

 

சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய்

ஒற்றைச்சேர் முற்றல்கொம் புடைத்தடக்கை முக்கண்மிக்

 

கோவாதேபாய் மாதானத் துறுபுகர் முகஇறையைப்

பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும்

 

பேராநோய்தா மேயாமைப் பிரிவுசெய் தவனதிடங்

கற்றிட்டே யெட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக்

 

காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே.

 

1.126.6

 

1365

 

பத்திப்பேர் வித்திட்டே பரந்தஐம் புலன்கள்வாய்ப்

 

பாலேபோகா மேகாவா பகையறும் வகைநினையா

முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள்வாய்

 

மூடாவூடா நாலந்தக் கரணமும் ஒருநெறியாய்ச்

சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்

 

சேர்வார்தாமே தானாகச் செயுமவன் உறையுமிடங்

கத்திட்டோ ர் சட்டங்கங் கலந்திலங்கும் நற்பொருள்

 

காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.

 

1.126.7

 

1366

 

செம்பைச்சேர் இஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழிற்

 

சேரேவாரா வாரீசத் திரையெறி நகரிறைவன்

இம்பர்க்கே தஞ்செய்திட் டிருந்தரன் பயின்றவெற்

 

பேரார்பூநே ரோர்பாதத் தெழில்விரல் அவண்நிறுவிட்

டம்பொற்பூண் வென்றித்தோள் அழிந்துவந்த னஞ்செய்தாற்

 

காரார்கூர்வாள் வாணாளன் றருள்புரி பவனதிடங்

கம்பத்தார் தும்பித்திண் கவுட்சொரிந்த மும்மதக்

 

காரார்சேறார் மாவீதிக் கழுமல வளநகரே.

 

1.126.8

 

1367

 

பன்றிக்கோ லங்கொண்டிப் படித்தடம் பயின்றிடப்

 

பானாமால்தா னாமேயப் பறவையி னுருவுகொள

ஒன்றிட்டே யம்புச்சே ருயர்ந்தபங் கயத்தவ

 

னோதானோதான் அஃதுணரா துருவின தடிமுடியுஞ்

சென்றிட்டே வந்திப்பத் திருக்களங்கொள் பைங்கணின்

 

றேசால்வேறோ ராகாரந் தெரிவுசெய் தவனதிடங்

கன்றுக்கே முன்றிற்கே கலந்திலந் நிறைக்கவுங்

 

காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.

 

1.126.9

 

1368

 

தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத்

 

தாமேபேணா தேநாளுஞ் சமணொடு முழல்பவரும்

இட்டத்தா லத்தந்தா னிதன்றதென்று நின்றவர்க்

 

கேயாமேவா யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப்

புட்டத்தே யட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள் புத்தரும்

 

போல்வார்தாமோ ராமேபோய்ப் புணர்வுசெய் தவனதிடங்

கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனற்

 

காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.

 

1.126.10

 

1369

 

கஞ்சத்தேன் உண்டிட்டே களித்துவண்டு சண்பகக்

 

கானேதேனே போராருங் கழுமல நகரிறையைத்

தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்தநற் கலைத்துறை

 

தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விர கனமொழிகள்

எஞ்சத்தேய் வின்றிக்கே இமைத்திசைத் தமைத்தகொண்

 

டேழேயேழே நாலேமூன் றியலிசை இசையியல்பா

வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர்

 

மார்பேசேர்வாள் வானோர்சீர் மதிநுதல் மடவரலே.

 

1.126.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.127 சீகாழி - திருஏகபாதம்

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1370

 

பிரம புரத்துறை பெம்மா னெம்மான்

பிரம புரத்துறை பெம்மா னெம்மான்

பிரம புரத்துறை பெம்மா னெம்மான்

பிரம புரத்துறை பெம்மா னெம்மான்.

 

1.127.1

 

1371

 

விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்

விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்

விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்

விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன்.

 

1.127.2

 

1372

 

புண்டரி கத்தவன் மேவிய புகலியே

புண்டரி கத்தவன் மேவிய புகலியே

புண்டரி கத்தவன் மேவிய புகலியே

புண்டரி கத்தவன் மேவிய புகலியே.

 

1.127.3

 

1373

 

விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்

விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்

விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்

விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்.

 

1.127.4

 

1374

 

சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்

சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்

சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்

சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்.

 

1.127.5

 

1375

 

பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி

பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி

பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி

பூசுரர் சேர்பூந் தராயவன் பொன்னடி.

 

1.127.6

 

1376

 

செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்

செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்

செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்

செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்.

 

1.127.7

 

1377

 

பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்

பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்

பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்

பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்.

 

1.127.8

 

1378

 

தசமுக னெறிதர வூன்று சண்பையான்

தசமுக னெறிதர வூன்று சண்பையான்

தசமுக னெறிதர வூன்று சண்பையான்

தசமுக னெறிதர வூன்று சண்பையான்.

 

1.127.9

 

1379

 

காழி யானய னுள்ளவா காண்பரே

காழி யானய னுள்ளவா காண்பரே

காழி யானய னுள்ளவா காண்பரே

காழி யானய னுள்ளவா காண்பரே.

 

1.127.10

 

1380

 

கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே

கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே

கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே

கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே.

 

1.127.11

 

1381

 

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை.

 

1.127.12

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.128 திருவெழுகூற்றிருக்கை

 

பண் - வியாழக்குறிஞ்சி

 

1382

 

ஓருரு வாயினை மானாங் காரத்

தீரியல் பாயொரு விண்முதல் பூதலம்

ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிறவும்

படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை

இருவரோ டொருவ னாகி நின்றனை

 

05

 

               

ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும்

முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி

காட்டினை நாட்டமூன் றாகக் கோட்டினை

இருநதி யரவமோ டொருமதி சூடினை

ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம்

 

10

 

               

நாற்கால் மான்மறி ஐந்தலை யரவம்

ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்

திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை

ஒருதனு இருகால் வளைய வாங்கி

முப்புரத் தோடு நானிலம் அஞ்சக்

 

15

 

               

கொன்று தலத்துற அவுணரை யறுத்தனை

ஐம்புலன் நாலாம் அந்தக் கரணம்

முக்குணம் இருவளி யொருங்கிய வானோர்

ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ

டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து

 

20

 

               

நான்மறை யோதி ஐவகை வேள்வி

அமைத்தா றங்க முதலெழுத் தோதி

வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்

பிரமபுரம் பேணினை

அறுபதம் முரலும் வேணுபுரம் விரும்பினை

 

25

 

               

இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை

பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை

பாணிமூ வுலகும் புதையமேல் மிதந்த

தோணிபுரத் துறைந்தனை தொலையா இருநிதி

வாய்ந்த பூந்தராய் ஏய்ந்தனை

 

30

 

               

வரபுர மென்றுணர் சிரபுரத் துறைந்தனை

ஒருமலை யெடுத்த இருதிறல் அரக்கன்

விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை

முந்நீர்த் துயின்றோன் நான்முகன் அறியாப்

பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை

 

35

 

               

ஐயுறும் அமணரும் அறுவகைத் தேரரும்

ஊழியும் உணராக் காழி யமர்ந்தனை

எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை

ஆறு பதமும் ஐந்தமர் கல்வியும்

மறை முதல் நான்கும்

 

40

 

               

மூன்று காலமுந் தோன்ற நின்றனை

இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும்

மறுவிலா மறையோர்

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணியன் அறியும்

 

45

 

               

அனைய தன்மையை யாதலின் நின்னை

நினைய வல்லவ ரில்லை நீள்நிலத்தே.

 

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.129 திருக்கழுமலம்

 

பண் - மேகராகக்குறிஞ்சி

 

1383

 

சேவுயருந் திண்கொடியான் திருவடியே

 

சரணென்று சிறந்தவன்பால்

நாவியலும் மங்கையொடு நான்முகன்றான்

 

வழிபட்ட நலங்கொள்கோயிற்

வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச்

 

செங்குமுதம் வாய்கள்காட்டக்

காவியிருங் கருங்குவளை கருநெய்தல்

 

கண்காட்டுங் கழுமலமே.

 

1.129.1

 

1384

 

பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடுடைய

 

மலைச்செல்வி பிரியாமேனி

அருந்தகைய சுண்ணவெண்ணீ றலங்கரித்தான்

 

அமரர்தொழ வமருங்கோயில்

தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும்

 

இறைவனது தன்மைபாடிக்

கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப்

 

பாட்டயருங் கழுமலமே.

 

1.129.2

 

1385

 

அலங்கல்மலி வானவருந் தானவரும்

 

அலைகடலைக் கடையப்பூதங்

கலங்கவெழு கடுவிடமுண் டிருண்டமணி

 

கண்டத்தோன் கருதுங்கோயில்

விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபுக்

 

கூன்சலிக்குங் காலத்தானுங்

கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய

 

மெய்யர்வாழ் கழுமலமே.

 

1.129.3

 

1386

 

பாரிதனை நலிந்தமரர் பயமெய்தச்

 

சயமெய்தும் பரிசுவெம்மைப்

போரிசையும் புரமூன்றும் பொன்றவொரு

 

சிலைவளைத்தோன் பொருந்துங்கோயில்

வாரிசைமென் முலைமடவார் மாளிகையின்

 

சூளிகைமேல் மகப்பாராட்டக்

காரிசையும் விசும்பியங்குங் கணங்கேட்டு

 

மகிழ்வெய்துங் கழுமலமே.

 

1.129.4

 

1387

 

ஊர்கின்ற அரவமொளி விடுதிங்க

 

ளொடுவன்னி மத்தமன்னும்

நீர்நின்ற கங்கைநகு வெண்டலைசேர்

 

செஞ்சடையான் நிகழுங்கோயில்

ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி

 

மலையென்ன நிலவிநின்ற

கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு

 

சுதைமாடக் கழுமலமே.

 

1.129.5

 

1388

 

தருஞ்சரதந் தந்தருளென் றடிநினைந்து

 

தழலணைந்து தவங்கள்செய்த

பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார்தோ

 

ழமையளித்த பெருமான்கோயில்

அரிந்தவய லரவிந்த மதுவுகுப்ப

 

அதுகுடித்துக் களித்துவாளை

கருஞ்சகடம் இளகவளர் கரும்பிரிய

 

அகம்பாயுங் கழுமலமே.

 

1.129.6

 

1389

 

புவிமுதலைம் பூதமாய்ப் புலனைந்தாய்

 

நிலனைந்தாய்க் கரணம்நான்காய்

அவையவைசேர் பயனுருவா யல்லவுரு

 

வாய்நின்றான் அமருங்கோயில்

தவமுயல்வோர் மலர்பறிப்பத் தாழவிடு

 

கொம்புதைப்பக் கொக்கின்காய்கள்

கவணெறிகற் போற்சுனையின் கரைசேரப்

 

புள்ளிரியுங் கழுமலமே.

 

1.129.7

 

1390

 

அடல்வந்த வானவரை யழித்துலகு

 

தெழித்துழலும் அரக்கர்கோமான்

மிடல்வந்த இருபதுதோள் நெரியவிரல்

 

பணிகொண்டோ ன் மேவுங்கோயில்

நடவந்த உழவரிது நடவொணா

 

வகைபரலாய்த் தென்றுதுன்று

கடல்வந்த சங்கீன்ற முத்துவயற்

 

கரைகுவிக்குங் கழுமலமே.

 

1.129.8

 

1391

 

பூமகள்தன் கோனயனும் புள்ளினொடு

 

கேழலுரு வாகிப்புக்கிட்

டாமளவுஞ் சென்றுமுடி யடிகாணா

 

வகைநின்றான் அமருங்கோயில்

பாமருவும் கலைப்புலவோர் பன்மலர்கள்

 

கொண்டணிந்து பரிசினாலே

காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து

 

நின்றேத்துங் கழுமலமே.

 

1.129.9

 

1392

 

குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை

 

மெய்த்தவமாய் நின்றுகையில்

உணல்மருவுஞ் சமணர்களு முணராத

 

வகைநின்றான் உறையுங்கோயில்

மணமருவும் வதுவையொலி விழவினொலி

 

யிவையிசைய மண்மேல்தேவர்

கணமருவும் மறையினொலி கீழ்ப்படுக்க

 

மேல்படுக்குங் கழுமலமே.

 

1.129.10

 

1393

 

கற்றவர்கள் பணிந்தேத்துங் கழுமலத்து

 

ளீசன்றன் கழல்மேல்நல்லோர்

நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம்

 

பந்தன்றான் நயந்துசொன்ன

சொற்றுணையோ ரைந்தினொடைந் திவைவல்லார்

 

தூமலராள் துணைவராகி

முற்றுலக மதுவாண்டு முக்கணான்

 

அடிசேர முயல்கின்றாரே.

 

1.129.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.130 திருவையாறு

 

பண் - மேகராகக்குறிஞ்சி

 

1394

 

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி

 

அறிவழிந்திட் டைம்மே஧லுந்தி

அலமந்த போதாக அஞ்சேலென்

 

றருள்செய்வான் அமருங்கோயில்

வலம்வந்த மடவார்கள் நடமாட

 

முழவதிர மழையென்றஞ்சிச்

சிலமந்தி யலமந்து மரமேறி

 

முகில்பார்க்குந் திருவையாறே.

 

1.130.1

 

1395

 

விடலேறு படநாகம் அரைக்கசைத்து

 

வெற்பரையன் பாவையோடும்

அடலேறொன் றதுவேறி அஞ்சொலீர்

 

பலியென்னு மடிகள்கோயில்

கடலேறித் திரைமோதிக் காவிரியி

 

னுடன்வந்து கங்குல்வைகித்

திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங்

 

கீன்றலைக்குந் திருவையாறே.

 

1.130.2

 

1396

 

கங்காளர் கயிலாய மலையாளர்

 

கானப்பே ராளர்மங்கை

பங்காளர் திரிசூலப் படையாளர்

 

விடையாளர் பயிலுங்கோயில்

கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால்

 

இறகுலர்த்திக் கூதல்நீங்கி

செங்கால்நன் வெண்குருகு பைங்கானல்

 

இரைதேருந் திருவையாறே.

 

1.130.3

 

1397

 

ஊன்பாயு முடைதலைக்கொண் டூரூரின்

 

பலிக்குழல்வார் உமையாள்பங்கர்

தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார்

 

தழலுருவர் தங்குங்கோயில்

மான்பாய வயலருகே மரமேறி

 

மந்திபாய் மடுக்கள்தோறுந்

தேன்பாய மீன்பாய செழுங்கமல

 

மொட்டலருந் திருவையாறே.

 

1.130.4

 

1398

 

நீரோடு கூவிளமும் நிலாமதியும்

 

வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றைத்

தாரோடு தண்கரந்தைச் சடைக்கணிந்த

 

தத்துவனார் தங்குங்கோயில்

காரோடி விசும்பளந்து கடிநாறும்

 

பொழிலணைந்த கமழ்தார்வீதித்

தேரோடும் அரங்கேறிச் சேயிழையார்

 

நடம்பயிலுந் திருவையாறே.

 

1.130.5

 

1399

 

வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்

 

நெறிகாட்டும் விகிர்தனாகிப்

பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த

 

புண்ணியனார் நண்ணுங்கோயில்

காந்தார மிசையமைத்துக் காரிகையார்

 

பண்பாடக் கவினார்வீதித்

தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார்

 

நடமாடுந் திருவையாறே.

 

1.130.6

 

1400

 

நின்றுலா நெடுவிசும்பில் நெருக்கிவரு

 

புரமூன்றும் நீள்வாயம்பு

சென்றுலாம் படிதொட்ட சிலையாளி

 

மலையாளி சேருங்கோயில்

குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச

 

மலர்பாய்ந்து வாசமல்கு

தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு

 

கண்வளருந் திருவையாறே.

 

1.130.7

 

1401

 

அஞ்சாதே கயிலாய மலையெடுத்த

 

அரக்கர்கோன் தலைகள்பத்தும்

மஞ்சாடு தோள்நெரிய அடர்த்தவனுக்

 

கருள்புரிந்த மைந்தர்கோயில்

இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ

 

இளமேதி இரிந்தங்கோடிச்

செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல

 

வயல்படியுந் திருவையாறே.

 

1.130.8

 

1402

 

மேலோடி விசும்பணவி வியன்நிலத்தை

 

மிகவகழ்ந்து மிக்குநாடும்

மாலோடு நான்முகனு மறியாத

 

வகைநின்றான் மன்னுங்கோயில்

கோலோடக் கோல்வளையார் கூத்தாடக்

 

குவிமுலையார் முகத்தினின்று

சேலோடச் சிலையாடச் சேயிழையார்

 

நடமாடுந் திருவையாறே.

 

1.130.9

 

1403

 

குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு

 

சாக்கியருங் குணமொன்றில்லா

மிண்டாடு மிண்டருரை கேளாதே

 

யாளாமின் மேவித்தொண்டீர்

எண்டோ ளர் முக்கண்ணர் எம்மீசர்

 

இறைவரினி தமருங்கோயில்

செண்டாடு புனல்பொன்னிச் செழுமணிகள்

 

வந்தலைக்குந் திருவையாறே.

 

1.130.10

 

1404

 

அன்னமலி பொழில்புடைசூழ் ஐயாற்றெம்

 

பெருமானை அந்தண்காழி

மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான

 

சம்பந்தன் மருவுபாடல்

இன்னிசையா லிவைபத்தும் இசையுங்கால்

 

ஈசனடி யேத்துவார்கள்

தன்னிசையோ டமருலகில் தவநெறிசென்

 

றெய்துவார் தாழாதன்றே.

 

1.130.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.131 திருமுதுகுன்றம்

 

பண் - மேகராகக்குறிஞ்சி

 

1405

 

மெய்த்தாறு சுவையும் ஏழிசையும்

 

எண்குணங்களும் விரும்பும்நால்வே

தத்தாலும் அறிவொண்ணா நடைதெளியப்

 

பளிங்கேபோல் அரிவைபாகம்

ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன்

 

கருதுமூர் உலவுதெண்ணீர்

முத்தாறு வெதிருதிர நித்திலம்வா

 

ரிக்கொழிக்கும் முதுகுன்றமே.

 

1.131.1

 

1406

 

வேரிமிகு குழலியொடு வேடுவனாய்

 

வெங்கானில் விசயன்மேவு

போரின்மிகு பொறையளந்து பாசுபதம்

 

புரிந்தளித்த புராணர்கோயில்

காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல

 

மலருதிர்த்துக் கயமுயங்கி

மூரிவளம் கிளர்தென்றல் திருமுன்றிற்

 

புகுந்துலவு முதுகுன்றமே.

 

1.131.2

 

1407

 

தக்கனது பெருவேள்வி சந்திரனிந்

 

திரனெச்சன் அருக்கன்அங்கி

மிக்கவிதா தாவினொடும் விதிவழியே

 

தண்டித்த விமலர்கோயில்

கொக்கினிய கொழும்வருக்கைக் கதலிகமு

 

குயர்தெங்கின் குவைகொள்சோலை

முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா

 

நீள்வயல்சூழ் முதுகுன்றமே.

 

1.131.3

 

1408

 

வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய

 

விறலழிந்து விண்ணுளோர்கள்

செம்மலரோன் இந்திரன்மால் சென்றிரப்பத்

 

தேவர்களே தேரதாக

மைம்மருவு மேருவிலு மாசுணநாண்

 

அரியெரிகால் வாளியாக

மும்மதிலும் நொடியளவிற் பொடிசெய்த

 

முதல்வனிடம் முதுகுன்றமே.

 

1.131.4

 

1409

 

இழைமேவு கலையல்குல் ஏந்திழையாள்

 

ஒருபாலா யொருபாலெள்கா

துழைமேவும் உரியுடுத்த ஒருவனிருப்

 

பிடமென்பர் உம்பரோங்கு

கழைமேவு மடமந்தி மழைகண்டு

 

மகவினொடும் புகவொண்கல்லின்

முழைமேவு மால்யானை இரைதேரும்

 

வளர்சாரல் முதுகுன்றமே.

 

1.131.5

 

1410

 

நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த

 

நாதனிடம் நன்முத்தாறு

வகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு

 

கரையருகு மறியமோதி

தகையாரும் வரம்பிடறிச் சாலிகழு

 

நீர்குவளை சாயப்பாய்ந்து

முகையார்செந் தாமரைகள் முகம்மலர

 

வயல்தழுவு முதுகுன்றமே.

 

1.131.6

 

1411

 

அறங்கிளரும் நால்வேத மாலின்கீழ்

 

இருந்தருளி யமரர்வேண்ட

நிறங்கிளர்செந் தாமரையோன் சிரமைந்தின்

 

ஒன்றறுத்த நிமலர்கோயில்

திறங்கொள்மணித் தரளங்கள் வரத்திரண்டங்

 

கெழிற்குறவர் சிறுமிமார்கள்

முறங்களினாற் கொழித்துமணி செலவிலக்கி

 

முத்துலைப்பெய் முதுகுன்றமே.

 

1.131.7

 

1411

 

கதிரொளிய நெடுமுடிபத் துடையகடல்

 

இலங்கையர்கோன் கண்ணும்வாயும்

பிதிரொளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை

 

மலையைநிலை பெயர்த்தஞான்று

மதிலளகைக் கிறைமுரல மலரடியொன்

 

றூன்றிமறை பாடவாங்கே

முதிரொளிய சுடர்நெடுவாள் முன்னீந்தான்

 

வாய்ந்தபதி முதுகுன்றமே.

 

1.131.8

 

1413

 

பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும்

 

பூந்துழாய் புனைந்தமாலும்

ஓவாது கழுகேன மாயுயர்ந்தாழ்ந்

 

துறநாடி யுண்மைகாணாத்

தேவாருந் திருவுருவன் சேருமலை

 

செழுநிலத்தை மூடவந்த

மூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ

 

மேலுயர்ந்த முதுகுன்றமே.

 

1.131.9

 

1414

 

மேனியில்சீ வரத்தாரும் விரிதருதட்

 

டுடையாரும் விரவலாகா

ஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாதும்

 

உள்ளுணர்ந்தங் குய்மின்தொண்டீர்

ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை

 

முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று

மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து

 

தவம்புரியும் முதுகுன்றமே.

 

1.131.10

 

1415

 

முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யும்

 

முதுகுன்றத் திறையைமூவாப்

பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய

 

கழுமலமே பதியாக்கொண்டு

தழங்கெரிமூன் றோம்புதொழில் தமிழ்ஞான

 

சம்பந்தன் சமைத்தபாடல்

வழங்குமிசை கூடும்வகை பாடுமவர்

 

நீடுலகம் ஆள்வர்தாமே.

 

1.131.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.132 திருவீழிமிழலை

 

பண் - மேகராகக்குறிஞ்சி

 

1416

 

ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங்

 

கீரிருவர்க் கிரங்கிநின்று

நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர்

 

நெறியளித்தோன் நின்றகோயில்

பாரிசையும் பண்டிதர்கள் பன்னா஡ளும்

 

பயின்றோது மோசைகேட்டு

வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள்

 

பொருள்சொல்லும் மிழலையாமே.

 

1.132.1

 

1417

 

பொறியரவ மதுசுற்றிப் பொருப்பேமத்

 

தாகப்புத் தேளிர்கூடி

மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட

 

கண்டத்தோன் மன்னுங்கோயில்

செறியிதழ்த்தா மரைத்தவிசிற் றிகழ்ந்தோங்கு

 

மிலைக்குடைக்கீழ்ச் செய்யார்செந்நெல்

வெறிகதிர்ச்சா மரையிரட்ட இளவன்னம்

 

வீற்றிருக்கும் மிழலையாமே.

 

1.132.2

 

1418

 

எழுந்துலகை நலிந்துழலும் அவுணர்கள்தம்

 

புரமூன்றும் எழிற்கண்நாடி

உழந்துருளும் அளவையினொள் ளெரிகொளவெஞ்

 

சிலைவளைத்தோன் உறையுங்கோயில்

கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநதம்

 

முகங்காட்டக் குதித்துநீர்மேல்

விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம்

 

வாய்காட்டும் மிழலையாமே.

 

1.132.3

 

1419

 

உரைசேரும் எண்பத்து நான்குநூ

 

றாயிரமாம் யோனிபேதம்

நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய்

 

அங்கங்கே நின்றான்கோயில்

வரைசேரும் முகில்முழவ மயில்கள்பல

 

நடமாட வண்டுபாட

விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள்

 

கையேற்கும் மிழலையாமே.

 

1.132.4

 

1420

 

காணுமா றரியபெரு மானாகிக்

 

காலமாய்க் குணங்கள்மூன்றாய்ப்

பேணுமூன் றுருவாகிப் பேருலகம்

 

படைத்தளிக்கும் பெருமான்கோயில்

தாணுவாய் நின்றபர தத்துவனை

 

உத்தமனை இறைஞ்சீரென்று

வேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப

 

போலோங்கு மிழலையாமே.

 

1.132.5

 

1421

 

அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்

 

றைம்புலனும் அடக்கிஞானப்

புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத்

 

துள்ளிருக்கும் புராணர்கோயில்

தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க்

 

கந்திகழச் சலசத்தீயுள்

மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட

 

மணஞ்செய்யும் மிழலையாமே.

 

1.132.6

 

1422

 

ஆறாடு சடைமுடியன் அனலாடு

 

மலர்க்கையன் இமயப்பாவை

கூறாடு திருவுருவன் கூத்தாடுங்

 

குணமுடையோன் குளிருங்கோயில்

சேறாடு செங்கழுநீர்த் தாதாடி

 

மதுவுண்டு சிவந்தவண்டு

வேறாய உருவாகிச் செவ்வழிநற்

 

பண்பாடும் மிழலையாமே.

 

1.132.7

 

1423

 

கருப்பமிகும் உடலடர்த்துக் காலூன்றிக்

 

கைமறித்துக் கயிலையென்னும்

பொருப்பெடுக்க லுறுமரக்கன் பொன்முடிதோள்

 

நெரித்தவிரற் புனிதர்கோயில்

தருப்பமிகு சலந்தரன்றன் உடல்தடிந்த

 

சக்கரத்தை வேண்டியீண்டு

விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி

 

விமானஞ்சேர் மிழலையாமே.

 

1.132.8

 

1424

 

செந்தளிர்மா மலரோனுந் திருமாலும்

 

ஏனமொடு அன்னமாகி

அந்தமடி காணாதே அவரேத்த

 

வெளிப்பட்டோ ன் அமருங்கோயில்

புந்தியினான் மறைவழியே புற்பரப்பி

 

நெய்சமிதை கையிற்கொண்டு

வெந்தழலின் வேட்டுலகின் மிகவளிப்போர்

 

சேருமூர் மிழலையாமே.

 

1.132.9

 

1425

 

எண்ணிறந்த அமணர்களும் இழிதொழில்சேர்

 

சாக்கியரும் என்றுந்தன்னை

நண்ணரிய வகைமயக்கித் தன்னடியார்க்

 

கருள்புரியும் நாதன்கோயில்

பண்ணமரும் மென்மொழியார் பாலகரைப்

 

பாராட்டும் ஓசைகேட்டு

விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோ

 

டும்மிழியும் மிழலையாமே.

 

1.132.10

 

1426

 

மின்னியலும் மணிமாடம் மிடைவீழி

 

மிழலையான் விரையார்பாதஞ்

சென்னிமிசைக் கொண்டொழுகுஞ் சிரபுரக்கோன்

 

செழுமறைகள் பயிலும்நாவன்

பன்னியசீர் மிகுஞான சம்பந்தன்

 

பரிந்துரைத்த பத்துமேத்தி

இன்னிசையாற் பாடவல்லார் இருநிலத்தில்

 

ஈசனெனும் இயல்பினோரே.

 

1.132.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.133 திருவேகம்பம்

 

பண் - மேகராகக்குறிஞ்சி

 

1427

 

வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி நூலொருபால் பொருந்தக்

கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற் கச்சி தன்னுள்

அந்தமில் குணத்தா ரவர்போற்ற அணங்கினொ டாடல்புரி

எந்தை மேவிய ஏகம்பந்தொழு தேத்த இடர்கெடுமே.

 

1.133.1

 

1428

 

வரந்திகழு மவுணர் மாநகர்மூன் றுடன்மாய்ந் தவியச்

சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேயவிடம்

குருந்தம் மல்லிகை கோங்குமா தவிநல்ல குராமரவந்

திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே.

 

1.133.2

 

1429

 

வண்ணவெண் பொடிப்பூசு மார்பின் வரியர வம்புனைந்து

பெண்ணமர்ந் தெரியாடற் பேணிய பிஞ்ஞகன் மேயவிடம்

விண்ணமர் நெடுமாட மோங்கி விளங்கிய கச்சிதன்னுள்

திண்ணமாம் பொழில்சூழ்ந்த ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.

 

1.133.3

 

1430

 

தோலும்நூ லுந்துதைந்த வரைமார்பிற் சுடலைவெண் ணீறணிந்து

காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த கடவுள் கருதுமிடம்

மாலைவெண் மதிதோயு மாமதிற் கச்சி மாநகருள்

ஏலம்நாறிய சோலைசூழ் ஏகம்பம் ஏத்த விடர்கெடுமே.

 

1.133.4

 

1431

 

தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத் தூமதி யம்புனைந்து

பாடல்நான் மறையாகப் பல்கணப் பேய்க ளவைசூழ

வாடல்வெண் டலையோ டனலேந்தி மகிழ்ந்துடன் ஆடல்புரி

சேடர்சேர் கலிக்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.

 

1.133.5

 

1432

 

சாகம்பொன் வரையாகத் தானவர் மும்மதில் சாயவெய்

தாகம்பெண் ணொருபாக மாக அரவொடு நூலணிந்து

மாகந்தோய் மணிமாட மாமதிற் கச்சி மாநகருள்

ஏகம்பத் துறையீசன் சேவடி யேத்த விடர்கெடுமே.

 

1.133.6

 

               

(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

 

1.133.7

 

1433

 

வாணிலா மதிபுல்கு செஞ்சடை வாளர வம்மணிந்து

நாணிடத் தினில்வாழ்க்கை பேணி நகுதலையிற் பலிதேர்ந்

தேணிலா அரக்கன்றன் நீள்முடி பத்தும் இறுத்தவனூர்

சேணுலாம் பொழிற்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.

 

1.133.8

 

1434

 

பிரமனுந் திருமாலுங் கைதொழப் பேரழ லாயபெம்மான்

அரவஞ் சேர்சடை அந்தணன் அணங்கினொ டமருமிடம்

கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக் கச்சி மாநகருள்

மரவஞ்சூழ் பொழிலேகம் பந்தொழ வில்வினை மாய்ந்தறுமே.

 

1.133.9

 

1435

 

குண்டுபட் டமணா யவரொடுங் கூறைதம் மெய்போர்க்கும்

மிண்டர் கட்டிய கட்டுரை யவைகொண்டு விரும்பேன்மின்

விண்டவர் புரமூன்றும் வெங்கணை ஒன்றி னாலவியக்

கண்டவன் கலிக்கச்சி யேகம்பங் காண விடர்கெடுமே.

 

1.133.10

 

1436

 

ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி யேகம்பம் மேயவனை

காரினார் மணிமாட மோங்கு கழுமல நன்னகருள்

பாரினார் தமிழ்ஞான சம்பந்தன் பரவிய பத்தும்வல்லார்

சீரினார் புகழோங்கி விண்ணவ ரோடுஞ் சேர்பவரே.

 

1.133.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.134 திருப்பறியலூர் - திருவீரட்டம்

 

பண் - மேகராகக்குறிஞ்சி

 

1437

 

கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்

நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்

திருத்த முடையார் திருப்பறி யலூரில்

விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே.

 

1.134.1

 

1438

 

மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்

பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான்

திருந்து மறையோர் திருப்பறி யலூரில்

விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே.

 

1.134.2

 

1439

 

குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன்

விளிந்தான் அடங்க வீந்தெய்தச் செற்றான்

தெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்

மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.

 

1.134.3

 

1440

 

பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச்

செறப்பாதி யந்தஞ் செலச்செய்யுந் தேசன்

சிறப்பா டுடையார் திருப்பறி யலூரில்

விறற்பா ரிடஞ்சூழ வீரட்டத் தானே.

 

1.134.4

 

1441

 

கரிந்தார் இடுகாட்டி லாடுங் கபாலி

புரிந்தார் படுதம் புறங்காட் டிலாடும்

தெரிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்

விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.

 

1.134.5

 

1442

 

அரவுற்ற நாணா அனலம்ப தாகச்

செருவுற் றவர்புரந் தீயெழச் செற்றான்

தெருவிற் கொடிசூழ் திருப்பறி யலூரில்

வெருவுற் றவர்தொழும் வீரட்டத் தானே.

 

1.134.6

 

1443

 

நரையார் விடையான் நலங்கொள் பெருமான்

அரையா ரரவம் அழகா வசைத்தான்

திரையார் புனல்சூழ் திருப்பறி யலூரில்

விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.

 

1.134.7

 

1444

 

வளைக்கும் மெயிற்றின் னரக்கன் வரைக்கீழ்

இளைக்கும் படிதா னிருந்தேழை யன்னம்

திளைக்கும் படுகர்த் திருப்பறி யலூரில்

விளைக்கும் வயல்சூழ்ந்த வீரட்டத் தானே.

 

1.134.8

 

1445

 

வளங்கொள் மலர்மேல் அயனோத வண்ணன்

துளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான்

இளங்கொம் பனாளோ டிணைந்தும் பிணைந்தும்

விளங்குந் திருப்பறியல் வீரட்டத் தானே.

 

1.134.9

 

1446

 

சடையன் பிறையன் சமண்சாக் கியரோ

டடையன் பிலாதான் அடியார் பெருமான்

உடையன் புலியின் உரிதோல் அரைமேல்

விடையன் திருப்பறியல் வீரட்டத் தானே.

 

1.134.10

 

1447

 

நறுநீ ருகுங்காழி ஞானசம் பந்தன்

வெறிநீர்த் திருப்பறியல் வீரட்டத் தானைப்

பொறிநீ டரவன் புனைபாடல் வல்லார்க்

கறுநீ டவலம் அறும்பிறப் புத்தானே.

 

1.134.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.135 திருப்பராய்த்துறை

 

பண் - மேகராகக்குறிஞ்சி

 

 

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

சுவாமிபெயர் - பராய்த்துறைநாதவீசுவரர், தேவியார் - பொன்மயிலாம்பிகையம்மை.

 

1448

 

நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை

கூறுசேர்வதொர் கோலமாய்ப்

பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை

ஆறுசேர்சடை அண்ணலே.

 

1.135.1

 

1449

 

கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை

வந்தபூம்புனல் வைத்தவர்

பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை

அந்தமில்ல அடிகளே.

 

1.135.2

 

1450

 

வேதர்வேதமெல் லாமுறையால்விரித்

தோதநின்ற ஒருவனார்

பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை

ஆதியாய அடிகளே.

 

1.135.3

 

1451

 

தோலுந்தம்மரை யாடைசுடர்விடு

நூலுந்தாமணி மார்பினர்

பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை

ஆலநீழல் அடிகளே.

 

1.135.4

 

1452

 

விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்

இரவில்நின்றெரி யாடுவர்

பரவினாரவர் வேதம்பராய்த்துறை

அரவமார்த்த அடிகளே.

 

1.135.5

 

1453

 

மறையுமோதுவர் மான்மறிக்கையினர்

கறைகொள்கண்ட முடையவர்

பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை

அறையநின்ற அடிகளே.

 

1.135.6

 

1454

 

விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்

சடையிற்கங்கை தரித்தவர்

படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை

அடையநின்ற அடிகளே.

 

1.135.7

 

1455

 

தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை

நெருக்கினார்விர லொன்றினால்

பருக்கினாரவர் போலும்பராய்த்துறை

அருக்கன்றன்னை அடிகளே.

 

1.135.8

 

1456

 

நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்

தோற்றமும் மறியாதவர்

பாற்றினார்வினை யானபராய்த்துறை

ஆற்றல்மிக்க அடிகளே.

 

1.135.9

 

1457

 

திருவிலிச்சில தேரமண்ஆதர்கள்

உருவிலாவுரை கொள்ளேலும்

பருவிலாலெயில் எய்துபராய்த்துறை

மருவினான்றனை வாழ்த்துமே.

 

1.135.10

 

1458

 

செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்

செல்வர்மேற் சிதையாதன

செல்வன்ஞான சம்பந்தனசெந்தமிழ்

செல்வமாமிவை செப்பவே.

 

1.135.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

 

1.136 திருத்தருமபுரம்

 

பண் - யாழ்மூரி

 

1459

 

மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்

 

நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்

பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்

 

அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்

வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை

 

இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே

தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை

 

எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.

 

1.136.1

 

1460

 

பொங்கு நடைப்புக லில்விடை யாமவ ரூர்திவெண்

 

பொடி யணி தடங் கொள்மார் புபூண நூல்புரள

மங்குலி டைத்தவ ழும்மதி சூடுவ ராடுவர்

 

வளங் கிளர் புன லரவம் வைகிய சடையர்

சங்கு கடற்றிரை யாலுதை யுண்டுச ரிந்திரிந்

 

தொசிந் தசைந் திசைந்து சேரும் வெண்மணற் குவைமேல்

தங்கு கதிர்மணி நித்தில மெல்லிரு ளொல்கநின்

 

றிலங் கொளிந் நலங் கெழிற் றருமபு ரம்பதியே.

 

1.136.2

 

1461

 

விண்ணுறு மால்வரை போல்விடை யேறுவர் ஆறுசூ

 

டுவர் விரி சுரி யொளிகொள் தோடுநின் றிலங்கக்

கண்ணுற நின்றொளி ருங்கதிர் வெண்மதிக் கண்ணியர்

 

கழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப்

பெண்ணுற நின்றவர் தம்முரு வம்மயன் மால்தொழவ்

 

வரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார்

தண்ணிதழ் முல்லையொ டெண்ணிதழ் மௌவல் மருங்கலர்

 

கருங் கழிந் நெருங் குநற் றரும புரம்பதியே.

 

1.136.3

 

1462

 

வாருறு மென்முலை நன்னுதல் ஏழையொ டாடுவர்

 

வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர்

காருற நின்றல ரும்மலர்க் கொன்றை யங்கண்ணியர்

 

கடு விடை கொடி வெடிகொள் காடுறை பதியர்

பாருற விண்ணுல கம்பர வப்படு வோரவர்

 

படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார்

தாருறு நல்லர வம்மலர் துன்னிய தாதுதிர்

 

தழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே.

 

1.136.4

 

1463

 

நேரும வர்க்குண ரப்புகி லில்லைநெ டுஞ்சடைக்

 

கடும் புனல் படர்ந் திடம் படுவதொர் நிலையர்

பேரும வர்க்கெனை யாயிரம் முன்னைப்பி றப்பிறப்

 

பிலா தவ ருடற் றடர்த்த பெற்றி யாரறிவார்

ஆரம வர்க்கழல் வாயதொர் நாகம ழஃகுறவ்

 

வெழுஃ கொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல்

தாரம வர்க்கிம வான்மகள் ஊர்வது போர்விடை

 

கடி படு செடி பொழிற் றருமபு ரம்பதியே.

 

1.136.5

 

1464

 

கூழையங் கோதைகு லாயவள் தம்பிணை புல்கமல்

 

குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய்

மாழையொண் கண்மட வாளையொர் பாகம கிழ்ந்தவர்

 

வலம் மலி படை விடை கொடிகொ டும்மழுவாள்

யாழையும் மெள்கிட வேழிசை வண்டுமு ரன்றினந்

 

துவன் றிமென் சிறஃ கறை யுறந்நறவ் விரியும்நற்

தாழையும் ஞாழலும் நீடிய கானலி னள்ளிசைப்

 

புள் ளினந் துயில் பயில் தருமபு ரம்பதியே.

 

1.136.6

 

1465

 

தேமரு வார்குழல் அன்ன நடைப்பெடை மான்விழித்

 

திருந் திழை பொருந்து மேனி செங்கதிர் விரிய

தூமரு செஞ்சடை யிற்றுதை வெண்மதி துன்றுகொன்றை

 

தொல் புனல் சிரங் கரந் துரித்த தோலுடையர்

காமரு தண்கழி நீடிய கானல கண்டகங்

 

கடல் அடை கழி யிழிய முண்ட கத்தயலே

தாமரை சேர்குவ ளைப்படு கிற்கழு நீர்மலர்

 

வெறி கமழ் செறி வயற் றருமபு ரம்பதியே.

 

1.136.7

 

1466

 

தூவண நீறக லம்பொலி யவ்விரை புல்கமல்

 

குமென் மலர் வரை புரை திரள்பு யம்மணிவர்

கோவண மும்முழை யின்னத ளும்முடை யாடையர்

 

கொலை மலி படையொர் சூல மேந்திய குழகர்

பாவண மாவல றத்தலை பத்துடை யவ்வரக்

 

கனவ் வலியொர் கவ்வை செய் தருள்புரி தலைவர்

தாவண ஏறுடை யெம்மடி கட்கிடம் வன்றடங்

 

கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே.

 

1.136.8

 

1467

 

வார்மலி மென்முலை மாதொரு பாகம தாகுவர்

 

வளங் கிளர் மதி யரவம் வைகிய சடையர்

கூர்மலி சூலமும் வெண்மழு வும்மவர் வெல்படை

 

குனி சிலை தனிம் மலைய தேந்திய குழகர்

ஆர்மலி ஆழிகொள் செல்வனும் அல்லி கொள்தாமரைம்

 

மிசை யவன் அடிம் முடி யளவு தாமறியார்

தார்மலி கொன்றைய லங்கலு கந்தவர் தங்கிடந்

 

தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே.

 

1.136.9

 

1468

 

புத்தர் கடத்துவர் மொய்த்துறி புல்கிய கையர்பொய்ம்

 

மொழிந் தழிவில் பெற்றி யுற்ற நற்றவர் புலவோர்

பத்தர்கள் அத்தவ மெய்ப்பய னாகவு கந்தவர்

 

நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர்

முத்தன வெண்ணகை யொண்மலை மாதுமை பொன்னணி

 

புணர் முலை யிணை துணை யணைவ தும்பிரியார்

தத்தரு வித்திர ளுந்திய மால்கட லோதம்வந்

 

தடர்ந் திடும் தடம் பொழிற் றருமபு ரம்பதியே.

 

1.136.10

 

1469

 

பொன்னெடு நன்மணி மாளிகை சூழ்விழ வம்மலி

 

பொரு புனல் திரு வமர் புகலியென் றுலகிற்

தன்னொடு நேர்பிற வில்பதி ஞானசம் பந்தனஃ

 

துசெந் தமிழ்த் தடங் கடற் றருமபு ரம்பதியைப்

பின்னெடு வார்சடை யிற்பிறை யும்மர வும்முடை

 

யவன் பிணை துணை கழல்கள் பேணுத லுரியார்

இன்னெடு நன்னுல கெய்துவ ரெய்திய போகமும்

 

உறு வர்க ளிடர் பிணி துயரணை விலரே.

 

1.136.11

 

 

திருச்சிற்றம்பலம்

 

தேவாரப் பதிகங்கள் முதல் திருமுறை முதல் முற்றும்.


thevaram

To Top