அபிராமி அந்தாதி பாடல் வரிகள்

கணபதி காப்பு

 

தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை

ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற

சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே

காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.




 

1. ஞானமும் நல்வித்தையும் பெற

 

உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை

துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன

விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே.

 

2. பிரிந்தவர் ஒன்று சேர

 

துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்

பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்

கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்

அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.

 

3. குடும்பக் கவலையிலிருந்து விடுபட

 

அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு

செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்

பிறந்தேன் நின்அன்பர் பெருமைஎண்ணாதகரும நெஞ்சால்

மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

 

4. உயர் பதவிகளை அடைய

 

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி

குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்

பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த

புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

 

5. மனக்கவலை தீர

 

பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்

அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்

திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.

 

6. மந்திர சித்தி பெற

 

சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே

மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!

முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே

பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.

 

7. மலையென வரும் துன்பம் பனியென நீங்க

 

ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்

கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,

மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்

துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.

 

8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட

 

சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்

வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்

அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்

சுந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.

 

9. அனைத்தும் வசமாக

 

கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்

பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்

திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்

முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே.

 

10. மோட்ச சாதனம் பெற

 

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;

என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்

ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து

அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

 

11. இல்வாழ்க்கையில் இன்பம் பெற

 

ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,

வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்

தான் அந்தமான சரணார விந்தம் தவளநிறக்

கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே.

 

12. தியானத்தில் நிலைபெற

 

கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்தி

பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவா

நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த

புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.

 

13. வைராக்கிய நிலை எய்த

 

பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்

காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு

மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!

மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!

 

14. தலைமை பெற

 

வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;

சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;

பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்

சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே.

 

15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற

 

தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்

மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்

விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?

பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.

 

16. முக்காலமும் உணரும் திறன் உண்டாக

 

கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்து, ஒளிரும்

ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா

வெளியே! வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே!

அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.

 

17. கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய

 

அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்

துதிசய ஆனன சுந்தரவல்லி, துணைஇரதி

பதிசயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர் தம்

மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே.

 

18. மரண பயம் நீங்க

 

வவ்விய பாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்

செவ்வியும், உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே

அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து

வெவ்விய காலன் என்மேல்வரும் போது வெளிநிற்கவே.

 

19. பேரின்ப நிலையடைய

 

வெளிநின்ற நின் திருமேனியைப்பார்த்தேன் விழியும் நெஞ்சும்,

களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே

தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?

ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

 

20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக

 

உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ?

அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம்

நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சமோ?

மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.

 

21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய

 

மங்கலை! செங்கலசம் முலையாள்! மலையாள்! வருணச்

சங்கலை செங்கை! சகலகலாமயில்! தாவுகங்கை

பொங்கு அலைதங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்!

பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்! பசும் பொற்கொடியே.

 

22. இனிப் பிறவா நெறி அடைய

 

கொடியே! இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த

படியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப்

பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே!

அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்தாண்டு கொள்ளே.

 

23. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க

 

கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாது; என்பர் கூட்டம் தன்னை

விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு

உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த

கள்ளே! களிக்கும் களியே அளிய என் கண்மணியே.

 

24. நோய்கள் விலக

 

மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த

அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்

பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!

பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.

 

25. நினைத்த காரியம் நிறைவேற

 

பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க

முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும்

அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!

என்னே! இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே.

 

26. சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக

 

ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,

காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு

சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்

நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.

 

27. மனநோய் அகல

 

உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு

படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே

அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்

துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.

 

28. இம்மை மறுமை இன்பங்கள் அடைய

 

சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்

புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்

அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்

செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.

 

29. எல்லா சித்திகளும் அடைய

 

சித்தியும், சித்திதரும் தெய்வமுமாகத் திகழும்

பராசத்தியும், சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்

முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த

புத்தியும், புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே.

 

30. அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க

 

அன்றே தடுத்து! என்னை ஆண்டுகொண்டாய்; கொண்டதல்ல என்கை

நன்றே உனக்கு இனி நான் என்செயினும், நடுக்கடலுள்

சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே;

ஒன்றே! பல உருவே! அருவே! என் உமையவளே!

 

31. மறுமையில் இன்பம் உண்டாக

 

உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு

எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச்

சமையங்களும் இல்லை; ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை;

அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே.

 

32. துர்மரணம் வராமலிருக்க

 

ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்

பாசத்தில் அல்லல்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்

வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட

நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே!

 

33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க

 

இழைக்கும் வினைவழியே ஆடும் காலன் எனைநடுங்க

அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய்; அத்தர் சித்தமெல்லாம்

குழைக்கும் களபக் குவிமுலை யாமலைக் கோமளையே!

உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.

 

34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க

 

வந்தே சரணம் புகும் அடியாருக்கு வான்உலகம்

தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்

பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொன்

செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.

 

35. திருமணம் நிறைவேற

 

திங்கள் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க

எங்கட்கு ஒருதவம் எய்தியவா! எண்ணிறந்த விண்ணோர்

தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள்

வெங்கண் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.

 

36. பழைய வினைகள் வலிமை பெற

 

பொருளே! பொருள் முடிக்கும் போகமே! அரும்போகம் செய்யும்

மருளே! மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து

இருளேதும் இன்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்தன்

அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே!

 

37. நவமணிகளைப் பெற

 

கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன

மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விட அரவின்

பைக்கே அணிவது பண்மணிக்கோவையும் பட்டும், எட்டுத்

திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே!

 

38. வேண்டியதை வேண்டியவாறு அடைய

 

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்

தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்

துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்

அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.

 

39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற

 

ஆளுகைக்கு உன் தன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன்பால்

மீளுகைக்கு உன் தன் விழியின் கடைஉண்டு; மேல் இவற்றின்

மூளுகைக்கு என்குறை; நின்குறையே அன்று; முப்புரங்கள்

மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே!

 

40. பூர்வ புண்ணியம் பலன்தர

 

வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்

பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்

காணதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு

பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே.

 

41. நல்லடியார் நட்புப் பெற

 

புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக்

கண்ணியும், செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்

நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்

பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.

 

42. உலகினை வசப்படுத்த

 

இடம் கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து

வடம்கொண்ட கொங்கை மலை கொண்டு, இறைவர் வலிய நெஞ்சை

நடம்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்

படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே.

 

43. தீமைகள் ஒழிய

 

 பரிபுரச் சீறடி! பாசாங் குசை! பஞ்ச பாணி! இன்சொல்

திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்

பரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை

எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.

 

44. பிரிவுணர்ச்சி அகல

 

தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்

அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்; ஆகையினால்

இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்

துவளேன், இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.

 

45. உலகோர் பழியிலிருந்து விடுபட

 

தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே

பண்டு செய்தார் உளரோ? இலரோ? அப்பரிசு அடியேன்

கண்டு செய்தால் அது கைதவமோ? அன்றிச் செய்தவமோ?

மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே; பின் வெறுக்கை அன்றே.

 

46. நல்நடத்தையோடு வாழ

 

வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்

பொறுக்கும் தகைமை புதியதன்றே; புது நஞ்சைஉண்டு

கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்துபொன்னே!

மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவேனே!

 

47. யோகநிலை அடைய

 

வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்; மனத்தே ஒருவர்

வீழும்படி அன்று, விள்ளும் படி அன்று, வேலைநிலம்

ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவுபகல்

சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

 

48. உடல் பற்று நீங்க

 

சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்

படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதிந்து நெஞ்சில்

இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ;

குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.

 

49. மரணத் துன்பம் இல்லாதிருக்க

 

குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கிட்ட

வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து

அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல்என்பாய்;

நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே.

 

50. அம்பிகையை நேரில் காண

 

நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச

சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு

வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று

ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

 

51. மோகம் நீங்க

 

அரணம் பொருள் என்றருள் ஒன்றிலாத அசுரர் தங்கள்

முரண்அன்றழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே

சரணம் சரணம் எனநின்ற நாயகி தன் அடியார்

மரணம், பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே.

 

52. பெருஞ்செல்வம் அடைய

 

வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை

பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த

ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு, அன்பு முன்பு

செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே.

 

53. பொய்யுணர்வு நீங்க

 

சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்,

பென்னம் பெரிய முலையும், முத்தாரமும் பிச்சிமொய்த்து

கன்னங்கரிய குழலும்கண் மூன்றும் கருத்தில் வைத்துத்

தன்னந்தனி இருப்பார்க்கு இது போலும் தவமில்லையே.

 

54. கடன் தீர

 

இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு

நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்

கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்

செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

 

55. மோனநிலை எய்த

 

மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்றது

அன்னாள்; அகமகிழ் ஆனந்தவல்லி; அருமறைக்கு

முன்னாய் நடுஎங்குமாய் முடிவாய முதல்விதன்னை

உன்னாது ஒழியினும், உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே.

 

56. யாவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டாக

 

ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலம் எங்குமாய்

நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்என்தன் நெஞ்சினுள்ளே

பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்

அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே.

 

57. வறுமை ஒழிய

 

ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்

உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால்

செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்

மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய்யருளே.

 

58. மனஅமைதி பெற

 

அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்

தருணாம் புயத்தும் முலைத்தையல் நல்லாள், தகை சேர்நயனக்

கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்,

சரணாம் புயமும் அல்லாற் கண்டிலேன் ஒருதஞ்சமுமே.

 

59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர

 

தஞ்சம் பிறதில்லை ஈதல்லது என்று உன் தவநெறிக்கே

நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒன்றை; நீள்சிலையும்

அஞ்சும் அம்பும் மிக்கலராக நின்றாய்; அறியார் எனினும்

பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.

 

60. மெய்யுணர்வு பெற

 

பாலினும் சொல் இனியாய்! பனி மாமலர்ப்பாதம் வைக்க

மாலினும் தேவர் வணங்கநின்றோன் கொன்றை வார்சடையின்

மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு

நாலினும் சாலநன்றோ அடியேன் முடைநாய்த்தலையே?

 

61. மாயையை வெல்ல

 

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்து

நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்

பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறுபெற்றேன்?

தாயே! மலைமகளே! செங்கண்மால் திருத்தங்கச்சியே.

 

62. எத்தகைய அச்சமும் அகல

 

தங்கச்சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து, மத

வெங்கண் கரிபுரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்

கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி! கோகனகச்

செங்கைக் கரும்பும், அலரும் எப்போதும் என் சிந்தையதே.

 

63. அறிவு தெளிவோடு இருக்க

 

 தேறும்படி சில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக்

கூறும்பொருள் குன்றில்கொட்டும் தறிகுறிக்கும்; சமயம்

ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்

வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே.

 

64. பக்தி பெருக

 

வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு

பூணேன்; உனக்கு அன்பு பூண்டு கொண்டேன்; நின்புகழ்ச்சியன்றிப்

பேணேன்; ஒருபொழுதும் திருமேனி பிரகாசமின்றிக்

காணேன் இருநிலமும் திசை நான்கும் ககனமுமே.

 

65. ஆண்மகப்பேறு அடைய

 

ககனமும், வானமும், புவனமும் காணவிற் காமன் அங்கம்

தகனம்முன் செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்

முகனும் முந்நான்கு இருமூன்றெனத் தோன்றிய மூதறிவின்

மகனும் உண்டாயது அன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே!

 

66. கவிஞராக

 

வல்லபம் ஒன்றறியேன்; சிறியேன் நின் மலரடிச்செம்

பல்லவம் அல்லது பற்று ஒன்றிலேன் பசும் பொற்பொருப்பு

வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்; வினையேன்தொடுத்த

சொல் அவமாயினும் நின்திருநாமங்கள் தோத்திரமே.

 

67. பகைவர்கள் அழிய

 

தோத்திரம் செய்து, தொழுது, மின்போலும் நின் தோற்றம்ஒரு

மாத்திரைப் போதும் மனதில் வையாதவர் வண்மை, குலம்

கோத்திரம், கல்வி, குணம், குன்றி நாளும் குடில்கள்தொறும்

பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பாரெங்குமே.

 

68. நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக

 

பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர்விசும்பும்,

ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச்

சேரும் தலைவி, சிவகாமசுந்தரி சீரடிக்கே

சாரும் தவமுடையார் படையாத தனம் இல்லையே.

 

69. சகல சௌபாக்கியங்களும் அடைய

 

தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா

மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா

இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே

கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

 

70. நுண் கலைகளில் சித்தி பெற

 

கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில்

பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்

மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்

பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.

 

71. மனக்குறைகள் தீர

 

 அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி; அருமறைகள்

பழகிச் சிவந்த பதாம் புயத்தாள்; பனி மாமதியின்

குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க

இழவுற்று நின்றுநெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே!

 

72. பிறவிப் பிணி தீர

 

என்குறை தீரநின்று ஏத்துகின்றேன்; இனி யான் பிறக்கின்

நின்குறையே அன்றி யார் குறை காண்; இரு நீள்விசும்பின்

மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்?

தன்குறை தீர எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே.

 

73. குழந்தைப் பேறு உண்டாக

 

தாமம் கடம்பு; படைபஞ்சபாணம்; தனுக்கரும்பு;

யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது; எமக்கென்று வைத்த

சேமம் திருவடி; செங்கைகள் நான்கு; ஒளி செம்மை; அம்மை

நாமம் திரிபுரை; ஒன்றோடு இரண்டு நயனங்களே.

 

74. தொழிலில் மேன்மை அடைய

 

நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்

அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையப்

பயன்என்று கொண்டவர் பாவையர் ஆடவும், பாடவும்பொன்

சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.

 

75. விதியை வெல்ல

 

தங்குவர் கற்பகத் தருவின் நீழலில்; தாயரின்றி

மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை; மால்வரையும்

பொங்குவர் அழியும்! ஈரேழ்புவனமும் பூத்த உந்திக்

கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.

 

76. தனக்கு உரிமையானதைப் பெற

 

குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம்; நின் குறிப்பறிந்து

மறித்தேன் மறலிவருகின்ற நேர்வழி; வண்டுகிண்டி

வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்பிரான் ஒருகூற்றை மெய்யில்

பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே.

 

77. பகை அச்சம் நீங்க

 

பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சவர்

உயிரவி உண்ணும் உயர்சண்டி, காளி ஒளிரும்கலா

வயிரவி, மண்டலி, மாலினி, சூலி வராகி என்றே

செயிரவி நான்மறை சேர்திருநாமங்கள் செப்புவரே.

 

78. சகல செல்வங்களையும் அடைய

 

செப்பும், கனக கலசமும் போலும் திருமுலைமேல்

அப்பும் களப அபிராமவல்லி! அணிதிரளக்

கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்

துப்பும் நிலவும் எழுதிவைத்தேன்என் துணைவிழிக்கே.

 

79. கட்டுகளில் இருந்து விடுபட

 

 விழிக்கே அருளுண்டு; அபிராமவல்லிக்கு வேதம்சொன்ன

வழிக்கே வழிபட நெஞ்சுண்டு; எமக்கு அவ்வழி கிடக்கப்

பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ்நரகக்

குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே.

 

80. பெற்ற மகிழ்ச்சி நிலைத்திட

 

கூட்டியவா! என்னைத் தன் அடியாரில் கொடியவினை

ஒட்டியவா! எண்கண் ஒடியவா! தன்னை உள்ளவண்ணம்

காட்டியவா! கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா!

ஆட்டியவா நடம் ஆடகத்தாமரை ஆரணங்கே.

 

81. நன்னடத்தை உண்டாக

 

அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்

வணங்கேன்; ஒருவரை வாழ்த்துகிலேன்; நெஞ்சில் வஞ்சகரோடு

இணங்கேன் எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்

பிணங்கேன்; அறிவொன்றிலேன் எண்கண் நீவைத்த பேரளியே.

 

82. மன ஒருமைப்பாடு அடைய

 

அளியார் கமலத்தில் ஆரணங்கே! அகிலாண்டமும் நின்

ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும்

களியாகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரைபுரண்டு,

வெளியாய்விடின், எங்ஙனே மறப்பேன் நின்விரகினையேன்.

 

83. ஏவலர் பலர் உண்டாக

 

விரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக்கமலம்

இரவும் பகலும் இறைஞ்ச வல்லார், இமையோர் எவரும்

பரவும் பதமும், அயிராவதமும், பகீரதீயும்

உரவும் குலிசமும், கற்பகக் காவும் உடையவரே.

 

84. சங்கடங்கள் தீர

 

உடையாளை, ஒல்கு செம்பட்டு உடையாளை; ஒளிர்மதிசெஞ்

சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளை, தயங்குநுண்ணூல்

இடையாளை, எங்கள்பெம்மான் இடையாளை, இங்கு என்னை இனிப்

படையாளை, உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.

 

85. துன்பங்கள் நீங்க

 

பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும், பனிச்சிறை வண்டு

ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும் என் அல்லல்எல்லாம்

தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்,

வார்க்குங்கும முலையும், முலைமேல் முத்துமாலையுமே.

 

86. ஆயுத பயம் நீங்க

 

மாலயன் தேட, மறைதேட, வானவர் தேட, நின்ற

காலையும், சூடகக் கையையும், கொண்டு, கதித்தகப்பு

வேலை வெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில்கண்டாய்;

பாலையும் தேனையும், பாகையும் போலும் பணிமொழியே.

 

87. செயற்கரிய செய்து புகழ் பெற

 

 மொழிக்கும், நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தி என்தன்

விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால்! விழியால் மதனை

அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம்

பழிக்கும் படி ஒருபாகம் கொண்டாளும் பராபரையே.

 

88. எப்போதும் அம்பிகை அருள் பெற

 

பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும்; உன் பக்தருக்குள்

தரம் அன்று இவன்என்று தள்ளத்தகாது; தரியலர் தம்

புரம்அன்று எரியப் பொருப்புவில்வாங்கிய போதில் அயன்

சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே!

 

89. யோக சித்தி பெற

 

சிறக்கும் கமலத் திருவே! நின்சேவடி சென்னிவைக்கத்

துறக்கம் தரும், நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற

உறக்கம் தரவந்து உடம்போடு உயிர் உறவற்ற, அறிவு

மறக்கும் பொழுது, என்முன்னே வரல்வேண்டும் வருந்தியுமே.

 

90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க

 

வருந்தா வகைஎன் மனத்தாமரையினில் வந்துபுதுந்து

இருந்தாள் பழைய இருப்பிடமாக இனிஎனக்குப்

பொருந்தாது ஒருபொருள் இல்லை; விண்மேவும் புலவருக்கு

விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே.

 

91. அரசாங்கச் செயலில் வெற்றி பெற

 

மெல்லிய நுண் இடைமின் அனையாளை, விரிசடையோன்

புல்லிய மென்முலை பொன் அனையாளைப் புகழ்ந்துமறை

சொல்லிய வண்ணம் தொழும்அடியாரைத் தொழுமவர்க்குப்

பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம்தருமே.

 

92. மனநிலை பக்குவமடைய

 

பதத்தே உருகி, நின்பாதத்திலே மனம் பற்றி, உன்தன்

இதத்தே ஒழுக அடிமைகொண்டாய்; இனியான் ஒருவர்

மதத்தே மதிமயங்கேன்; அவர் போன வழியும் செல்லேன்;

முதல்தேவர் மூவரும், யாவரும் போற்றும் முகிழ்நகையே.

 

93. உள்ளத்தில் ஒளி உண்டாக

 

நகையே இஃதிந்த ஞாலம் எல்லாம்பெற்ற நாயகிக்கு

முகையே முகிழ்முலை; மானே முதுகண்; முடிவில் அந்த

வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது; நாம்

மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே.

 

94. மனநிலை தூய்மையாக

 

விரும்பித் தொழும் அடியார், விழிநீர்மல்கி மெய்புளகம்

அரும்பி, ததும்பிய ஆனந்தமாகி; அறிவிழந்து,

சுரும்பிற் களித்து மொழி தடுமாறி, முன் சொன்னஎல்லாம்

தரும்பித்தர் ஆவரென்றால், அபிராமி சமயம் நன்றே.

 

95. மன உறுதி பெற

 

நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது

ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம் எனக்கு உள்ள எல்லாம்

அன்றே உனதென்று அளித்து விட்டேன்; அழியாத குணக்

குன்றே! அருட்கடலே! இமவான் பெற்ற கோமளமே!

 

96. எங்கும் பெருமை பெற

 

கோமள வல்லியை அல்லியம் தாமரைக்கோயில் வைகும்

யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய

சாமள மேனிச் சகலகலா மயில் தன்னைத் தம்மால்

ஆமளவும் தொழுவார் எழுபாருக்கும் ஆதிபரே.

 

97. புகழும் அறமும் வளர

 

ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்

போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,

காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்

சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே.

 

98. வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற

 

தைவந்து நின்னடித் தாமரைசூடிய சங்கரற்குக்

கைவந்த தீயும், தலைவந்த ஆறும் கரந்தது எங்கே?

மெய்வந்த நெஞ்சில் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்

பொய்வந்த நெஞ்சில் புக அறியா மடப் பூங்குயிலே.

 

99. அருள் உணர்வு வளர

 

குயிலாய் இருக்கும் கடம்படாவியிடை; கோல இயல்

மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை; வந்துதித்த

வெயிலாய் இருக்கும் விசும்பில்; கமலத்தின் மீது அன்னமாம்

கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே.

 

100. அம்பிகையை மனத்தில் காண

 

குழையைத் தழுவிய ஒன்றை அம்தார் கமழ் கொங்கைவல்லி

கழையைப் பொருத திருநெடுந்தோளும், கரும்புவில்லும்

விழையப்பொருதிறல்வேரி அம்பாணமும்; வெண்ணகையும்,

உழையப் பொருகண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே.

 

101. நூற்பயன்

 

ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம்

பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்காக்

காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும், கரும்பும், அங்கை

சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே…

 

கலையாத கல்வியும்

 

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்

கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையும் குன்றாத இளமையும்

கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு

துன்பமில்லாத வாழ்வும்

துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே

ஆதிகடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி

அருள்வாமி! அபிராமியே!

 

_அபிராமி பட்டர்

 

பொருள்

கல்வி, நீண்ட ஆயுள், கபடு இல்லாத நட்பு, நிறைந்த செல்வம், எப்போதும் இளமை, பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், சலிப்பு வராத மனம், அன்பு நீங்காத மனைவி, புத்திர பாக்கியம், குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான குணம், எந்தத் தடையும் ஏற்படாத கொடை(அளித்தல்), செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன், துன்பமில்லாத வாழ்வு, உன் பாதத்தின்மேல் பக்தி, இந்தப் பதினாறுக்கும் அப்பால் உன் தொண்டர்களை (பக்தர்களை) என்றும் பிரியாத கூட்டு. இவற்றை அருள வேண்டும், அபிராமியே!

 

# abirami-anthathi-lyrics-tamil

# abirami-anthathi

# abirami anthathi


To Top