திருப்பொற் சுண்ணம் - திருவாசகம்

திருவாசகம் 



திருப்பொற் சுண்ணம் - ஆனந்த மனோலயம் 

(தில்லையில் அருளியது - அறுசீர் ஆசிரிய விருத்தம்) 


முத்துநல் தாழம்பூ மாலைதூக்கி 

முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின் 
சக்தியும் சோமியும் பார்மகளும் 

நாமகளோடுபல்லாண்டிசைமின் 
சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும் 

கங்கையும் வந்து கவரிகொண்மின் 
அத்தன் ஐயாறன்அம்மானைபாடி 

ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 195 

பூவியல் வார்சடை எம்பிராற்குப் 

பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும் 
மாவின் வடுவகி ரன்ன கண்ணீர் 

வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் 
கூவுமின் தொண்டர் புறநிலாமே 

குனிமின் தொழுமினெங் கோனெங்கூத்தன் 
தேவியுந் தானும்வந்தெம்மையாளச் 

செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே. 196 

சுந்தர நீறணந் தும்மெழுகித் 

தூயபொன்சிந்தி நிதிநிரப்பி 
இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும் 

எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் 
அந்தார் கோன்அயன் தன்பெருமான் 

ஆழியான் நாதன்நல் வேலன்தாதை 
எந்தரம் ஆளுமை யாள்கொழுநற் 

கேய்ந்த பொற்சுண்ணம் இடித்துநாமே. 197 

காசணி மின்கள் உலக்கையெல்லாம் 

காம்பணி மின்கள் கறையுரலை 
நேசமுடைய அடியவர்கள் 

நின்று நிலாவுக என்றுவாழ்த்தித் 
தேசமெல்லாம் புகழ்ந் தாடுங் கச்சித் 

திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் 
பாசவினையைப் பறிந்துநின்று 

பாடிப் பொற்சுண்ணம் இடித்துநாமே. 198 

அறுகெடுப்பார் அயனும்அரியும் 

அன்றிமற்றிந்திர னோடமரர் 
நறுமுது தேவர்கணங்கெளெல்லாம் 

நம்மிற்பின் பல்லதெடுக்க வொட்டோ ம் 
செறிவுடை மும்மதில் எய்தவில்லி 

திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி 
முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற் 

காடப்பொற்சுண்ணம் இடித்துநாமே. 199 

உலக்கை பலஒச்சு வார்பெரியர் 

உலகமெலாம்உரல் போதாதென்றே 
கலக்க அடியவர் வந்துநின்றார் 

காண உலகங்கள் போதாதென்றே 
நலக்க அடியோமை ஆண்டுகொண்டு 

நாண்மலர்ப் பாதங்கள் சூடந்தந்த 
மலைக்கு மருகனைப் பாடிப்பாடி மகிழந்து 

பொற்சுண்ணம் இடிந்தும்நாமே. 200 

சூடகந் தோள்வரை ஆர்ப்ப ஆர்ப்பத் 

தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப 
நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப 

நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப் 
பாடக மெல்லடி யார்க்கு மங்கை 

பங்கினன் எங்கள் பராபரனுக்கு 
ஆடக மாமலை அன்னகோவுக் 

காடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 201 

வாள்தடங்கண்மட மங்கைநல்லீர் 

வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத் 
தோள்திரு முண்டந் துதைந்திலங்கச் 

சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி 
நாட்கோண்ட நாண்மலர்ந் பாதங்காட்டி 

நாயிற் கடைப்பட்ட நம்மையிம்மை 
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி 

ஆடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 202 

வையகம் எல்லாம் உரலதாக 

மாமேரு என்னும் உலக்கை நாட்டி 
மெய்யனும் மஞ்சள் நிறைய அட்டி 

மேதரு தென்னன் பெருந்துறையான் 
செய்ய திருவடி பாடிப்பாடிச் 

செம்பொன் உலக்கை வலக்கைபற்றி 
ஐயன் அணிதில்லை வாணனுக்கே 

ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 203 

முத்தணி கொங்கைகள் ஆடஆட 

மொய்குழல் வண்டினம் ஆடஆடச் 
சித்தஞ் சிவனொடும் ஆடஆடச் 

செங்கயற் கண்பனி ஆடஆடப் 
பித்தெம் பிரானொடும் ஆடஆடப் 

பிறவி பிறரொடும் ஆடஆட 
அத்தன் கருணையொ டாடஆட 

ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 204 

மாடு நகைவாள் நிலாவெறிப்ப 

வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப் 
பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும் 

பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித் 
தேடுமின் எம்பெருமானைத்தேடி 

சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி 
ஆடுமின் அம்பலத் தாடினானுக் 

காடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 205 

மையமர் கண்டனை வானநாடர் 

மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை 
ஐயனை ஐயர்பிரானைநம்மை 

அகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும் 
பொய்யர் தம் பொய்யனை மெய்யர் மெய்யைப் 

போதரிக் கண்ணினைப் பொற்றொடித்தோள் 
பையர வல்குல் மடந்தைநல்லீர் 

பாடிப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 206 

மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண் 

வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர் 
என்னுடை ஆரமுதெங்களப்பன் 

எம்பெருமான் இம வான்மகட்குத் 
தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன் 

தமையன்எம் ஐயன் தாள்கள் பாடிப் 
பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர் 

பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 207 

சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத் 

தாழ்குழல் சூழ்தரு மாலையாடச் 
செங்கனி வாயிதழுந்துடிப்பச் 

சேயிழை யீர் சிவலோகம் பாடிக் 
கங்கை இரைப்ப அராஇரைக்குங் 

கற்றைச் சடைமுடி யான்கழற்கே 
பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப் 

பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 208 

ஞானக் கரும்பின் தெளியைப் பாகை 

நாடற் கரிய நலத்தை நந்தாத் 
தேனைப் பழச்சுவை ஆயினானைச் 

சித்தம் புகுந்துதித் திக்கவல்ல 
கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட 

கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப் 
பானல் தடங்கண் மடந்தைநல்லீர் 

பாடிப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 209 

ஆவகை நாமும் வந்தன்பர்தம்போ 

டாட்செய்யும் வண்ணங்கள் பாடிவிண்மேல் 
தேவர் கனாவிலுங் கண்டறியாச் 

செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச் 
சேவகம் ஏந்திய வெல்கொடியான் 

சிவபெரு மான் புரஞ் செற்றகொற்றச் 
சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச் 

செம்பொன் செய்சுண்ணம் இடித்தும்நாமே. 210 

தேனக மாமலர்க் கொன்றைபாடிச் 

சிவபுரம் பாடித் திருச்சடைமேன் 
வானக மாமதிப் பிள்ளைபாடி 

மால்விடை பாடி வலக்கையேந்தும் 
ஊனக மாமழுச் சூலம்பாடி 

உம்பரும் இம்பரும் உய்யஅன்று 
போனக மாகநஞ் சுண்டல்பாடிப் 

பொற்றிச்சுண்ணம் இடித்தும்நாமே. 211 

அயன்தலை கொண்டுசெண்டாடல்பாடி 

அருக்கன் எயிறு பறித்தல்பாடி 
கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக் 

காலனைக்காலால் உதைத்தல்பாடி 
இயைந்தன முப்புரம் எய்தல் பாடி 

ஏழை அடியோமை ஆண்டுகொண்ட 
நயந்தனைப் பாடிநின் றாடியாடி 

நாதற்குச் சுண்ணம் இடித்தும்நாமே. 212 

வட்டமலர்க்கொன்றை மாலைபாடி 

மத்தமும்பாடி மதியம்பாடிச் 
சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச் 

சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக் 
கட்டிய மாசுணக்கச்சைப் பாடிக் 

கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல் 
இட்டுநின் றாடும் அரவம்பாடி 

ஈசற்குச்சுண்ணம் இடித்தும்நாமே. 213 

வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு 

மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச் 
சோதிய மாய் இருள் ஆயினார்க்குத் 

துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்குப் 
பாதியு மாய் முற்றும் ஆயினார்க்குப் 

பந்தமு மாய் வீடும் ஆயினார்க்கு 
ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு 

ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 214 

திருச்சிற்றம்பலம்

To Top