குலசை உலா


 


காப்பு: 


கற்பகவிநாயகர்


காருலாந் தென்குலசைக் கச்சிகொண்ட ஈசுரர்மேல்

சீருலாப் பாடத் திறன்நல்கும்- மேருக்

குவடுசுவடுபடக் கொம்பால் எழுதும்

கவடுபடாக் கைக்கற்ப கம்.


                                                                       சிவபெருமான் பெருமை


சீர்பூத்த தாமரை போற் செங்க ணெடுமாலுந்

தார்பூத்த மார்பிற் சதுர் முகனும் - ஏர்பூத்த


பூப்பொலிந்த சேவடியும் பொன்முடியுங் காண்பரிய

தீப்பிழம்பாய் நின்ற திருவுருவன் - கூப்புமிரு


கையுடையா ருள்ளக் கமலா லயமுடையான்

பொய்யுடையா ருள்ளம் புகுதாதான் - மெய்யுடைய


ஏகன் அநேக ன்இரண்டற் றகலாத

போக மளிக்கும் பொருளானோன் - போகமுறும்


எல்லா வுயிர்க்கு முயிராக யவரவர்கள்

செல்லுங் கருத்தில் செறிவானோன் - வல்லார் சொல்         (5)


வாக்குமனா தீதன் மறைகளுக்கு ம் எட்டாதான்

போக்குவர வில்லாத பூரணத்தன் - நோக்கரிய


முக்குணத்தின் மூவரையுந் தோற்றிமுறை யேயவர்க்குத்

தக்கவகை முத்தொழிலுந் தானளிப்போன் - மிக்க


உருவ ன்அருவ ன்உருவருவ மில்லான்

இருள னொளிய னிவையில்லான் - பொருவில்லா


ஐந்தொழிலுஞ் செய்தே யழகியசிற் றம்பலத்து

நந்தலிலா ஞான நடம்புரிவோன் - அந்தமிலா


நித்த ன்அநாதி நிமலன் பிறவாத

சுத்த னறிவன் சுகாதீதன் - அத்துவிதன்     (10)


வேல்போலுங் கண்ணி விமலையுடன் வீற்றிருக்கும்

பால்போலும் வெள்ளிப் பருப்பதத்தான் - மேலொழுகு


கங்கைச் சடையான் கறைமிடற்றான் கண்ணுதலான்

பொங்கரவப் பூணான் புலித்தோலான் - பங்கமிலா


வேதப் பரிபுரத்தான் வீரக் கழலுடையான்

பூதப் படையான் பொருவிடையான் - சோதிதரும்


வெண்ணீற் றழகன் விளங்குமண்ட பிண்டமெல்லாம்

எண்ணீற்றிற் காணா திறப்பிப்போன் - வண்ணமுற


ஆக்குவோன் காப்போ னழியா மலப்பிணியை

நீக்குவோன் வீட்டி னிறுத்துவோன் - பாக்கியமாம்     (15)


எங்கள் மலைமடந்தை யெவ்வுயிரும் பெற்றெடுத்துங்

கொங்கை தளராக் குமரியாள் - பொங்கியசீர்க்


காஞ்சிப் பதியிலருட் கம்பைத் திருநதியில்

வாஞ்சை மிகுத்து வழிபடவே - யாஞ்சலமாய்


வெள்ளம் பெருகிவர விம்மி விதிர்விதிர்த்துத்

தள்ள வொழியா ததுகண்டே - யுள்ளணைத்துக்


கொள்ளத் திருமலர்க்கைக் கோல வளைத்தழும்பும்

வள்ளத் தனக்குறியும் வைத்திருப்போன் - எள்ளரிய


பேரருளி னாலே பெருமைத் தமிழ்க்கொழிக்குஞ்

சீருடைய பாண்டித் திருநாட்டுக் - காரிலகுங்       (20)


கொண்ட லுறங்குங் குளிர்ந்தமலர்ச் சோலைகளில்

தண்பவள வல்லி தழைத்தேறும் - எண்டிசைச்சூழ்


மாடமொடு மாளிகையும் மண்டபமுங் கோபுரமும்

ஆடரங்கும் பொன்னா லமைத்திட்ட - பீடுடைய


தேராரும்  வீதித் திருக்குலசை மாநகரிற்

பாராருங்கீர்த்தி யொரு பாண்டியன்முன் - ஆராத


ஆசை யொடுந்தவஞ்செய் தன்பாயவன் வேண்ட

மாசில் வடிவாயுதித்து வாழந்திருப்போன் - பேசிலென்றும்


பூவுந் தளிரும் புதுவடுவுங் காய்கனியும்

மேவு மொருமா வியப்புடையான் - மூவுலகில்   (25)


எல்லா வழகு மெடுத்துத் திரட்டி வைத்த

உல்லாச மான வுருவுடையான் - நல்லோர்தங்


கண்ணாரமுதங் கருணைப் பெருமாட்டி

யொள்நீலக் கண்ணா ளொளிர்முகத்தாள் - எண்ணான்கு


அறம்வளர்த்த நாயகியென் னம்மை மணவாளன்

பிறைமுடித்த செஞ்சடை யெம்பெம்மான் - மறைவடித்த


வாயன் திருநமச்சிவாயன் பதத்தினிற்செவ்

வாயன்பு வைத்தார்தம் வாயினான் - மேயதொரு


கங்கையா னோங்குசிவ கங்கையான் மானேந்து

செங்கையான் செங்கையான் செங்கையான் - மங்கையுறும்    (30)


அங்கத்தா னங்கத்தா னங்கத்தான் பூதியணி

சங்கத்தான் சங்கத்தான் சங்கத்தான் - தங்கத்


திருக்கார் முகத்தான் திகையானன் மூன்று

திருக்கார் முகத்தான் றிகையான் - பெருத்தொலிக்கும்


ஓதப் பரவையா னுன்னுந் திருமுடிமேல்

ஓதப் பரவை யுடையபிரான் - சீதமுறப்


பொங்கு மணமும் புதுமலரும் போலுலகம்

எங்கும் நிறைந்தருள மெம்பெருமான் - தங்கும் வினை


தீண்டா வுருவன் றிருநாமங் கச்சிகொண்ட

பாண்டீ சுரனாம் பரஞ்சோதி - காண்டகுசீர்    (35)


                                                                                பவனி


மாணிக்க முத்து வயிரமணி முதலாம்

ஆணிப் பசும்பொனழுத்தியபல் - தூணத்து


இலங்குமணி மண்டபத்து ளெத்தேவும் போற்ற

நலங்கொ ளரியணையி னாப்பண் - வலங்கொள்


இருக்கோய் விலாமலெடுத் தேத்த வுமையோடுந்

திருக்கோயி லுள்ளிருப்பச் செவ்வி - அருக்கனைநேர்


பாவேந்தர் போற்றும் பசும்பொற் கிரீடமுடி

மூவேந் தரும்நன் முனிவர்களும் - யாவர்களும்


மாட்சிக் கடைவாயில் வந்தீண்டி யெம்பெருமான்

காட்சியளித் தெங்களையுங் காவென்ன - ஆட்சியாய்ச் (40)


சித்திரைத் திங்கள் திகழ்வசந்த காலத்திற்

பத்தரெல்லாம் காணப் பவனிவர-அத்தன்


திருவுள்ளத் துள்ளச் சிறப்புடைய தோழர்

அருகணைந்து கைத்திறத்தினாலே - கருணைபொழி


ஞானப் பிழம்பான நல்லதிரு மேனிதனக்

கான முறையே யலங்கரிப்பான் - மேன்முடியிற்


பொன்னின் மகுடம் பொலிவித் தழகொழுகும்

மின்னுதலில் வெண்ணீறு வேய்ந்திட்டுக் - கன்னமதில்


எண்டிசையுஞ் சோதி யெறிக்கு மிருமகர

குண்டலங்க ளிட்டுக் குவடனைய - திண்டோளிற்  (45)


கேயூரம்  பூட்டிக் கிளரொளிச்செங் கண்டத்திற்

காயொளிசேரக்கு மணிக்கண்டிகைசேர்த் - தாயிரம்பொன்


சோதிக் கதிர்போல் துலங்குந் திருமார்பிற்

சீதத் தரளத் திருவடமும் - பேதமுறு


செம்பொற் சரப்பளியுஞ் சேர்சன்ன வீரமுடன்

பம்புபதக் கங்கள் பரப்பியே - வம்பறாத்


துய்யதிருக் கொன்றைத் தொடைமாலிகையணிந்து

கையின் மணிக்கங் கணம்பூண்டு - செய்யகதிர்


மன்னுதர பந்தனமும் மாணப் பிணித்துறீஇப்

பன்னிறத்த பீதாம் பரமெடுத்துத் - தன்னிகரில்     (50)


சுந்தரம் பூத்துச் சுடர்பூத்த பொன்னரையின்

முந்தப் புனைந்து முழந்தாளில் - அந்தமிலா


ஏதிலுயிர்க் கெல்லா மிவனே யிறைவனென்னும்

நாகக் கழலணிந்தும் நற்கமல - பாதத்தில்


தக்கன் புரிவேள்விச் சாலையில்தன் மேலெழுந்த

உக்கிர மெல்லா மொழிவதற்குச் - செக்கர்ப்


பருதி யிருகாலும் பற்றி யிருந்தாங்கு

அரவமணி நூபுரமும் ஆர்த்துத் - தெரிசிப்போர்


                                                                                            அம்மை அலங்காரம்


கண்ணிற் கருத்திற்கடங்காத் திருக்கோலம்

மண்ணிப் பணியமலை மகுடப் பெண்ணமுதம்     (55)


ஆனதிருப் பூமகளும் ஆய்ந்தகலை நாமகளும்

ஞான மணக்கும் நறுங்குழலில் - வானமுறு


கற்பகத்தின் பூமலைந்து காதிற் குழைதரித்து

விற்பொலியு நெற்றி மிசையழகாய் - அற்புதமாய்ச்


சுட்டி யணிந்து சுடர்ப்பட் டமுமணிந்து

வட்டமுறு பொட்டு மகிழ்ந்திட்டு - சிட்டர்க்கு


அருட்கடைக்கண் நோக்கி யநுதினமு - மின்பஞ்

சுரக்கும் இருவிழிக்குஞ் சுற்றித் - திருக்கிளரும்


மையணிந்து மார்பின் மணமா லிகைநிறைத்துக்

கையில் வயிரக் கடகமிட்டுச் - செய்யவொளிப்    (60)


பொன்னரி யாரம் புரளும் படிதரித்துப்

பன்னரிய பின்னும் பணிதரித்து - மன்னியசீர்க்


கோங்கரும்பைப் போலுங் குரும்பை தனைப்போலும்

பூங்கமலம் போலும் புணர் முலைமேல் - தேங்கமழும்


குங்குமம் பூசிக் குளிர்சாந்த மும்புழுகுந்

தங்குங் களபத் தளறணிந்து - சிங்காரத்


தொய்யிலெழுதித் துணையொன் றுரையாமல்

ஐயந் தருநுசுப்பிற் கைந்தருமுன் - நெய்தளித்த


செம்பட் டுடுத்துத் திருமே கலையணிந்து

செம்பஞ் சழுத்திமலர்ச் சீறடியில் - கம்பிவிதப்    (65)


பாடகமும் ரத்னப் பரிபுரமுங் கிங்கிணியுங்

கூடக் கலந்தணிந்து கோலமுற - நாடிமிகச்


சித்திரித்த தேவி செழிக்க அறம்வளர்த்த

உத்தமியோ டுந்திருநல் லோரைதனில் - வித்தகமாய்ப்


பூங்கோயிலுள்ளிருந்து புண்ணியனார் போதரலும்

பாங்கான நந்திப் பழவிடையை - ஓங்கியசீர்


நற்கோலஞ் செய்துபெரு நாத மணிபூட்டிப்

பொற்கோவை யாரம் புனைந்து - முற்கொணர


வெள்ளை யிடப மிசையேறி மாதருளங்

கொள்ளையிட வாயில்வெளிக்கொள்ளலுமே - தெள்ளியசீர்ச்   (70)


                                                              

                                                                                  உடன் வருவோர்


செந்தா மரைக்கைதனில் தெய்வப் பிரம்பெடுத்து

நந்தீசுரனார் நடுவணையப் - பந்தியாய்


வந்து வசுக்கள் திரு வாயான் மறையோத

அந்தரத்தில் துந்துமியை துங்கலிக்கப் - புந்தியுறு


சத்த இருடிகளுஞ் சார்ந்து ஆசிகளுரைக்கச்

சுத்தசிவ யோகியர்கள் சூழ்ந்துவரச் - சித்திரஞ்சேர்


எல்லாக் கலையுமுண ரீராறு சூரியரும்

பல்லாண் டெடுத்துப் படித்துவர - வல்லாண்மைச்


சாரணர் விச்சா தரரியக்கர் கிம்புருடர்

காரணர் கின்னரர்கள் காந்தருவர் - தாரமுறு   (75)


கின்னரியா ழேத்தியருட் கீர்த்தியெல்லாம் வாசிப்பத்

தன்னே ருருத்திரர்க டாம்பழிச்சப் - பன்னரிய


தும்புரு வீணைச் சுவையொழுக்க நாரதனார்

கொம்பு நரலக் குழலியம்ப - இம்பர்களும்


எண்ணிறந்த கோடி யிமையோர் களுந்துதிப்பக்

கண்ணிறைந்த முத்தர் கணஞ்சூழப் - புண்ணியநன்


மாமுனிவரெல்லாரு மங்கலச்சொல் வாழ்த்தெடுப்பப்

பூமாரி யெங்கும் பொழிந்திழியச் - சேமமிகு


நாவாரத் தேவார நண்ணுதிரு வாசகமும்

பாவாணர் பண்ணிற் படித்தோத - ஓவாமல்  (80)


அங்கிபசும் பொன்னா லமைத்த மணியகலிற்

குங்கிலியத் தூபங் கொடுத்துவர - அங்கத்தின்


வண்ணங் கரிய மறலி மறவாமல்

எண்ணும் படைக்கலங்கள் ஏந்திவர - உண்மகிழ்ந்து


நண்ணு நிருதி நகையுமிழு மாபரண

வண்ணமணிப் பேழை மருங்கேத்த - வுண்ணிறைந்த


சீரணங்கு  கோவருணன் சீதநீர் பூரித்த

பூரண கும்பம் புடையெடுப்பத் - தோரணஞ்சூழ்


வீதியெல்லாம் வாயு விளக்கி விரைகமழுஞ்

சீதப் பனிநீர் தெளித்துவர - நீதியினால்    (85)


அம்புவியோர் போற்றும் அளகா புரிக்கரசன்

செம்பொன் மழைமாரி சிந்திவரக் - கம்பமிலா


ஈசானன் வந்தடைப்பை யேற்ப எழிற்சோமன்

கூசாமல் வெற்றிக் குடைபிடிக்குத் - தேசாருஞ்


சொற்கோ கிலம்போலச் சொல்லு மரம்பையர்கள்

பொற்காற் கவரி புடையிரட்ட - விற்காலும்


அட்டநா கங்க ளணியார் விளக்கெடுப்ப

வெட்டுநா கங்க ளெதிர்முழங்கப் - பட்டின்


இடபம் பொறித்த வெழின்மிகுந்த வண்ணக்

கொடிக ளடியார்கைக் கொள்ள - வடிவுடைய    (90)


பாரிடங்க டாமசையப் பாரிடங்க டாமோடி

யாடி அரகரவென் றார்த்திடவே - மாடமறு


கூடு வரும்பொழுது குஞ்சர மாமுகத்தன்

மூடிக வாகனத்தின் முன்செல்ல - நாடியசீர்


வள்ளிமண வாளன் மயில்வா கனமுகைக்கப்

புள்ளனத்தின் வேதன் புடைபடாத் - தெள்ளுந்


திடக்கருட னேறித் திருமா லிறைவன்

இடப்புறத்திற் செல்ல விழியுங் - கடத்தினையார்


அந்தமுறு நாற்கோட் டயிரா வதத்தேறி

இந்திரன் பின்னே யிசைந்துவர - அந்தரத்திற்    (95)


சாரிவரு மரபிற் றழைத்தொரு செண்டேந்திக்

காரிக் கடவுள் களித்துவரப் - பேரழகின்


ஆலால சுந்தரரும் மற்புதநா வுக்கரசும்

பாலறா வாயனென்னும் பண்டிதனுஞ் - சோலைத்


திருவாத வூரற் சிகாமணியுந் தாதை

யிருதாளுஞ் செற்ற இறையும் - அருகணைய


சிங்கத்தி லேறித் திரிசூலி நீலிவர

அங்கன்னி மாரெழுவ ராதரிக்க - இங்கிதமாய்


மேனைமுத லுள்ளிட்ட விண்ணின் மகளிரெல்லாம்

நானா விதத்தி னடம்புரியத் - தூநீராங்     (100)


கங்கை முதலாங் கடவு ள்நதி யேழும்

பொங்கி மகிழ்ந்து புடைசூழ - மங்களமாய்


வெற்றி முரசும் விளங்குங் குடமுழவுஞ்

சுற்றியவார்ப் பேரிகையுந் துந்துபியும் - பற்றுதுடி


கல்லவட மொந்தை கறங்குபட கம்முருடு

சல்லரிகைத் தாளந் தழைகுணிச்சங் - கல்லெனுஞ்சீர்


தண்ணுமை சங்கந் தடாரி சலஞ்சலங்கள்

மண்ணிய கொக்கரையு மத்தளமு - மெண்ணிலா


அண்ட முகடு மதிர்ந்து கிடுகிடென

எண்டிசையு மண்டி யெழுந்தார்ப்ப - இண்டை  (105)



                                                                              

                                                                            கட்டியம் கூறுதல்



தரித்தசிவன் வந்தான் சதுர்மறையை வாயால்

விரித்தசிவன் வந்தான் வில்வேடன் - புரத்தை


எரித்த இறை வந்தா னெதிர்த்தகரி வேங்கை

யுரித்த இறை வந்தா னொருவன் - சிரத்தை


நெரித்த அரன் வந்தா னிறுத்துதிரி சூலந்

திரித்தகரன் வந்தான் செழுந்தீக் - கரத்தை


முரித்தபரன் வந்தான் முளரியயன் சென்னி

பிரித்தபரன் வந்தான் பெருநீர் - வரத்தான்


பரித்தபிரான் வந்தான் படர்புரிசை வேவச்

சிரித்தபிரான் வந்தான் சிவந்த - உருத்திகழும்   (110)


பொன்னின் சடாமகுடன் போந்தா னெனப்புகன்று

பன்னுதிருச் சின்னம் பணிமாறப் - பொன்னுலகத்து


அண்டர் திருமுனிவ ரைம்பொறியும் பின்றொடரக்

கொண்ட அறிவுடையோர் கொண்டாடித் - தண்டனிட்டுச்



                                                                                                 பத்துறுப்பு (தசாங்கம்)



சங்கர னென்னுந் தழைத்த திருநாமன்

மங்கலஞ்சேர் வீரை வளநாடன் - தங்கியமால்


ஆணவ மாசி னழுக்ககல நாம்மூழ்கும்

பேணருஞ்சீர்த் தண்பொருநை பேராற்றான் - காணரிய


தெள்ளிய அன்பர் திருவுள்ளம் போல்விளங்கும்

வெள்ளிக் கயிலாச வெற்புடையான் - கள்ளமுறு   (115)


பேதப் புறச்சமயப் பித்தர் செவியடைப்ப

நாதத் தொனியெழுப்பு நன்முரசான் - ஆதரித்த


தொண்டர்க் கிரங்கித் தொடுத்து வரும்பகையை

மண்டி யறுக்கு மழுப்படையான் - விண்டலத்தில்



எல்லாக் கொடியு மிணையல்ல வென்றோங்கும்.

வில்லாரும்  வென்றி விடைக்கொடியான் - நல்லநெறி


போற்றா திருந்து புரைநெறியை யுண்டாக்கும்

மாற்றாரை வெல்லு மதகரியான் - ஊற்றிதழ்த்தேன்


உண்ட அறாக்கீதம் ஒழியாமற் பாடி மகிழ்

வண்டறாக் கொன்றை மலர்த்தாரான் - பண்டாய   (120)


ஏழுலகத் துள்ளார்க்கும் எவ்வரமுந்தான் அளித்து

வாழுங் குலசை வளநகரான்- வாழியென


எண்ணுந் தசாங்கமிவை எம்மருங்குங் கோடிக்க

அண்ணலார் கோமறுகில் ஆங்கணையக் - கண்ணார்



                                                                                           குழாங்கள்


கருப்புச் சிலையுடைய காமன் படைகள்

அருப்பம் பெடுத்தோட ஆங்கே - விருப்பமிகுஞ்


சீரியத்தி னோசை யமுதஞ் செவிதேக்கச்

சூரிய காந்திச் சுடர்மணியும் - நீர்பிலிற்றுஞ்


சந்திரக் காந்தத் தடமணியுங் கொண்டிழைத்த

மந்திரங்க ள்தெற்றி மணிவாயிற் - பந்தியுறும்   (125)


மாளிகையற் சூளிகையின் மாடகூ டப்பரப்பிற்

சாளர வாயில் தலங்களிலும் - மீளரிய


பத்தி முதிர்ந்து பரமனுக்காட் பட்டவர்போற்

சித்தஞ் சிவனிடத்திற் சென்றேற - முத்தம்


பவளவள் ளத்திற் பதித்ததுபோற் செவ்வாய்த்

தவள நகையுடைய தையல் - துவளிடையார்


காலிற் சிலம்பு கலகலெனக் கைவளைகள்

ஓலிட் டகல்வார்போ லுக்கிடவே - மாலளிக்குங்


கொங்கைக் குடங்குலுங்கக் கொம்புக் குழைக்காது

பொங்கு மணியூசல் போலாடச் - சிங்கவிடைக்   (130)


கூறை யவிழக் குழல்விழ மாதவரும்

வீறழிய மின்னுக் கொடி போல - ஏறியெங்கும்


அன்னங் கிளிபோலும் ஆடுமயில் போலும்

பன்னு மெழுபருவப் பாவையருந் - துன்னியே


கண் நிறையக் கண்டு களித்துமலர்க் கைகூப்பி

யுண்ணிறைந்த நாணமெல்லா மோட்டெடுப்ப - நண்ணி


உடையவரே யென்பா ரொருத்தியிடங் கொண்ட

சடையவரே யென்பார் தளர்வார் - நடைபெயராச்


சித்திரம்போ னின்று திகைப்பார் நகைப்பார்கள்

அத்த னழகே யழகென்பார் - எத்தவமுன்   (135)


செய்திருந்தோ மென்று சிலர் சிந்திப்பார் வந்திப்பார்

வெய்துயிர்த்து விம்மி விழுவார்கள் - ஐயனே


சற்றே திருக்கடைக்கண் சாத்தீ ரெனப்பகர்வார்

குற்றேவ லெங்களையுங் கொள்ளு மென்பார் - பற்றினிமேல்


உம்மை விடஇல்லை யொருவரெமக் கென்றுரைப்பார்

கொம்மை முலைகாட்டிக் குழைந்திடுவார் - வெம்மையுறும்


அக்கினியைக் கண்ட அரக்கா யுருகியிவர்க்

கொக்குமோ நம்மழகு மோவென்பார் - திக்குலவுங்


கண்முத்தஞ் சிந்திக் கலுழ்வார் வலம்புரியின்

வெண்முத்தம் போன்மெய் வெளுத்தயர்வா - ரொண்மொய்த்த (140)


எவ்வனமும் நீருடையீ ரானக்கால் எம்முடைய

எவ்வனத்தை வௌவிடுவ தென்னென்பார் - திவ்வியமாங்


காஞ்சி யுடையாரே காணோம் லெம்மிடையிற்

காஞ்சியுடை கொள்ளல் கரவென்பார் - வாஞ்சைக்


கரவளையீர் நீரென்றுங் காதலுடையேங்

கரவளையைக்  கொள்ளைகொள்ளுங் காதல் - உரையுமென்பார்


எற்பணியு  மக்குணத்தீ ரென்றக்கால் எம்முடைய

பொற்பணியை யேன்கவர்ந்து போதிரென்பார் - முற்பணியே


ஆர்க்குவத மெங்கட் களியாம னீரருள்வது

ஆர்க்குவத னாம்புயத்தீ ரங்கென்பார் - பார்க்குங்கால்  (145)


நாண்மதியங் குள்ளவரே நாடிவரு மெம்முடைய

நாண்மதியை நீர்கவர்தல் நன்றென்பார் - நாணிக்குக்


கைச்சரபங் கொண்டவனைக் கண்ணா லெரித்ததுபொய்

மெய்ச்சாப மிட்டவனை வெல்லுமென்பார் - இச்சைமிகத்


தூண்டா விளக்கனைய சோதிப் பிரானழகை

வேண்டுமட்டுங் கண்ணால் விழுங்குவார்கள் - ஆண்டவனே


எப்போ திரங்குவீ ரென்பார் இரங்கிவிடில்

தப்பாமோ நும்பெருமை தானென்பார் - இப்படியாய்த்


தேங்கமழும் பூங்குழலார் செப்பியிரு பாலுமுறப்

பாங்கியர்க ளெல்லாம் பரிவெய்த - ஆங்கொருத்தி (150)


                                                                              பேதை


எண்சுவையுந் தோற்றுமியற் சுவைபோற்கொண்டாடும்

பெண்சுவையாள் பேதைப் பிராயத்தாள் - கண்சுவையாய்ச்


சிற்றி லிழைத்துச் சிறுசோ றடுவாள்போற்

கற்றிலொழுக்கமெல்லாங்கைக் கொள்வாள் - மற்றறவில்


பேதையர்போ லன்றிப் பெருந்தகைமை யுள்ளுறுத்த

கோதில் அமுதக் குணத்தினாள் - காதரஞ்சேர்


ஆல முறாத அராப்பணம்போ லல்குலாள்

நூலனைய சிற்றிடை நோ னாதென்றோ - சாலப்


பெரியோர் தவம்பிழைக்கு மென்றோ பிறப்பில்

உரியோ ருடைவரென வோர்ந்தோ - தெரியாது  (155)


மந்திர வெற்றிமுயல் வல்லோன்கைச் செப்பிலுறை

பந்தின் மறைத்த பயோதரத்தாள் - சந்தமலர்


வாரி முடியா மலர்க்குழலாள் மையல்தரு

வேரி யுறாஅதர விம்பத்தாள் - நாரியர்கள்


கொண்டாட லன்றிக் கொழுநருளங் கொள்ளாத

ஒண்டொடியாள் சூழு முரைசெய்யாள் கெண்டையங்கண்


நோக்கம் இருநோக்க நோக்காதா ளாடவரை

ஏக்கழுத்தஞ் செய்யாத இன்னுரையாள் - வாக்கினிய


நாப்பயிலும் பூப்புலவர் நற்கவிபோற் சொற்பொருள்கள்

ஏற்ப முடியாத ஏந்திழையாள் - வாய்ப்பவே   (160)


கத்தூரி சாத்திக் கமழ்பட் டெடுத்துடுத்து

முத்தணிந்து முல்லை முகையவிழுங் - கொத்தணிந்து


பொன்னரியா மாலைகைக் கொண்டுபுறம் போதரலும்

அன்னமே யார்க்கணிவா யென்றொருத்தி - பன்னுதலும்


எல்லா வுயிர்க்கு முயிரா யெமையாள

வல்லான் குலசை வளர்கடவுள் - நல்லாய்கேள்


பாலவிழிக் கச்சிகொண்ட பாண்டீசர்க்கென்றாளவ்

வேலையிலே எம்மான் விடைதோன்றிக் - கோலத்து


எழினோக்கிக் கைதொழுதா ளிம்முறைமை நோக்காள்

வழிநோக்கி னாள்மதன னூர்க்குப் - பழியார்க்கும்    (165)


பூங்குழலா ளாங்ககலப்  பொற்கொடிபோற் பொற்பினாள்

தேங்கொள் கமலத் திருவன்னாள் - பாங்கார்  


                                                                                பெதும்பை


பெதும்பைப் பிராயம் பிரியாதாள் சொல்லும்

அதும்புங் கடலமுத மன்னாள் - விதம்பெறவே


சித்திரித்த தெய்வ வுருவா ளிளைஞர்பாற்

பத்திசெய்யுஞ் சாயற் பசுங்கிள்ளை - நத்தனைய


கந்தரத்தாள் மஞ்ஞைக் கவின்சேருஞ் சாயலாள்

சிந்தூரந் தீட்டுந் திருநுதலாள் - கொந்தளப்பொன்


னோலை யணிகாதி லொண்கொப்புச் செஞ்சுடர்கள்'

போல வணிந்த பொலன்கலத்தாள் - நீல   (170)


விடமு ம்அமிர்தும் விரவ விரவிக்

கடலுவர்த்துக் காமர்க்கிலாத - வுடலிதுவென்று


ஆடவர்க ளுன்னநிறை யஞ்சனஞ்சேர் வேல்விழியாள்

ஏடவிமும் பூங்கொத் தெழிற்சுட்டி - யாடகத்தால்


செய்ததலைக் கோலஞ் சிறந்தகுழற் காரிருளைப்

பைய அகற்றிப் பதிவிருந்து - மையறுசீர்த்


திங்க ளெனுமுகத்தாள் செந்துவரு முத்தமுந்

தங்கிய ஆம்பல் தனிவாயாள் - சங்கனைய


கண்டத்திற் சாந்தணிந்து கைக்கு வளைபூட்டித்

துண்டத்தின் மூக்குத்திதோற்றுவித்துக் - கெண்டையங்கட்கு   (175)


அஞ்சனமுஞ் சாத்தி அணிகிளரும் பூங்கச்சைக்

கஞ்சமுகைக் கொங்கைக் கலங்கரித்து - நெஞ்சகத்தின்


உண்மை மறையிரண்டி லொன்றுதுணி வொண்ணாத

வண்மையிடைபட்டான் மறைப்பித்துக் - கண்ணெகிழாக்


கிண்கிணி தாட்கணிந்து கேயூரந் தோட்பூட்டிப்

பண்கிளரு மேகலையும் பாரித்து - விண்கவின்செய்


தாரகைசூழ் மேருத் துணைபோல்தண் முத்துவடம்

வாரார் முலைமேன் மகிழ்ந்தணிந்து - நேராய


தோழியர்க ள்தற்சூழச் சோலைமலி பூங்காவிற்

பாலனைய சொல்லாள்பந் தாடுதலும் - மாலுக்கும்   (180)


மாலளிப்பான் வந்தான் மலரயற்கும் மேலான

ஆலமுண்ட பெம்மா னணைந்தானென்று - ஓலமிடுஞ்


சின்னத்தி னோசை செவிவார்ப்பச் சென்றோடிப்

பொன்னொத்த கொன்றையனைப் போற்றினாள் - மின்னொத்த


இட்டிடையிற்பூந்துகிலும் ஏரார்மணிவண்டும்

விட்டறிவு நாண்தோற்று மெய்விதிர்த்தாள் - வட்டமுலை



                                                                                             மங்கை



மங்கைப் பிராய மருவியதோர் மானனையாள்

பங்கயமும் பாதிச் சிறுமதியுந் - துங்கமலி


நற்காம ரூபி கவிர்முல்லை நாளாம்பல்

லொக்க அமைத்தமதி யொன்றென்ன - எக்காலுஞ்    (185)



செந்தமிழோர் கட்டுரைக்குந் தெய்வத் திருமுகத்தாள்

 கந்தகத்தைச் செற்ற கவின் முலையாள் - சந்தமலர்ச்


சூற்கொண்ட கொண்மூச் சுரிகுழலாள் சொல்லினாற்

பாற்சுவையுங் கீழ்ப்படுத்தும் பைந்தொடியாள் - காற்றுணைக்குச்


 செம்பஞ் சழுத்திச் சிலம்பு கலந்தொலிப்பக்

கொம்பன்ன நுண்ணிடையிற் கோசிகத்தைப் - பம்ப


அலங்கரித்துக் கச்சிறுக்கி யாரம் புனைந்து

புலம்புமணி மேகலையும் பூட்டி - இலங்குமணிச்


சூடகமுங் கங்கணமுந் தோள்வளையும் பூட்டியபின்

பாடகமுந் தாள்மேற் பரிபுரமும் - ஆடகத்தாற்    (190)


செய்தபணி யெல்லாஞ் சிறக்க வணிந்துதரத்

தையலர்க ளோடுந் தனியிருந்து - பைய


மிழற்றுகிள்ளை யோடு வியந்துரைக்கு மேல்வை

அழற்படைய மூவிலைவே லண்ணல் - தொழப்பவனி


வந்தான் வந் தானென்று வண்சின்னம் வாழ்த்தெடுப்ப

அந்தர துந்துபிக ளார்ப்பொலிப்பச் - சந்ததமும்


பாற்கடலில் தோன்றும் பருதியு மப்பருதி

மேற்பிறங்கு வெண்மதியும் வெல்லவே - நாற்பதமும்


வேத வடிவானவெள்விடைமேல் வெண்குடைக்கீழ்ச்

சோதிச் சடாமவுலி தோன்றுதலும் - நாதனே   (195)


என்றென்றுருகி யிடைநுடங்க மெய்வியர்ப்பத்

தன்றுணையில் லாத தனிக்கொடி போல் - நின்று


துவண்டு துவண்டு சுருண்டு சுருண்டு

கவன்ற மனத்தாற் கழறி - அவன்தாரைக்


கொள்ளைகொண்டாள் போற்கணங்கு பூத்துக்குலக் கொழுந்து

பள்ளமடை போலுருகிப் பாங்ககன்றாள்- ஒள்ளொளியாள்



                                                                       மடந்தை



மற்றொருத்தி பொற்பார் மடந்தைப் பிராயத்தாள்

கற்றவர்க்குங் காமநூல் கற்பிப்பாள் - வெற்றிமதன்


சேனைக்கு வாய்த்த திருவீரலட்சுமியாள்

மானொத்த வஞ்ச மதர்விழியாம் - பானற்பூப்  (200)


பூங்குமிழ் தொண்டை புணர்முத்தம் பொன்னூசல்

வாங்குவிற் சாணை வளர்மதியம் - ஓங்கிய


கோணமும் பாலிகையுங் கோதின் மணிநகையும்

பூணணியுங் காதும் புரூரமு - மாணமைந்த


கஞ்சனை போன்ற கபோலத் துணையிரண்டும்

வஞ்சமில்லா ஆனைமு மாய்மயங்க - மஞ்சனைய


கூந்தற்கு வெண்மலர்கள் கொண்டணிந்து தோற்றமறல்

பாய்ந்திரண முற்ற பரப்பொப்பச் - சாந்தணிந்து


குங்குமந் தோய்ந்த குவிமுலைகள் கோங்ககற்றிப்

பங்கயத்தின் செவ்வியாய்ப் பாரிப்ப - மங்கலநாண்   (205)


தோய்ந்தகளம் பூங்கமுகின்றோற்றந் தரவிணைத்தோள்

வாய்ந்த மணிக்கழையின் வண்மைதரப் - பாந்தள்


கடிதடத்திற் செம்பட் டுடுத்தரைஞாண் கட்டி

அடியிணைகட் கம்பொன் குயின்ற - வடிவுடைய



பாதசரந் தண்டை சதங்கை பயில்வித்துச்

சீதமுத்து மாலை தெரிந்தணிந்து - மாதரார்


கைதொட்டமைத்த களபவண்டன் மட்டித்து

மையிட்டு வாட்க ணலங்கரித்துப் - பொய்யிட்ட


சிற்றிடையார் சூழத் திருந்தமளி மேலிருந்து

வெற்றியா ழங்கே விரித்தேந்தி - மற்றுமோர்  (210)


வீணையிசை கூட்டி விமலை யொருபாகன்

தாணுவின் செந்தமிழாற் சந்தவிசை - யேணவிழப்


பாடிய வேலை பரமன் சடாதாரி

நாடரிய மால்விடைமேல் நண்ணுதலும் - மாடகயாழ்


கைவிட்டு வாயிற் கடைகழிந்து கண்ணுதலை

நெய்விட்ட கூந்தலா ள்நேர்தொழுதாள் - மெய்விட்டுக்


கண்முத்துந் தார்முத்துஞ் சிந்தக் கலைகலைய

வெண்முத்தஞ் சேர்ந்த இதழ்துடிப்ப - வண்ணப்பூ


மேனி விதிர்ப்பமொழி விம்மப் பரவசமாய்க்

கானிவரும் பூங்கொன்றை கைக்கொண்டாள் - மானொருத்தி    (215)



                                                                              அரிவை


ஆயிழையார் போற்றும் அரிவைப் பிராயத்தாள்

பாயொளிசேர் பங்கயமும் நீலமும் - வாய்விரியும்


ஆம்புலஞ் செங்கிடையுஞ் சைவலமு முண்மையாற்

றேம்புணரும் பூம்பழனச் செவ்வியாள் - காம்பிணையும்


வெற்பும் விடவரவு நீர்ச்சுனையு முண்மையாற்

பொற்பார் குறிஞ்சித் திணைபோன்றாள் - கற்பரும்பும்



பூங்குமிழுங் கொவ்வையு முண்மையாற் போதலர்ந்து

தேங்கமழு முல்லைத் திறம்போன்றாள் - வான்றிறல்சேர்


பஞ்சா னனமும் பகைத்துடியுங் காளையர்கள்

நெஞ்சம் பதைத்தழிய நேர்நின்று - வஞ்சகமாய்ப்  (220)


பற்பகல் கொள்சூறையு முண்மையாற் பாலையெனுஞ்

சொற்பொலிவும் நற்றிணையாய்த் தோன்றினாள் - விற்பொலியும்


வித்துருமஞ் சங்கம் மிளிர்தவள வெண்முத்தம்

ஒத்த கயலினமு முண்மையால் - நத்தூரும்


நெய்தலே போல்வா ள்நெரித்த கருங்குழலாள்

கொய்தளிர்ச்செம் மேனிப்பூங் கொம்பனையாள் - வையகத்தை


அல்குலால் வென்றாள் அரைஞாண் கலைதிருத்தி

தொய்யின்மேற் பூத்தொத்துச் சூழ்தந்து - தையலாள்


சந்தனத்தின் மட்டித்துச் சாந்தங் குழைத்தணிந்து

கந்த மலர லங்கல் கைபுனைந்து - செந்தழலின்   (225)


மின்னுமணி யாபரண வெய்யிலிருள் கால்சீப்ப

அன்ன மனையா ரலங்கரிப்பப் - பொன்னனையார்


கூடவிருந்து குரல்விளரி கொண்டிசைக்கும்

ஆடகயாழ் வாங்கியிசை வாசிப்பத் - தோடவிழும்


ஆர்க்குவதம் பூண்ட வழக னணிவிடைமேற்

கார்க்குவளைக் கண்ணா ளொடுங்கலந்து - பார்க்கெல்லாம்


போகமுத்தி தந்து புரக்க எழுந்தருளும்

வாகனத்திற் பூண்ட மணியேறுண்டு - ஆகங்


குழைந்துமறு கூடேகிக் கோலமணித் தேர்முன்

விழுந்தெழுந்து விம்மிதமாய் நின்று - தொழுந்தகையாள்  (230)



அன்னையீர்க் கெல்லாம் புராரி யெனதளவுங்

கன்னல்  சிலைக்களித்த கையாளன் - என்ன


மிழற்றுமலர்க் கூந்தல் விரிக்கும் முடிக்கும்

இழக்குங் கலைதிருத்து மெங்கும் - பழச்சுவையுங்


கந்தமும் பூவு மெனக்கலந்த காட்சியாள் 

சிந்தை அவிழ்ந்து திகைத்தொழிந்தாள் - இந்த

 



                                                          தெரிவை


அரிவைப் பதம்பிரியா அந்நலார் போற்றுந்

தெரிவைப் பிராயத்துச் சேயிழையாள் - வரிவண்டார்


காரிருளி னாலே கடக்களிறுங் கட்டுரையாற்

 சார வரும்புரியுந் தாபித்துச் - சீர்மருவு   (235)


முத்த நகையின் முகமதியின் மான்விழியின்

வைத்த கணையாய் மருவியே - வித்தகமாம்


மேனிதனு அத்தாணி மெல்லியஅல் குல்தடமாய்

வானிவருங் கேதனமுன் கைவடிவாய் - ஞான


விழியழலான் மாயும் வியன்மதன ன்ஆகம்

அழியா திருத்து மழகாள் - எழிலாரும்


பாதலத்தி னின்றிழிந்த பையராவந்தரத்தின்

மீதேறி மேரு முடிமறைத்த - நீதிதர


உந்தியெழுந்த உரோமவல்லி யோடொன்றிப்

பந்தித்த கச்சின் பணைமுலையாள் - வந்திக்கும்  (240)



இந்து அமுதந் துளித்தாங் கெழின்முகத்தின்

முந்தவொளிர் கோணத்தோர் முத்தினாள் - சந்ததமும்


அவ்வமுத முண்ண வரும்புலவர் போலயலே

செவ்விதரும் ஆரத் திரள்வடத்தாள் - கொவ்வை


இதழமுதம் மாறாத வேரா னனத்தால்

சிதைவு படமதியைச் செய்வாள் - விதம்விதமாய்ப்


பட்டெடுத்துச் சூழ்ந்து பரும மணிபுனைந்து

கட்டழகின் மேலழகாய்க் கண்களிப்ப - வட்டமிடும்


பூந்தார் அணிந்து புனைசந்த மட்டித்துச்

சாந்தந் திமிர்ந்து தவத்தோர்க்கும் - வாய்ந்தளவும்   (245)


பற்றிப் பிரியாத பண்பினாள் செய்குன்றின்

முற்றிழையா ரோடும் முறுவல்செய்து - கற்றையந்


தோகைமயி லாடல் கண்டுதுணர்ப் பூக்கொய்து

பாகுண்டு வல்லுப் பரப்பியதின் - மோகமாய்


ஆடும் பொழுதில் அரணமொரு மூன்றெரித்துக்

கூடலரைச் செற்றபிரான் கொல்லேற்றான் - ஏடவிழ்பூங்


கொன்றை யணிந்த குழகன் வரும்பவனி

யின்றுணையா மாதரார் வந்திசைப்பத் - தன்றொழிலாங்


கோட்டி யொழிந்து விரைந்து குலமடந்தை

தாட்டுணைப் பூங்கமலந் தாழ்ந்திறைஞ்சி - நாட்டார்கள்    (250)


காணவே வண்டுங் கலையும் அடியுறையாய்

நாணாம லிட்டு நலந்தோற்றாள் - மாணமைந்த


                                                                             பேரிளம்பெண்


முற்றிய தெய்வக் கனிபோன் முதுக்குறைந்த

பெற்றிமைசேர் பேரிளம் பெண்மையாள் - கற்றுத்


திருந்தினர்க்கே நல்லமுதாய்ச் சேர்வாளல் லார்க்கு

வருந்த அணங்காய் வதிவாள் - கருந்தடங்கண்


அம்பரத்தை யுண்பான் அயலிறங்குங் கார்க்குழுப்போற்

பம்பிவளர் கேசப் பரப்பினாள் - வம்புலாங்


கூந்தலதி லணிந்த ஆரவடங் கொண்மூவும்

வாய்ந்த அதன்றுளியு மாய்வியங்கச் - சாந்தத்    (255)


திலகம் பருதிபொரத் திங்களிடை வான்மீன்

உலவுவது போன்முத் தொளிரச் சலசத்தின்


நித்திலமே யன்றியிரு நீலநிரை பவளம்

வைத்தன போலு மலர்முகத்தாள் - சித்தசன்போர்


வென்றூதும் வெற்றி வியன்சங்கம் போற்களத்தாள்

மன்றற் களபம் வனைந்ததன்மேல் - ஒன்றவணி


கச்சறுத்து விம்மிக் கதிர்த்திறுமாந் தாடவரை

யச்சுறுத்துங் கொங்கை யமுதகடம் - வெச்செனவுந்


தண்ணெனவுங் காட்டித் தனக்குவமை யில்லாத

பெண்ணரசுக் காமகுடம் போற்பிறங்க - வண்ணவளை   (260)


முன்கைக் கணிந்து முதாரிகட கம்பூண்டு

சங்கத்திற் றண்டை சதங்கையிட்டுப் - பொங்கொளிசேர்


பன்மணியாற் செய்த பரும மரைக்கசைத்து

வன்னப்பூம் பட்டுடுத்து மையெழுதி - மின்னொளிசேர்


பொற்கலன்க ளெல்லா மவயவந்தோ றும்புனைந்து

பற்பலராம் மங்கையர்கள் பாங்கிருப்பப் - பொற்கவரி



கொந்தளத்தின் மீதேற வாசல் குணகடலின்

வந்துதித்த வெண்டரங்கம்போல் வயங்கச் - சந்தனப்பூங்


காவி னடுவண் கதிர்ப்படிகங் கொண்டிழைத்த

வோவிய மண்டபத்தின் ஒண்ணுதலார் - மேவிவைத்த   (265)


சிங்கஞ் சுமந்த திருந்தமளி மேலேறிப்

பங்கயப்பூம் பாவையன்னாள் பண்ணமைந்த - மங்களமாம்


மூவரொருவர் பலரொருவர் முன்னோர்கள்

யாவர் செழுந்தமிழு மேத்தெடுத்துத் - தேவன்


சிவனிறைவன் கச்சிகொண்ட பாண்டீசன் சேர்ந்தார்

பவமகலச் செய்யும் பரமன் - தவம்வளர்த்த


மங்கையிடங் கொண்ட வரதன் வரதெனென்றென்று

அங்கங் குளிர்ந்திருக்கு மல்வேலை - சங்கமொடு


சின்னங்கள் பேரி தடாரி திசை திசையே

மன்னுமொலி கேட்டு மகிழ்வெய்தி - அன்னைமீர்   (270)


யாமே தவஞ்செய்தே மென்றென் றுரைத்துவந்து

கோமறுகி லீசன் குலவிடைமேற் - சேமமுடன்


வீற்றிருக்குங் கோலம் விழிகுளிரக் கண்டவன்றாள்

போற்றி யிறையே பொலந்தொடியார் - மாற்றமெல்லாஞ்


செஞ்செவியிற் சேராமற் சேமித்தாய் மும்மைவிழிக்

கஞ்சத்தால் வவ்வுங் கருத்தெவன் கொல் - நஞ்சணிந்த


கண்டனே யென்று கசிந்தாள் அகங்குழைந்தாள்

தொண்டை யிதழுங் துடிதுடிப்பக் - கொண்ட


புளகத்தாள் வேர்வை பொடிப்ப வவிழ்ந்த

அளகத்தாள் மால்கொண் டகன்றாள் - உளமுற்றும்    (275)



வேட்ட பொழுதி னவையவை போலுமே

தோட்டார் கதுப்பினா டோளென்னும் - பாட்டின்


பொருளுக் கிலக்கியமே போல்வார் களீசன்

அருள் போலு மாறா அழகார் - புரளும்


ஒரு குடங்கைக் கண்ணா ரொளிவளரு மார்பில்

இரு குடங்க ளேந்து மிடையார் - திருமகட்கு


மாலாக்குங் கோமளஞ்சேர் மங்கைநல்லா ருள்ள மெல்லாங்

கோலா கலமாகக் கொள்ளைகொண்டு - வேலா


வலயஞ்சூழ் வீரை வளநாட்டிற் செல்வக்

குலசா புரியுறையுங் கோமான் - அலகில்   (280)


கருவிடைமேற் செல்லாமற் காட்சியளித் தியார்க்கும்

ஒரு விடை மேற் போந்தா னுலா.

                                                    



                                                               குலசை உலா முற்றிற்று.


                                                                  திருச்சிற்றம்பலம்.


அருஞ்சொற்பொருள்:


காப்பு : குலசை குலசேகரன் பட்டினம், சுவடு அடையாளம், கவடு-கிளை,

வஞ்சகம் . 1.சதுர்முகன்-பிரமன், 2.திருவுருவன்-சிவன், 3. உள்ளம்-மனம்,

4.போகம்-பேரின்பம், 6. மனாதீதன்-மனத்திற்கு அப்பாற்பட்டவன்


8. பொருவில்லா-ஒப்பில்லா 11.பருப்பதம்-மலை 12. கறைமிடற்றான்-

நீலகண்டன் 13. விடை-காளை 14.ஈற்றில் -பிரளய காலத்தில் 15.மலம்-

ஆணவம், கன்மம், மாயை 16.மடந்தை-பார்வதி 19.குறி-அடையாளம்.


27.எண்ணான்கு - முப்பத்திரண்டு 30.சிவகங்கை - தீர்த்தம், செங்கையான்-

திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரியவன், செம்மையாகிய செயல்

 உடையான், கொடைக்கையுடையவன். 31. அங்கத்தான் - திருமேனியுடையவன்,

எலும்புமாலையுடையவன், மலைநாடு அங்கங்கள் உடையவன்


32. தங்கக்கார்முகம்-பொன்மலையானவில், திகை-திசை, மூன்றுதிருக்கு-

மூன்று திருக்கண்; திகையான்-மயங்காதவன் 33.பரவை-பாற்கடல், 

38. இருக்கு - வேதம், அருக்கன்-சூரியன் 44.கன்னம்-செவிகள்.


 46. கேயூரம் - தோள்வளை, அக்குமணி -உருத்திராட்சம் 48. வீரம்- வீரசங்கிலி 

54. பருதி - சூரியன், நூபுரம்-சிலம்பு, 55. மண்ணி - அபிடேகம் செய்து 

57.மலைந்து - அணிந்து, வில் - ஒளி


62. கோங்கரும்பு, தாமரை மொக்கு தனத்திற்கு உவமை 63. புழுகு-புனுகு,

களபம் - கலவைச் சந்தனம் 64. துணை-ஒப்பு, நுசுப்பு-இடை, 68. விடை - காளை


70. இடபம்-காளை. 72. கலிக்க-முழங்க 75. தாரம்-உச்ச இசை, 76.பழிச்ச -புகழ 

77. இம்பர் - இவ்வுலகினர் 81. அங்கி-அக்கினி


82. மறலி-யமன் 86.அளகாபுரிக்கு அரசன் - குபேரன், கம்பம்-நடுக்கம்,

87.சோமன் -சந்திரன் 88.வில்-ஒளி 89. நாகம்- யானை 91.பாரிடங்கள்-பூதகணங்கள்

 91. மறுகு - தெரு 92. மூடிகம் - பெருச்சாளி


94. கடம் - மதநீர் 95. அந்தரம் - வானம் 96.மா-குதிரை - காரிக்கடவுள்-அரிகரபுத்திரர்

 97. பாலறாவாயன் - திருஞானசம்பந்தர் 98. இறை-சண்டேசுரர் 

100. மேனை - மேனகை 104. சலஞ்சலம் - சங்கு 105- இண்டை - தலைமாலை


106. வேள் - மன்மதன் (இங்கு) 107. ஒருவன் - இராவணன் 109. பெருநீர்-கங்கை, 

110. புரிசை-முப்புரங்கள்,   மால்- மயக்கம் 


119. புரை நெறி-தீய ஒழுக்கம் 123. காமன் படைகள் - பெண்கள் 124. இயம்- வாத்தியம் , 125. மந்திரம் - வீடு 

126. குளிகை - உச்சி மண்டபம்  128. தையல் - மகளிர்.

129 ஓலிட்டு - ஓசையெழுப்பி, உக்கிட-நழுவ  131. கூறை-ஆடை

134. இடம் - இடப்பாகம் 135. அத்தன் - அப்பன் சிவன் 138. கொம்மை-திரண்ட, 140. மெய் - உடல்

141, வனம் - வர்ணம், எவ்வனம்-இளமை 142. காஞ்சி - ஊர், காஞ்சி-மேகலை 

142. வாஞ்சை - அன்பு, இரவு - ஒளித்த, செயல் அளையீர் - செய்யீர், 143. கரம்-கை 

144. எற்பு - எலும்பு 145. ஆர்க்குவதம் - கொன்றை மாலை 146. நாண்மதி - ஒரு நாள் வளர்ந்த சந்திரன்; 

நாணம் மதி இக்கு-கரும்பு (வில் உடைய மன்மதனை)

153. காதரம் - அச்சம் 154. அரா -பாம்பு, பணம் - படம் , நோனாது-பொறாது. 

155, பிறப்பு - பெண்பிறப்பு 156. வெற்பு - மலை , வல்லோன்-செப்பிடு வித்தைக்காரன் , 

பயோதரம் - முலை 157. வேரி - தேன், அதரம்- இதழ்கள் 159. ஏக்கழுத்தம் - தலையெடுப்பு 160. பூ - இளமை

164. பாலவிழி - நெற்றிக்கண் 165. நூற்கு - நூலுக்கு 167. அதும்பும்-ஒலிக்கும் 168. நத்து - சங்கு 

169. கந்தரம் - கழுத்து, சாயல் - மென்மை, ஓலையணி காது, கொந்தளம் - தலைமுடி 

170. பொலன் - பொன் 174 துவர்- பவளம்

175. துண்டம் - மூக்கு 176. கஞ்சம் - தாமரை, முகை - மொக்கு, 178. கேயூரம் - தோள்வளை 181. மால் - காதல் 

183. இட்டிடை - இடுகிய இடை,  வண்டு - வளையல் 185. கவிர் - முள் முருங்கைப் பூ (இதழ்க்கு உவமை)

முல்லை - பல், ஆம்பல் - வாய்

190.சூடகம்-கைவளை, பாடகம் - காலணி,  பரிபுரம் - சிலம்பு 192. ஏல்வை - சமயம் 194. பதம் - பாதம், பருதி - சூரியன்

198. சுணங்கு - பசலை நிறம் 200, பானல் - கருங்குவளை 201, தொண்டை-கோவைப்பழம், 

சாணை - கல் 202. கோணம் - மூக்கு, புரூரம் - புருவம் 203. கஞ்சனை-கண்ணாடி, 

ஆனனம் - முகம் , மஞ்சு - மேகம் உவமைகள் அடுக்கடுக்காண்க

204. அறல்-கருமணல் (கூந்தல்) கோங்கு - கோங்கின் அரும்பு 206. கழை- மூங்கில்

210. அமளி-இருக்கை, 2/1.தாணு -சிவன், 212. மாடகம் - முறுக்காணி, 

213.கண்ணுதல்-சிவன், 214.கண்முத்து-கண்ணீர்த்துளி, கலை- ஆடை,

முத்தம்-பல், 215. விதிர்ப்ப-நடுங்க, கான் - நறுமணம் 217, சைவலம்- பாசி,

216-218.உவமைநயம் காண்க. 218-219 உவமைநயம் காணலாம்.

220. பஞ்சானம் - சிங்கம் 221.வில்-ஒளி 222.வித்துருமம்- பவளம், உவமை நயம் காண்க 

224.தொய்யில்- உடலில் சந்தனக்கோலம், 225.மட்டித்து -அறைத்து 226.கால்சீப்ப-போக்க 

227.விளரி-ஒரு ராகம், மணி-மணி ஓசை 231.கன்னல் சிலை-கரும்புவில்

233.கந்தம் மணம் 234.பதம்-பருவம், அந்நலார்- பெண்கள் 234-235 

மன்மதன் களிறு இருள் அவன் குதிரைகிளி 236. முல்லை - கணை, தாமரை

அம்பு குவளை அம்பு 237. கேதனம் - கொடி 235-38 மன்மதன் உறுப்புகளையுடையாள் 

239-40. உவமை நயம் காண்க 241.இந்து-சந்திரன

244. பருமம்-மேகலை 247.பாகுண்டு -தாம்பூலம் தரித்து, வல்-சூதுக்காய், 

249.குழகன் -இளமை உடையவன் 250. கோட்டி-கூட்டம், மடந்தை-அம்பிகை 

251. வண்டு- வளை,  அடியுறை - பாதகாணிக்கை, 253. அணங்கு- துன்பம் தரும் தெய்வம்.

255.ஆரவடம்- முத்துமாலை 256-57 உவமைகள் , சித்தசன் - மன்மதன், 

258.களம்-கழுத்து 259.கடம்-குடம் 261.முதாரி-ஒருவகை வளையல், 264.கொந்தளம் -கூந்தல் 

267.மூவர் - தேவாரம் பாடியவர், ஒருவர்-மணிவாசகர், பலர் - திருவிசைப்பா பாடியவர்

269. வரதன்-திருமால், வரதன்-அருள்செய்தவன் 271.கோமறுகு-அரசவீதி,

273. மும்மை விழி - மூன்றுகண்கள், வவ்வும் - கவர்கின்ற, கருத்து-திருவுள்ளம் 

274 தொண்டை - கோவைப்பழம் 275. புளகம் - மயிர்க்கூச்சு, 276.திருக்குறள் அமைந்துள்ளது.

278.குடங்கை-உள்ளங்கையளவு அகன்றகண் 279.மால்-மையல், கோமளம் - மென்மை, 

வேலாவலயம் - கடல்சூழ்ந்த 280.குலசாபுரி- குலசேகரப்பட்டினம் , அலகில் - அளவில்லாத, 

281. கருவிடை - பிறவிகளின் இடையில், மேல் - இனிமேல் பிறவாது இருக்க,  ஒருவிடை - ஒப்பற்ற காளை


தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்


# kulasai-ula

# kulasai ula 

To Top